Friday, July 31, 2009
சில களங்கள் - ஒரு பார்வை
சிங்கள அரச பயங்கரவாதிகளுக்கு எந்த விதத்திலும்
குறையாத இஸ்ரேலிய சியோனிச பயங்கரவாதிகளின்
பாலஸ்தீன தாயக ஆக்கிரமிப்போடு ஒப்பிடும் சில
ஈழ ஆதரவாளர்களின் அவல அரசியல் சகிக்க
இயலாததாக இருக்கிறது.
அந்நிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஏதிராக போராடி
தங்கள் தேசிய விடுதலையை வென்றெடுத்த
நாடுகள் பட்டியலில் உதாரணமாகக் கொள்ள
வியட்னாம்,கினியா-பிஸோ,அல்ஜீரியா,
என்று முன்னுதாரனமாகக் கொள்ள எத்தனையோ
நாடுகள் இருக்க,சிங்கள இனவாதிகளை போலவே
பாலஸ்தீன மண்ணை,யூத குடியேற்றங்கள் வழியே
ஆக்கிரமித்து,பாலஸ்தீன மக்களுக்கு எதிராக அரச
பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டு அம்மக்களை
இன்றுவரை படுகொலை செய்துகொண்டு இருக்கும்
இஸ்ரேலை உதாரணமாகக் கொள்ளும் எண்ணம்
எத்துனை இழிவானது என்பதையும்,இஸ்ரேலை
போற்றுவது என்பது சிங்கள் இனவெறியர்களை
போற்றுவதற்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல
என்பதை இந்த அரைவேக்காட்டு அரசியல்வாதிகள்
உணர மறுப்பது ஏன்?
ஈழவிடுதலை போரின் தொடக்க காலத்தில்
பாலஸ்தீன விடுதலை கோரி போராடிக்கொண்டிருந்த
அமைப்புகளோடு ஈழ விடுதலை அமைப்புகளுக்கு
இருந்த உறவுகள்,சமகாலத்தில் போராட்டத்தில்
இறங்கிய இரண்டு தேசங்களின் இன்றைய நிலை
ஆகியவைகளை ஆய்வு செய்து பாடம் கற்பதையும்
தோழமை உணர்வை வளர்த்தெடுப்பதையும் தவிர்த்துவிட்டு
யூதர்கள் பாலஸ்தீன மன்னை ஆக்கிரமித்ததை
தேச மீட்பாக சித்தரிக்கும் இவர்களின் அறியாமையை
என்னவென்று சொல்ல ?
யூதர்கள் தங்கள் தேசம் என்று கருதியதை மீட்டார்கள்
என்று இவர்கள் கருதுவார்களேயானால் சிங்களர்கள்
தங்கள் தேசம் என்று கருதுவதை தமிழர்களிடமிருந்து
மீட்கும் செயலைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள்
என்று கொள்ள வேண்டி வரும்.அவ்வாறு கொள்வதில்
சம்மதமா இவர்களுக்கு?
அறத்தின் அடிப்படையில் நிகழ்ந்த தேசிய விடுதலை
போர்களை பின் தள்ளி,இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை
முன்னிறுத்துவதன் மூலம் ஈழ விடுதலை கோரிக்கையை
அவமதிக்கும் செயலைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்
இந்த ஈழ ஆதரவாளர்கள்.
அதே சமயம்,இஸ்ரேலை கண்டித்துக்கொண்டு சிங்கள
அரசின் ஈழத்தமிழர்கள் மீதான படுகொலைகள் பற்றி
வாய் திறக்காமல் இருந்த சில தமிழக பிழைப்புவாத
இஸ்லாமிய அமைப்புகளின் தலைமைத்துவங்களை
நாம் கண்டிப்பதும் அவசியமாகிறது.
இரண்டு தேசிய விடுதலைபோராட்டங்களின் சமகால
நிலை பற்றி நாம் சற்று அலச முயலலாம்.முதலில்
இரு போராட்டங்களும் தங்கள் இறுதி இலக்கை எட்டும்
இலட்சியத்தில் வெற்றி பெறவில்லை என்கிற உண்மையை
ஒப்புக்கொண்டாக வேண்டும்.புலிகள் தங்கள் கட்டுப்பாட்டு
பகுதிகளை முழுமையாக இழந்திருக்கின்றனர்,ஹமாஸ்
தனது கட்டுபாட்டு பகுதிகளில் தனது நிர்வாகத்தை
தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பது மட்டுமே சிறு
வேறுபாடு.
இரு போராட்டங்களுக்கும் இடையே இருக்கும் சில
ஆச்சரியமான ஒற்றுமைகள் நமக்கு புலப்படுகின்றன
ஆயுத போராட்டத்தில் துவங்கி,உலக ஏகாதிபத்திய
நாடுகளின் சதியால் தனது கனவு தனது கண்முன்னே
கலைந்துகொண்டிருப்பதை பார்த்துவிட்டு மறைந்து
போனார் யாசர் அராபத்.அவரின் கட்சி இன்று
பிழைப்புவாத ஊழல் அரசியலில் மூழ்கி ஒரு சரியான
போராட்டத்தை முன்னெடுக்கும் தகுதியை இழந்து
நிற்கையில் ஹமாஸ் அந்த பொறுப்பை முன்னெடுத்து
நகர்ந்துகொண்டிருக்கிறது.
இலங்கை பேரினவாத அரசுடன் சமரசத்தின் மூலம்
தமிழர்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க முயன்ற,
மற்றும் பிழைப்புவாத தமிழர் அரசியல் தலைமைத்துவங்களை
புறக்கனித்து ஆயுத போரட்டத்தை முன்னெடுத்த புலிகள்
தங்கள் தேசத்தின் பெரும்பகுதியை மீட்டு சில மாதங்கள்
முன்புவரை தங்களிடம் வைத்திருத்து உலக ஏகாதிபத்திய
நாடுகளின் சதியால் இன்றைக்கு அதனை இழந்திருக்கின்றனர்.
பாலஸ்தீனத்தில் பிழைப்புவாத ஏகாதிபத்திய ஆதரவாளர்கள்
ஒருகட்சியின் கீழ் எளிதில் அடையாளம் காணகூடியவர்களாக
இருக்கையில் ஈழத்தில் டக்ளஸ்,கருணா,ஆனந்தசங்கரி
குழுக்களும் மேலும் இடதுசாரி,மனித உரிமை முகமூடிகளுடன்
பல குழுக்களும் உள்ளன.
புலிகளிடமிருந்து ஆயுதங்களை களைந்தது போல
ஹமாஸிடமிருந்து ஆயுதங்களை களைவதில்
இஸ்ரேல்,அமெரிக்க வட்டாரங்களுக்கு இருக்கும்
அரசியல் ரீதியான நிர்பந்தங்களால் ஹமாஸ்
ஆயுதங்களுடன் போராட்டத்தை தொடர்கிறது.
மக்களின் அரசியல்ரீதியான போராட்ட வழிமுறைகள்
மூலம் எதிரியை தோற்கடிப்பது என்பதற்கு மிகசிறந்த
உதாரணமாக பாலஸ்தீன மக்களின் இண்டிபதா
போராட்டங்கள் இடையில் நிகழ்ந்துகொண்டிருந்ததையும்
நாம் அறிவோம்.
ஆயுதபோராட்டத்தின் மூலமே தேசவிடுதலையை
வென்றெடுப்பதில் புலிகளுக்கு சாதகமான வாய்ப்புகள்
இருந்ததை நாம் மறுப்பதிற்கில்லை.ஆனால்
இன்றைக்கு மாறியிருக்கும் உலக சூழலில் அரசியல்
போராட்டங்களின் மூலமே தேசவிடுதலையை முன்நகர்த்த
வேண்டிய தேவை எழுந்திருக்கும் நிலையில் பாலஸ்தீன
மக்களின் அரசியல் போராட்ட வழிகளை அவர்கள்
கடைபிடிப்பதன் மூலமே தங்கள் மக்களுக்கான
கடமைகளை நிறைவேற்ற முடியும்.
தமிழீழத்தின் எல்லைகளில் ஆயுதங்களோடு நின்று
உலக நாடுகளின் வணிக சூறையாடல் மற்றும் ராணுவ
மேலாதிக்க நடவடிக்கைகளை தடுத்துக்கொண்டிருந்த
புலிகள் இனி மக்களோடு நின்று ஆயுதங்கள் இல்லாமல்
அந்த வேலையை செய்ய வேண்டியிருக்கும்.அந்த
வேலையில் காந்தி என்கிற கடைந்தெடுத்த பிற்போக்கு
அரசியல்வாதியின் வழியை கடைபிடிக்கபோகிறார்களா
இல்லை பாலஸ்தீனம்,பொலிவியா,லால்கார்,காஸ்மீர்
என்று மக்களின் அரசியல் போராட்டங்கள் தந்திருக்கும்
படிப்பினைகளை கற்றுக்கொண்டு இவ்வகையான
போராட்டங்களை முன்னெடுக்கப்போகிறார்களா
என்கிற கேள்விக்கான பதிலில்தான் ஈழவிடுதலையின்
சாரமே அடங்கியுள்ளது.
காந்தியின் வழி என்பதும்,தன் மீது திணிக்கப்பட்ட
தீர்வுக்கு பணிந்த யாசர் அராபத்தின் வழியும்
அப்பட்டமான,ஏகாதிபத்திய நாடுகளின் நலன் காக்கும்
பிற்போக்குதனமான அரசியல் நடவடிக்கைகள் என்கிற
புரிதலோடு முன்னெடுக்கப்படும் அரசியல் போராட்டங்கள்
மட்டுமே ஈழ விடுதலையையும் பொதுவாக ஒடுக்கப்படும்
எல்லா தேசிய இனங்களின் விடுதலையையும் சாதிக்க
இன்றிருக்கும் வழியாகும்.
அதிகரித்திருக்கும் ராணுவ தொழில்நுட்பங்கள் ஆயுத
போராட்டத்தின் சாத்தியங்களை உலகெங்கும் குறைத்துக்
கொண்டிருக்கிற வேலையில் எப்படி ஒடுக்கப்பட்ட
மக்களுக்கானபோராட்டத்தை முன்னெடுப்பது என்பதை
நேபாளத்திடம் இருந்தே கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.
மக்களை அரசியல் ரீதியாக பயிற்றுவித்து,தங்களுக்கான
தளப்பிரதேசங்களை உருவாக்கிகொன்டு ஜனனாயக அரசில்
பங்கேற்கும் முடிவை எடுத்ததன் மூலம் அந்நிய நாடுகளின்
நேரடி மறைமுக படைநடவடிக்கைகளையும்,மக்களின்
உயிரிழப்புகளையும் தவிர்த்து,நிழல் தளபிரதேசங்களை
பாதுகாத்து நேபாள அரசியலில் தங்கள் புரட்சிகர இடத்தை
தக்கவைத்துக்கொண்டிருக்கிறார்கள் மாவோயிஸ்ட்டுகள்.
வேறுபட்ட களநிலைமைகள் இருந்தாலும் நேபாளத்தின்
மாதிரியே இன்றைய காலகட்டத்துக்கு புரட்சிகர மற்றும்
தேசிய விடுதலை இயக்க முன்னெடுப்புகள் மீது தாக்கம்
செலுத்த வேண்டியதாக இருக்கிறது.
உலகையே பாசிசமயமாக்கிக்கொண்டிருக்கும்,பூமியின்
செல்வத்தையும்,அதிகாரத்தையும் தங்கள் கைகளில்
மேலும்,மேலும் குவித்துக்கொண்டிருக்கும் சிறிய மனித
விரோத குழுக்கள் இயற்கை வளங்களை சூறையாடி
புவிவெப்பத்தை அதிகரிப்பதன் மூலமும்,ஈவு இரக்கமற்ற
சுரண்டல் அரசியல் மூலமும் மனித சமூகத்தின்
இருத்தலையேகேள்விக்குள்ளாக்கிக் கொண்டிருக்கும்
நிலையில்அதற்கு எதிராக சோசலிசம் சார்ந்த மக்கள் நல
அரசுகளின்வடிவத்திலேயே மனித இருத்தலுக்கான
போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருப்பதை நம்
சமகாலம் உணர்த்துகிறது.
