Thursday, December 17, 2009

வன்முறையின் அரசியல் - 4

இனியொருவில் பாராட்டத்தக்க விதத்தில் விவாதத்தை
முன்னெடுத்த தோழர் மக்கள் கருத்து இறுதியாக,
சொல்லி இருந்த விசயம் சர்வதேச அரங்கில் மீண்டும்
சாதகமான நேரம் வரும்வரை புலிகள் காத்து
இருப்பார்கள் என்று எதிர்பார்த்தேன் அதுவரை
புலிகள் பின்வாங்கி கொரில்லாக்களாக செல்லாமல்
மக்களை அரண் காத்து அழிந்துவிட்டார்கள் என்று.
புலிகளுக்கு பொருந்தும் இதே விசயம் நேபாள
மாவோயிஸ்டுகளுக்கும் பொருந்தும்தானே?
உலகில் தேசிய இன விடுதலையையும்,புரட்சிகர
எழுச்சிகளையும் ஆதரிக்கிற எந்த முகாமும்
இல்லாத நிலையில் நேபாள மாவோயிஸ்டுகள்
என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்கிறீர்கள்?



முப்பது ஆண்டுகால போர் அனுபவமும்,முப்படை
பலமும்,வீரமும் கொண்ட போராளிகள் என்பதால்
புலிகளால் மூன்று ஆண்டுகள் சர்வதேச நாடுகள்
என்கிற பெயரில் அறியப்படும் முதலாளித்துவ
நாடுகளை எதிர்த்து நிற்க முடிந்தது.அத்தகைய
ராணுவ பலம் இல்லாத நிலையில் நேபாள
மாவோயிஸ்டுகள் ஆயுதப் போராட்டத்தையே
தொடர முடிவு செய்திருந்தால் அதிகபட்சம்
ஆறு மாதங்களுக்குள் முற்றாக அழிக்கபட்டு
இருப்பார்கள் என்பதுதானே யதார்த்தம்.
நேபாள மாவோயிஸ்டுகள் மீது எனக்கும்
சில விமர்சனங்கள் உண்டு.முதன்மையானது
தங்கள் போராளிகளை நேபாளத்தின் அரசு
ராணுவத்தில் இணைக்க விரும்பியது.
அது ஏற்க இயலாதது.பாட்டாளிவர்க்க
சர்வாதிகாரத்தை கைவிடுவதாக அறிவித்தது.
ஆகிய விசயங்களோடு உடன்பட முடியாத
போதும் அவர்களின் வழிமுறைகள் முற்றாக
நிராகரிப்புக்கு உள்ளாக்கப்பட வேண்டியது
என்கிற கருத்தில் உடன்பாடில்லை.




லெனினியத்தை கைவிட்டுவிட்டார்கள்,மார்க்சிய
அடிப்படையை துறந்துவிட்டார்கள் என்றெல்லாம்
பேசுவதற்கு முன் யதார்த்த உலகம் எவ்வாறு
இருக்கிறது என்பதில் கவனம் செலுத்துவது
நலம்.வாக்குகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட
அரசுகள் மீது தாக்குதல் நிகழ்த்துவதற்கு
சர்வதேச மட்டத்தில் நிலவும் நிர்பந்தங்களை
கவனத்தில் கொண்ட பிறகே பாராளுமன்றதின்
மூலம் புரட்சியின் இடைக்கட்டத்தை
நிறைவு செய்திருக்கிறார்கள் நேபாள
மாவோயிஸ்டுகள் என்பதே என் கருத்து.
தென் அமெரிக்க நாடுகளில் மக்களின்
வாக்கெடுப்புகள் மூலம் ஆட்சிபொறுப்பில்
இருக்கும் நாடுகளின் மாதிரியை அவர்கள்
கடைபிடிக்க விரும்புகிறார்கள் என்றே அறிய
முடிகிறது.கியூபா,வெனிசுலா,பொலிவியா
போன்ற நாடுகள் அணைத்துக்கும் ஏதோ ஒரு
விதத்தில் சீனா,மற்றும்,ரஸ்யாவின் ஆதரவு
இருப்பதை நாம் மறுக்க இயலாது.நேபாள்
மாவோயிஸ்டுகளின் நடைமுறைகளையும்
ஏன் ஒரு இடைக்கட்டமாக கருதக் கூடாது?
சர்வதேச அரங்கில் சாதகமான நிலை வரை
கடைபிடிக்கப்படும் அதாவது அணு ஆயுத
வலிமை கொண்ட ஒரு நாடோ அல்லது
நாடுகளின் கூட்டமைப்போ உருவாகி
தேசிய விடுதலை போர்களையும்,இடது
சாரி எழுச்சிகளையும் ஆதரிக்கும் நிலை
வரும்வரை கடைபிடிக்கப்பட வேண்டிய
ஒரு இடைக்கட்டமாக கருதலாமே?
அரசு சாரா நிறுவனங்கள் பங்கை
ஆற்றும் சி.பி.ஐ.சி.பி.எம் கட்சிகள்
பற்றி ஏற்கனவே என் பதிவுகளில்
குறிப்பிட்டுவிட்டதால அவர்களின்
வழிமுறைகளை நான் ஏற்பதாக கருத
வேண்டாம்.




முதலாளித்துவம் அதன் அடுத்தகட்டமாக சோசலிசம்
நோக்கி மட்டுமே செல்ல வேண்டியதில்லை
காட்டுமிராண்டித்தனத்தை நோக்கியும் செல்லலாம்
என்ற மார்க்சின் வார்த்தைகள் இன்று நிதர்சனமாகிக்
கொண்டு இருக்கிறது.தன்னை தக்கவைத்துக்
கொள்ள சகலவிதத்திலும் முயலும் முதலாளித்துவ
அமைப்புக்கு கடிவாளம் போடும் முயற்சியில்
இடைகட்டங்களில் நிலவும் அரசுகளாக
தென் அமெரிக்க மாதிரிகளை ஏன் கருதக் கூடாது?
இரண்டு வழிகள் மட்டும்தான் இப்போது உண்டு.
ஒன்று பல தசாப்தங்கள் தொடர வேண்டிய
கொரில்லா போராட்டம் அல்லது,அல்லது ஒரு
இடைக்கட்டத்தில் பாராளுமன்றத்துக்கு செல்வது.



தேசிய விடுதலைப்போர்களோ அல்லது புரட்சிகர
வர்க்கபோராட்டங்களோ எதுவாக இருப்பினும்
இன்றைக்கு மக்கள் மயப்படுத்தப்பட்ட வெகுசன
வன்முறை மூலம் மட்டுமே எதிரிகளை எதிர்
கொள்ள முடியும் என்பதுதான் யதார்த்தம்.
உதாரணங்களாக குஜ்ஜார்கள் போராட்டம்.
காஸ்மீரிகள் போராட்டம்,பெக்டெலுக்கு
எதிராக எழுந்த பொலிவிய மக்களின்
போராட்டம்.பாலஸ்தீன மக்களின் இண்டிபதா
ஆகியவைகளில் இருந்து நாம் பாடம் கற்க
வேண்டி இருக்கிறது.அமர்நாத் நிலபிரசனை
தொடர்பான போராட்டங்களில் படுகொலை
செய்யப்பட்ட காஸ்மீரிகள் இருபது பேர்
என்றால் 1200 மத்திய ரிசர்வ்படையினர்
படுகாயமடைந்து வெளியேற்றபட்டனர்.



உஸ்பெகிஸ்தானில் நடந்த ஒரு சம்பவத்தை நாம்
நினைவுபடுத்த வேண்டி இருக்கிறது.அமெரிக்க
இராணுவத்தளத்தை அகற்ற முயன்ற அந்நாட்டு
அதிபர் தன் மக்களை பயன்படுத்தி அந்த தளத்தை
முற்றுகையிடச் செய்து குடிநீர்,மின்சாரம்,உணவு
எல்லாவற்றையும் முகாமுக்குள் செல்லாமல்
தடுத்தி நிறுத்தினார்.என் மக்களுக்கு எதிராக
காவல்துறையை பயன்படுத்த மாட்டேன் என்று
சொல்லி தன் நிலைப்பாட்டை வலியுறுத்தினார்.
அதற்கு மறைமுகமாக ரசிய ஆதரவு இருந்தது
என்பது உண்மைதான் என்றாலும்,அவர்
கடைபிடித்த அந்த முறை நாம் பின்பற்ற கூடியது.




புரட்சியை தக்கவைக்க வேறு வழியற்ற நிலையில்
பாராளுமன்றத்துக்கு செல்லும் கட்சிகள்.தேசிய
விடுதலைப்போரில் வேறுவழியற்ற நிலைகளில்
ஏகாதிபத்தியங்களை அனுமதிக்கும் தேசிய இனங்கள்
எல்லாம் ஏகாதிபத்திய பொருளியல்,ராணுவ.
கலாசார கட்டமைப்புகளை வெகுசன வன்முறை
என்கிற ஆயுதத்தை முதன்மையாக பயன்படுத்தி
வெளியேற்ற முயல்வதே தங்கள் பலத்தை
சரியாக கணக்கிட்டு செயல்படுவதன்
அடையாளமாகும்.



ஆயுதபோராட்டங்கள் முற்றாக சாத்தியமே இல்லை
என்கிற முடிவுக்கு நாம் வந்து விடவும் இல்லை.
அதன் வடிவங்கள் பற்றி,மரபுரீதியான
கண்ணோட்டங்களை கைவிட்டு விரிவான
விவாதங்களை முன்னெடுக்க வேண்டும் என்பதே
நம் எதிர்பார்ப்பு.



மரபுரீதியிலான அரசியல் போராட்டப்பாதைகள்
ஆயுதப்போராட்ட வழிமுறைகளை பற்றி
வளர்த்தெடுக்கப்பட்ட தத்துவ வழிகாட்டலின்
கீழ் விரிவான விவாதங்கள் நிகழ்த்தப்பட
வேண்டும் என்பதையே இன்றைய அரசியல்
சூழல் உணர்த்துகிறது.


முடிந்தது

வன்முறையின் அரசியல் - 3

இனியொருவில் நிகழ்ந்த அந்த நீண்ட விவாதத்தினை
கவனித்துக்கொண்டு இருந்தபோது ஒரு கேள்வி
எழுந்தது.புலிகள் மீதும் இந்திய மாவோயிஸ்டுகள்
மீதும் வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு எதிராக
சரியான மார்க்சிய அடிப்படையுடன் எதிர்வினை
ஆற்றிக்கொண்டிருந்த தோழர்களிடம் கேட்க
விரும்பிய கேள்வி அது.மக்களை அரசியல்
மயப்படுத்துவது,அரசியல் போராட்டத்தின்
வழியாக மக்களுக்கு ஆயுதப் போராட்டத்தின்
அவசியத்தை உணர்த்துவது,ஆயுதபோராட்டம்
மூலம் அரசை தூக்கி எறிவது என்கிற மார்க்சிய
வழிகாட்டலை அப்படியே நடைமுறைப்படுத்துகிற
சூழல் இன்று நிலவுகிறதா? சரி அந்த வழி
முறையே முழுவதும் சரியானது என்று வைத்துக்
கொள்ளலாம்.பிரமாண்டமான ஆயுதபலம்,
நாபாம் போன்ற இரசாயன ஆயுதங்கள்,கிளஸ்டர்
குண்டுகள் ,ஆளில்லா உளவு விமானங்கள்,உளவு
செயற்கைக்கோள்கள் என்று அணைத்தையும்
கொண்டிருக்கிற முதலாளித்துவ ராணுவங்களை
முறியடித்து ஒரு பரந்த நாட்டில் அரசை
கைப்பற்றும் நிலைக்கு முன்னேறும் கம்யூனிஸ்ட்
கட்சி ஏகாதிபத்தியங்களால் அணு ஆயுத
தாக்குதல் மிரட்டல் விடுக்கப்பட்டால் என்ன
செய்ய முடியும்,கைகளை தலைக்குமேல் தூக்கிக்
கொண்டு நிற்பதைத் தவிர ? ஏற்கனவே
எழுதிய அணு ஆயுத உலகில் புரட்சிகரப்
போராட்டங்கள் பதிவை நினைவுபடுத்த
விரும்புகிறேன்.ஏகாதிபத்தியங்கள் அணுகுண்டு
தாக்குதலை நிகழ்த்த மாட்டார்கள் என்று
நம்புவதற்கு எந்த அடிப்படையில் இல்லை.



