Thursday, July 23, 2009

புலி அரசியலை உயர்த்திப்பிடிப்போம்

தமிழகத்தில் இலக்கியவாதிகளுக்கிடையே நிகழ்ந்த
சந்திப்புகள்,அங்கேஎழுப்பபட்ட ஈழம் தொடர்பான
புலிகள் தொடர்பான விமர்சனங்கள்,அதனை தொடர்ந்து
நிகழ்ந்த இணைய விவாதங்கள் என நிகழ்வுகளை
கவனிக்கையில்,கருத்தியல் ரீதியாக ஈழப்போராட்டத்தின்
நியாங்களை உயர்த்திப் பிடிக்க வேண்டிய தேவை
இருப்பதால் இந்த எதிர்வினை முயற்சி.


தங்கள் சொந்த நலன்களின் அடிப்படையில் ஈழ விடுதலைப்
போராட்டம் பற்றி திரித்து எழுதுவதையும் அவதூறுகளை
கிளப்புவதையும் வழக்கமாக கொண்டுள்ள ஷோபாசக்தி
அ.மார்க்ஸ் போன்றவர்கள் வைக்கிற கருத்துக்களாவது
பரிசீலிக்க தகுந்தவைகளாக உள்ளன,அவர்களின் பல்துறை
வாசிப்பு அனுபவத்தையாவது நாம் அவர்களின்
எழுத்துக்களில் அடையாளம் காண முடியும்.


ஆனால் அ.மார்க்ஸ் ஷோபாசக்தி ரசிகர்மன்ற
நிர்வாகிகளும் விசிறிகளும் கம்யூனிஸ்ட் கட்சி
அறிக்கையை கூட புரட்டிப் பார்த்ததில்லை என்பதை
அவர்கள் முன்வைக்கிற கருத்துகளில் இருந்தே நம்மால்
உணர்ந்துகொள்ள முடிகிறது.மிக குறைந்த அளவாக
முப்பதாயிரம் உயிர்களை மட்டுமே கொன்று,உலகின்
மாபெரும் மனிதாபிமான மீட்பு நடவடிக்கையை ராஜபக்ஸே
நிறைவு செய்திருக்கும் வேளையில் புலி அரசியலிலிருந்து
மக்களை மீட்க புறப்பட்டிருக்கும் இந்த மீட்பர்களின்
அரசியலை நாம் ஆய்வுக்குட்படுத்த வேண்டியிருக்கிறது.

இந்துத்துவவாதி என்று முத்திரை குத்தப்படுகிற அபாயம்
இருப்பதை உணர்ந்தாலும் வேறு வழியில்லாமல் சில
கேள்விளை எழுப்பித்தான்ஆக வேண்டியிருக்கிறது
இவர்களிடம்.



புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியதைப் பற்றி
அ.மார்க்ஸ் தொடர்ந்து விமர்சனம் எழுப்பி
வருவதை அறிந்திருக்கிறோம்.யாழ்ப்பானத்தில்
இருந்து வெளியேற்ற்ப்பட்ட முஸ்லிம்களுகாக
குரல் கொடுக்கும் அ.மார்க்ஸ் காஸ்மீரில்இருந்து
வெளியேற்றபட்ட பண்டிட்டுகளுக்காக ஒரு வரியையும்
எழுதியதாகவோ,அல்லது காஸ்மீர் தேசிய விடுதலை
போராட்டத்தை முன்னெடுக்கும் குழுக்கள் மீது
விமர்சனங்களை முன்வைத்ததாகவோ
நம்மால் காண முடியவில்லை.
ஏன் இந்த பாரபட்சம் என்று அவருக்கே வெளிச்சம்?