எதிர்கொள்ளும் யதார்த்தங்களை சரியாக மதிப்பிட்டு
அரசியல் போராட்டம் மற்றும் ஆயுத போரட்டம்
இரண்டில் எதை முன்னிறுத்துவது,இரண்டையும்
ஒருங்கிணைப்பது எப்படி?,மற்றும் மக்களின் உச்சபச்ச
நலன்களின் அடிப்படையில் போராட்டத்தை தக்கவைப்பது
எப்படி? ஆகிய கேள்விகளுக்கு உலக புரட்சிகர சக்திகளும்,
தேசிய விடுதலை இயக்கங்களும் அளிக்கும் செயல்பூர்வமான
பதிலில் மட்டுமே மனித விடுதலையும் இருத்தலும்
சாத்தியமாகும்.
தேசிய இன விடுதலை பற்றிய இந்த கட்டுரையை
ஒரு பாலஸ்தீன கவிதையுடன் நிறைவு செய்துகொள்ளலாம்.
எனது நாட்டில் ஒருசாண் நிலம்
எஞ்சி இருக்கும்வரை
என்னிடம் ஒரு ஒலிவ் மரம் எஞ்சி இருக்கும்வரை
ஒரு எழுமிச்சை மரம்
ஒரு கிணறு,ஒரு சப்பாத்திக் கள்ளி
எஞ்சி இருக்கும்வரை
ஒரு சிறு நினைவு
ஒரு சிறு நூலகம்
ஒரு பாட்டனின் புகைப்படம்,ஒரு சுவர்
எஞ்சி இருக்கும்வரை
அரபுச் சொற்கள் உச்சரிக்கப்படும் வரை
நாட்டுப் பாடல்கள் பாடப்படும் வரை
கவிஞர்கள்
அந்தர் அல் -அப்ஸ் கதைகள்
பாரசீகத்துக்கும் ரோமுக்கும் எதிரான
யுத்த காவியங்கள்
எனது நாட்டில் இருக்கும்வரை
எனது கண்கள் இருக்கும் வரை
எனது உதடுகள்,எனது கைகள்
எனது தன்னுணர்வு இருக்கும் வரை
விடுதலைக்கான பயங்கரப் போரை
எதிரியின் எதிரில்
நான் பிரகடனம் செய்வேன்.
மஹ்மூட் தார்வீஷ்
லோகாயத சித்தர் பாடல்
பெரியாரின் பகுத்தறிவு கால எழுச்சியும் தொடங்குவதற்கு
முன்பாக இருந்த பார்ப்பன எதிர்ப்புடன் கூடிய மனிதத்துவ
அரசியலின் வேர்களை நாம் தேடினால் அந்த தேடல்கள்
நம்மை சித்தர்களிடமே கொண்டு சேர்க்கும்.
பொதுவாக ஒரு குறியீடாக மட்டுமே சில கடவுளர்
பெயர்களை தங்கள் பாடல்களில் பயன்படுத்தினாலும்
பெரும்பாலான சித்தர்கள் மனிதத்துவ அரசியலையே
முன் நிறுத்தியதை நாம் அறிவோம்.ஆனால் முழுக்க
முழுக்க கடவுள் மறுப்பையும் பொருள்முதல்வாத
அரசியலையும் அடித்தளமாகக் கொண்டு தனது
பாடலை பாடியிருக்கிறார் லோகாயத சித்தர்.
பரிணாம வளர்சியின் மூலம் மனிதன் உருவானது
பற்றிய அறிவு,பார்ப்பனர்களால் கட்டமைக்கப்பட்ட
சாதியம் பற்றிய புரிதல் மற்றும் அவர்களின்
வேதங்களை சாடுதல்,இனக்குழு வாழ்கையின்
நடுகற்களும் சிறுதெய்வங்களும் பார்ப்பனிய
மயப்படுத்தபட்டதை சுட்டிகாட்டுதல்,புத்தர்
திருவள்ளுவர்,திருமூலர் எழுத்துக்களில் திரிபுகள்
செய்யப்பட்டதை குறித்தல் என்று ஒற்றை
பாட்டில் லோகாயத சித்தர் செல்லி செல்லும்
விசயங்கள் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகிறது.
ஓரளவு புரியக்கூடிய எளிய தமிழிலேயே
பாடல் இருப்பதால் அப்படியே பதிவிடுகிறேன்.
பொருளும் இருப்பும் இயற்கையும் முதன்மை -நாம்
போற்றும் உணர்வெண்ணம் இரண்டாம் தன்மை
கருதும் நம் ஆத்துமா அறிவின் துடிப்பு - அதனை
க்டந்ததுமே கடவுள் எனல் கற்பனை பிடிப்பு
இயற்கையே மானுடர் வாழ்விற்கு வழியாம் -அவ்
இயற்கையே எண்ணத்தின் மேலான வழியாம்
இயற்கையை வென்றதும் மானுடம்தானே -இவ்
இயற்கைக்கு மேல் ஒன்றும் இல்லை என்பேனே
விலங்கிலிருந்து வளர்ந்தவர் நாமே - பின்
விலங்காண்டி ஆனதும் மாந்தர்கள்தாமே
உலகில் இயற்க்கையில் கற்றனர் பாடம்-மன
ஆறாம் அறிவாலே உற்றனர் மாடம்
உழைப்பே மனிதனின் உன்னத ஆற்றல் -கடும்
உழைப்பினால் வந்ததே உயர்வு முன்னேற்றம்
உழைத்துப் படைத்தது மானிடம் அன்றோ -அட
அதனின் உயர்ந்தது உண்டெனல் நன்றோ
மாறிக்கொண்டிருப்பது மாளா இயற்கை - தன்
மாற்றத்தில் படைத்தது மாந்தர் இனத்தை
ஏறிகொண்டிருந்திடும் காலப்பிடியில் - மனிதன்
எத்துனை புதுமைகள் செய்தான் முடிவில்
பொருளே உலகத்தில் சாகா உயிர்கள் - அந்த
பொருளின் இயக்கமே வையப் பயிர்கள்
பொருளே வளர்ச்சியின் தொட்டில் அந்த
பொருளின்றி இல்லை சிறப்புடை தொட்டில்
மனிதனுக்கு மேலொரு தெய்வமும் இல்லை -இந்த
மானுடம் போலொரு மெய்மையும் இல்லை
மனிதன் இயற்கையின் எதிரொலிச் சின்னம் -உழைப்பு
மனம் இல்லையேல் அவன் விலங்கான்டி இனம்
செத்தவர்க்காகவே நட்ட நடுகற்கள் - பல
தெய்வங்களாம் இவைநச்சுமிழ் பற்கள்
உய்த்துணரா முன்னம் இயற்க்கையின் போக்கை -அட
உண்டாக்கினர் கடவுளின் நோக்கை
உண்மையை கானும் அறிவில்லா போது - கடவுள்
உருவாகி உலகில் உண்டாயிற்று தீது
உண்மை ஒளி அறியாமையை தக்க - சில
ஞானிகள் தோன்றினர் வைய்யகத்தை காக்க
வந்தேறிகள் சிலர் நாட்டில் புகுந்தார் - இயற்கை
வாழ்வுணராமலே தீமைகள் தந்தார்
சிந்தனை இல்லா நெஞ்சில் சேர்ந்தது தீமை - பல
சிறுதெய்வ கூட்டங்கள் சேர்ந்தன ஆமை
காலங்கள் தோரும் அறிவின் குறைவு - தான்
கண்டதே கொண்டதே கடவுளின் நிறைவு
காலங்கள் மாறிடும் காகங்கள் தோறும் - உள்ள
கடவுள்களின் மத வேரும் பேரும்
அறிவுடை கடவுள்கள் ஒன்றேனும் இல்லை - கடவுள்
அவ்வவ் இனத்தின் அறியாமை எல்லை
செறிவுடை சிந்தனை தெளிந்தநீர் ஊற்று - தான்
தெய்வத்தின் தப்பெண்ணத்திற் கொரு கூற்று
அறியாமை அச்சம் தவறுகள் யாவும் - உலகில்
ஆக்கின தேக்கின மாயும் பொய் தேவும்
குறியான விஞ்னானம் நேர்படவில்லை - மத
குருக்கலும் மன்னரும் கொடுத்தனர் தொல்லை
வேதங்கள் ஆவது பேசின் பேச்சு - உள
உபநிடதங்கள் அச்சத்தின் மூச்சு
பூதங்கள் ஐந்துக்கு மேல் இல்லை ஒன்று கூறும்
புராணங்கள் யாவுமே பொய்மையின் குன்று
அறியாமை அச்சம் தவறுகள் யாவும் - உலகில்
ஆக்கின தேக்கின மாயும் பொய் தேவும்
குறியான விஞ்னானம் நேர்படவில்லை - மத
குருக்கலும் மன்னரும் கொடுத்தனர் தொல்லை
வேதங்கள் ஆவது பேசின் பேச்சு - உள
உபநிடதங்கள் அச்சத்தின் மூச்சு
பூதங்கள் ஐந்துக்கு மேல் இல்லை ஒன்று கூறும்
புராணங்கள் யாவுமே பொய்மையின் குன்று
சாத்திரம் என்பது சண்டை சரக்கு - அட
சமயங்கள் பகைமை பனைக்கள் இரக்கு
தோத்திர குப்பைகள் மூடர்கள் கூச்சல் - எண்ணத்
தொலையாத தர்க்கங்கள் பொஞ்ஞானக்காய்ச்சல்
செல்லரித்துப்போன வேதத்தின் பாட்டும் -உலகில்
செலவானியாகாத சமயத்தின் கூட்டும்
வல்லமை வாய்ந்த நல் காலத்தின் போக்கால் -மக்கள்
வாழ்வில் சலிப்புறும் ஒடிந்திடும் தேர்க்கால்
வேதாந்தம் என்பது வெறும் வெத்து வேட்டு - வேத
வியாக்கியானம் எல்லாமே பொருந்தாத பூட்டு
நாதாந்த்ம் என்பதும் பொய்புனை சுருட்டு - அட
நமசிவாயம் தன் நலமான புரட்டு
ஆன்மீக வாதம் ஒரு செத்த பிணங்காண் - வேத
ஆகமங்கள் யாவும் புற்று நோயின் ரணங்காண்
ஆன்மா என்பதும் பொய்யின் கற்ப்பனை - வெறும்
ஆத்திகம் என்பது தன்னல விற்ப்பனை
அடுத்த உலகம் என்றொன்றும் இல்லை - கோள்
அடுத்த தல்லால் வேறுலகமும் இல்லை
படுத்தும் நரகமும் சொர்க்கமும் இல்லை - மக்கள்
பண்படா காலத்தில் புகுந்த ஒர் தொல்லை
நன்மையின் ஆற்றலை தந்ததும் உண்மை - மனிதர்
நாளும் உயர்ந்திட செய்ததும் உண்மை
புண்மைகள் தீர்த்தது பகுத்தறிவாட்சி - தனை
புரிந்திட வைப்பதே லோகாதய மாட்சி
புத்தன் திருவள்ளுவர் சீல திருமூலர் - இந்த
பூமியிலே பிறந்து சிறந்த நல்சீலர்
எத்தனை பொய்புனை அவர்களின் நூலில் - பல
எத்தர்கள் இட்டனர் பிழைகளை காலில்
உண்மையும் எண்ணையும் இறுதியில் வெல்லும் - உலகில்
ஓங்கிடும் காற்றினால் பிரியும் நெல்லும் புல்லும்
மண்ணில் உலோகாயதமே உயரும் - கால
மாறுதல் வாய்மையின் பாலை நுகரும்
உழைக்காமல் உண்ணுவோர் தீயபாழ் ஊள்ளம் - இந்த
உலகத்தில் தோற்றிற்று மதமான பள்ளம்
பிழையே பிழைப்பாக சாதிகல் தந்தார் - மக்கள்
பேதத்தில் வாழ்வை சுரண்டி உவந்தார்
இயற்கை வளங்களை கண்டவன் மனிதன் - மக்கள்
ஏற்றத்தில் கவற்றை இணைத்தவன் மனிதன்
செயற்கை வளங்களை செய்தவன் மனிதன் - தனை
செய்யகூட தெரியாதவன் கடவுளா - புனிதன்?