தாங்கள் தயாரித்து வைத்திருக்குகிற அணுகுண்டை
சோதித்துப் பார்பதற்காகவும்.சோவியத் அரசின்
ராணுவத்திடன் ஜப்பான் சரண் அடைவது,
ஜப்பானில் இடதுசாரிகளின் ஆட்சியை அமைக்க
உதவும் என்பதால் அதை தடுக்கவும் மட்டுமே
அமெரிக்காவால் அணு ஆயுதம் உபயோகப்படுத்த
-ப்பட்டது என்பதை நாம் மறந்து விட இயலாது.
மேலும் உலக நாடுகளின் மீதான தனது
மேலாதிக்கத்துக்கு உதவும் கருவியாக அணு
ஆயுதங்களை அமெரிக்கா பயன்படுத்தியது
என்பதையும்,சோவியத் யூனியனின் அணு ஆயுத
தயாரிப்பின் பின்பே அமெரிக்கா சோவியத
அரசை அங்கீகரித்தது என்கிற விசயங்களையும்
மறந்து விட இயலாது.முதலாளித்துவத்துக்கு
மனித உயிர்களின் மதிப்பு தெரியும் என்று
நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு இருந்துவிட
இயலாது.



முந்தைய பதிவில் சுட்டிக்காட்டியது போலவே மூன்றாம்
உலக நாடுகளில் இருக்கும் கனிம வளங்கள்,எண்ணெய்
காடுகள்,கடல் என்று அணைத்தையும் தங்களின்
பயன்பாட்டுக்கு கொண்டு வர அந்த நாடுகளின் மக்கள்
தொகையை குறைக்க சர்வதேச ஏகாதிபத்திய நாடுகள்
முனையும் என்பதைப் பார்த்தோம்.அதற்கு மறை
முகமாக உதவி செய்வதாக அமையும் போராட்ட
முறைகள் தவிர்க்கப்படுவது காலத்தின் அவசியமாக
இருக்கிறது.மார்க்சிய ஆசான்களின் புத்தகங்களில்
அணு ஆயுத தாக்குதல் மிரட்டல் விடப்பட்டால் என்ன
செய்ய வேண்டும் என்கிற கேள்விக்கு பதில் தேட
முயலாதீர்கள் தோழர்களே.மிக தீவிரமான ஆயுத
போர் நிகழ்ந்த களங்களில் இடதுசாரியத்திலும்
மக்கள் நலன்களிலும் உறுதியாக நின்றவர்கள் கூட
இன்றைக்கு ஏகாதிபத்திய அரசுகளுடன் உறவுகளை
மேற்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர்.
சிறந்த உதாரணம் வியட்னாம்.எந்த ஒரு முற்போக்கு
முகாமின் உதவியுமின்றி தேசிய விடுதலையையோ
இடதுசாரி புரட்சிகளையோ வெற்றிகரமாக நிறைவு
செய்த நாடு என்று ஒன்றையாவது உலகில் காட்ட
இயலுமா? சொந்தக் காலில் தேசியப்
பொருளாதாரத்தை கட்டமைக்கும் திறனை
வியட்நாமுக்கு இல்லாமல் ஆக்குவதையே
முதன்மை இலக்காக கொண்டு வடிவமைக்கப்பட்ட
போர் முறை இன்றைக்கு அமெரிக்காவுக்கு பலன்
அளித்துக்கொண்டிருப்பதை நாம் உணராமல் இருக்க
இயலாது.




வருங்கால சமையல்காரர்கள் எப்படி சமையல் செய்வது
என்று குறிப்புகளை தயாரித்து வைத்துவிட்டு செல்வதாக
நாங்கள் கருதவில்லை என்ற மார்க்சின் வாசகங்களையே
நினைவுபடுத்த வேண்டி இருக்கிறது.ஆயுதப் போரின்
சாத்தியங்கள் பற்றி பேச முனைபவர்கள் ஈராக்கையும்
ஆப்கானிஸ்தானையும் சுட்டிக் காட்டுவது கேட்காமல்
இல்லை.ஈராக்கின் எண்ணெய் வளம் கொள்ளையடிக்க
-படுவதும் அந்நாடு சுரண்டப்படுவதும் அங்கே நிகழ்ந்து
கொண்டிருக்கும் போராட்டங்களால் தடுத்து நிறுத்தப்
பட்டுள்ளதா என்றால் நிச்சயமாக இல்லை என்ற
பதிலே கிடைக்கும்.போராட்டக்காரர்களால்
கொல்லப்பட்ட அமெரிக்க மற்றும் அதன் கூட்டாளிகள்
ராணுவத்தைச் சேர்ந்தவர்களை விட அதிகமாக
ஈராக்கின் அப்பாவி மக்கள்தான் கொல்லப்பட்டு
உள்ளனர் என்பதை மறுக்க முடியாது.சதாம்
காலத்தில் சண்டைகளில் ஈடுபடாத இஸ்லாமிய
பிரிவுகள் இடையேயான மோதல் ஊக்குவிக்கப்பட்டு
இரத்த ஆறு ஒடிக்கொண்டு இருக்கிறது.மார்க்சிய
வழிகாட்டல் இல்லாத சரியான வழிகாட்டல் அற்ற
நிலையில் நிகழும் போராட்டங்களால் ஏகாதிபத்திய
அரசுகளுக்கு இலாபமே தவிர பாதிப்பு கிடையாது.
சரியான முறையில் போராட்டம் முன்னெடுக்கபட்டு
ஈராக்கின் எண்ணெய் கொள்ளையடிக்கப்படுவது
தடுத்து நிறுத்தப்பட்டால் தற்போது சரிவில் இருக்கும்
அமெரிக்க பொருளாதாரம் மேலும் சரியும் என்கிற
நிலையில் ஈராக்கில் அத்தகைய போராட்டங்கள்
எவையும் முன்னெடுக்கப்படவில்லை.




ஆப்கானிஸ்தானிஸ்தானிலும் ஏறக்குறைய இதே நிலையே
நீடிக்கிறது.அமெரிக்க ராணுவம் உள்ளே நுழைவதற்கு
முன் ஆப்கானிஸ்தானில் நடந்த போதைப்பொருள்
உற்பத்தியின் அளவை விட இன்றைக்கு 44 மடங்கு
அதிகம் உற்பத்தி நிகழ்கிறது.ஆப்கானிஸ்தானில் இருந்து
தனது நாட்டுக்குள் போதைப்பொருள்கள் கடத்தி
வரப்படுவதை தடுக்குமாறு ரஸ்யா அமெரிக்காவிடம்
கோரி இருக்கிறது.யுத்தச் செலவுக்கு போதைபொருள்
உற்பத்தி செய்வதை அனுமத்தித்துக்கொண்டு இருக்கிறது
அமெரிக்கா என்பது நமக்கு ஆச்சரியம் அளிக்கும் செயல்
அல்ல.ஒரே நேரத்தில் ஹிட்லருக்கும்,அமெரிக்க
அரசுக்கும் இரண்டாம் உலகப்போர் காலத்தில் ஆயுத
விற்பனை செய்த அமெரிக்க முதலாளிகளின் லாப
வெறியை வரலாறு கண்டிருக்கிறது.இராணுவ ரீதியிலான
எதிர்ப்பு நிகழ்ந்துகொண்டு இருக்கிறது என்பதாலேயே
அது அதன் இறுதி விளைவான ஏகாதிபத்தியங்களை
வெற்றிகொள்ளும் நிலை வரை சென்று விடும் என்று
கருத இயலாது.தற்காலிகமாக பின் வாங்கும்
ஏகாதிபத்திய நாடுகள்,பொருளாதார ராணுவ ரீதியாக
தங்களை பலபடுத்திக்கொண்ட பிறகு மீண்டும்
ஆக்கிரமிப்பில் இறங்குவதன் சாத்தியங்களும்
மிக அதிகமாக உள்ளன.மேலும் அமெரிக்க அரசின்
ராணுவத்தினரை விட அமெரிக்காவில் இயங்கும்
தனியார் பாதுகாப்பு படையினரே இந்த நாடுகளில்
அதிகம் உள்ளனர் என்பதையும்,அமெரிக்க அரசின்
ராணுவத்தினருக்கு செலவு செய்யப்படும் தொகையை
விட மூன்று மடங்கு அதிகமாக இவர்களுக்காக செலவு
செய்யப்பட்டு வருவதையும் நாம் கவனிக்க வேண்டும்.
தனியார் பாதுகாப்புபடையின் முதலாளிகள் யுத்தம்
நீடிப்பதையே விரும்புவார்கள் என்பது சொல்லித்
தெரிய வேண்டியதில்லை.தேசம்.தேசியம்
ஆகிய அடையாளங்களுக்குள் முதலாளித்துவ
இலாப வெறியை உள்ளடக்கி மதிப்பிவிட்டு விடவும்
முடியாது.




மொத்ததில் உலகில் புரட்சிகர எழுச்சிகளுக்கும்,தேசிய இன
விடுதலைப்போராட்டங்களுக்கும் ஆதரவு அளிக்க எந்த ஒரு
முகாமும் இல்லாத நிலையில்,உச்சபச்ச நேர்மையுடன்
தங்கள் மக்களுக்காகவும்,சர்வதேச உழைக்கும்
வர்க்கத்துக்காகவும் ஏகாதிபத்தியங்களை எதிர்த்து போரிட்டு
வீழ்ந்திருக்கும் புலிகளிடம் இருந்து நாம் மாற்றுப் போராட்ட
வழிகளை கற்க வேண்டி இருக்கிறது.ராணுவ ரீதியாக
மட்டுமே உலக வல்லரசுகளை எதிர்த்து முறியடித்து விட
முடியும் என்பதை தவிர்த்து விட்டு அரசியல் போராட்ட
முறைகளுக்கு முற்போக்கு சக்திகள் கவனம் செலுத்த
வேண்டும்.

Wednesday, December 16, 2009

வன்முறையின் அரசியல் - 2

புலிகள் ஏன் தோற்றுப்போனார்கள் என்கிற கேள்விக்கு
பீப்புள்ஸ் மார்ச் இதழ் ஆசிரியர் தோழர் கோவிந்தன்
குட்டி அளித்திருந்த பதிலின் மீதான விவாதம்
இனியொரு தளத்தில் தொட்டுச்சென்ற எல்லைகள்
மிக விரிவானது.யதார்த்தம் பற்றிய சரியான
பார்வைகள் இல்லாமல் மார்க்சிய ஆசான்களின்
புத்தகங்களில் இருந்து எடுக்கப்பட்ட கருத்துகளை
வேதம் போல ஓதிக் கொண்டிருந்த தோழர்களின்
நடைமுறை சலிப்பை அளித்ததால் அதில் நாம்
கலந்து கொள்வதையும் இடையீடு செய்வதையும்
தவிர்த்தோம்.எனினும் ஆர்வத்துக்குறிய கருத்து
பரிமாற்றங்கள் நிகழ்த்தப்பட்ட அந்த விவாதத்தை
அடிப்படையாகக் கொண்டு சில விமர்சனங்களை
எழுப்பக் கருதியதால் இந்த பதிவு.




வன்முறையின் அரசியல் முதல் பகுதியில் சுட்டிக்
காட்டியது போல,ஈழத்தின் இனப்படுகொலையில்
சர்வதேச நாடுகள் வகித்த பாத்திரத்தை ஈவு
இரக்கமின்றி விமர்சித்து அம்பலபடுத்துவதன்
மேல் காட்டப்படும் அலட்சியம் புலிகளின் சில
தவறுகள் மேல் மட்டும் காட்டப்படும் வன்மமாக
பரிணமித்திருக்கிறதை எங்கும் உணர முடிகிறது.
அந்தப் போக்கின் சூத்திரதாரிகளாக இருப்பவர்கள்
ஈழத்தின் விடுதலைப்போராட்டக் களத்தில்
இடதுசாரிகளாக முன்நின்று இன்றைக்கு புலம்
பெயர்ந்த தேசங்களில் வசித்து வருபவர்கள்.
வெருமனே தேசிய உணர்வு கொண்ட குழுவாக
மார்க்சிய அரசியலில் அக்கறை இல்லாதவர்கள்
ஆக தாங்கள் கருதிய புலிகள்,ஏகாதிபத்திய
எதிர்ப்பில் கடைபிடித்த சமரசமற்ற நேர்மையை
சகித்துக் கொள்ளாத மனநிலையும்,தங்களை
மட்டுமே மக்களின் விடுதலைக்கு ஒட்டுமொத்த
குத்தகைகாரர்களாக கருதும் சிந்தனைப்போக்கும்
மட்டுமே இவர்களின் எழுத்துக்களின் சாரமாக
இருந்து வருகிறது.