முஸ்லிம்கள் வெளியேற்றம் என்பது தவறுதான் என்று
புலிகளே ஒப்புக்கொண்டபிறகும்,அந்த முஸ்லிம்களை
1995இல் யாழ்ப்பானத்தை சிங்கள ராணுவம்ஆக்கிரமித்த
பிறகு மீள குடியேற்ற மறுப்பது சிங்கள அரசுதான்
என்பதை எப்படி மறக்கிறார்.இலங்கை முஸ்லிம்
அரசியல் பற்றி அவரது புரிதல் மிக குறைவாக
இருக்கிறது என்பதையே அவரது வாதங்கள் காட்டுகிறது.
யாழ்ப்பானத்திலும் கிழக்கிலும் வாழ்ந்து தங்களை
தமிழர்களாகவே உணர்ந்த முஸ்லிகளின் அரசியல்
தலைமைத்துவத்தை தென்னிலங்கையில் வசித்த
அராபிய வழித்தோன்றல்கள் என்று தங்களை கருதும்
முஸ்லிகள் கைப்பற்றிகொண்டதையும்,தமிழர்களின்
போராட்டத்தில் வடக்கு கிழக்கு முஸ்லிம்களின்
பங்கேற்ப்பை தடுக்கும் சிங்கள் அரசின் முகவர்களாக
அவர்கள் அன்றும் இன்றும் செயல்பட்டுக்கொண்டிருப்பதை
அறிவாரா அ.மார்க்ஸ்


தெற்கு ஆசியாவிலேயே மிககுறைவான எண்ணிக்கையில்
இலங்கையில் வசிக்கும் சூஃபியிச முஸ்லிம்கள் பற்றியும்
அவர்களுக்கு எதிராக அடிப்படைவாத முஸ்லிம்களின்
அடக்குமுறைகள் இலங்கையில் நிலவுவது
பற்றிய தகவலையும் அவருக்கு நினைவூட்டுவோம் நாம்.

இந்திய முஸ்லிம்களை பாகிஸ்தானிய ஆதரவாளர்களாக
சித்தரிக்கும் இந்துத்துவா கும்பல்களின் மனநிலைக்கும்,
ஈழத்தின் தமிழின படுகொலையில் இந்திய அரசோடு
பாகிஸ்தான் இணைந்து நின்றதை வெளிப்படுத்தினால்
இந்திய முஸ்லிகள் வருத்தப்படுவார்கள் என்று கருதி
தனது தீராநதி கட்டுரையில் பாகிஸ்தானின் பெயரை
தவிர்த்துவிட்டு எழுதும் அ.மார்க்ஸின் மனநிலைக்கும்
வேறுபாடுகளை காண முடியவில்லைநம்மால்.
அவர்களாவது நேரடியாக குற்றம் சுமத்துகிறார்கள்.
இவர் மறைமுகமாக அதையே செய்கிறார்.



ஈழத்தில் சாதிய கட்டமைப்புக்கு எதிராக புலிகள் எதுவும்
செய்யவில்லை தலித்திய ஒடுக்குமுறையை கேள்வி
கேட்கவில்லை என்கிற இவர்களின் கேள்விக்கு பதில்
அளிக்கும்முன் அ.மார்க்ஸ்,ஷோபாசக்தி ரசிகர் மன்ற
குழக்கொழுந்துகளிடம் ஒரு கேள்வியை எழுப்ப
வேண்டியிருக்கிறது.


பெரியார் என்கிற மகத்தான மனிதனின் உழைப்பு,
அம்பேத்கரிய பரவலை தமிழகத்தில் எடுத்துசென்ற
தலித்திய இயக்கங்களின்முன்னெடுப்புகள் ஆகியவைகள்
இல்லாமல் இருந்திருந்தாலும் கூட தமிழகத்தில் நிகழ்ந்த
நகரமயமாக்கலும் அரைகுறை முதலாளித்துவ
உறவுகளும்,ஒப்பீட்டளவில் குறைந்திருக்கிற
தீண்டாமையையும்,சாதியத்துக்கு எதிரானகருத்தியல்
கட்டமைப்பையும் சாதித்திருக்கும்
என்று கூறினால் அதை ஒப்புகொள்வார்களா இவர்கள்?
நிச்சயம் இதுபோன்ற அதிபுத்திசாலித்தனமான
முடிவுக்கெல்லாம் வர மாட்டார்கள் என்று நம்பலாம்.