மனிதனே சமூகத்தில் உயிருக்கு நாடி சமய
மதங்கள் வளர்ந்தன கடவுள்கள் கோடி
மனிதனே உலகத்தின் தலைவன் - அவனே
அணைத்துக்கும் மாண்புள்ள புலவன்
நெய்யினால் நெருப்பை அணைக்க எண்ணாதே அறிவு
நியாத்தால் லோகாயதம் மறைக்க எண்ணாதே
பொய்யிது மாயைதான் வாழ்வென்ருரைப்பீர் - உம்
பெண்டாட்டி பிள்ளை பெற்றொறை எங்கொளிபீர்
உலகத்தில் அனைட்துயிர் உருவங்கள் இறக்கும்
உயிர்மட்டும் என்றென்றும் இறவது இருக்கும்
உலக இயற்கையை வெல்வதே வாழ்கை
உலகில் நிலையாமை பேசிடல் தாழ்க்கை
தகுதியின் மிகுதியே வெல்லும் - இந்த
தங்கவேல்லோகாயதரின் சொல்லும் வெல்லும்
மிகுதியாம் பொய்யாதே சமயங்கள் ஒடும் - நாளை
மேன்மையாம் மெய்வாழ்க்கை ஒத்திசை பாடும்
Tuesday, July 28, 2009
இரட்டை மைய உலகில் தேசிய இன போராட்டங்கள்
இந்திய தேசியம்
Monday, July 27, 2009
முல்லைப்பெரியாறும் துரோகத்தின் வரலாறும்
Sunday, July 26, 2009
ஓஷோவின் வைரங்கள்
Thursday, July 23, 2009
புலி அரசியலை உயர்த்திப்பிடிப்போம்
சந்திப்புகள்,அங்கேஎழுப்பபட்ட ஈழம் தொடர்பான
புலிகள் தொடர்பான விமர்சனங்கள்,அதனை தொடர்ந்து
நிகழ்ந்த இணைய விவாதங்கள் என நிகழ்வுகளை
கவனிக்கையில்,கருத்தியல் ரீதியாக ஈழப்போராட்டத்தின்
நியாங்களை உயர்த்திப் பிடிக்க வேண்டிய தேவை
இருப்பதால் இந்த எதிர்வினை முயற்சி.
தங்கள் சொந்த நலன்களின் அடிப்படையில் ஈழ விடுதலைப்
போராட்டம் பற்றி திரித்து எழுதுவதையும் அவதூறுகளை
கிளப்புவதையும் வழக்கமாக கொண்டுள்ள ஷோபாசக்தி
அ.மார்க்ஸ் போன்றவர்கள் வைக்கிற கருத்துக்களாவது
பரிசீலிக்க தகுந்தவைகளாக உள்ளன,அவர்களின் பல்துறை
வாசிப்பு அனுபவத்தையாவது நாம் அவர்களின்
எழுத்துக்களில் அடையாளம் காண முடியும்.
ஆனால் அ.மார்க்ஸ் ஷோபாசக்தி ரசிகர்மன்ற
நிர்வாகிகளும் விசிறிகளும் கம்யூனிஸ்ட் கட்சி
அறிக்கையை கூட புரட்டிப் பார்த்ததில்லை என்பதை
அவர்கள் முன்வைக்கிற கருத்துகளில் இருந்தே நம்மால்
உணர்ந்துகொள்ள முடிகிறது.மிக குறைந்த அளவாக
முப்பதாயிரம் உயிர்களை மட்டுமே கொன்று,உலகின்
மாபெரும் மனிதாபிமான மீட்பு நடவடிக்கையை ராஜபக்ஸே
நிறைவு செய்திருக்கும் வேளையில் புலி அரசியலிலிருந்து
மக்களை மீட்க புறப்பட்டிருக்கும் இந்த மீட்பர்களின்
அரசியலை நாம் ஆய்வுக்குட்படுத்த வேண்டியிருக்கிறது.
இந்துத்துவவாதி என்று முத்திரை குத்தப்படுகிற அபாயம்
இருப்பதை உணர்ந்தாலும் வேறு வழியில்லாமல் சில
கேள்விளை எழுப்பித்தான்ஆக வேண்டியிருக்கிறது
இவர்களிடம்.
புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியதைப் பற்றி
அ.மார்க்ஸ் தொடர்ந்து விமர்சனம் எழுப்பி
வருவதை அறிந்திருக்கிறோம்.யாழ்ப்பானத்தில்
இருந்து வெளியேற்ற்ப்பட்ட முஸ்லிம்களுகாக
குரல் கொடுக்கும் அ.மார்க்ஸ் காஸ்மீரில்இருந்து
வெளியேற்றபட்ட பண்டிட்டுகளுக்காக ஒரு வரியையும்
எழுதியதாகவோ,அல்லது காஸ்மீர் தேசிய விடுதலை
போராட்டத்தை முன்னெடுக்கும் குழுக்கள் மீது
விமர்சனங்களை முன்வைத்ததாகவோ
நம்மால் காண முடியவில்லை.
ஏன் இந்த பாரபட்சம் என்று அவருக்கே வெளிச்சம்?
முஸ்லிம்கள் வெளியேற்றம் என்பது தவறுதான் என்று
புலிகளே ஒப்புக்கொண்டபிறகும்,அந்த முஸ்லிம்களை
1995இல் யாழ்ப்பானத்தை சிங்கள ராணுவம்ஆக்கிரமித்த
பிறகு மீள குடியேற்ற மறுப்பது சிங்கள அரசுதான்
என்பதை எப்படி மறக்கிறார்.இலங்கை முஸ்லிம்
அரசியல் பற்றி அவரது புரிதல் மிக குறைவாக
இருக்கிறது என்பதையே அவரது வாதங்கள் காட்டுகிறது.
யாழ்ப்பானத்திலும் கிழக்கிலும் வாழ்ந்து தங்களை
தமிழர்களாகவே உணர்ந்த முஸ்லிகளின் அரசியல்
தலைமைத்துவத்தை தென்னிலங்கையில் வசித்த
அராபிய வழித்தோன்றல்கள் என்று தங்களை கருதும்
முஸ்லிகள் கைப்பற்றிகொண்டதையும்,தமிழர்களின்
போராட்டத்தில் வடக்கு கிழக்கு முஸ்லிம்களின்
பங்கேற்ப்பை தடுக்கும் சிங்கள் அரசின் முகவர்களாக
அவர்கள் அன்றும் இன்றும் செயல்பட்டுக்கொண்டிருப்பதை
அறிவாரா அ.மார்க்ஸ்
தெற்கு ஆசியாவிலேயே மிககுறைவான எண்ணிக்கையில்
இலங்கையில் வசிக்கும் சூஃபியிச முஸ்லிம்கள் பற்றியும்
அவர்களுக்கு எதிராக அடிப்படைவாத முஸ்லிம்களின்
அடக்குமுறைகள் இலங்கையில் நிலவுவது
பற்றிய தகவலையும் அவருக்கு நினைவூட்டுவோம் நாம்.
இந்திய முஸ்லிம்களை பாகிஸ்தானிய ஆதரவாளர்களாக
சித்தரிக்கும் இந்துத்துவா கும்பல்களின் மனநிலைக்கும்,
ஈழத்தின் தமிழின படுகொலையில் இந்திய அரசோடு
பாகிஸ்தான் இணைந்து நின்றதை வெளிப்படுத்தினால்
இந்திய முஸ்லிகள் வருத்தப்படுவார்கள் என்று கருதி
தனது தீராநதி கட்டுரையில் பாகிஸ்தானின் பெயரை
தவிர்த்துவிட்டு எழுதும் அ.மார்க்ஸின் மனநிலைக்கும்
வேறுபாடுகளை காண முடியவில்லைநம்மால்.
அவர்களாவது நேரடியாக குற்றம் சுமத்துகிறார்கள்.
இவர் மறைமுகமாக அதையே செய்கிறார்.
ஈழத்தில் சாதிய கட்டமைப்புக்கு எதிராக புலிகள் எதுவும்
செய்யவில்லை தலித்திய ஒடுக்குமுறையை கேள்வி
கேட்கவில்லை என்கிற இவர்களின் கேள்விக்கு பதில்
அளிக்கும்முன் அ.மார்க்ஸ்,ஷோபாசக்தி ரசிகர் மன்ற
குழக்கொழுந்துகளிடம் ஒரு கேள்வியை எழுப்ப
வேண்டியிருக்கிறது.
பெரியார் என்கிற மகத்தான மனிதனின் உழைப்பு,
அம்பேத்கரிய பரவலை தமிழகத்தில் எடுத்துசென்ற
தலித்திய இயக்கங்களின்முன்னெடுப்புகள் ஆகியவைகள்
இல்லாமல் இருந்திருந்தாலும் கூட தமிழகத்தில் நிகழ்ந்த
நகரமயமாக்கலும் அரைகுறை முதலாளித்துவ
உறவுகளும்,ஒப்பீட்டளவில் குறைந்திருக்கிற
தீண்டாமையையும்,சாதியத்துக்கு எதிரானகருத்தியல்
கட்டமைப்பையும் சாதித்திருக்கும்
என்று கூறினால் அதை ஒப்புகொள்வார்களா இவர்கள்?
நிச்சயம் இதுபோன்ற அதிபுத்திசாலித்தனமான
முடிவுக்கெல்லாம் வர மாட்டார்கள் என்று நம்பலாம்.
அது போலத்தான் தேசிய இன விடுதலை முன்னெடுக்கபட்ட
ஈழத்திலும்,புலிகளும் தேசிய இன விடுதலை
போராட்டமும் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு
சாதிய கட்டமைப்பில் உடைவை ஏற்ப்படுத்தியிருக்கிறார்கள்.
1995இல் யாழ்ப்பானம் சிங்கள ராணுவத்தால்
ஆக்கிரமிக்கப்பட்டபோது புலிகளோடு இடம்பெயர்ந்த
மக்களில் சிங்கள ராணுவத்தின் மீள் குடியேற்ற அழைப்பை
ஏற்று திரும்பி வந்தவர்கள் பெரும்பாலும் ஆதிக்கசாதியினர்
என்பது ஒன்று போதுமே புலிகள் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு
எதிராக எடுத்திருந்த நடவடிக்கைகளை காட்ட.இனியும் சாதி
ஒழிப்பில் முன்னெடுக்கப்பட நிறைய வேலைகள் உள்ளன
என்பதை நாமும் ஒப்புக்கொள்கிறோம்.
இவர்கள் நெடுமாறன் மீது வைக்கும் விமர்சனங்களில்
பெரும்பாலும் நமக்கு மாற்றுக்கருத்துக்கள் இல்லை
என்றாலும் புலிகளின் முகவர் என்று சொல்வதை
விமர்சிக்க வேண்டியிருக்கிறது.இந்த முகவர் என்கிற
கொழுப்பெடுத்த வார்த்தையை தாராளமாக
உபயோகப்படுத்தும் அ.மார்க்ஸ்.அ.மார்க்ஸின்
சீடர்களுக்கு நாம் ஒரு கேள்வியை முன்வைக்க
வேண்டியிருக்கிறது.நெடுமாறன் புலிகளின் முகவர்
என்றால் நீங்களெல்லாம் யாரின் முகவர்கள்?
எதிர்ப்பிலக்கியம் என்கிற பெயரில் உளறிக்கொட்டி
கிளறி மூடிவதன் மூலமாக அறிவுஜீவி பட்டம் பெற
விரும்பும் உள்மன அரிப்பின் முகவர்கள் மட்டுமதானா
இல்லை வேறு ஏதாவது......?