புலிகளின் மீது வைக்கப்படும் அந்த அரசியல் உள்ளடக்கம்
அற்ற விமர்சனங்களுக்கு நாம் ஆற்றும் எதிர்வினைகளை
புறக்கணிப்பதன் வாயிலாக தங்களை நிறுவிக்கொள்ள
முனையும் இவர்களின் நிலை நமக்கு நகைப்பையே
கொடுக்கிறது.சரி நாம் புறக்கணிக்கப்பட்ட புலிகளின்
மனிதத்துவம் பற்றிய முகத்தை முன்நிறுத்துவது
போலவே அதிகம் பேசப்படாத அவர்களின்
ஏகாதிபத்திய எதிர்ப்பை பதிவு செய்வதன் ஊடாக
ஈழப் போராட்டத்தை பற்றிய ஒரு கறாரான
ஆய்வை நிகழ்த்த முயலலாம்.



அதற்கு முன்பாகவே நாம் சுட்டிக்காட்டி வந்த சில
விசயங்களை நினைவுபடுத்திக் கொள்ளலாம்
மீண்டும்.சோவியத் யூனியனின் பொருளாதார
உதவி மறுப்புகளை எதிர்கொள்ள அமெரிக்க
ஏகாதிபத்தியத்தின் உதவியை மாவோ ஏற்றார்
என்பது அதில் குறிப்பிடத்தக்கது.தனித்து
பொருளாதார ரீதியாக சோசலிச கட்டுமானத்தை
நிகழ்த்துவது மிக கடினமான விசயம் என்கிற
யதார்த்தம் புரிந்தபோது புதிய பொருளாதார
கொள்கையின் வழியாக அந்நிய முதலீடுகளை
சோவியத் யூனியனுக்குள் அனுமதித்தார்
தோழர் லெனின்.2002 ஆம் ஆண்டு புலிகள்
போர்நிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திய
பிறகு மறுகட்டுமானத்துக்கு நிதியுதவி என்ற
பெயரில் நான்கு பில்லியன் அமெரிக்க
டாலர்களை ஜப்பான் அளிக்க முன்வந்தபோது
புலிகள் அதை நிராகரித்திருந்தனர்.
புரட்சியை பாதுகாக்கும் நோக்கத்தில் ஜெர்மன்
அரசுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் செய்து
கொள்ள முயன்ற லெனின் செய்துகொண்ட
சமரசங்களுக்கு வரலாறு சாட்சியாக இருக்கிறது.
எத்தகையை கடினமான நிபந்தனைகள்
ஜெர்மன் தரப்பால் முன்வைக்கப்பட்டாலும்
அதனை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டு
வருமாறு ட்ராட்ஸ்கியை பணித்திருந்தார்
லெனின்.அதன் படி சோவியத்தின் நிலம்
இழக்கப்பட்டு பின்னர் சோசலிச அரசு
வலிமை பெற்ற பிறகு அந்த நிலம்
மீட்டெடுக்கப்பட்டது.




ஒரு மிகச் சிறிய தேசிய இனத்துக்கு உள்ள
வரையறுக்கப்பட்ட பலத்தை சுட்டிக்காட்டி
பன்னாட்டு நிறுவனங்களை தங்களின் கீழ்
இருந்த பகுதிகளில் அனுமதிக்க எல்லா
நியாயங்களும் இருந்தபோதும் புலிகள்
தங்களைச் சார்ந்திருந்த மக்களின் நல்
வாழ்வை அடிப்படையாக கொண்டு
கடைசி மூச்சுவரை ஏகாதிபத்திய
எதிர்ப்பில் உறுதியாக இருந்தனர்
என்பதை யார் மறுக்க முடியும்.




அதே நேரம் லெனின்,மாவோ காலகட்டங்களில்
இருந்த நிலையில் இன்றைய முதலாளித்துவம்
இல்லை என்ற யதார்த்தத்தையும் மறந்து விட
இயலாது.அவர்கள் காலத்தின் முதலாளித்துவ
கட்டமைப்பு உற்பத்தி சார் தொழிழ்களை,தன்
நலத்தின் அடிப்படையிலாவது உருவாக்கும்
குணாம்சத்தைக் கொண்டிருந்தது.இன்றைய
முதலாளித்துவம் பெருமளவில் நிதிமூலதன
சூதாட்டம்,சேவைத்துறை,வேலைவாய்ப்பற்ற
வளர்ச்சி ஆகிய அம்சங்களையே பிரதான
கூறுகளாக கொண்டிருப்பதால் தேசிய
பொருளாதார கட்டமைப்புக்கு அந்நியமுதலீடு
உதவிகரமாக அமையாது என்கிற புரிதல்
புலிகளுக்கு இருந்ததையே நிகழ்வுகள் எடுத்து
காட்டுகின்றன.




இதை எழுதுகையில் சில விசயங்கள் நினைவுக்கு
வருகின்றன.வடக்கில் இருந்து முஸ்லிம்களை
புலிகள் வெளியேற்றியதை மட்டும் இன்றுவரை
பேசிக்கொண்டு இருக்கும் தமிழகத்தின் பின்
நவீனத்துவவாதிகளின் ஏகாதிபத்திய ஆதரவு
அரசியல்தான் அது.அ.மார்க்ஸை சுற்றி
இயங்கும் இவர்கள் ஒருபோதும் கிழக்குப்
பகுதியில் சிங்கள குடியேற்றங்களுக்காக
பறிக்கப்பட்ட முஸ்லிம் மக்களின் நிலங்கள்
பற்றி பேசியது இல்லை.மட்டுமல்லாமல்
1995 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தை சிங்கள
ராணுவம் மீள ஆக்கிரமித்த பிறகும் இன்று
வரை அந்த முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்
படாததற்கு காரணம் ஆக இருக்கிற சிங்கள
அரசை தவிர்த்துவிட்டு புலிகளின்
கணக்கிலேயே பத்தொன்பது ஆண்டுகளையும்
எழுதும் இவர்களுக்கு.உலகெங்கும்
இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை
வெறியாட்டம் நிகழ்த்தி வரும் அமெரிக்கா
தலைமையிலான மேற்கத்திய நாடுகளை
ஏன் உலக முதலாளித்துவத்தையே எதிர்
கொண்டு போராடி வீழ்ந்த புலிகளை பற்றிப்
பேசுவதற்க்கான தகுதி இருப்பதாக நாம்
கருதவில்லை.



புலிகளின் ஏகாதிபத்திய சார்பு அரசியலாக சில
விசயங்களை காட்ட முயற்சிப்பவர்களின்
விமர்சனங்களையும் நாம் கவனத்தில் எடுத்துக்
கொள்ள வேண்டி இருக்கிறது.புலிகள் தங்கள்
நட்புச்சக்திகளாக மேற்கத்திய நாடுகளைக்
கருதினார்கள்.ஒடுக்கப்படும் பிற இனங்கள்
மற்றும் உழைக்கும் வர்க்கத்தில் இருந்து
நட்புச்சக்திகளைப் பெற முயலவில்லை
என்ற குற்றசாட்டுக்கு பதில் அளிக்க
வேண்டி இருக்கிறது.புலிகள் ஜனநாயக
புரட்சி நிறைவடைந்த மேற்கத்திய நாடுகளின்
மக்களை அவர்களின் மனித உரிமைகளுக்கு
மதிப்பு அளிக்கும் குணத்தை ஈழத்தின்
இறையான்மையை காக்க பயன்படுத்த
முயற்சித்தார்களே தவிர அந்த நாடுகளின்
ஆளும் வர்க்கங்ளோடு எந்த சமரசத்துக்கும்
போகவில்லை என்பது மறுக்க முடியாத
உண்மையாக இருக்கிறது.எரிகிற
வீட்டுக்குள் இருப்பவன் உதவி கேட்டு
கூக்குரல் இடவில்லை அதனால் அவன்
இனவாதி அழிந்து போகட்டும் என்று
விட்டுவிட்டோம் என்று கூறுவது மக்கள்
விடுதலை அரசியலான மார்க்சியத்தின்
சார்பானவர்களாக கருதும் நமக்கு அழகா
என்று யோசிக்க வேண்டிய தருணமிது.
சோவியத்துக்கு எதிராக போரிட செல்லும்
ராணுவத்தினரை கப்பலில் ஏற்ற மறுத்து
பிரெஞ்ச் மாலுமிகள் கலகம் செய்ததை
படித்த நாம் எல்லோரும் ஈழ விடுதலை
போராட்டத்துக்கு என்ன செய்துவிட்டோம்
என்று சுயவிமர்சனம் செய்ய முயன்றால்
மிஞ்சுவது வெறுமைதானே?



நூற்றாண்டு காலம் பிடிக்கும் ஒரு முயற்சியில்
இறங்குவதை தவிர்த்து.தமிழக மக்கள்,புலம்
பெயர்ந்த ஈழத் தமிழர்கள்,ஜனநாயக உணர்வு
உள்ள மேற்கத்திய நாடுகளின் மக்கள் வழியாக
ஈழத்தை வெல்லாம் என்கிற புலிகளின்
திட்டமே சாத்தியமானதும்,சரியானதுமாக
இருந்திருக்க முடியும் என்பதை நாம் அழுத்திக்
கூற வேண்டி இருக்கிறது இன்றைக்கு.
புலிகள் நம்பிய மூன்று தரப்புகளும் தங்களால்
இயன்ற அளவு போராடினார்கள் என்பது
உண்மைதான் என்றாலும்,அது போதுமான
அளவு இல்லை என்பதையும்,அந்த எழுச்சி
சரியான வழிகாட்டல் அற்ற நிலையில்
வீனடிக்கப்பட்டது என்பதையும் நாம் ஏற்றுக்
கொண்டாக வேண்டும்.




புலிகள் ராணுவ ரீதியாக வீழ்ந்திருக்கலாம்.
அரசியல் ரீதியாக பின்னடைந்திருக்கலாம்.
ஆனால், சக மனித உயிர்கள் மீதான
சுரண்டலுக்கும்,அநீதிகளுக்கும்,எதிராக
எழும் மனிதத்துவத்தின் மீதான
நம்பிக்கை கொண்ட மனிதர்கள் என்ற
வகையில் உயர்ந்தே நிற்கிறார்கள்.
தோழன் முத்துக்குமாரைப் போல.




சேவுக்கு மனிதன் மீது நம்பிக்கை இருந்து.
மனிதனை நாம் நம்பாவிட்டால் ஒருபோதும்
நாம் புரட்சியாளனாக ஆக முடியாது.
மனிதன் ஒரு திருத்த முடியாத மிருகம்
என்கிற முடிவோடு நாம் உடன்பட்டால்,
புல்லை தின்ன கொடுத்தோ அல்லது
கேரட்டை காட்டி ஏமாற்றியோ,
அல்லது தடியால் அடித்தோதான்
முன்னால் நகர செய்ய முடியும் என்று
திடமாக நம்பினால் அவர் யாராக
இருந்தாலும் கம்யூனிஸ்ட் ஆக முடியாது.
மேலே உள்ளது சே பற்றிய ஃபிடலின்
உரையில் உள்ள ஒரு பகுதி.




மனிதர்களை நம்பிய புலிகளின் பெயரைச் சொல்லி
திராவிடமும் புரியாமல்,தேசியமும் தெரியாமல்
தமிழ்ச்சாதிகள் என்று பேசிக்கொண்டு தங்களை
இடதுசாரிகளாக அடையாளம் காட்டுபவர்களும்,
சட்டமன்றத்தின் வழியாக தனிதமிழ்நாட்டை
மீட்டே தீருவேன் என்று பேசுபவர்களும்
கவனிப்பார்களா?

Tuesday, December 15, 2009

வன்முறையின் அரசியல் - 1

புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் மத்தியில் புலிகளை
பந்தயக்குதிரைகளாக கருதிய நபர்களும் இருந்தனர்
என்பது நாம் அறிந்ததுதான்.வசதியான வாழ்க்கை
முறைகளும் வெள்ளாள சாதி உணர்வும் கொண்ட
இந்த சிறிய குழுவினர் தமிழ் வீரம் என்று காட்ட
முயன்ற ஒன்றுக்கும் அறத்தின் அடிப்படையில்
களத்தில் நின்ற புலிகள் காட்டிய வீரத்துக்கும்
இடையில் இருக்கும் வேறுபாடுகள் நிச்சயம்
பேசப்பட்டே ஆக வேண்டும்.குருட்டுத்தனமாக
வன்முறையை வழிபடுபவர்கள் வீரம் என்கிற
பெயரில் முன்நிறுத்துவது புலிகளின் அறம்
சார்ந்த வீரத்தை அல்ல என்பதை விளக்கவே
பிரபாகரனை அவமானப்படுத்தாதீர்கள் சீமான்
என்கிற அந்த முந்தைய பதிவு எழுதப்பட்டது.