அது போலத்தான் தேசிய இன விடுதலை முன்னெடுக்கபட்ட
ஈழத்திலும்,புலிகளும் தேசிய இன விடுதலை
போராட்டமும் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு
சாதிய கட்டமைப்பில் உடைவை ஏற்ப்படுத்தியிருக்கிறார்கள்.

1995இல் யாழ்ப்பானம் சிங்கள ராணுவத்தால்
ஆக்கிரமிக்கப்பட்டபோது புலிகளோடு இடம்பெயர்ந்த
மக்களில் சிங்கள ராணுவத்தின் மீள் குடியேற்ற அழைப்பை
ஏற்று திரும்பி வந்தவர்கள் பெரும்பாலும் ஆதிக்கசாதியினர்
என்பது ஒன்று போதுமே புலிகள் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு
எதிராக எடுத்திருந்த நடவடிக்கைகளை காட்ட.இனியும் சாதி
ஒழிப்பில் முன்னெடுக்கப்பட நிறைய வேலைகள் உள்ளன
என்பதை நாமும் ஒப்புக்கொள்கிறோம்.



இவர்கள் நெடுமாறன் மீது வைக்கும் விமர்சனங்களில்
பெரும்பாலும் நமக்கு மாற்றுக்கருத்துக்கள் இல்லை
என்றாலும் புலிகளின் முகவர் என்று சொல்வதை
விமர்சிக்க வேண்டியிருக்கிறது.இந்த முகவர் என்கிற
கொழுப்பெடுத்த வார்த்தையை தாராளமாக
உபயோகப்படுத்தும் அ.மார்க்ஸ்.அ.மார்க்ஸின்
சீடர்களுக்கு நாம் ஒரு கேள்வியை முன்வைக்க
வேண்டியிருக்கிறது.நெடுமாறன் புலிகளின் முகவர்
என்றால் நீங்களெல்லாம் யாரின் முகவர்கள்?
எதிர்ப்பிலக்கியம் என்கிற பெயரில் உளறிக்கொட்டி
கிளறி மூடிவதன் மூலமாக அறிவுஜீவி பட்டம் பெற
விரும்பும் உள்மன அரிப்பின் முகவர்கள் மட்டுமதானா
இல்லை வேறு ஏதாவது......?



நெடுமாறன் தமிழ் தேசிய டம்மிபீஸ் சரி ,ஆயுத
போராட்டத்தையும் அரசியல் போராட்டத்தையும்
அக்கம் பக்கம் நடத்தும் மக இக இந்திய தேசிய புரட்சி
டம்மி பீஸ் திண்ணியக் கொடுமைக்கு எதிராக என்ன
செய்தார்கள் என்பதை கேள்வி கேட்க்காமல் இவர்கள்
நழுவுவது ஏன்? புலிகளை குற்றம் சொல்பவர்களோடு
மட்டும் கள்ளக் கூட்டுவைத்துக்கொள்வதில் அப்படி என்ன
இவர்களுக்கு அலாதி விருப்பம் என்று தெரியவில்லை.



அடுத்து இவர்கள் புலிகள் மீது பொழியும் அவதூறுகளை
பற்றி சற்று அலச வேண்டியிருக்கிறது.அதில் ஒன்று
புலிகள் மக்களை பணயகைதிகளாக பிடித்துவைத்திருந்து
சிங்கள ராணுவத்தின் முன் தள்ளி தங்களை
பாதுகாத்துக்கொள்ள முயன்றார்கள் என்பது,அதாவது
தாங்கள் மக்கள் மத்தியில் இருந்தால் சிங்கள் ராணுவம்
தங்களை தாக்காது என்றும் அவ்வாறு தாக்கி மக்கள்
கொல்லப்பட்டால் சர்வதேச நாடுகள் தலையிடும்
என்றும் புலிகள் நம்பியதாக சொல்கிறார்கள்.