நெடுமாறன் தமிழ் தேசிய டம்மிபீஸ் சரி ,ஆயுத
போராட்டத்தையும் அரசியல் போராட்டத்தையும்
அக்கம் பக்கம் நடத்தும் மக இக இந்திய தேசிய புரட்சி
டம்மி பீஸ் திண்ணியக் கொடுமைக்கு எதிராக என்ன
செய்தார்கள் என்பதை கேள்வி கேட்க்காமல் இவர்கள்
நழுவுவது ஏன்? புலிகளை குற்றம் சொல்பவர்களோடு
மட்டும் கள்ளக் கூட்டுவைத்துக்கொள்வதில் அப்படி என்ன
இவர்களுக்கு அலாதி விருப்பம் என்று தெரியவில்லை.
அடுத்து இவர்கள் புலிகள் மீது பொழியும் அவதூறுகளை
பற்றி சற்று அலச வேண்டியிருக்கிறது.அதில் ஒன்று
புலிகள் மக்களை பணயகைதிகளாக பிடித்துவைத்திருந்து
சிங்கள ராணுவத்தின் முன் தள்ளி தங்களை
பாதுகாத்துக்கொள்ள முயன்றார்கள் என்பது,அதாவது
தாங்கள் மக்கள் மத்தியில் இருந்தால் சிங்கள் ராணுவம்
தங்களை தாக்காது என்றும் அவ்வாறு தாக்கி மக்கள்
கொல்லப்பட்டால் சர்வதேச நாடுகள் தலையிடும்
என்றும் புலிகள் நம்பியதாக சொல்கிறார்கள்.
கடந்த முப்பது ஆண்டுகால போரில் சிங்கள ராணுவம்
கடைபிடித்த போர் முறை ஒன்று இஸ்ரேலின்
வழிகாட்டலில் நிகழ்த்தப்பட்ட கூட்டுத்தணடனை
முறை,அதாவது புலிகளின் நிலைகள் தெளிவாக
தெரிந்திருந்தாலும் அவர்களை தாக்காமல் மக்களை
தாக்கி உயிர்களைகொல்வதன் மூலம் புலிகள் மீது
மக்களுக்கு வெறுப்பு ஏற்ப்பட செய்வது.
இதை நன்கு அறிந்த புலிகள் மக்கள் மத்தியில் இருந்து
தங்களை பாதுகாக்கும் முடிவை எடுத்திருப்பதாக கருத
எந்த அடிப்படை நியாயமுமில்லை.
நூறு பேராக இருந்தாலும்,இலட்சக்கணக்கில் இருந்தாலும்
மக்களை கொல்ல சிங்கள ராணுவம் தயங்காது
என்பது அவர்களுக்கு நன்கு தெரிந்த விசயம்தான்.
இந்த நிலையில் புலிகள் மக்களை தங்கள் பாதுகாப்புக்காக
பயனபடுத்த முயன்றார்கள் என்று கூற
எந்த அடிப்படையும் இல்லை.
அடுத்தது புலிகள் மக்கள் மத்தியில் இருந்து செல்லடித்து
தமிழ்மக்களை கொன்றதாக் ஒரு குற்றச்சாட்டை
சுமத்துகிறார்கள்.இன்றைக்கு முகாம்களில் இருக்கும்
பெண்களிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட முயன்ற
சிங்கள ராணுவத்தினர்க்கு எதிராக அவர்களின்
துப்பாக்கிகளை பிடுங்கி இளைஞர்கள் தாக்க முயன்றதாக
எல்லாம் தகவல்கள் கசிகின்றன.ஒருவேளை புலிகள்
மக்களுக்கு எதிராக தங்கள் துப்பாக்கிகளை நீட்டியிருந்தால்
சிங்களனுக்கு எதிராக ஓங்கிய கைகளை புலிகளுக்கு
எதிராகவும் இளைஞர்கள் தூக்க எவ்வளவு நேரமாயிருக்கும்
ஒருவேளை அந்த இளைஞர்கள் எல்லாம் மக்களோடு
மக்களாக ஊடுருவிய புலிகள் என்றால்,புலிகள்தான்
மக்களுக்கு இப்போதும்பாதுகாப்பு என்கிற உண்மை
வெளிப்படுவதை ஜீரனித்துக்கொள்வதில் இவர்களுக்கு
ஏற்ப்படும் சஙகடத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
இவன்தான் புலி எங்களை பிடித்துவைத்திருந்தான் என்று
சிங்கள ராணுவத்திடம் மக்களே பிடித்துகொடுத்ததாகவும்
அதனை புலிகளின் ஆதரவாளர்களே ஒப்புக்கொள்வதாகவும்
கயிறு திரிக்கும் இவர்கள் அத்தோடு
நிறுத்திக்கொண்டிருந்தாலாவது நமக்கு இவர்களை
அம்பலப்படுத்துவது கடினமாக இருந்திருக்கும்.
கஞ்சிக்கும்,கழிப்பிடத்துக்குமே கால் கடுக்க மக்களை
வரிசயையில் நிற்க வைத்து,சர்வதேச செஞ்சிலுவை
சங்கம்உதவி நிறுவனங்கள்,பத்திரிக்கையாளர்கள்
என்று எவரையும் முகாம்களுக்குள் அனுமதிக்காக
சிங்கள அரசு பத்துரூபாய்க்கு நான்கு என்று
செல்போனையும் சிம்கார்டையும் மக்களுக்கு
கொடுத்து தமிழ்நாட்டில் இருந்து வரும் அழைப்புகளை
அனுமதித்துக்கொண்டிருப்பதாக கூறுவது ஒன்றே
போதும் இவர்களின் யோக்கியதை என்னவென்று காட்ட?
நல்லவேளையாக பொன்சேகாவின் நம்பரையோ
ராஜபக்சேவின்நம்பரையோ கொடுக்காமல்
போனார்களே மக்களின் நிலைமை பற்றி விசாரிப்பதற்கு,
சரி ஒரு பேச்சுக்கு இவர்கள் சொல்வதை
ஒப்புக்கொண்டாலும்இரண்டு இலட்சத்து
அறுபத்து ஆறாயிரம் மக்களும் நிழற்சிறைகளில்
இருப்பதாக இவர்களின் சித்தாந்த ஆசிரியர்
அ.மார்க்ஸே சொல்லிவிட்டார்.
தயா மாஸ்டர்,ஜார்ஜ் மாஸ்டர்,போர்க்காலத்தில் வன்னியில்
இருந்த மருத்துவர்கள் என்று பலரும் பேயறைந்தாற்
போனறமுகத்துடன் பத்திரிகையாளர்களை சந்தித்து
புலிகள் மக்களை பிடித்துவைத்திருந்தார்கள் என்று
சொல்லிகொண்டிருக்கையில்முகாம்களில் இருக்கும்
மக்களின் வாக்குமூலம் எந்த முறையில் பெறப்பட்டிருக்கும்
என்பதை பற்றி அறிய பெரிய புத்திசாலித்தனம்
தேவை இல்லை.
சிறைகளில் இருப்பவர்களிடம் பெறப்படும்
வாக்குமூலத்தின் நம்பகத்தன்மையை கேள்விகள் எதுவும்
இன்றிஒப்புக்கொள்ளும்படி நம்மை கேட்கும் உரிமை
இவர்களுக்கு இருக்கும்போது இவர்களின் நேர்மை பற்றி
சந்தேகங்கள் எழுப்பநமக்கு உள்ள உரிமையை
யார் மறுக்க முடியும்.
தனது சொந்த மகனையும் மகளையும் களதிற்கு
அனுப்பி பலிகொடுத்திருக்கும் பிரபாகரன் மக்கள்
மீது தாக்குதல் நடத்தும்படியும் அவர்களை மனித
கேடயங்களாக நட்த்தும்படியும் வலியுறுத்துவதாக
சொல்லப்படுவதை கண்ணை மூடிக்கொண்டு
புலிகள் ஆதரவாளர்கள் நம்ப வேண்டும் என்று
எந்த அடிப்படையில் இவர்கள் எதிர்பார்கிறார்கள்
என்று புரியவில்லை.
தங்களை மடையர்களாக கருதுவதில் அவர்களுக்கு
இருக்கும்உரிமைகளை நாம் மதிக்கலாம்.
நம்மையும் அவ்வாறே கருத நினைப்பவர்களை
என்ன செய்வது?
அத்தனையைம் தாண்டி ஒரு கேள்வி எழுகிறது.புலிகள்,
ஜனனாயகமின்மை பாசிசம் என்று பஜனை
பாடிக்கொண்டிருக்கும் இவர்கள் முகாம்களில் இருக்கும்
மக்கள் மீது நடத்தப்படும் மனித உரிமை மீறல்களுக்கு
எதிராக கடைபிடிக்கும் சதித்தனமிக்க மௌனம் நமக்கு
மேலும் பல விசயங்களை புரியவைக்கிறது.
சிங்களன் நடத்திக்கொண்டிருக்கும் மனித உரிமை
மீறல்களைபற்றி பேச புகுந்தால் அப்பாவி மக்களுக்கு
எதிராக் தான் மேற்கொள்ளும் சித்திரவதைகள மூலம்
புலிகளையும் மக்களையும்ஒன்றாகவே அவன் பார்க்கிறான்
என்கிற உண்மையை வெளிப்படுத்த வேண்டிய
நிலைவந்துவிடுமே என்கிற இவர்களின் பதட்டதைத்தான்
நம்மால் இதன் வழியாக உணர முடிகிறது.
புலிகளும் பிரபாகரனும் சாகும்வரை இந்தியாவை எந்த
விமர்சனமும் செய்யவில்லை என்று நாளும் பகலும்
தமிழ்தேசியத்தை விமர்சிப்பதைபோல இந்திய பார்ப்பன
தேசியத்தை விமர்சித்துக்கொண்டிருக்கும் இவர்கள்,
எந்த விமர்சனமும் செய்யாமல் இருக்கும் நிலையில்
கூட புலிகளை அழிக்க வேண்டிய தேவை இந்திய அரசுக்கு
ஏன் ஏற்ப்பட்டது என்பது போன்ற விசயங்களை ஆராயாமல்
கம்பி நீட்டுவது ஏனோ?
மாற்று அரசியல்,ஜனனாயகம் பற்றிய உரையாடல்கள்
பாசிச எதிர்ப்பு போன்ற சொல்லாடல்களின் மழையில்
முதலாளித்துவ ஏகாதிபத்திய நாடுகள்,இந்தியா கருணாநிதி
போன்றவர்கள் செய்த குற்றங்களை மூடி மறைக்க
செய்யப்படும்முயற்சிகளை முறியடிக்க வேண்டிய தேவை
எழுந்திருகிறது இன்று தமிழ் உணர்வாளர்கள் அதை
உறுதியுடன் முன்னெடுக்க வேண்டும்
புலிகள் தவறுகளே செய்யாதவர்களா? அவர்கள் மீது
உங்களுக்குவிமர்சனங்களே இல்லையா? என்றால் ஆம்
எங்களுக்கும் புலிகள்மீது அரசியல்ரீதியான விமர்சங்கள் உண்டு.
ஆனால் அவைகள் அடிப்படை நேர்மை கொண்ட,
முன்வைக்கப்படும் கருத்துகளை எதிர்கொண்டு
திறந்த மனதுடன் உரையாட முன்வருபவர்களோடு
மட்டுமே சாத்தியம் என்பதால்,அன்றைக்கு பிரபாகரன்
சூப்பர் ஸ்டார் என்று அர்த்தம் தெரியாமல் கூவியதை
போலவே இன்றைக்கு அ.மார்க்ஸ் சூப்பர் ஸ்டார்.