சர்வதேசியவாதி என்கிற வார்த்தை மனதில் எழும்
போதெல்லாம் சே குவேரா என்கிற பெயரும் கூட
எழுவதை தவிர்க்க இயலாமல் இருக்கிறது நமக்கு.
சர்வதேசியவாதி என்கிற வார்த்தைக்கு பதிலாக
பேசாமல் சே குவேரா என்று எழுதி விடலாம் என
தோன்றி இருக்கிறது பல முறை.வன்முறை
பற்றிய இந்த பதிவை எழுத நினைத்தபோது
அந்த தோழனின் வாழ்வில் நடந்த நிகழ்வு ஒன்று
நினைவுக்கு வருகிறது.க்யூபாவின் காடுகளில்
சே வும் தோழர்களும் கொரில்லாக்களாக போர்
நிகழ்த்திக்கொண்டிருந்த காலம் அது.தங்களோடு
எங்கிருந்தோ வந்து இணைந்து கொண்ட நாய்
மீது அவர்கள் அன்பை பொழிந்துகொண்டு
இருந்தனர்.


சில நாட்களின் பின்னால் ஒரு தாக்குதலைத்
தவிர்த்துக்கொள்ள தோழர்கள் பதுங்கி இருந்த
போது அந்த நாய் குறைத்ததால் மோதல்
ஏற்பட்டு சில தோழர்கள் காயம் அடைந்தனர்.
விட்டுவிட்டுச் செல்ல முயன்றாலும் தங்கள்
பின்னால் வர முயன்ற அதைக் கொலை
செய்வது என்பதைத் தவிர வேறு வழியற்ற
நிலையில் அதை தோழர்கள் கொன்றனர்.
கொல்லப்பட்ட அந்த உயிருக்காக சே வின்
கண்கள் நீரைப் பொழிந்து கொண்டிருந்தன
பல நிமிடங்களுக்கு.ஆம் மக்கள் நேசம்
கொண்ட போராளிகள் கண்கள் உயிர்களில்
வேறுபாடுகள் அறியாதவைகள்தான்
எப்பொழுதும்.நாயின் உயிருக்காக அழும்
கண்கள் தங்களால் வீழ்த்தப்படும் எதிரிகள்
உயிர்களுக்காகவும் அழவே செய்யும்.
காலம் காலமாக சக மனிதர்கள் மீதான
சுரண்டலுக்கும் அநீதிகளுக்கும் எதிராக
வேறு வழியின்றி ஆயுதங்கள் ஏந்தும்
போராளிகள் அப்படித்தான் இருக்கிறார்கள்.
புலிகளும் அதில் விதி விலக்கல்ல.



புலத்திலும்,தமிழகத்திலும்,மனிதநேயம் அற்ற
ராணுவ சாகசகாரர்களாக வீர வழிபாட்டுக்கு
உரியவர்களாக புலிகளை அறிமுகப்படுத்தும்
சாதி ஆதிக்க உளவியல் கொண்ட நபர்களை
காணும்போதெல்லாம்,அன்றாட வாழ்வின்
சம்பவங்கள் மனதில் எழுகின்றன.மக்கள்
விடுதலைத் தத்துவமான மார்க்சியத்தில்
கரை கண்டவர்களாக காட்டிக்கொள்ளும் பலர்
தேநீர் கடையில் வேலை செய்யும் சிறுவனை
மரியாதை இன்றி அழைத்து அதிகாரம்
செய்வதில் மகிழ்ந்தது.பிச்சையை தொழில்
ஆக செய்யாதவர்கள் என தெரிந்தாலும் சில
முதிய உயிர்களுக்கு ஒரு ரூபாயேனும் தர
மறுத்தது.எந்த பிரக்ஞையும் இன்றி
பெண்களுக்கு எதிரான வார்த்தைகளின்
வன்முறைகளில் பங்கு கொண்டது என்பதை
எல்லாம் மனம் ஒப்பிட்டு பார்க்கிறது.
மார்க்சியத்தின் உயிரோட்டமான மனித குல
நேசத்தை அறியாத அவர்களைப் பார்க்கும்
போது அவர்களின் தோள்களில் மார்க்சின்
சாகடிக்கப்பட்ட உடல் தொங்கிக் கொண்டு
இருப்பதாகத் தோன்றும் கண்களுக்கு.
மார்க்சியவாதிகளாக தங்களை அடையாளப்
படுத்திக்கொள்பவர்களின் நிலையே இப்படி
இருக்கும்போது சரியான வழிகாட்டல் அற்ற
சாதாரண நபர்கள் புலிகளின் பெயரால்
நிகழ்த்தப்படும் அபத்த அரசியலை கண்டு
கொள்வதில் தவறிழைப்பது இயல்புதான்
அல்லவா?



மனித குல மீட்பர்களாக மார்க்சியவாதிகளாக
தங்களைக் காட்டிக்கொண்ட சிலர் ஈழத்தில்
இனப்படுகொலை நிகழ்ந்ததற்கு காரணம்
புலிகளின் ராணுவக் கண்ணோட்டமும் அக
காரணங்களும்தான் என்று பேசியபோது
ஒரு கேள்வி எழுப்பபட்டது.இரவில் தனியாக
வந்தாள் ஆபாசமாக உடை அணிந்திருந்தாள்
அதனால்தான் பெண் பாலியல் வல்லுறவுக்கு
உள்ளாகிவிட்டாள் என்று பெண்ணை குற்றம்
சொல்வதற்கும் உங்கள் கருத்துக்கும் என்ன
வேறுபாடு என்றபோது அவர்களிடம் இருந்து
மௌனம் மட்டும்தானே பதிலாக கிடைத்தது.




புலிகள் தாங்கள் ஆயுதங்களை மௌனிப்பதாக
அறிவித்த பிறகும்,எந்த எதிர்தாக்குதலும்
இல்லாத நிலையில் முப்பதாயிரம் மனித
உயிர்கள் அழிக்கப்பட்டது ஏன்?கொள்வனவு
செய்த ஆயுதங்களை உபயோகித்து தீர்ப்பதன்
மூலம் புதிய ஆயுத கொள்வனவில் கமிசன்
பெற்று இலாபமடைய மகிந்தர் முயன்றது
மட்டுமே காரணமாகி விடுமா? மூன்றாம்
உலக நாடுகளில் இருக்கும் கனிமவளங்கள்
எண்ணெய் வளங்கள்,காடுகள்,கடல்வளம்
ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த
பிரதேசங்கள் அணைத்தையும் தங்கள்
உபயோகத்துக்கு கொண்டு வர அந்த
நாடுகளின் மக்கள் தொகையை குறைக்க
ஒரு உயிரியல் ஆயுதமாக எய்ட்ஸ்
அமெரிக்காவால் உருவாக்கபட்டது என்கிற
தகவலோடு இந்த படுகொலை நிகழ்வும்
ஒத்துப்போகிறது அல்லவா? ஒரு
தேசியத்தின் நிலபரப்பில் இருக்கும்
வளங்கள் அந்த மக்களின் பயன்பாட்டுக்கு
அல்ல தங்களின் உபயோகத்துக்காகத்தான்
என்று கருதும் சர்வதேச நாடுகள் ஈழத்தின்
மக்கள் தொகையை குறைக்கும் திட்டத்தின்
ஒரு பகுதியாகத்தானே அந்த இறுதிப்
படுகொலை நிகழ்த்தப்பட்டது.



தொடரும் .......

Friday, December 11, 2009

பிரபாகரனை அவமதிக்காதீர்கள் சீமான்

விமர்சனங்கள் செய்வதை ஏற்றுகொள்ளாத,கேள்விகள்
எழுப்ப மறுக்கின்ற ரசிகர் மன்ற மனபான்மை சீமான்
அதரவாளர்கள் மத்தியில் நன்கு வேறூன்றி விட்டது
என்பதையே நமது முந்தைய பதிவுக்கு கிடைத்த
சில எதிர்வினைகள் காட்டுகின்றன.உணர்வுகளின்
அடிப்படையில் எதிவினையாற்றும் அவர்கள் மீது
நமக்கு வருத்தங்கள் இல்லை.அதேவேளை சிலரை
காயப்படுத்துகிறது என்பதற்காகவே நாம் விமர்சனம்
செய்வதை நிறுத்திக் கொண்டு விட முடியாது.தன்
மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதிலாக
கீற்றில் சீமான் முன்வைத்த நியாயங்களும் அபத்த
களஞ்சியமாகவே இருக்கின்றன.வேறு வழியில்லை
எதிர்வினை ஆற்றியே தீர வேண்டி இருக்கிறது.



அதற்கு முன் இரண்டு தகவல்களை பதிவு செய்து
விடலாம்.முதலில் தோழரும் நடிகருமான
மணிவண்ணன் கோவையில் நடைபெற்ற ஈழ
ஆதரவுக் கூட்டத்தில் பேசியபோது சொன்ன
தகவல்.சிங்கள அரசுடனான போர் தவிர்க்க
இயலாது என்று தெரிந்தவுடன் தன் தளபதிகளை
அழைத்த பிரபாகரன்,நம்மோது இப்போது
சண்டையிட வந்திருக்கும் சிங்கள படையில்
இருக்கும் சிங்கள இளைஞர்கள்,தென்னிலங்கை
பகுதி கிராமங்களைச் சேர்ந்த வறுமையில்
வாடும் குடும்பங்களில் இருந்து வந்தவர்கள்.
பிற்காலத்தில் சிங்கள இனத்தில் அதிகாரவர்க்க
ஆட்சிக்கு எதிராக நிகழ வேண்டிய எதிர்ப்புக்கு
உதவியாக அமைய வேண்டியவர்கள்.அதனால்
இயன்ற அளவுக்கு சாதாரண சிப்பாய்களை
பலியாக்குவதை தவிர்த்துவிட்டு,டாங்குகள்
கவச வாகனங்கள்,கனரக ஆயுதங்கள்,
ஆர்டிலரிகள் என்று ஆயுதங்களை அழிப்பதை
முதன்மையாக கொள்ளுங்கள்,உங்கள் கீழ்
இருக்கும் போராளிகளையும் அப்படியே வழி
நடத்துங்கள் என்று பேசியதாக ஒரு தகவலை
பதிவு செய்தார்.



அடுத்ததாக கிடைத்ததும் செவிவழித் தகவல்தான்.ஏன்
நீங்கள் ஈழ விடுதலைக்கு இந்திய இடதுசாரிகளின்
துணையை நாடக் கூடாது என்கிற கேள்விக்கு,
இந்திய இடதுசாரிகளில் மார்க்சியவாதிகளாக
இருப்பதை விட இந்திய தேசியவாதிகளாகவே
(அதன் முதலாளித்துவ அர்த்தத்திலும் சோசலிச
அர்த்தத்திலும் இந்திய விரிவாதிக்கவாதிகளாகவே)
இருக்கிறார்கள்.(வெளிப்படையான
உதாரணம் சி.பி.எம்).தேசிய இனங்களின்
விடுதலையில் பார்வை குறைபாடு கொண்டவர்கள்
ஆக இருக்கிறார்கள் என்று பிரபாகரன் பதில்
சொன்னதாக அந்த தகவல் முடிகிறது.புலி
எதிர்ப்பாளர்களால் சகிக்க இயலாத ஆத்திரத்துடன்
எதிர்கொள்ளப்படும் தகவல்கள் இவைகள் என்பதை
அறிந்தே இருக்கிறோம்.இதன் நம்பகத்தன்மை
மீது கேள்வி எழுப்பவும் நிராகரிக்கவுமான அவர்கள்
உரிமைகளை அங்கீகரித்துவிட்டே நகர்கிறோம்.