கடந்த முப்பது ஆண்டுகால போரில் சிங்கள ராணுவம்
கடைபிடித்த போர் முறை ஒன்று இஸ்ரேலின்
வழிகாட்டலில் நிகழ்த்தப்பட்ட கூட்டுத்தணடனை
முறை,அதாவது புலிகளின் நிலைகள் தெளிவாக
தெரிந்திருந்தாலும் அவர்களை தாக்காமல் மக்களை
தாக்கி உயிர்களைகொல்வதன் மூலம் புலிகள் மீது
மக்களுக்கு வெறுப்பு ஏற்ப்பட செய்வது.

இதை நன்கு அறிந்த புலிகள் மக்கள் மத்தியில் இருந்து
தங்களை பாதுகாக்கும் முடிவை எடுத்திருப்பதாக கருத
எந்த அடிப்படை நியாயமுமில்லை.

நூறு பேராக இருந்தாலும்,இலட்சக்கணக்கில் இருந்தாலும்
மக்களை கொல்ல சிங்கள ராணுவம் தயங்காது
என்பது அவர்களுக்கு நன்கு தெரிந்த விசயம்தான்.
இந்த நிலையில் புலிகள் மக்களை தங்கள் பாதுகாப்புக்காக
பயனபடுத்த முயன்றார்கள் என்று கூற
எந்த அடிப்படையும் இல்லை.



அடுத்தது புலிகள் மக்கள் மத்தியில் இருந்து செல்லடித்து
தமிழ்மக்களை கொன்றதாக் ஒரு குற்றச்சாட்டை
சுமத்துகிறார்கள்.இன்றைக்கு முகாம்களில் இருக்கும்
பெண்களிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட முயன்ற
சிங்கள ராணுவத்தினர்க்கு எதிராக அவர்களின்
துப்பாக்கிகளை பிடுங்கி இளைஞர்கள் தாக்க முயன்றதாக
எல்லாம் தகவல்கள் கசிகின்றன.ஒருவேளை புலிகள்
மக்களுக்கு எதிராக தங்கள் துப்பாக்கிகளை நீட்டியிருந்தால்
சிங்களனுக்கு எதிராக ஓங்கிய கைகளை புலிகளுக்கு
எதிராகவும் இளைஞர்கள் தூக்க எவ்வளவு நேரமாயிருக்கும்


ஒருவேளை அந்த இளைஞர்கள் எல்லாம் மக்களோடு
மக்களாக ஊடுருவிய புலிகள் என்றால்,புலிகள்தான்
மக்களுக்கு இப்போதும்பாதுகாப்பு என்கிற உண்மை
வெளிப்படுவதை ஜீரனித்துக்கொள்வதில் இவர்களுக்கு
ஏற்ப்படும் சஙகடத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.



இவன்தான் புலி எங்களை பிடித்துவைத்திருந்தான் என்று
சிங்கள ராணுவத்திடம் மக்களே பிடித்துகொடுத்ததாகவும்
அதனை புலிகளின் ஆதரவாளர்களே ஒப்புக்கொள்வதாகவும்
கயிறு திரிக்கும் இவர்கள் அத்தோடு
நிறுத்திக்கொண்டிருந்தாலாவது நமக்கு இவர்களை
அம்பலப்படுத்துவது கடினமாக இருந்திருக்கும்.



கஞ்சிக்கும்,கழிப்பிடத்துக்குமே கால் கடுக்க மக்களை
வரிசயையில் நிற்க வைத்து,சர்வதேச செஞ்சிலுவை
சங்கம்உதவி நிறுவனங்கள்,பத்திரிக்கையாளர்கள்
என்று எவரையும் முகாம்களுக்குள் அனுமதிக்காக
சிங்கள அரசு பத்துரூபாய்க்கு நான்கு என்று
செல்போனையும் சிம்கார்டையும் மக்களுக்கு
கொடுத்து தமிழ்நாட்டில் இருந்து வரும் அழைப்புகளை
அனுமதித்துக்கொண்டிருப்பதாக கூறுவது ஒன்றே
போதும் இவர்களின் யோக்கியதை என்னவென்று காட்ட?