ஷோபாசக்தி சூப்பர் ஸ்டார் என்று கோசமிடும்
விசிலடிச்சான் குஞ்சுகளிடம் விவாதங்களை
தவிர்க்கவே விரும்புகிறோம்
தோழர் பொன்னம்பலனாருக்கு பெரியார் எழுதிய கடிதம்
கட்டுரையில் சுயமரியாதை இயக்கம் ஆரம்பத்தில்
ஈடுபட்டிருந்த பார்ப்பனீயத்தை ஒழிக்கும் முயற்சியிலும்
பார்ப்பன ஆதிக்கத்தை அழிக்கும் முயற்சியிலும்
இன்னமும் ஈடுபட்டிருக்காமல் அதைவிட்டுவிட்டு
வேறு வழியில் அதாவது சமதர்மம் பொதுவுடைமை
என்கிற வழியில் பிரவேசித்தது தப்பு என்றும்
அதனால் பழையபடி பார்ப்பனீயம் துளிர்த்து வருவதாகவும்,
பார்ப்பன ஆதிக்கம் தலைவிரித்தாடுவதாகவும்
குறிப்பிட்டுவிட்டு நாம் ஏதோ பார்ப்பன மாயையில் சிக்கி
இருப்பதாக பொருள்பட மிக்க ஆத்திரத்துடன் பல
விசயங்களை கொட்டியிருக்கிறார்.அதற்கு சிறிதாவது
சமாதானம் கூற வேண்டும் என்றே கருதுகின்றோம்.
முன்போல பார்ப்பனீயத்தின் கொடுமைகளை
வெளியாக்கும் வேலையிலும் பார்ப்பன ஆதிக்கத்தை
ஒடுக்கும் வேலையிலும் நமது முயற்சி முழுவதும்
இல்லை என்பதை நாம் ஓரளவுக்கு ஒப்புக்கொள்கிறோம்.
ஆயினும் சுயமரியாதை இயக்கத்தின் இலட்சியமெல்லாம்
அதுவேதான் என்பதை நம்மால் ஒப்புக்கொள்ள
முடியவில்லை.
பார்ப்பனீயத்துக்கும் பார்ப்பன ஆதிக்கத்துக்கும் காரணமாயிருப்பது
மதம் என்பதை தோழர் பொன்னம்பலனார் உணர்ந்திருப்பார்.
அம்மதத்தை ஒழிப்பதில் நாம் முன்னைவிட இப்போது
பன்மடங்கு தீவிரமாய் இருக்கின்றோம் என்பதையும்
தோழர் பொன்னம்பலம் அவர்கள் அறிவார்கள்.
பார்ப்பனீயத்தையும்,பார்ப்பன ஆதிக்கத்தையும் அழிக்க
வேண்டிய அவசியம் நமக்கு எதனால் ஏற்பட்டது?
பார்ப்பனீயத்தின் பேராலோ,பார்ப்பனர் பேரிலோ,ஏற்பட்ட
துவேசமா? வெறுப்பா? வஞ்சகமா? என்பதை யோசித்துப்
பார்க்க விரும்புகிறோம்.
ஒரு நாளுமல்ல,மற்றென்னவென்றால்,பார்ப்பனீயமும்
பார்ப்பன ஆதிக்கமும் ஏழை மக்களை,தாழ்த்தப்பட்ட
மக்களை என்றென்றும் தலை எடுக்கவொட்டாமல்
அழுத்தி நசுக்கி வருவற்கு ஆதரவாய் இருக்கின்றதென்றும்,
தாங்களே என்றென்றும் மேன்மையாயும் ஆதிக்கமாயும்
இருந்துவரத்தக்கதாய் இருக்கின்றதென்றும் கருதியே
அதனுடன் போர் புரிந்துவந்தோம்
ஆனால் அப்போரின் பலன் என்ன ஆயிற்று என்று
பார்ப்போமானால் பார்ப்பனர்களின் ஆதிக்கம் சில
குறைவுபட்டது.அரசியல் துறையில் பார்ப்பன
ஆதிக்கத்திற்குச் சாவுமணி அடிக்கத்தக்க நிலைமையும்
ஓரளவுக்கு ஏற்பட்டது.ஆனால் இதனால் ஏற்ப்பட்ட பயன்
என்ன என்று பார்ப்போமானால் சில பார்ப்பனரல்லாதார்
பார்ப்பனர்களின் ஸ்தானத்துக்கு வந்தார்கள்.
பார்ப்பனர்களைப் போலவே நடந்தார்கள்,ஏழைகளையும்,
தாழ்த்தப்பட்டவர்களையும் தலைதூக்கவிடாமல் இருக்க
பார்ப்பனர்களுக்கு கையாளாக இருந்து வேலை செய்து
வருகின்றார்கள் என்பதுதான் வெளிப்படையாக தெரிகின்றது.
உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால்
பார்ப்பனரல்லாதார் பெயரைச் சொல்லிக்கொண்டு
பெரிய மனிதனாகிய,மந்திரி பதவியையும்,
பார்ப்பனரல்லாதார் இயக்கத் தலைவர் பதவியையும் பெற்ற
தோழர் முனிசாமி நாயுடு அவர்கள் பதவிக்கு வந்தவுடன்
பார்ப்பனர்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும்,
பார்ப்பனரல்லாதார் நன்மைக்காகவே தோழர் முத்தையா
முதலியார் அவர்களால் உத்தியோகங்கள், வகுப்புவாரி
பிரதிநித்துவப்படி விநியோக்கிப்பட வேண்டும் என்று
செய்யப்படிருந்த விதியை ஒழிக்க வேண்டும் என்று
பாடுபட்டதோடு சுயமரியாதை இயக்கம் என்பதாக
ஒரு இயக்கம் இருக்கின்றதா என்று அறியாதவர்
போலும் பல தடவைகளில் அதை அலட்சியமாய்ப்
பேசியும் நடந்தும் வந்தார்.
இந்தக் காரியம் சுயமரியாதை இயக்கம் பார்ப்பன
ஆதிக்கத்தை ஒழிக்கப்பாடுபட்டதற்கும்,தோழர்
முனிசாமி நாயுடு முதல் மந்திரியாவதற்கும்
ஓரளவாது காரணமாய் இருந்ததற்கு ஏற்பட்ட பலனாகும்.
இது மாத்திரமல்ல,மற்ற மந்திரிகள் நிலைமையை
யோசித்தால் இனியும் வெட்க்ககேடாகும்.ஒரு மந்திரியார்
ஒரு பொதுக்கூட்டத்தில் சுயமரியாதை இயக்கத்தின்
நிழலில்தான் நாங்கள் இன்று மனிதர்களாய் வாழ்கிறோம்
என்றுகோஷம் செய்தார்,அவர் கண்களுக்கு இன்று
ரூபாயைத் தவிர வேறு வஸ்துவே உலகத்தில்
இருப்பதாகத் தெரியவில்லை.மற்றும் இப்போது பார்ப்பனரல்லாதார்
தலைவர் என்று சொல்லிக்கொள்ளுகின்ற பணக்காரர்களின்
யோக்கியதையும் முன்சொன்ன மந்திரி போலவும்
பார்ப்பனர்களையே தூதாட்க்களாகவும் தங்கள்
பதவி வேட்டைக்கு ஒற்றர்களாகவும் வைத்துப் பார்ப்பனீய
ஆதிக்கத்தைவிட மோசமான ஆதிக்கம் செலுத்தி
வருகின்றவர்களாவார்கள்.
பார்ப்பானை ஒழித்து பணக்காரன் கையில் ஆதிக்கத்தை
வாங்கிக் கொடுக்கசுயமரியாதை இயக்கம் இருக்கின்றது
என்று சொல்லுவதானால் கஷ்ட்டப்படும் மனித
சமூகத்துக்கு இவ்வியக்கத்தினால் எவ்வித பலனும்
ஏற்படாதென்பதே நமது அபிபிராயம்.
ஆதலால் சமதர்மத்தையும் பொதுவுடைமை
கொள்கையையும் விட பார்ப்பனீய ஒழிப்பும்,பார்ப்பன
ஆதிக்க அழிப்பும் பிரதானம் என்பதை ஒப்புக்கொள்ள
முடியாமைக்கு வருந்துகிறோம்.
இந்து,சுதேசமித்திரன் பத்திரிக்கைகளுக்கு நாட்டில்
செல்வாக்கு இருக்கும்வரை,இந்தியாவுக்கு வெள்ளைக்கார
முதலாளிகளின் ஆட்சிதான் மேலானது என்பதுதான்
நமது அபிப்பிராயமாக இருந்து வருகிறது.
ஏனெனில் தங்களை இழிவுபடுத்தி தங்கள் சமூகத்தை,
அடிமையாக்கி வாழ்ந்துவரும் ஸ்தாபனத்தை மக்கள்
ஆதரிகின்றார்கள் என்றால் அந்த மக்கள் விடுதலை பெற
யோக்கியதை உடையவர்கள் என்று எந்த மூடனாவது
ஒப்புக்கொள்ள முடியுமா? இதையெல்லாம் பார்த்துதான்
இந்த நாட்டுக்கு வேண்டியது சமதர்மமும்
பொதுவுடைமையும் என்ற முடிவுக்கு வந்தோமேழொழிய
வேறில்லை.
பார்பனரல்லாத மக்கள்,அறிவோடு மானத்தோடு
நடந்துகொள்ள யோக்கியதை உடையவர்கள் என்றால்,
பார்ப்பன ஆதிக்கத்தை ஒழித்து பார்ப்பனரல்லாதார்
ஆதிக்கத்தை ஏற்ப்படுத்த முயற்சிப்பதில் அர்த்தமுண்டு:
அப்படிக்கில்லாமல் பார்பனீயத்தை அழித்து பார்ப்பன
அடிமை கையில் ஆதிக்கத்தை கொடுப்பதற்கு
பாடுபடுவதென்றால்,அது கொள்ளிக் கட்டையை
எடுத்துத் தலையைச்சொறிந்து கொள்வதேயாகும்.
என்றாலும் எல்லாக் காரியத்தையும் ஏககாலத்தில்
செய்கின்ற முயற்சியில்தான் நாம்
இருக்கின்றோமேயொழிய,அவற்றை அடியுடன்
விட்டுவிடவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
குடி அரசு
பக்கம் 10.11.12.
22.10.1993
தோழர் பெரியாரின் இந்த கட்டுரையில் தேவையற்றவை
என்று கருதிய சில பத்திகளை சேர்க்காமல் விட்டிருக்கிறேன்.
அரசு அதிகாரத்தில் இருப்பவர்களோடு பிற்ப்படுத்தப்பட,
தாழ்த்தப்பட்ட மக்களின் நலனை முன்நிறுத்தி
செய்துகொண்ட சமரசங்களையும் தாண்டி, பெரியாருக்கு
இருந்த வர்க்க கண்ணோட்டத்தையும் பிறப்பின்
அடிப்படையை வைத்து மட்டுமே பார்ப்பனர்களை,
பார்ப்பனீயத்தை தீர்மானிக்கும் போக்குக்கு எதிரான
அவரது மிகச்சரியான பார்வையையும்
இந்த கடிதத்தில் நம்மால் காண முடிகிறது.
அவரது இந்த கடிதத்தில் சொல்லப்பட்டுள்ள விசயங்களை
சமகால அரசியல் தலைவர்களோடும் நிகழ்வுகளோடும்
இணைத்துப் பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது இன்று.
பெரியார் சாடியிருக்கிற முனிசாமி நாயுடுவின் இடத்தில்
கருணாநிதியை வைத்துப்பார்க்க எல்லா அம்சங்களும்
பொருந்தி வருகின்றன.
கடலில் கட்டி தூக்கிப்போட்டாலும் கட்டுமரமாகத்தான்
மிதப்பேன் அதில் நீங்கள் ஏறிபயணிக்கலாம் என்று
வசனம் பேசிக்கொண்டிருகிற மனிதரின் கண்களுக்கு
ரூபாய் என்கிற வஸ்துவை தவிர வேறு எதுவும்
தெரியாமல் போய்விட்டதையும்,பெண்கள்,குழந்தைகள்,
கர்ப்பிணிகளின் வயிற்றில் இருக்கும் சிசு என்று
முப்பதாயிரம் ஈழத் தமிழ் உயிர்களை காப்பாற்றியிருக்க
கூடிய நிலையில் இருந்தும்,ஆட்சிக்காகவும் அதிகாரத்துக்காகவும்
அவர்கள் கொல்லப்பட, துணைபோகிற அளவுக்கு அவர்
சென்றதையும் கண்டிருகிறோம் நாம்.