நீண்ட நாட்களாக மனதில் அதிர்வுகளை எழுப்பிக் கொண்டு
இருந்த ஒரு விசயத்தை பதிவு செய்ய வாய்ப்பு கிட்டியது
நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.போர் நிறுத்த உடன்பாடு
சிங்கள படைகளால் மீறப்பட ஆரம்பித்த காலத்தில்
சார்லஸ் ஆன்டனி சிறப்பு படை அணிகளின் தளபதி
தோழன் லெப்.கேனல் அமுதாப் தனது போராளிகளிடம்
பேசியபோது சொன்ன கருத்துக்கள்தான் அவைகள்.
நாங்கள் போரை விரும்பவில்லை,எங்களுக்கு இரத்த
வெறியில்லை.இறந்த உடல்களை,சிதைந்த மனித
உயிர்களை தூக்கிச் சுமப்பதை நாங்கள் வெறுக்கிறோம்.
உயிர்களைப் பறிப்பது எங்களுக்கு உவப்பானதாக
இல்லை.ஆனாலும் எங்கள் மண் மீது மீண்டும்
ஆக்கிரமிக்கப்பு போர் திணிக்கபடும்போது ஒவ்வொரு
அடி மண்ணுக்காவும் நாங்கள் கடைசி மூச்சுவரை
போராடுவோம் என்று பேசியிருந்தான் அந்த தோழன்.
வீரத்தின் உச்சத்தில் இருக்கும்போதே மனிதத்தின்
உச்சத்திலும் உறுதியாக நின்றவர்கள்தான் அந்தப்
போராளிகள்.தங்கள் உரிமைக்கும் சுயமரியாதைக்கும்
போராடுவதன் வழியாக ஆதிக்கசாதிகளில் இருக்கும்
மனிதர்களையும் நாகரிகமான மனித உயிர்களாக்க
போராடும் தலித்துகள் பற்றி மனதில் உணர்வுகள்
எழுந்து அடங்குகின்றன.அந்த மகத்தான போராளிகள்
தங்கள் தலைவராக ஏற்றிருந்த பிரபாகரன் ராஜபக்சே
சிங்கள் இனத்துக்கு நேர்மையாக இருந்தார் என்று
கூறியதாக நீங்கள் சொல்வதை நாங்கள் எப்படி நம்ப
முடியும் சீமான்?



ஆனையிறவு முற்றுகைக்குள் சிக்கிக்கொண்ட நாற்பது
ஆயிரம் சிங்கள ராணுவத்தினரை உச்சபட்ச மனித
நேயத்துடன் உயிரோடு வெளியேற அனுமதித்த
போது,தங்களை அழிக்க வந்தவர்கள் என்பதையும்
தாண்டி அவர்களை மனித உயிர்களாக கருதி அந்த
ராணுவத்தினருக்கும் ஒரு குடும்பம்,உறவுகள்
அழகான குழந்தைகள் என்று இருக்கும் அவைகளைச்
சிதைக்க கூடாது என்கிற மனிதநேயம் புலிகளுக்கு
இருந்தது அல்லவா? மறுபுறத்தில் என்ன நடந்தது
ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களை பலி
கொடுத்து,ஆயிரக்கணக்கானவர்களை ஊனமாக்கி
மூன்று ஆண்டுகளாக சிங்கள உழைக்கும் மக்களை
கசக்கிப் பிழிந்து,ஆயுதக் கொள்வனவில் அடித்த
கொள்ளை,அபிவிருத்தி திட்டங்கள் என்ற
பெயரில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஈழம்
உட்பட்ட இலங்கையை திறந்து விட்டு பெற்ற
பணம் அணைத்தையும் இரவில் கட்டிலில் கொட்டி
தடவிக் கொண்டிருக்கும் முதலாளித்துவ
மனநோயாளியாகத்தானே மகிந்தர் இருக்கிறார்.
நீங்களே சொல்வதுதான் என் அண்ணன் போர்
அறங்களை மதித்து கடைசிவரை கொழும்பு
போன்ற பகுதிகளில் தாக்குதல் நடத்தவில்லை
என்று.மனித உயிர்களின் மதிப்பு தெரிந்த
போரியல் அறங்களை கடைபிடிக்கும் ஒரு
தலைவன் ஈவு இரக்கமற்ற முறையில் போர்
அறங்களை மீறும் ஒரு நபரை தன இனத்துக்கு
நேர்மையாக இருந்தவர் என்று எப்படி கூறுவார்?



ஆயிரக்கணக்கில் போராளிகள் மற்றும் அப்பாவி
தமிழர்கள்,சிங்கள இளைஞர்கள் உயிர்கள் என
அணைத்தையும் தனது பச்சை சுயநலத்துக்காக
இனவெறியோடு சிதைதழித்த ராஜபக்சேவை
தன் இனத்துக்கு நேர்மையாக இருந்தார் என்று
பிரபாகரன் எப்படி சொல்லி இருக்க முடியும்?
உங்கள் கருத்தை,நிலைப்பாடுகளை நியாயப்
படுத்திக் கொள்ள அந்த மகத்தான,பிரபாகரன்
உள்ளிட்ட போராளிகளை அவமதிக்காதீர்கள்
சீமான்.நீங்கள் ஏற்க மறுக்கலாம் உங்களுக்கு
ஆதிக்கசாதி உணர்வில்லை என்று.ஆனால்
ஆதிக்கசாதி உளவியல் மட்டுமே இது போன்ற
அரைவேக்காட்டுத்தனமான கருத்துகளை
உற்பத்தி செய்யும்.மனசாட்சியை தொட்டுச்
சொல்லுங்கள் சீமான் ராஜபக்சே தன் சிங்கள
இனத்துக்கு நேர்மையாக இருந்தார் என்று
பிரபாகரன் கூறினாரா?



வரிக்கு வரி பேச்சுக்கு பேச்சு உங்களுக்கு மறுப்பு எழுதிக்
கொண்டு இருப்பது நமக்கு சாத்தியமற்ற விசயம்.கீற்றில்
நீங்கள் இரண்டாவதாக அளித்திருக்கும் நேர்காணலில்
மீது சில விமர்சனங்களை வைத்துவிட்டு,வருத்ததுடன்
உங்கள் வாக்குப் பொறுக்கி அரசியலுக்கு வாழ்த்தை
தெரிவித்துவிட்டு ஒதுங்கிக் கொள்கிறோம்.பொறுத்து
அருளுங்கள். சில கேள்விகள்தான்.



எந்த தேர்தல் அரசியலின் வழியாக ராஜஸ்தானில்
குஜ்ஜார்கள் தங்களுக்கான இடஒதுக்கீட்டைப் பெற
முடிந்தது சீமான் ?எந்த தேர்தல் அரசியல்
வழியாக காஸ்மீரிகள் அமர்நாத் கோவிலுக்கு
முறைகேடாக கொடுக்கப்பட்ட தங்கள் மண்ணை
திரும்ப பெற்றார்கள்? சீக்கிய படுகொலையில்
ஈடுபட்ட குற்றவாளிகளை விசாரனைக் கமிசன்
வழியே குற்றவாளிகள் அல்ல என்று விடுவித்த
காங்கிரஸ் அரசுக்கு எதிராக எழுந்த பஞ்சாப்
மக்களை அவர்களின் தாழ்த்தப்பட்ட பிரிவுத்
தலைவரை வியன்னாவில் படுகொலை
செய்ததன் மூலம்தானே அந்த மக்களின் எழுச்சி
திசை திருப்பபட்டது.கரும்பு விலை சட்டத்துக்கு
எதிராக டெல்லியில் திரண்ட விவசாயிகளால்
அந்த சட்டம் தடுத்து நிறுத்தப்பட்டது எதைக்
காட்டுகிறது?முத்துகுமாரின் தியாகத்துக்கு
பிறகு குஜ்ஜார்களை போல காஸ்மீரிகளை
போல ஒரு எழுச்சியை நிகழ்த்தாமல்
விட்டதில் நம் அணைவருக்கும் பொறுப்பு
இல்லையா?



அரசியல் சட்டத்தின் 356 ஆவது பிரிவின் கீழ் மிக
எளிதாக கலைக்கப்பட கூடிய,எந்த அதிகாரங்களும்
அற்ற தமிழக அரசை உலக தமிழர்களின் நல்லது
கெட்டதை முடிவு செய்கிற அதிகாரம் கொண்டதாக
நீங்கள் சித்தரிப்பது நல்ல வேடிக்கையாக உள்ளது.
அரசின் தலைமையில் தமிழர் இல்லை அதனால்
தான் பின்னடைவு என்று வேடிக்கையான
கருத்துக்களை உற்பத்தி செய்வது என்ன விதமான
பகுத்தறிவு.இன்றைக்கு உங்கள் பின்னால்
இருப்பவர்கள் கொண்டிருக்கும் ரசிக மனபான்மை
உடையவர்கள் போலவே ஓட்டுகட்சிகள் மத,
சாதிய,இயக்கங்கள் நடத்துபவர்கள் கீழ்
தலைமை வழிபாடு நடத்துபவர்களாக தமிழர்கள்
சிதறிக் கிடந்ததுதான் அத்தகைய எழுச்சியை நாம்
நிகழ்த்த இயலாமல் போனது என்பதை மறுக்கப்
போகிறீர்களா?



முத்துராமலிங்கத்துக்கு மாலை போட்டதை நியாய
படுத்த ராஜபக்சே தனது இனத்துக்கு நேர்மையாக
இருந்து தமிழ் மக்களைக் கொன்று குவித்தார்
என்பது சிறுபிள்ளைத்தனமான கருத்தாக தோன்ற
வில்லையா உங்களுக்கு? இந்திய தேசிய
விடுதலைப்போராட்டதில் ஈடுபட்டதற்காக முத்து
ராமலிங்கத்தை நாம் மதிக்க வேண்டும் என்று
கோருகிறீர்கள்.இந்தியதேசிய விடுதலை என்றால்
என்ன என்று அன்றைக்கே பெரியார் மிகத்
தெளிவாக சொன்னார்.ஆங்கிலேயரிடம் இருந்து
பார்ப்பன பனியாக்களுக்கு அதிகாரம் கைமாற்றிக்
கொடுக்கப்படும் நிகழ்வு என்று.சாதிமுறையை
பாதுகாக்கவும்,இந்தியாவில் இருந்த சுரண்டல்
கும்பல்கள் நலனுக்கு கேடுவராமலும் போராடும்
பிரிவின் பக்கம் நின்றவர்தான் முத்துராமலிங்கம்
என்பதை மறைத்து குற்றபரம்பரை சட்டத்துக்கு
எதிரான அவரது செயல்பாட்டை மட்டும் நீங்கள்
முன்நிறுத்துவது தலித்துகளுக்கு எதிரான
அவரது வன்மத்தை மறைக்க திரைபோடும்
வேலையாகத்தான் அமைய முடியும் சீமான்.



எத்தனை நாளைக்கு சாதியைக் காட்டி அந்த சமூகத்தை
ஒதுக்கி வைப்பீர்கள் என்று கேள்வி எழுப்புகிறீர்கள்.அந்த
சமூகத்தைச் சேர்ந்தவர்கள் காவல்துறை,நிர்வாகம்
அரசியல் என்று எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்திக்
கொண்டிருப்பதை எவ்வளவு சாமர்த்தியமாக மறைக்க
முயலுகிறீர்கள்.அதிகாரவர்க்கத்தில் இருந்துகொண்டு
தலித்துகளுக்கு எதிரான சகல வன்முறைகளையும்
தொடுத்துக் கொண்டு இருப்பவர்களை ஏதோ விளிம்பு
நிலையில் வாடும் பரிதாபதுக்குறிய சமூகமாக
சித்தரிக்க முயலுவதும் ஆதிக்க சாதி உளவியல்தான்.
சாதிகளுக்குள்ளும் வர்க்கம் உள்ளதையோ ஏழை,
பணகாரன் வேறுபாடுகள் உள்ளதோ அந்த சமூகத்திலும்
உழைக்கும் மக்கள் இருக்கிறார்கள் என்பதையோ நாம்
மறுக்கவில்லை.ஆனால் உங்களின் அரசியல் அந்த
சாதிகளில் இருக்கும் ஆதிக்கவெறி கொண்டவர்ளுக்கு
துணை செய்வதாக மட்டுமே இருப்பதை சுட்டிக்காட்ட
விரும்புகிறோம்.



தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள் சீமான்,பாராளுமன்ற
உறுப்பினராக,சட்டமன்ற உறுப்பினராக ஆக முயலும்
எவனாவது தமிழ்த்தேசியம் தனிநாடு என்று பேசி
சிக்கலில் மாட்டிக்கொள்ள விரும்புவானா என்று
கேட்கிறீர்கள்? பேசினார்களே சீமான்.தமிழ்த்தேசிய
கோரிக்கையை சாதிய ஒழிப்புடனும்,இந்திய
அதிகாரவர்க்க எதிர்ப்புடனும் சரியான வழியில்
பெரியார்,முன்னெடுத்துவிட்டால் அதை தடுத்து
நிறுத்துவது சாத்தியம் இல்லை என்கிற நிலையில்
திராவிட நாடு என்று பேசி தமிழர்களை திசை
திருப்பி ஆட்சிக்கு வந்ததன் மூலம் பார்ப்பன
பனியா இந்திய அதிகாரவர்க்கத்துக்கு மண்டியிட்டு
சேவை செய்தார்களே திராவிட முன்னேற்ற கழக
உடன்பிறப்புகள்.நீங்கள் தேர்தல் அரசியலுக்கு
முன்வைக்கிற நியாங்கள் எல்லாம் அவர்களும்
முன் வைத்ததுதான்.ஆமாம் தமிழ்த்தேசியதை
தனிநாட்டை சட்டமன்றத்தின் வழியாக பெறும்
உங்கள் திட்டத்தை விரிவாக விளக்க முடியுமா?
சட்டமன்ற கட்டத்தில் இருந்த புல்லை வெட்ட
கடிதம் எழுதி ஆறுமாதம் கருணாநிதி காத்து
இருக்கும் அளவுக்குத்தான் மாநில அரசுக்கான
அதிகாரம் இருக்கிறது என்ற கதையைச் சொன்ன
தோழர் கூட உங்கள் பக்கத்தில்தான் இருக்கிறார்
என்று நினைக்கிறேன்.