நல்லவேளையாக பொன்சேகாவின் நம்பரையோ
ராஜபக்சேவின்நம்பரையோ கொடுக்காமல்
போனார்களே மக்களின் நிலைமை பற்றி விசாரிப்பதற்கு,


சரி ஒரு பேச்சுக்கு இவர்கள் சொல்வதை
ஒப்புக்கொண்டாலும்இரண்டு இலட்சத்து
அறுபத்து ஆறாயிரம் மக்களும் நிழற்சிறைகளில்
இருப்பதாக இவர்களின் சித்தாந்த ஆசிரியர்
அ.மார்க்ஸே சொல்லிவிட்டார்.



தயா மாஸ்டர்,ஜார்ஜ் மாஸ்டர்,போர்க்காலத்தில் வன்னியில்
இருந்த மருத்துவர்கள் என்று பலரும் பேயறைந்தாற்
போனறமுகத்துடன் பத்திரிகையாளர்களை சந்தித்து
புலிகள் மக்களை பிடித்துவைத்திருந்தார்கள் என்று
சொல்லிகொண்டிருக்கையில்முகாம்களில் இருக்கும்
மக்களின் வாக்குமூலம் எந்த முறையில் பெறப்பட்டிருக்கும்
என்பதை பற்றி அறிய பெரிய புத்திசாலித்தனம்
தேவை இல்லை.

சிறைகளில் இருப்பவர்களிடம் பெறப்படும்
வாக்குமூலத்தின் நம்பகத்தன்மையை கேள்விகள் எதுவும்
இன்றிஒப்புக்கொள்ளும்படி நம்மை கேட்கும் உரிமை
இவர்களுக்கு இருக்கும்போது இவர்களின் நேர்மை பற்றி
சந்தேகங்கள் எழுப்பநமக்கு உள்ள உரிமையை
யார் மறுக்க முடியும்.


தனது சொந்த மகனையும் மகளையும் களதிற்கு
அனுப்பி பலிகொடுத்திருக்கும் பிரபாகரன் மக்கள்
மீது தாக்குதல் நடத்தும்படியும் அவர்களை மனித
கேடயங்களாக நட்த்தும்படியும் வலியுறுத்துவதாக
சொல்லப்படுவதை கண்ணை மூடிக்கொண்டு
புலிகள் ஆதரவாளர்கள் நம்ப வேண்டும் என்று
எந்த அடிப்படையில் இவர்கள் எதிர்பார்கிறார்கள்
என்று புரியவில்லை.

தங்களை மடையர்களாக கருதுவதில் அவர்களுக்கு
இருக்கும்உரிமைகளை நாம் மதிக்கலாம்.
நம்மையும் அவ்வாறே கருத நினைப்பவர்களை
என்ன செய்வது?



அத்தனையைம் தாண்டி ஒரு கேள்வி எழுகிறது.புலிகள்,
ஜனனாயகமின்மை பாசிசம் என்று பஜனை
பாடிக்கொண்டிருக்கும் இவர்கள் முகாம்களில் இருக்கும்
மக்கள் மீது நடத்தப்படும் மனித உரிமை மீறல்களுக்கு
எதிராக கடைபிடிக்கும் சதித்தனமிக்க மௌனம் நமக்கு
மேலும் பல விசயங்களை புரியவைக்கிறது.

சிங்களன் நடத்திக்கொண்டிருக்கும் மனித உரிமை
மீறல்களைபற்றி பேச புகுந்தால் அப்பாவி மக்களுக்கு
எதிராக் தான் மேற்கொள்ளும் சித்திரவதைகள மூலம்
புலிகளையும் மக்களையும்ஒன்றாகவே அவன் பார்க்கிறான்
என்கிற உண்மையை வெளிப்படுத்த வேண்டிய
நிலைவந்துவிடுமே என்கிற இவர்களின் பதட்டதைத்தான்
நம்மால் இதன் வழியாக உணர முடிகிறது.