முனிசாமி நாயுடு முதல்வர் பதவியை பெற்ற பிறகு
பார்ப்பனர்களுக்கு விசுவாசமாக நடந்துகொண்டார்.
இன்று அகில இந்திய முதலாளிகளாக வளர்ந்துவிட்ட
தனது குடும்பத்தினரின் நலன்களுக்காக பார்ப்பன இந்திய
தேசியத்துக்கு விசுவாசமாக நடந்துகொள்கிறார் கருணாநிதி.
மத்திய அரசும் மாநில அரசும் தாழ்த்தப்பட்ட
வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டின் கீழ் நிரப்ப வேண்டிய
இடங்களை நிரப்பாமல் விட்டிருப்பது பற்றிய விவாதங்களே
இன்னும் முடியாத நிலையில்,மத்திய அரசின் அலுவலர்கள்,
மற்றும் பயிற்சித்துறை தாழ்த்தபட்டோர்க்கும்,
பழங்குடியினருக்கும் பணியிடங்களில் இடஒதுக்கீடு
மசோதா 2008 என்ற ஒன்றை கொண்டுவந்து 47
கல்விநிறுவனங்களில் அவர்களின் இட ஒதுக்கீட்டு
உரிமையை பறித்திருப்பதை பற்றியும்,அந்த சட்டம்
செல்லுபடியாகும் நிறுவனங்களின் பட்டியலை மேலும்
விரிவுபடுத்திக்கொள்ள அனுமதித்திருப்பதையும்
எதிர்க்காமல் மௌனம் காத்த திமுக வினரின் நிலையும்
இங்கே நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது.
பெரியாரின் வார்த்தைகளிலேயே சொல்வதானால்
பார்ப்பனரல்லாத சிலர் பார்ப்பனர்களின் இடத்துக்கு வந்து
பார்ப்பனீய ஆதிக்கத்தை விட மோசமான ஆதிக்கத்தை
செலுத்திவருவதை ஈழ போராட்டத்துக்கு எதிரான
கருணாநிதியின் ஒடுக்குமுறைகள் வழியாகவும்,
எடுத்ததற்கெல்லாம்தேசிய பாதுகாப்பு வழக்கு போடும்
அவரது நடைமுறைகள் வழியாகவும் நாம் புரிந்துகொள்ளலாம்.
பார்ப்பானை ஒழித்துப் பணக்காரன் கையில்
ஆதிக்கத்தை வாங்கிகொடுக்கவிரும்பாத,பெரியாரின்
இயக்கத்தில் இருந்து முறித்துகொண்டு வந்து,
பணக்காரர்களாகியிருக்கிற பார்ப்பன அடிமைகளால்
கஷ்ட்டப்படும் தமிழ் சமூகத்தை மீட்க வேண்டிய
தேவை எழுந்திருக்கிறது இன்று.
பெரியாரின் வழிகாட்டலின்படி சமதர்ம பொதுவுடைமை
கருத்துக்களை உயர்த்திப்பிடித்து பார்ப்பன,
கருப்பு(பணக்கார)பார்ப்பன, ஆதிக்கத்தை எதிர்த்து
ஏககாலத்தில் போராடுவது மட்டுமே நம்முன் உள்ள வழியாகும்.
Monday, July 20, 2009
ஷோபாசக்தி ஜீவிக்கிறார்
தேர்ந்தெடுத்த வார்த்தைகள் கோர்வையான பத்திகளோடு வன்மத்தையும் தனது அரசியல் அறியாமையையும் கலந்து பிரபாகரன் ஜீவிக்கிறார் என்றொரு கட்டுரையை தீராநதி இதழில் தீட்டியிருக்கிறார ஷோபாசக்தி.
பெரியாரிய,மார்க்சிய,பிறகான நவீனத்துவவாதியான அவரின் எழுத்துக்களில் மிளிரும் மேதமை உடனடியாக அதற்கு ஒரு எதிர்வினையை முன்வைக்கும் தேவையை உணர்த்தியதால் இந்த மறுமொழி முயற்சி.
எமது புரட்சிகர இயக்கத்தின் புனித இலட்சியமான சோசலிச தமிழீழம் அடைய என்பதாய் துவங்கும் புலிகள் இயக்கத்தின் உறுதிமொழியின் முதல் வாசகம் வெறும் புரட்சிகரமான வாய்ச்சொல் என்பதை இருபத்தைந்து ஆண்டுகளுக்குபிறகு கண்டுபிடித்து அறிவிக்க முனைந்திருக்கும் அவரை இடைமறித்து ஒரு விசயத்தை சொல்ல வேண்டியிருக்கிறது.
சர்வதேச நாடுகளின் வணிக சுரண்டல்,ராணுவ மேலாதிக்க நடவடிக்கைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட பிரதேசமாக,உலக புரட்சியில் மாளாத காதல் கொண்ட உங்களுக்கு புரியும் வார்த்தைகளில் சொல்வதானால் இந்தியாவில் மாவோயிச புரட்சியாளர்களின் கட்டுபாட்டில்இருக்கும் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களை போல,தமிழீழத்தின் பகுதிகளை பாதுகாத்து வைத்திருந்தது அந்த வாய்ச்சொல் இயக்கம்தான்.
தாடிக்கார கிழவன் மார்க்ஸின் பணிப்பெண்ணுக்கு புத்தகத்தை சமர்ப்பிக்கும் அளவுக்கு வரலாற்று உணர்வு கொண்ட உங்களுக்கு இந்த விசயத்தை நினைவூட்ட வேண்டிய நிலைக்கு எங்களை தள்ளிவிட்டது நியாயமா
ஷோபா சக்தி?
இரக்கத்துக்குறியவராக மட்டுமே கருதப்படக்கூடிய,நாயகனாக கொண்டாடப்படவோ,தலைவராகபின்பற்றக்கூடியவராகவோ இல்லாமல் போய்விட்ட உங்கள் முன்னால் தலைவர்,மதம்,சாதி,கட்சி,அமைப்புகள்,தாண்டி உலக தமிழர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பெற்று வெகுகாலமாகிவிட்டது என்கிற யதார்த்த உண்மை உங்கள் மதிப்பீட்டால் மாறப்போவதில்லை என்பதை அறிந்திருக்கிறீர்களா ஷோபாசக்தி?
விளிம்புநிலையினரின் கலகக்குரல் அல்லவா நீங்கள் !!
உங்களிடமிருந்து இது எதிர்பார்க்கப்பட கூடியதுதான்.
கடந்த இருபத்தைந்தாண்டுகளாக ஈழத்தமிழர்களின் அரசியல்,சமூக வாழ்வில் முதன்மை சக்தியாகவும்,மாபெரும் அமைப்பு பலத்தை பெற்றதாகவும்,எண்ணற்ற போரியல் சாதனைகளை செய்ததுமான விடுதலைப்புலிகளின் தலைமைக்குழு இலங்கை அரசால் ஒட்டுமொத்தமாக அழிக்கபட்ட வினாடியே,விடுதலைப்புலிகள் அமைப்பு மண்ணோடு மண்ணாய் சரிந்துபோனதாக கூறிவிட்டு அவ்வளவு அவசரமாக எங்கே செல்கிறீர்கள் ஷோபா சக்தி?
அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள்,தங்களுக்குள் பகைகொண்ட நாடுகளாக அறியப்பட்டிருந்த சீனா,இந்தியா,பாகிஸ்தான் போன்றவைகளின் ஆதரவோடு சிங்கள அரசு தமிழர் பகுதிகளை கைப்றறிய பிறகு வளர்ச்சி திட்டங்கள் என்கிற பெயரில் அங்கு அனுமதிக்க ஆரம்பித்திருக்கும் அந்நிய முதலீடுகளை,இத்துணை காலமும் தடுத்துக்கொண்டிருந்தது அந்த வாய்ச்சொல் இயக்கம்தான் என்பதை ஏகாதிபத்திய எதிர்ப்புபோராளியான நீங்கள் மறந்தது ஏனோ? செலக்டிவ் அம்னீசியாவா?
அதிவலதுசாரிய இயக்கமாக உருவெடுத்து சோசலிச சொல்லாடல்களை தனது குறுந்தேசியத்தை நியாயபடுத்த பயன்படுத்திகொண்ட ஒரு இயக்கத்தை ஒழிக்க அமெரிக்கா இந்தியா பாகிஸ்தான் சீனா என்று வலதுசாரி நாடுகளே இலங்கை அரசின் பின்னால் அணிவகுத்து நின்றதன் முரண்பாட்டை நீங்களே கொஞ்சம் விளக்குங்களேன்.
ஒரு வலதுசாரிய அமைப்பை உடைப்பதற்காக தனது உளவுதுறையை இந்தியா பயன்படுத்தியதன் முரண்பாட்டைஎங்களுக்கு விளக்காமல்,வெறுமனே ராஜிவ்காந்தியின் நினைவுநாளோடு புலித்தலைமை அழிக்கபட்ட நாட்கள் என்று கூறப்படுபவைகளை இணைத்து பம்மாத்து காட்டும் உங்களுக்கு எதற்கு இடதுசாரிய முகமூடி?
விமர்சனங்களை அனுமதிக்காத மாற்று கருத்தாளர்களை துரோகிகள் என்று கூறி கொலை செய்தது விடுதலைபுலிகள் இயக்கம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் உங்களிடம் ஒரு கேள்வியை முன்வைக்க வேண்டியிருக்கிறது.
மேற்குலக நாடுகள் இந்திய,சிங்கள அரசுகள் நீண்டகால திட்டங்களின் அடிப்படையில் விடுதலைபுலிகளின் அரசியல் ராணுவ அமைப்புகளில் ஊடுருவி வேலை செய்ததின் மூலமாகவே இன்றைக்கு புலிகளுக்கு இந்த பின்னடைவை கொடுத்திருக்கிறார்கள் என்கிற உண்மை இன்றைக்கு வெளிப்பட்டிருக்கிறது.
கருத்துக்களை அனுமதிக்காத,சனனாயகமற்ற ஒரு இயக்கத்துக்குள்,அரசியல்ரீதியாகவும் ராணுவரீதியாகவும் தவறான முடிவுகளை எடுக்கும்படியான வழிகாட்டல்களை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு செய்ய அந்நிய நாடுகளுக்கு எவ்வாறு சாத்தியமானது என்கிற கேள்விக்கான பதிலில் உங்கள் சனனாயகமின்மைக்கான புலம்பல்கள் எல்லாம் அர்த்தமற்று போய்விடுகின்றன.
இரண்டு இலட்சம் மக்களை பணயகைதிகளாக பிடித்துவைத்து அதில் இருபதாயிரம் மக்களை புலிகள் பலிகொடுத்ததாக வாய் கூசாமல் உங்களால் சொல்ல முடிவதில் எஙகளுக்கு ஆச்சரியமில்லைதான்.அந்த இருபதாயிரம் மக்களின் உயிர்களையும் தங்களோடு கடைசிவரை இருந்த போராளிகளின் உயிரையும் காக்க சரணடைதல் முடிவை மேற்க்கொண்டு,சரணடையவந்த நடேசனையும் மற்ற தளபதிகளையும் கொன்றுவிட்ட பிறகுதான் அந்த இனப்படுகொலையை சிங்கள ராணுவம் நிகழ்த்தியது என்கிற அடிப்படை மறைத்து,புலிகளின் தாக்குதலே இல்லாத நிலையில்தான் அந்த படுகொலைகள் நிகழ்ந்தது என்பதையும் மூடி மறைத்து யாரைக் காப்பாற்ற முயற்சி செய்கிறீர்கள் நீஙகள்?
முகாமில் இருக்கும் பெண்களிடம் பாலியல் வன்முறை செய்ய முயன்ற சிங்கள ராணுவத்தினரின் துப்பாகிக்களை பிடிங்கி இளைஞர்கள் தாக்க முயன்றதாக செய்திகள் வர ஆரம்பித்திருக்கின்றன இன்று,இந்த செய்திகள் போதுமே தமிழ் மக்களை புலிகள் பனையகைதிகளாக வைத்திருக்கவில்லை எனபதை உணர்த்த.