திராவிடம் பற்றி உங்கள் பார்வையில் மாற்றம் வந்து
விட்டதாக நீங்கள் காட்டிக்கொள்வது.திமுக,அதிமுக
ஆகியவைகளை மட்டும் திராவிடம் என்பதறகாக
எதிர்க்கிறேன் என்பது,சமூக தளத்தில் போராட
பெரியார் திராவிடர் கழகம் இருக்கிறது என்பது
எல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பதை
வருங்காலம்தான் சொல்ல வேண்டும்.



ஈழ விடுதலையை ஆதரிக்கும் பால்தாக்கரேயை பெருமகன்
என்று சொன்னதற்கு எதிர்ப்பு கிளம்புவதாக புலம்புகிறீர்கள்
அது வெறும் வார்த்தையில் மரியாதை அளிக்கும் எளிய
விசயம் அல்ல.ஈழ விடுதலையை ஆதரித்தால்
பால்தாக்கரே மதிப்புக்குறிய நபராகி விடுவாரா?
தமிழச்சியின் வயிற்றை கிழித்து சிசுவைக் கொல்லும்
சிங்கள ராஜபக்சேவை எதிர்க்க மும்பையில் முஸ்லிம்
பெண்களின் வயிற்றைக் கிழித்து சிசுவைக் கொல்லும்
ராஜபக்சேவின்(பால் தாக்கரேவின்) ஆதரவு
உங்களுக்கு வேண்டும் அடடா என்ன விவேகம்?
உங்கள் பின்னால் வந்திருக்கும் இஸ்லாமிய இளைஞர்கள்
முகங்களைப் பார்க்க கூசவில்லையா சீமான்?
இதில் முற்போக்கு பிற்போக்கு என்று சினிமாவில் எழுத
வேண்டிய பஞ்ச் டயலாக் வேறு.




என்ன சொல்ல பேனா இருக்கிறது பேப்பர் இருக்கிறது
என்று எதை வேண்டுமானாலும் எழுதிக்கொண்டு
போகாதீர்கள் என்று நீங்களே சொல்லி விட்டீர்கள்
உங்களை விமர்சிப்பதே நமக்கு தொழிலாகி விட
முடியாது அல்லவா? இந்து ராமின் தோளில்
தொங்கும் பூனூலை எதிர்த்துக்கொண்டே,பால்
தாக்கரேவின் பூனூலுக்கு கயிறு பிரித்துக் கட்டுகிற
நீங்கள்,பூனூலால் இழுத்துக் கட்டபட்டுள்ள
இந்தியதேசியத்தில் இருந்து சட்டமன்றத்தின்
வழியே தனிதமிழ்நாட்டையும் அப்படியே போனசாக
ஈழத்தையும் வாங்கிகொடுப்பீர்கள் என்கிற
கனவை நம்பாமல் செல்லும் இளைஞர்களில்
நானும் கலந்துகொள்கிறேன்.நன்றி சீமான்




பின் குறிப்பு
உங்கள் மீதான என் முந்தைய பதிவில் அதிர்ஸ்டம்
என்று ஒரு வார்த்தை வந்துவிட்டதால் நான்
பெரியாரை சரியாக படிக்கவில்லை என்று
உங்கள் ஆதரவாளர் கூறினார் தொலைபேசியில்.
அதிர்ஸ்டம் என்பதை நல்வாய்ப்பு என்று
தமிழில் மொழிபெயர்திருக்கிறார்கள்.ஒரு ஐந்து
பன்னாட்டு நிறுவனங்களை தமிழகத்தில்
அனுமதிப்பதன் மூலம் கிடைக்கும் கமிசன்
தொகையை வைத்து ஒட்டுமொத்த தமிழக
வாக்காளர்களையும் விலைக்கு வாங்கும் நல்
வாய்ப்பு இல்லாத நிலையில் நீங்கள் இருப்பதையே
அப்படி குறித்திருந்தேன்.அப்புறம் பொதுவாக
அதிகம் பேசுவது என் இயல்பு இல்லை.அதனால்
உங்கள் ஆதரவாளர்கள் அழைப்புகளுக்கு நான் பதில்
அளிக்க இயலாது என்பதையும் பணிவுடன்
தெரிவித்து விடுகிறேன் இந்த பதிவு மூலம்.

Tuesday, December 8, 2009

அடையாள அரசியலா? அவல அரசியலா?

இந்தப் பதிவை எழுதத் துவங்கும்போதே மாவோவின்
விமர்சனம் பற்றிய மேற்கோள் ஒன்று நினைவுக்கு
வந்து தொலைத்தது.விமர்சனம் என்பது பூனை தன்
குட்டியைக் கவ்வுவது போல இருக்க வேண்டுமே
தவிர நாய் பூனைக்குட்டியை கவ்வுவது போல
இருக்கக் கூடாது என்கிற மேற்கோள்தான் அது.
என்னசெய்வது அந்த மேற்கோளை கடைபிடிப்பது
சாத்தியமில்லையோ என்கிற சந்தேகத்துடனேயே
இந்தபதிவை துவங்க வேண்டியிருக்கிறது.காரணம்
சமீபத்தில் படிக்க நேர்ந்த சீமானின் நேர்காணல்.



கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக தொடர்சியாக
நிகழ்ந்து வந்த ஈழம் தொடர்பான போராட்டங்கள்
காரணமாக தங்கள் மீது சுமத்தப்பட்ட இந்திய
அடையாளம் பற்றிய மாயை மறைந்து,தங்கள்
சொந்ததேசிய இனம் பற்றிய விழிப்புணர்வு தமிழ்ச்
சமூகத்தில் குறிப்பாக இளைய சமுதாயத்திடம்
மெதுவாக பரவத் தொடங்கி இருந்தது.நினைவில்
இருக்கும் ஒரு விடயத்தை பகிர்ந்து கொள்ள
வேண்டி இருக்கிறது இந்த இடத்தில். தோழன்
முத்துக்குமாரின் தியாகத்தால் தமிழகமே எழுச்சி
பெற்றிருந்த நேரத்தில் ஓட்டுக் கட்சிகளால்
அமைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் பாதுகாப்பு
இயக்கம் கோவையில் ஒரு பேரணியை
நடத்தியது.



தொடர்சியாக ஈழம் தொடர்பான போராட்டங்களை
கவனிப்பவன் என்கிற முறையில் அந்த
நிகழ்சிக்கும் சென்றபோது ஏராளமான புதிய
இளைஞர்கள் அதில் கலந்துகொண்டிருந்தனர்.
ஆனால்பேரணி நிறைவடைந்து கூட்டத்தில் ஓட்டு
கட்சிகளின் தலைவர்கள் பேசத் துவங்கையில்
அந்தஇளைஞர்களில் பெரும்பாலானவர்கள்
கலைந்து போகத் தொடங்கிவிட்டனர்.
முத்துக்குமார் விளைவு என்றே அதனைச்
சொல்லலாம்.நாங்கள் ஈழ மக்களுக்கான எங்கள்
ஆதரவை தெரிவிக்க நீங்கள் நடத்துகிற இந்த
நிகழ்வில் பங்குகொள்கிறோமே தவிர உங்கள் மீது
எங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை என்று
ஒட்டுகட்சித் தலைவர்களின் முகங்களில்
முன்னால் தமிழக இளைஞர்கள் பிரகடனம்
செய்தது போல இருந்தது அதைப் பார்க்கையில்.



இன்றைக்கு அந்த இளையதலைமுறை எங்கே இருக்கிறதோ?
அவர்களுக்கான வழிகாட்டிகளாக அமைவதற்கும் தலைமை
தாங்குவதற்கும் யாருமல்லாத வெற்றிடம் இன்றுவரை
தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.கடந்த இரு
தசாப்தங்களாக,உலக மயத்துக்குப் பிறகானகட்டத்தில்
தமிழகத்தில் அணைத்துத் தரப்பு மக்களும்
பங்கு கொண்ட ஒரு போராட்டமாக நிகழ்ந்தது ஈழத்
தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கு எதிரான
போராட்டங்கள் மட்டுமே என்பதை யார் மறுக்க முடியும்.



அந்த போராட்டத்தின் விளைவாக உருவான அரசியல்
உணர்வையும் தேசிய உணர்வையும் கொண்ட
இளைஞர்களை தக்க வைத்துக் கொள்வதுதான்
நிகழவில்லை என்றால்,எஞ்சி இருப்பவர்களையும்
தவறாக வழிநடத்துவதற்க்கான முயற்சிகளுக்கு
மட்டும் குறைவே இல்லாமல் இருக்கிறது.மாற்று
அரசியலுக்கான கருவாக மலர வேண்டியவர்களை
மந்தைகளாக்கும் முயற்சிதான் நடந்து வருகிறது.
அந்த வேலையை தமிழ் இன அடையாளத்தின்
பெயரால் சமீபத்தில் கையிலெடுத்திருக்கிறார் சீமான்.



முத்துராமமலிங்கத்தின் ஜெயந்தி விழாவில் கலந்து
கொண்டதைப்பற்றி நிருபர் எழுப்பிய கேள்விவிக்கு
சீமான் அளித்திருக்கும் பதில்தான் நாம் இனியும்
சீமான் மேல் நமபிக்கைகொள்ள எந்த
அடிப்படையும் நமக்கு விட்டுவைக்கப்படவில்லை
என்பதை தெளிவுபடுத்த உதவுகிறது.
முத்துராமலிங்க தேவர் என்ன மராட்டியரா?
மார்வாடியா?குஜராத்தியா ? மலையாளியா?
என்று ஆவேசமாக கேள்வி எழுப்பும் சீமான் அடுத்து
எச்.ராஜா,இல.கனேசன்,இராமகோபாலன் எல்லாம்
மலையாளியா? மார்வாடியா? தமிழர்கள்தானே
என்று கேள்வி எழுப்புவார் என்றே நம்பலாம்.



சாதிய அமைப்பை ஒழிக்க போராடிய அம்பேத்கருக்கும்,
இம்மானுவேல் சேகரனுக்கும்,ரெட்டைமலை
சீனிவாசனுக்கும் வீரவணக்கம் செலுத்தியபோது வராத
சாதியம் முத்துராமலிங்கத்திடம் மட்டும் ஏன் வந்து
என்றுஅருமையாக கேள்வி எழுப்புகிறார் சீமான்.சாதி
ஒழிப்புக்கு பாடுபட்டவர்களுக்கும் வீரவணக்கம்
சாதிய ஒடுக்குமுறைய காப்பாற்ற பாடுபட்ட நபருக்கும்
வீரவணக்கம்? என்ன பெருந்ததன்மை என்ன விவேகம்
சீமான் உங்களுக்கு? சாதி ஒழிப்பில் காட்டிய
வீரத்துக்காக அம்பேத்கருக்கும்,ரெட்டமலை
சீனிவாசனுக்கும் இம்மானுவேல் சேகரனுக்கும் வீர
வணக்கம்.சாதியைப் பாதுகாக்கும் போராட்டத்தில்
வீரம்??? காட்டிய முத்துராமலிங்கத்துக்கும் வீர
வணக்கம்? தயவுசெய்து இனிமேலும் பகுத்தறிவு
முத்திரையை மாட்டிகொள்ளாதீர்கள் சீமான்.
பிரபாகரனோடு குழுக்கிய கைகளை ராஜபட்சேவோடு
குழுக்கிய திருமாவளனுக்கு அடுத்த இடத்தில்
நீங்களும் இடம்பெறும் நாள் வெகுதொலையில்
இல்லை என்றே தோன்றுகிறது.