புலிகளும் பிரபாகரனும் சாகும்வரை இந்தியாவை எந்த
விமர்சனமும் செய்யவில்லை என்று நாளும் பகலும்
தமிழ்தேசியத்தை விமர்சிப்பதைபோல இந்திய பார்ப்பன
தேசியத்தை விமர்சித்துக்கொண்டிருக்கும் இவர்கள்,
எந்த விமர்சனமும் செய்யாமல் இருக்கும் நிலையில்
கூட புலிகளை அழிக்க வேண்டிய தேவை இந்திய அரசுக்கு
ஏன் ஏற்ப்பட்டது என்பது போன்ற விசயங்களை ஆராயாமல்
கம்பி நீட்டுவது ஏனோ?



மாற்று அரசியல்,ஜனனாயகம் பற்றிய உரையாடல்கள்
பாசிச எதிர்ப்பு போன்ற சொல்லாடல்களின் மழையில்
முதலாளித்துவ ஏகாதிபத்திய நாடுகள்,இந்தியா கருணாநிதி
போன்றவர்கள் செய்த குற்றங்களை மூடி மறைக்க
செய்யப்படும்முயற்சிகளை முறியடிக்க வேண்டிய தேவை
எழுந்திருகிறது இன்று தமிழ் உணர்வாளர்கள் அதை
உறுதியுடன் முன்னெடுக்க வேண்டும்

புலிகள் தவறுகளே செய்யாதவர்களா? அவர்கள் மீது
உங்களுக்குவிமர்சனங்களே இல்லையா? என்றால் ஆம்
எங்களுக்கும் புலிகள்மீது அரசியல்ரீதியான விமர்சங்கள் உண்டு.

ஆனால் அவைகள் அடிப்படை நேர்மை கொண்ட,
முன்வைக்கப்படும் கருத்துகளை எதிர்கொண்டு
திறந்த மனதுடன் உரையாட முன்வருபவர்களோடு
மட்டுமே சாத்தியம் என்பதால்,அன்றைக்கு பிரபாகரன்
சூப்பர் ஸ்டார் என்று அர்த்தம் தெரியாமல் கூவியதை
போலவே இன்றைக்கு அ.மார்க்ஸ் சூப்பர் ஸ்டார்.
ஷோபாசக்தி சூப்பர் ஸ்டார் என்று கோசமிடும்
விசிலடிச்சான் குஞ்சுகளிடம் விவாதங்களை
தவிர்க்கவே விரும்புகிறோம்

4 comments:

ஐந்திணை said...

//புலிகளை அழிக்க வேண்டிய தேவை இந்திய அரசுக்கு ஏன் ஏற்ப்பட்டது //

காங்கிரஸ்தான்

ஸ்டாலின் குரு said...

மிகவும் எளிமைப்படுத்திவிட்டீர்கள் நண்பரே

இந்தியாவில் காங்கிரஸ் அரசும் இலங்கையில் ராஜபக்சேயின் சிங்களஅரசும்அமல்படுத்திக்கொண்டிருக்கும் ஏகாதிபத்திய நாடுகளின் வணிக சூறையாடலுக்கு
உகந்த பொருளாதாரக்கொள்கைகளை புலிகள் தமிழீழ பகுதிகளில் கடைபிடிக்க முன்வந்திருந்தால் புலிகளை அழிக்கும் நடவடிக்கையில் இந்தியா இறங்கியே இருக்காது.

Unknown said...

நான் வாசித்ததிலேயே தெளிவான கட்டுரை. தெளிவான சிந்தனை. உங்கள் பழைய இடுகைகளை ஒவ்வொன்றாய் எடுத்து வாசித்துக்கொண்டிருக்கிறேன்

ஸ்டாலின் குரு said...

நன்றி உமையணன்

தொடர்ந்து கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்

Post a Comment