சிஙகள ராணுவ தளபதிகளே வெறும் ஆயிரம் புலிகள்தான் மீதமிருக்கிறார்கள் என்று அறிவித்திருந்த நிலையில் ஆயிரம் பேர் எழுபதாயிரம் மக்களை எப்படி தடுத்துவைத்திருக்க முடியும் என்பது போன்ற தர்க்கரீதியான கேள்விகளை எழுப்புகிற நேர்மையை எல்லாம்,
புலிகளின் வரித்தொல்லையோ புள்ளைபிடிப்போ இனிமேல் இருக்கப்போவதில்லை என்று எழுதி,முகாம்களில் இருந்து இதுவரை சிங்கள ராணுவம் பிடித்து சென்ற பதிமூன்றாயிரம் பிள்ளைகள் பற்றியும் அவர்களில் பாதிப்பேரை அவர்கள் கொன்றொழித்திருப்பதை பற்றியும் வாய்திறக்க மறுக்கிற உங்களிடம் எதிர்பார்க்கிற அளவுக்கு நாங்கள் ஏமாளிகள் இல்லை.
போகிற போக்கில் புலிகள் ப்ரேமதாசாவோடு ஒப்பந்தம் செய்துகொண்டது போலவே ராஜசபக்சேவோடும் ஒப்பந்தம் போட்டுக்கொண்டாதாக கூறும் நீங்கள் அந்த ஒப்பந்தத்தின் சரத்துகள் உள்ளடக்கம் பற்றி எல்லாம் உங்கள் சிங்கள பாட்டாளிவர்க்க உளவாளி தோழர்களிடம் இருந்து தகவல் சேகரித்து வெளியிடாமல் போனது ஏனோ ?
தங்கள் தேசத்துக்கான அங்கீகாரத்தை பெறும் ஒற்றை நோக்கத்துக்காக மட்டுமே பெயரளவில் ஏகாதிபத்திய நாடுகளோடு சமரசத்தை கடைபிடித்த தலைமையின் வழிகாட்டலில்,களத்தில் போராடி வீழ்ந்த போராளிகளின் மரணத்தை அரசியலற்ற அவலங்களாக சித்தரிக்கும் உங்கள் போலித்தனத்தை உணர முடியாத அளவுக்கு நாங்கள் அரசியல் அறிவு அற்றவர்களுமல்ல.
தங்களின் அப்பட்டமான தனிமனிதத்துவ வாழ்வியல் சிந்தனைகளையும் தாண்டி,போராட துணிந்த புலம்பெயர் தமிழ் இளைஞர்களை துரோகிகள் என்று விளிக்கும் உங்களின் திடீர் இடதுசாரிபாசத்தின் யோக்கியதை எங்களுக்கு தெரிந்ததுதான்.செத்த விலங்கிலிருந்து உண்ணி கழருவதுபோல இடதுசாரி அமைப்புகளில் இருந்து பிய்த்துக்கொண்டு சென்றவர்களின் ரசிகர்மன்ற நிர்வாகிதானே நீங்கள்.
சிங்கள் அரசின் மனித உரிமை மீறல்கள்,சரணடைந்த பெண் போராளிகளின் பாதுகாப்பு,விசாரணைகளின்றி நீண்ட காலமாக சிறைகளில் இருக்கும் தமிழ்ர்களின் மறுவாழ்வு என்றெல்லாம் கதையாடல்களை நீட்டிச் செல்லும் நீங்கள் இன்றுவரை எரிக்சோல்கைம் இருதரப்புகளுமே ஒரு அரசியல் தீர்வுக்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டன என்று சொல்லிக்கொண்டிருப்பதை சுட்டிகாட்டுகிறீர்கள்.
அது என்ன தீர்வாக இருந்திருக்கும் என்பதையும் சுட்டிகாட்டி இருக்கலாமே?
திரிகோணமலையை இந்தியாவுக்கும்,அமெரிக்காவுக்கும்,நோராச்சோலையை சீனாவுக்கும் இலங்கை அரசு திறந்துவிட்டுருப்பதுபோல தமிழீழத்தின் பகுதிகளை அந்நிய நாடுகளுக்கு திறந்துவிட புலிகள் சம்மதித்து,தமிழீழத்தின் மக்களையும்,வளங்களையும் சூறையாடலுக்கு விட்டுவிட்டு,இலங்கை அரசும் மேற்கு மேற்கு நாடுகளும் கொடுக்கும் பெயரளவிலான தீர்வுத்திட்டங்களை ஏற்றுக்கொண்டு இனஒடுக்குமுறை என்கிற நுகத்தடியை சுமந்துகொண்டிருக்கும் மக்கள் மீது ஏகாதிபத்திய ஒடுக்குமுறை என்கிற என்கிற நுகத்தடியை சுமத்தவும் சம்மதித்திருக்க வேண்டும். அதுதானே நீங்கள் சொல்ல வருகிற தீர்வு?
புலிகளின் அழிவு,தலைமை கொல்லபட்டுவிட்டது என்றெல்லாம் நீங்கள் அள்ளிவிடும் சரடுகளையெல்லாம் சற்றுபரிசீலிக்க வேண்டியிருக்கிறது.
2008ஆம் ஆண்டு நவம்பரில் கிளிநொச்சியை பிடிப்பது சிங்கள ராணுவத்துக்கு கனவாகவே அமையும் என்று பிரபாகரன் தனது மாவீரர் தின உரையிலேயே குறிப்பிட்ட சில தினங்களிளேயே பின்வாங்கி செல்லும் முடிவை எடுத்த புலிகளின் நடவடிகைகளை கனரக ஆயுதங்கள்,ஆளில்லாத உளவு வாணூர்திகள்,ராணுவவீரர்கள் என்று இலங்கையின் போரை தனது போராக நடத்திக்கொண்டிருந்த இந்தியாவின் உளவு செயற்க்கைகோள் அனுப்பும் முயற்சிகளோடு இணைத்துப்பார்ப்பது சரியாக இருக்கும்.
தமிழகத்திலும்,புலம்பெயர் தேசங்களிலும் நடைபெறும் போராட்டங்களும் எழுச்சிகளும் என்ன விளைவுகளை கொடுக்கின்றன என்பதை அறிவதற்காகவும்,சிங்கள் ராணுவத்தின் பிடியில் விழும் மக்களுக்கு இழைக்கப்படபோகும் சித்திரவதைகளை கருத்தில்கொண்டும் தங்களோடு வந்த மக்களை அழைத்துக்கொண்டு பின்நகர்ந்த புலிகள் ஆயுத போராட்டத்தை ஒத்திவைக்கிற முடிவை அப்போதே எடுத்துவிட்டதாக கருத சகல நியாயங்களும் உண்டு.
தங்கள் மரபுவழி படையணிகளையும் ஆயுதவளங்களையும் பரவலாக்கிவிட்டு பின்நகர்ந்த புலிகள்,புலத்திலும், ஊடுருவியிருந்த சக்திகளால் அடையும் பின்னடைவுகளை உணர்ந்து கொண்டு,தனது மகனையும்,மகளையும் போராட்ட களத்திற்க்குகொடுக்கும் முடிவில் இருந்த தேசிய தலைவரை போரின் ஏதோ ஒரு கட்டத்தில் களத்திலிருந்து அப்புறப்படுத்தியிருந்தார்கள் என்ற முடிவுக்கு தர்க்கரீதியாக வர முடியும்.
ராணுவ தளபதிகள் சிலரையும் அரசியல் பிரிவு தலைவர்கள் சிலரையும்,குறிப்பிட்ட அளவிலான போராளிகளையும் மட்டுமே களத்தில் நிற்க வைத்திருந்தார்கள் புலிகள் என்பதாகவும் கருதலாம்.
ஆயுதங்களை மௌனிக்க செய்வது என்கிற முடிவை புலிகள் அறிவித்த பிறகும் அவர்களையும் மக்களையும் கொன்றொழித்திருக்கிறது இலங்கை ராணுவம்.
வன்னியில் புலிகளுக்கெதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள்,பாதுகாப்பு வளையம் என்று அறிவித்த பகுதிகளுக்கு வந்த மக்களை ஏன் கொன்றார்கள்,ப்ரான்ஸின் உதவி நிறுவனத்தை சேர்ந்தவர்களின் ஆம்புலன்ஸை தாக்கி மருத்துவ பணியாளர்களை கொன்றார்களே அவர்கள் எல்லாம் புலிகளா? இது ஒன்றே போதுமே புலிகள் ஆக இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழர்கள் என்கிற காரணத்துக்காகவே மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்று சொன்ன தோழன் முத்துக்குமாரின் வார்த்தைகள் களத்திலும்,இன்று முகாம்களிலும் நிதர்சனமான உண்மையாகிருக்கிறது.
மாகாண சபைகளுக்கு அதிகாரம் அளிப்பதற்க்கு அரசு தரப்பு சம்மதித்திருப்பதாகவும்,கிழக்கின் உதயத்தை போலவே வடக்கின் வசந்தத்தை அரசு கொண்டுவந்துவிடும் என்று தமிழ்மைய கட்சிகளும் தமிழ் அறிவுஜீவிகளும் கருதுவதாக ஷோபாசக்தி சொல்லிக்கொண்டிருக்கையில், நாட்டை நேசிப்பவர்கள், நேசிக்காதவர்கள் என்ற இரு தரப்பினராக மட்டுமே இலங்கையில் உள்ள மக்களை தான் பார்க்கப்போவதாக அறிவித்திருப்பதன் மூலம் தமிழர்களுக்கு எந்த உரிமைகளையும் கொடுக்க முடியாது என்பதை அழுத்தந்திருத்தமாக உறுதிபடுத்தியிருக்கிறார் ராஜபக்சே.
அறுபது ஆண்டுகளாக சிங்கள அதிகாரவர்க்கத்தின் சிந்தனையில் வராத மாற்றம் இனி வரும் என்று நம்பவோ,ஒட்டுமொத்த இலங்கையில் புரட்சி என்பது போன்ற அபத்தகளஞ்சியமான சிந்தனைகளுக்கோ இனி எந்த இடமில்லை.
அரசியல் போராடங்களை முதன்மைப்படுத்துவது.அமைப்பில் இருக்கும் சந்தர்ப்பவாத சக்திகளை களையெடுப்பது.போராட்ட போக்கின் வழியில் இழைத்த சில தவறுகளை திருத்திக்கொண்டு முன்நகர்வது தேவையான நேரத்தில் ஆயுதபோராட்டத்தை முன்னெடுப்பது ஆகியவைகளே புலிகளின் திட்டமாக இனி இருக்க கூடும்.
உலகம் வியக்கத்தக்க விதத்தில் ராணுவ போராட்டங்களை நடத்திய அவர்கள் அரசியல் போராட்டங்களையும் அவ்வாறேமுன்னெடுத்து தமிழீழத்தை வெல்வார்கள் என்பதில் நம்பிக்கை கொள்வோம்.
உலக இடதுசாரி இயக்கங்களால் இலங்கை ஆசியாவின் வெடிமருந்துபீப்பா என்று அழைக்கப்பட்ட காலம் ஒன்று இருந்ததாக அழுத்துக்கொள்ளும் ஷோபாசக்தி சமீபத்தில் இந்திய மாவோயிஸ்ட் கட்சி தனது அணிகளுக்கு வெளியிட்ட சுற்றறிக்கை பற்றி கேள்விப்பட்டிருக்க நியாயமில்லை.
அதில் விடுதலைபுலிகள் தங்கள் எதிரிகளை குறைத்து மதிபிட்டுவிட்டதால் பின்னடைவை சந்தித்திருப்பதாகவும்,அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளும்படி தனது அணிகளை கேட்டுக்கொண்டுள்ளதுடன்,விடுதலை புலிகளுக்குஏற்ப்பட்டிருக்கும் பின்னடைவு ஒட்டுமொத்த தெற்க்கு ஆசிய புரட்சிகர இயக்கங்கள்,தேசிய விடுதலை இயக்கங்களின் ஆயுத போராட்ட முன்னெடுப்புகள் மீது எதிர்மறை விளைவுகளை ஏற்ப்படுத்தும் என்றும் குறித்திருக்கிறார்கள்.