தீரன்சின்னமலைக்கும், காமராஜருக்கும், வீரநங்கை
வேலு நாச்சியாருக்கும், மருது பாண்டியருக்கும்
வீரவணக்கம் செலுத்தினாலும் சாதியம் பார்ப்பீர்களா?
மதுரை வீரனுக்கு வீரவணக்கம் செலுத்தினால்
அந்த சாதியைத் தூக்கிப் பிடிக்கிறேன் என்று
சொல்வீர்களா? என்றெல்லாம் அதிபுத்திசாலித்தனமாக
கேட்கும் சீமானிடம் நாமும் ஒரு கேள்வியை
முன்வைக்கலாம்.தீரன் சின்னமலையை,காமராஜரை
வேலுநாச்சியாரை,மருதுபாண்டியர்களை அவர்களின்
சொந்த சாதிய அடையாளத்தின் கீழ்கொண்டு வந்து
அதை வாக்கு வங்கி அரசியலாக்கி பதவி பிடிக்க
அலையும் கூட்டம் பேசும் நியாயத்துக்கும் உங்கள்
பேச்சுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது என்று
விளக்க முடியுமா உங்களால்?



என் பின்னால் வந்த தேவர் தம்பிமார்கள் இம்மானுவேல்
சேகரனுக்கும்,பள்ளர் சமூக தம்பிமார் முத்து
ராமலிங்கத்துக்கும் வீரவணக்கம் செலுத்தினார்கள்
என்று வெட்கமில்லாமல் சொல்லும் சீமான் அவர்களே
அந்த தம்பிமார்களைக் கூட்டிபோகும்போதே சாதியை
கேட்டுவிட்டுத்தான் கூட்டி சென்றீர்களா? பள்ளர்
பறையர் சக்கிலியர் நாடார் முதலியார் என்று என்
முன்னால் இருப்பவர்களை பார்க்க மாட்டேன்
அணைவரையும் தமிழர்களாகத்தான் பார்ப்பேன் என்று
விட்டு கூட வருபவர்களின் சாதிகளைக் கேட்டு
தெரிந்து கொண்டது எதற்காக?



ஓட்டுபொறுக்குவதற்க்காக படம் காட்டுவதற்கா அல்லது
அவர்கள் தெலுங்கு கன்னடம் போன்ற மொழிச்
சிறுபான்மை சாதிகளை சேர்ந்தவர்களா என்று கண்டு
பிடிபதற்க்காகவா? அது சரி சீமான் அவர்களே
உங்களுக்கு அதே முக்குலத்தோர் சாதிகளில் இருந்து
பெரியாரின் பின்னால் வந்த இளைஞர்கள்
இம்மானுவேல் சேகரனுக்கு மட்டுமே வீரவணக்கம்
செலுத்துவது தெரியுமா? ஆதிக்கசாதி
பஞ்சாயத்துக்களில் தலித்துகளுக்கு தண்டனையாக
ஆதிக்கசாதியைச் சேர்ந்த நபர்களின் கால்களில்
விழவைப்பதற்கும் நீங்கள் முத்துராமலிங்கத்தின்
சமாதியில்தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை
வீரவணக்கம்என்ற பெயரில் விழ வைத்ததற்கும் என்ன
வேறுபாடு இருக்கிறது? தயவு செய்து பெரியாரை
கைவிட்டதுபோலவே பிரபாகரனையும் கைவிட்டு
விடுங்கள் சீமான் தங்களின் சுயமரியாதைக்கும்
வீரத்துக்கும் சமரசமற்ற போராட்டத்துக்கும்
பிரபாகரனிடம் இருந்து தமிழக(தலித்)
இளைய சமூகம் கற்றுகொள்ள நிறைய இருக்கிறது.



உங்களிடம் ஒரு வேண்டுகோளும் வைக்க வேண்டி
இருக்கிறது.தயவு செய்து முத்துராமலிங்கம்
போன்றவர்களைக்குறிக்க போராளி என்கிற
வார்த்தையை பயன்படுத்தி ஈழப்போராளிகளை
அவமானப்படுத்தாதீர்கள்.முக்குலத்தோருக்கு
போடப்பட்ட வாய்ப்பூட்டுச்சட்டத்தை எதிர்த்துப்
போராடிய முத்துராமலிங்கம்,தனது சாதியை
சேர்ந்தவர்களால்வாய்ப்பூட்டு போடப்பட்டுக் கிடந்த
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக என்ன
போராட்டங்களை நடத்திக் கிழித்தார்.ஆதரவாக
போராடத்தான் வேண்டாம்.வாய்ப்பூட்டையும்
அடிமைத்தனத்தையும் எதிர்க்க முனைந்த அந்த
மக்களை ஒடுக்க அல்லவா வரிந்துகட்டிக்கொண்டு
நின்றார்.நீங்கள் சாதி வெறியனா இல்லையா
என்பதை காலம் சொல்வது இருக்கட்டும் ஒரு
அப்பட்டமான ஒட்டுபொறுக்கி அரசியல்வாதிக்கு
தேவையான எல்லா விசயங்களையும் பெற்றுக்
கொண்டு வருகிறீர்கள்.



அது தமிழர் நலனுக்கா சொந்த நலனுக்கா என்பதைத்தான்
காலம் உணர்த்தப் போகிறது.எம் ஜி ஆர் போல்
தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தோ அல்லது,
பாராளுமன்றத்துக்கு நாற்பது உறுப்பினர்களை
அனுப்பியோ நீங்கள் ஈழம் வாங்கிக் கொடுப்பீர்கள் என்று
தமிழர்கள் நம்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா
சீமான்? கனவுகளை விற்கும் உங்கள் சினிமா உலகம்
அல்ல இது என்பது உங்கள் பின்னால் இருக்கும் ரசிகர்கள்
வேண்டுமானால் உணராமல் இருக்கலாம்.பெரும்பாலான
இளைஞர்கள் தெளிவாகவே இருக்கின்றனர் எந்த விதத்தில்
போராடுவது எப்படிப் போராடுவது தமிழ்ச் சமூக
விடுதலைக்கு என்று.அவர்களின் எழுச்சியும் உங்கள்
காலத்திலேயே நிச்சயம் நிகழத்தான் போகிறது.



ஓட்டு பொருக்குவதற்காக நீங்கள் என்ன வேண்டுமானாலும்
செய்யலாம் என்கிறநிலைக்கு போய்விட்டதைத்தான்
உங்களின் தனித்தமிழ்நாடு கோர மாட்டோம் என்கிற
அறிவிப்பின் மூலம் எங்களுக்குபுரிய வருகிறது.தனித்
தமிழ்நாடு கோர மாட்டீர்கள் அப்புறம் எதற்கு
தமிழ்த்தேசியம் உங்களுக்கு? உண்மையான எதிரிகளான
ஏகாதிபத்தியத்துக்கும் இந்திய அதிகாரவர்க்கத்துக்கும்
எதிராக தமிழர்கள் போராடுவதை திசை திருப்பி
அவர்களை சட்டமன்ற பாராளுமன்ற அரசியலுக்குள்
தக்க வைப்பதற்காகவா? ஏகாதிபத்தியங்களையோ அல்லது
இந்திய அதிகாரவர்க்கத்தையோ எதிர்த்து பேசாமல் அல்லது
பேச்சில் மட்டுமே எதிர்ப்பை வைத்துக்கொண்டு தமிழகத்தில்
இருக்கும் மொழி சிறுபான்மையினருக்கு எதிராக மட்டுமே
நீங்கள் கட்டமைக்கும் தேசியம் யாருடைய நலனைக்
காப்பாற்ற? உலக,இந்திய,தமிழக,முதலாளித்துவ
ஆதிக்கசாதி வட்டங்களைச் சார்ந்த ஒட்டுண்ணிகளை
காப்பாற்றத்தானே உங்கள் தேசியம் பயன்படும்.ஆனாலும்
உங்களுக்கு அதிர்ஸ்டம் குறைவு என்றுதான் தோன்றுகிறது
சீமான்.பணம் கொடுத்து வாக்குகளை அறுவடை செய்கிற
நிலை அமோகமாக வளர்ந்துவிட்ட தமிழகத்தில் நீங்கள்
எவ்வளவு தூரம் சமரசமாகப் போனாலும் உங்கள்
அரசியல் எதிர்காலத்துக்கான வாய்ப்பு குறைவாகத்தான்
இருக்கிறது.



தலித்துகளுக்கு பிரபாகரனின் சுயமரியாதை தேவை இல்லை
தமிழர்களுக்கு பிரபாகரனின் ஏகாதிபத்திய எதிர்ப்பு தேவை
இல்லை.வெறும் உங்கள் உணர்சிப்பேச்சுக்களுக்கு கை
தட்டும் வாக்களிக்கும் கூட்டமாக மட்டும் தமிழர்கள் போதும்
அப்படித்தானே சீமான்? திட்டமிட்ட செயல்பாடுகளுடன்
தமிழர் நிலப்பரப்பில் இந்திய பார்ப்பன பனியா அதிகார
வர்க்கம் மேற்க்கொண்டு வரும் பிற மாநிலத்தவரை குடி
ஏற்றுவது,வேலை வாய்ப்புகளைப் பறிப்பது போன்ற
செயல்பாடுகளையும்,நீண்ட கால நடவடிக்கைகளாக இந்து
இந்தி இந்தியா என்கிற கட்டமைப்புக்குள் தமிழ் தேசிய
இனத்தின் அடையாளங்களை அழிக்கும் செயல்பாடுகளை
நாம் குறைத்து மதிப்பிடுகிறோம் என்றோ அல்லது
புறக்கணிக்கிறோம் என்றோ அர்த்தம் கிடையாது.நமது
நோக்கமெல்லாம் தமிழ்த்தேசிய கோரிக்கை என்பதும்,
தமிழ்தேச விடுதலை என்பது ஏகாதிபத்திய எதிர்ப்பிலும்
சாதிய ஒழிப்பிலும் நேர்மையாக இருக்கும் வர்க்க
கண்ணோட்டம் கொண்டவர்களால் முன்னெடுக்கப்பட
வேண்டும் என்பது மட்டுமே.



சீமானையே அதிகம் பேசியாகிவிட்டது.கொஞ்சம் சீமான்
எதிர்ப்பாளர்களையும் கவனிக்க வேண்டி உள்ளது.
ஏகாதிபத்தியங்களுக்கு ஆதரவான அரசு சாரா
நிறுவனங்களின் (N.G.O) சித்தாந்தத்தை தமிழகத்தில்
மொத்தக் குத்தகைக்கு எடுத்து விநியோகித்துக்கொண்டு
இருப்பவர் அ.மார்க்ஸ்.அந்த வேலைக்கு காந்தியை
தாராளமாக பயன்படுத்துவார் அதில் நமக்கு
பிரச்சணைகள் இல்லை.பெரியாரையும் அம்பேத்கரையும்
தனது ஏகாதிபத்திய ஆதரவு அரசியலுக்கு ஏற்ப இவர்
பயன்படுத்திக்கொள்வதை இவரது எழுத்துக்களை சரியாக
கவனிப்பவர்களால் உள்வாங்கிக் கொள்ள முடியும்.
அதுதான் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத விசயம்.
சரி அது ஒரு புறம் இருக்கட்டும்.இவரது ரசிகர் சுகுணா
திவாகர் சீமானுக்கு எதிராக வைத்த விமர்சனங்களில்
இருக்கும் அரசியலையும் நாம் கவனிக்க வேண்டி
இருக்கிறது.



ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான போராட்டத்தில் தேசிய
அடையாளம் வகிக்கும் முக்கியத்துவத்தை நீர்த்துப்
போகச் செய்வதில் மக வினர் மற்றும் பின்
நவீனத்துவவாதிகள் என்று இரண்டு பிரிவினரே தமிழக
அரசியல் பரப்பில் செல்வாக்கு செலுத்தி வருகின்றனர்.
தமிழ் தேசியம் என்கிற கருத்தியலை முன்வைக்கும்
பிழைப்புவாதிகள்,சித்தாந்த வழிகாட்டல் அற்றவர்கள்
செய்கிற தவறுகளைப் பொதுமைப்படுத்தி
தமிழ்த்தேசியம் என்கிற கருத்தியலையே சிதைப்பது
என்பதைத்தாண்டி இவர்களுக்கு வேறு நோக்கங்கள்
இருப்பதாக நமக்கு தெரியவில்லை.