விடுதலைப்புலிகளின் மீது விமர்சனங்கள் இருந்தாலும்,ஈழதேசிய விடுதலை போராட்டத்தின் புரட்சிகர உள்ளடகத்தையும் அதில் விடுதலைபுலிகள் வகித்த பாத்திரத்தையும் அங்கீகரித்திருக்கிறது இந்திய (மாவோயிச)கம்யூனிஸ்ட் கட்சி.
உண்மையான புரட்சிகர சக்திகளின் எண்ணத்தை அறிந்துகொண்ட பிறகு ஷோபாசக்தியிடம் நற்சான்றிதழ் பெற்று புலிகளுக்கு கொடுத்துக்கொண்டிருக்க தேவைகள் இல்லை நமக்கு.
தமிழர்களின் உள்ளங்களில் வீரனாகவும் மனிதனாகவும் பிரபாகரன் ஜீவித்துக்கொண்டிருக்கும்வரை,ஏகாதிபத்திய அரசுகளுக்கும் பேரினவாத அரசுக்கும் எதிராக வெற்று வார்த்தைகளையும்,இடதுசாரி அமைப்புகளுக்கும்,தேசிய விடுதலை இயக்கங்களுக்கும் எதிராக வன்மத்தையும்,மனிதத்துவ முகமூடியை அணிந்துகொண்டு கக்கிக்கொண்டிருக்கும், உயிரோடு அழுக ஆரம்பித்திருக்கும் வர்க்கத்தின் பிரதிநிதியாக ஷோபாசக்தியும் ஜீவித்துக்கொண்டிருப்பார்.
Thursday, July 16, 2009
அ.மார்க்ஸ் என்றொரு தேசமறுப்பாளன்
உறங்கிக்கொண்டிருக்கையில் கூட தேசிய இனம்,தேசம்.தேசியம் என்கிற வார்த்தைகளை கூறினால் எங்கோ தமிழ்த்தேசியம் பற்றித்தான் பேசுகிறார்களோ என்று விமர்சனம் என்கிற பெயரில் ஒழிக கோஷம் போட கிளம்பிவிடுவார் தோழர் அ.மார்க்ஸ்.
தேசியம் என்கிற கருத்தியலுக்கு எதிராக பேசிய எழுதிய சர்வதேசிய எழுத்தாளர்களை தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தும் மாபெரும் பணியில் கடந்த சில வருடங்களாகவே மிக தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கும் அவரின் தேசிய எதிர்ப்பில் நமக்கும் உடன்பாடுகள் உண்டுதான்.
ஆனால் ஒரு சின்ன வருத்தமும் கூடவே வந்து தொலைகிறது.
அவரின் தேசிய எதிர்ப்பு கருத்துக்கள் எல்லாம் ஈழதேசியத்துக்கும்,தாய்தமிழக தமிழ்த்தேசியத்துக்கும் எதிராக மட்டுமே முன்னிருத்தப்படுகிறதே ஒழிய,இந்திய தேசியத்துக்கு எதிராகவோ அல்லது அவரின் பெருவிருப்புக்கு உரியதான காஸ்மீர தேசியத்துக்கு எதிராகவோ ஒரு பத்தியை கூட அவர் எழுதியதாக தெரியவில்லை.
இந்த இரண்டு தேசியங்களும் அக்மார்க் முத்திரை பெற்ற மனித சுரண்டல்களும் அவலங்களும் இல்லாத தேசியங்களாக இருக்கின்றன என்றும்,எந்த தவறுகளும் இல்லாமல் மிகசரியாக காஸ்மீர் தேசிய விடுதலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது என்றும் கருதுகிறாரா அ.மார்க்ஸ்?
தோழர் அ.மார்க்ஸ் பதிலளிப்பார் என்றே நம்புவோம்.
தமிழகத்தின் குறிப்பிடத்தகுந்த அறிவுஜீவிகளில் ஒருவரான அவரை பற்றி நாமும் ஒரு விமர்சனத்தை முன்வைக்கலாம் என்கிற நப்பாசையில் இலங்கையில் அடுத்து என்ன என்கிற பெயரில் தீராநதி இதழில் அவர் எழுதியிருக்கும் கட்டுரையை புரட்டியபோது இப்பவே கண்ணை கட்டுதே என்கிற வடிவேலுவின் நிலைதான் நமக்கும் வந்தது.
புலிகள் செய்த கடைசிதவறு என்கிற பெயரில் சென்றமாதம் தான் எழுதிய கட்டுரைக்கு தீவிர புலிகள் ஆதரவாளர்களிடம் இருந்து கூட பாராட்டுகள் வந்ததாக கூறுகிறார் அ.மார்க்ஸ்.
தமிழகத்தின் மேன்மைதங்கிய சில அறிவுஜீவிகள் சித்தரிப்பதுபோல ரசிகர்மன்ற மனப்பான்மையோடு செயல்படாமல் வைக்கப்படும் கருத்துகளை எதிர்கொண்டு விமர்சிக்கும் அளவுக்கு பக்குவம் கொண்டவர்களே புலிகள் ஆதரவாளர்கள் என்று ஒப்புக்கொண்ட அ.மார்க்க்சுக்கு நமது நன்றிகளை கூறிக்கொள்வோம்.
மூன்று வேளை அறுசுவை உணவு,நேர்த்தியான இருப்பிடங்களோடு புலிகள்பகுதிகளில் இருந்து வெளியேறும் மக்களை வரவேற்க காத்திருந்த சிங்கள ராணுவத்தினரின் அழைப்பை மதிக்காமல் புலிகள் மக்களை மனித கேடயங்களாக பிடித்துவைத்திருபதாக இவரது உற்ற தோழன் சோபாசக்தி கூறியபோது மவுனித்திருந்த இவர் இன்றைக்கு மூன்று இலட்சம் தமிழர்கள் நிழற் சிறைகளில் அடைபட்டு கிடப்பதாக எழுதியிருந்ததை பார்க்கையில் புல்லரிப்பே வந்துவிட்டது.
இலங்கையில் அழிக்கப்பட்டுவிட்ட ஜனநாயகம்.மக்களை முகாம்களில் அடைத்துவைத்துக்கொண்டு உள்ளாட்சி தேர்தலைகளை நடத்த முயற்சிக்கும்ராஜபக்சே கும்பலின் சதி ஆகியவைகளை பற்றி கூறிவிட்டு.தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்த திஸ்ஸ விதாரண குழு அறிக்கை முடங்கி கிடப்பதாக கூறுகிறார் அ.மார்க்ஸ்.
கடந்த அறுபதாண்டுகளுக்கும் மேலாக சிங்கள ஆளும்வர்க்கங்கள் அமைத்த தீர்வுத்திட்ட குழுக்களின் நிலை பற்றிய நினைவு வந்து போனது மனதில்.
ராஜபக்சே மீது போர்குற்ற விசாரணை நடத்தப்படுவதை தடுத்த,ஈழத்தின் தமிழினபடுகொலையில் பங்கேற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியாவோடு
முன்னால் சோசலிச நாடுகளான சீனா,ரஸ்யா,வியட்நாம் ஆகியவைகளை மறக்காமல் குறித்த அ.மார்க்ஸ் பாகிஸ்தானை கழட்டிவிட்டது ஏனோ?
ஆட்க்கொணர்வு மனுவை கூட அனுமதிக்காத ஸ்டாலினிய ரசியா பற்றி அதிகாரம் பற்றிய உரையாடல்களில் நீட்டி முழக்கும் அவருக்கு பாகிஸ்தானில் இருந்து ஏதேனும் பத்வா வந்திருக்குமோ?
பேசாப் பொருளை பேச துணிந்த அவருக்கு ஏன் இந்த தடுமாற்றம்?
ஈழத்தமிழின படுகொலையில் ஒன்றிணைந்த இந்திய பாகிஸ்தானிய ஆளும்வர்க்கங்களை அம்பலபடுத்துவதில் பார்ப்பனிய இதழான காலசுவடுக்கு இருக்கும் சிரமத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
இந்துத்துவ பாசிச எதிர்ப்புபோராளி அ.மார்க்சுக்கு அதில் என்ன சங்கடம்.
தமிழீழ தேசிய தலைமையின் அழிவு பற்றி தர்க்கரீதியான ஆய்வுகள் இன்றி இவர் சொல்லியிருக்கும் கருத்துகள் பரிசீலிக்க தகுதியற்றவையாக இருப்பதால் அதற்குள் நாம் போக தேவை இல்லை.
பிரபாகரனின் மரணத்தால் தங்கள் அரசியல்வாழ்வு அஸ்தமித்துபோய்விட்டதாக கருதும் ஈழ ஆதரவாளர்கள் பற்றி இவர் கூறும் கருத்து குருட்டுப்பூனை விட்டத்தில் பாய்ந்தது போல ஈழவிடுதலைக்கு குரல் எழுப்பும் தமிழக அமைப்புகள் அனைத்தையும் பொதுமைப்படுத்தி குறை கூறுவதாக மட்டுமே அமைந்திருப்பதால் அவரின் கருத்தாழமிக்க அடுத்த சிந்தனையை பரிசீலிக்க முயலுவோம் நாம்.
உச்சபச்ச கோரிக்கைகள் கொள்கை இலட்சியங்களின் அடிப்படையிலான காலமல்ல இது என்றும் அறம் நீதி ஆகியவற்றை வறுபுறுத்தி மக்களின் துயரத்தை களைய நம்மாலானதை செய்ய வேண்டும் என்று போகும் இவரின் அடுத்த பத்தியை படிக்கையில் மேலும் சில கேள்விகள் தோன்றியது நமக்கு.
தங்கள் வணிக ராணுவ நலன்களுக்காக உச்சபச்ச மனித அவலத்தை ஈழத்தமிழர்களுக்கு இழைத்திருக்கும் முதலாளித்துவ ஏகாதிபத்திய நாடுகளின் ஆளும்வர்க்கங்களோடு அறம் பற்றிய நீதி பற்றிய உரையாடல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சொல்லும் இவர்,போராட்ட களத்தின் போக்கில் புலிகள் இழைத்த தவறுகளுக்கு எதிராக மட்டும் சாட்டையை சுழற்றிக்கொண்டு திரிந்தது ஏனோ?
மீண்டும் கேளிக்கை வரிவிதித்து அதன் மூல வசூலாகும் தொகையை ஈழத்தமிழர்களுக்கு அனுப்புவோம் என்றால் சினிமாக்காரர்கள் ஒத்துகொள்வார்களா?
பஸ் கட்டணத்தை பத்து ரூபாய் உயர்த்தி ஈழத்துக்கு அனுப்பலாம் என்றால் மாணவர்கள் ஏற்ப்பார்களா ?
வாட் வரியை ஒரு சதம் உயர்த்த வணிகர்கள் சம்மதிப்பார்களா ?
என்றெல்லாம் அதிபுத்திசாலித்தனமான் கேள்விகளை முன் வைக்கும் அ.மார்க்சுக்கு நாம் சொல்லிக்கொள்ள வேண்டியது ஒன்றுதான்.
குஜராத்தில் பூகம்பம் ஒரிசாவில் வெள்ளம் என்று எந்த பேரழிவு வந்தாலும் தனது கைகளில் இருக்கும் தான் உழைத்து சேர்த்த காசை கொடுக்க இயல்பாக முன்வந்த தமிழர்களுக்கு மனிதநேயத்தை பற்றி நீங்கள் பாடம் நடத்த தேவையில்லை.
அதற்கான தகுதியும் உங்களுக்கு இல்லை.
இந்துத்துவ எதிர்ப்பு என்பதை இந்திய தேசிய எதிர்ப்பிலிருந்து பிரித்து பார்க்க முடியாது என்கிற அடிப்படை உண்மையை மூடிமறைக்க முயலும் அ.மார்க்ஸ் போன்றவர்களிடம் தமிழக இளையதலைமுறை விழிப்பாக இருக்க வேண்டியது அவசியமாகியிருக்கிறது இன்று.