என்ன சொல்லியிருந்தார் சுகுணா தனது கட்டுரையில்
திருமாவளவன் தமிழகத்தில் ஒரு மக்கள் பிரதிநிதி
அவர் வேற்றுநாட்டு அதிபரைச் சந்திக்கப் போகும்
போது அரசு ஒழுங்குகளுக்கு உட்பட்ட
வழக்கங்களுடன்தான் நடக்க முடியும்.
ராஜபக்ஷேவின் மூக்கில் குத்து விட்டு பஞ்ச் டயலாக்
பேசுவதோ, அல்லது ராஜபக்ஷேவின் நாற்காலிக்குக்
கீழே டைம்பாம் வைப்பதோ, குண்டூசி செருகுவதோ
ரஜினி படங்களில் மட்டும்தான் சாத்தியம்.சரி இந்தக்
கருத்தை ஒப்புக்கொள்ளலாம்,ஆனால் ஒட்டுமொத்த
இலங்கைத்தீவின் உழைக்கும் மக்களின் சமூக
அரசியல் விடுதலைக்குமான போராட்டத்தை ஈழ
விடுதலைப்போராட்டத்தின் வழியாக நடத்திக்
கொண்டுருந்த பிரபாகரன்,மிக சுலபமாக இந்திய
இராணுவத்தின் முழு ஆக்கிரமிப்பின் கீழ் கொண்டு
வரப்படக் கூடிய இலங்கையில் இருந்துகொண்டு
தினமும் இந்தியாவை எதிர்த்து பத்து அறிக்கைகளை
விட வேண்டும் இல்லை என்றால் அவர்கள் இந்திய
சார்பாளர்கள்,ஏகாதிபத்திய சார்பாளர்கள்,வலதுசாரிகள்
என்றெல்லாம் முத்திரை குத்த எங்களுக்கு உரிமை
உண்டு என்று எண்ணி செயல்பட்டதை என்னவென்று
சொல்ல ? புலிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக
இந்தியாவை எதிர்த்து களத்தில் சமராடித்தான்
மறைந்தார்கள் என்பது வேறு விடயம்.




தேர்தல் அரசியலுக்கு வருவதற்கு முன்பிருந்து தமிழுணர்வு,
பகுத்தறிவு, இன உணர்வு ஆகிய அரசியல் களங்களில்
குறிப்பிட்ட காலம் வரையிலாவது அர்ப்பணிப்பு
உணர்வோடும் லட்சிய வேட்கையோடும் தீவிரமாகப்
பங்களித்த பெருமை கருணாநிதிக்கு உண்டு என்றும்
எழுதியிருந்தார்,பெரியாருக்கு பிறகான திராவிட அரசியல்
என்பதை எவ்வாறு காண்பது என்பதில் தனது வசதிக்கு
ஏற்ற முறையைகடைபிடிக்கும் சுகுணா திவாகரை நாம்
மறுக்க வேண்டி இருக்கிறது.பகுத்தறிவு,தமிழுணர்வு,இன
உண்ர்வு ஆகியவைகள் மட்டுமே போதுமென்றால்
அண்ணாவும்,கருணாநிதியும் பெரியாரிடமிருந்து பிரிந்து
இருக்க வேண்டிய அவசியமே இல்லை ஐயா. தமிழக
முதலாளிகளுக்கு சேவை செய்வதற்கும் பதவி அதிகாரத்தை
சுவைப்பதற்கும் ஒடி வந்த கூட்டம் அதன் இயல்பாகவே
ஈழ்த்தமிழர்களுக்கு துரோகம் செய்திருக்கிறது.தந்தைக்கு
துரோகம் செய்தவர்களுக்கு தம்பிக்கு துரோகம் செய்வது
கடினமா என்ன ? தமிழுணர்வு.பகுதறிவு.இன உணர்வு
எல்லாம் இவர்கள் தங்களின் உண்மை முகத்தை
மறைத்து மக்கள் முன் நடிப்பதற்காக உபயோகித்த
விடயங்கள்தான்.



திமுகவை விட குறுகிய காலத்திலேயே தேர்தல்
அரசியலில் நீர்த்துப்போன திருமாவளைவை
தூக்கிப் பிடிக்கலாம் அவரது கடந்த காலத்தைக்
காட்டி,தமிழக ராஜபட்ஸெவான கருணாநிதியை
தூக்கிப் பிடிக்கலாம் அவரது கடந்த காலத்தை
காட்டி என்பவர்கள் சீமான் மீது விமர்சனம்
வைப்பதை என்ன சொல்ல? என்னவாக
இருந்தார்கள் என்பதை வைத்து ? என்னவாக
இருக்கிறார்களோ அதை நியாயப்படுத்த
இயலுமென்றால் சீமானை நியாய
படுத்துவதற்குமான காரணங்களும் உற்பத்தி
செய்யபடுவது இயல்பானதாகி
விடும் இல்லையா?



தேவர் ஜெயந்தி வரலாற்றின் அவமானம் என்கிற
கட்டுரையில் கருணாநிதி தேவர் சிலைக்கு
மாலை அணிவிக்கபோகாததை பெரிய
முற்போக்காக சித்தரிப்பதோடு மட்டுமல்லாமல்,
தன்னுடைய கருத்தியல் அடிப்படைகளை
கொஞ்சம் கொஞ்சமாக நழுவ விடுகிற திமுக
சாதி ஒட்டுக்காக எந்த சமரசத்தையும் செய்து
கொள்ள தயாராகத்தானிருக்கும் என்று
முடிக்கிறார்.இதுவரை சாதி ஒட்டுக்காக திமுக
சமரசம் செய்துகொண்டது இல்லையோ
கேட்கையில் எதைக் கொண்டு சிரிப்பது என்றே
தெரியவில்லை.ஒரு தொகுதியில் எந்த
சாதி பெரும்பான்மையாக இருக்கிறதோ அந்த
சாதி வேட்பாளரையே நிறுத்துவது என்கிற
முறை தமிழக தேர்தல் வரலாற்றில் தோன்றி
பல காலமாகி விட்டதே.அதற்கு சி.பி.ஐ
சி.பி.எம் என்று மார்க்சிய முகமூடி மாட்டிக்
கொண்டவர்களே விதிவிலக்கு இல்லை
என்னும்போது திமுக எந்த மூலைக்கு? அது
சரி சி பி எம் மின் வரதராஜன் தேவர் சிலைக்கு
மாலை போட்டதற்கு பிறகும் கூட காம்ரேட்
என்று அழைக்க தகுதியானவர்தானா?




இன்னொன்றையும் கவனிக்க வேண்டி இருக்கிறது.
தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக்
தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில்
பத்தாயிரம் கோடிகளுக்கும் மேல் செலவு
செய்யப்படாமல் இருந்த தகவல் வெளியாகி
சர்ச்சை கிளம்பியது. மாநில அளவிலும்
மாவட்டங்கள் தோறும் வன்கொடுமை தடுப்புச்
சட்டங்களின் கீழ் வழக்குகள் முறையாக
பதிவு செய்யப்படுகிறதா என்பதை
கண்காணிக்கவும்.நடவடிக்கை எடுக்கவும் அரசு
சார்பாக குழுவை அமைக்க வேண்டும் என்ற
உச்சநீதிமன்றத்தில் உத்தரவை அமல்படுத்தால்
வைத்திருக்கிறது கருணாநிதி அரசு.ஆதிக்க
சாதியினர் வன்கொடுமைகளுக்கு எதிராக
தீவிரமான நடவடிக்கைகள் எடுத்தால் ஒட்டு
வங்கி பறிபோய் விடும் என்பதற்காக
கண்டுகொள்ளாமல் இருக்கும் கருணாநிதியை
ஆதரிப்பதற்கு காரணம் கண்டுபிடிக்க
முயலுபவர்களுக்கு சீமான் மீது விமர்சனம்
செய்ய தகுதி உள்ளதா என்பதை அவர்களே
கேட்டுக் கொள்ளட்டும்.இன்னும் விரிவாக
எல்லாம் எழுத விருப்பமில்லை.



தங்களின் சொந்த சுயநலம் சார்ந்த வாழ்வியல் நலன்களுக்காக
திருமாவையும்,கருணாநிதியையும் ஆதரிப்பவர்கள்,இந்திய,
தமிழக அரசுகள் என்பது ஆதிக்கசக்திகளுக்கு சேவை
செய்யவே உருவாக்கப்பட்ட கருவிகள் என்பதை மறைத்து
புனிதபடுத்தி,இந்தசுரண்டல் சமூக அமைப்புக்குள்ளேயே
தீர்வுகளைக் கண்டுவிடலாம் என்கிற அரசுசாரா
நிறுவனங்களின் அரசியலை முன்னெடுபவர்கள் சமூகத்துக்கு
உதவிகரமானவர்களாக அமைவது சாத்தியமில்லை
என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் அவ்வளவுதான்.



சில நாட்களுக்கு முன்னால் சிரஞ்ஜீவி கட்சி துவங்கி
இருப்பதையும்,விஜயகாந்த் கட்சி துவங்கி
இருப்பதையும் இந்திய ஜனநாயகத்தின்
சாதனையாகக் காட்டி தன் வாசகருக்கு பதில்
அளித்திருந்தார் ஜெயமோகன்.நாம் அதை எவ்வாறு
பார்க்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க
வேண்டும்.ஒவ்வொரு கட்சியின் பின்னும் அமைப்பின்
பின்னும் திரளும் மக்கள் கூட்டதின் பெரும்பாலானோர்
ரசிக மனபான்மை கொண்டவர்களாகவே தேங்கிப்
போய்விடுவதும்.தலைமையை வழிபட்டுக்
கொண்டிருப்பதும்தான் இயல்பாக நடக்கிறது.
சாதிய அடையாளம்.மத அடையாளங்கள் கீழான
கட்சிகளை தவிர்த்த இதுபோன்ற நடிகர்களின்
கட்சிகளில் சேரும் கூட்டங்களும் வர்க்க
அரசியலிலிருந்து அந்நியபடுத்தபடுவதே நடக்கிறது.




வர்க்க அரசியலை மக்களிடமிருந்து அந்நியப்படுத்துவது
என்கிற ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலின்
அடிப்படையில்தான் இது போன்ற கட்சிகள் முளைக்க
வைக்கப்படுகின்றன.மத சாதி அடையாள கட்சிகளின்
எல்லை தாண்டி சினிமா நடிகர்களின் பின்னால்
இருப்பவர்களும் நிறுவனபடுத்தப் படுவது அதிகார
வர்க்கத்துக்கு உதவியாகவே அமையும் என்பதை
நாம் கவனத்தில்கொள்ள வேண்டி இருக்கிறது.
தலித்திய அடையாள அரசியலிலும் கூட இன்றைக்கு
கட்சியை மையப்படுத்தி உருவான தலைமை அதன்
கீழ் இரண்டாம் மட்டத்தில் இருப்பவர்கள் தவிர மற்ற
பெரும்பாலான மக்கள் தங்களுக்கும் தலைமைக்குமான
வர்க்க வேறுபாடுகளை அடையாளம் கண்டுகொள்ளும்
நிலையை அடைந்திருக்கிறது என்பதுதான் உண்மை.
இந்த நிலையில்சீமான் கட்சி ஆரம்பித்தால் இன
அடையாளத்தின் கீழ் ரசிக மன்ற அரசியல்தான்
உருவாகுமே தவிர வேறு உருப்படியான விசயங்களை
எதிர்பார்க்க முடியாது.இறுதியாக ஒரு கேள்வியுடன்
இந்த பதிவை முடித்துக் கொள்ளலாம்.



தமிழகத்தில் இருக்கும் திமுக,அதிமுக.சிபிஐ.சிபிம்.மதிமுக.
பாமக.விசி,நாம் தமிழர்,சில போலி மார்க்சிய லெனிய
கட்சிகள்,அறிவுஜீவிகள் பின்னாலும் மற்றும் ஏதேனும்
அமைப்புகளிலும் கட்சிகளிலும் இருந்துகொண்டு சுயத்தை
அடகுவைத்துவிட்டு ரசிகனாக மட்டுமே இருக்கும் நாம்
அணைவரும் நாகரிகமான மனிதர்களாக,தமிழர்களாக
இணைவதற்கு இன்னும் எத்தனை முத்துக்குமார்களை
தீக்குளிக்க வைக்கப் போகிறோம்?

ஸ்டாலின்குரு
stalinguru@gmail.com

Friday, December 4, 2009

நிலாந்தன் கட்டுரை - ஒரு எதிர்வினை

ஈழத்தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்? எங்கிருந்து
தொடங்க வேண்டும்? என்கிற தலைப்பில் ஒரு
கட்டுரையை தோழர் நிலாந்தன் கீற்று இணையத்தில்
வெளியிட்டிருந்தார்.அந்தக் கட்டுரையில் அவரால்
முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் பெரும்பாலாற்றோடு
நம்மால் உடன்பட முடிந்தாலும் நாம் முரண்படும்
இடங்களும் உள்ளதால் அவைகளை பதிவு செய்வது
அவசியமாகிறது.விடுதலைப்புலிகள் வீழ்ச்சிக்கு
பின்னர் ஒரு மாதம் கழிந்தும் எதிர்காலம் குறித்த
தெளிவற்ற சித்திரங்களுடன் ஈழத் தமிழர்கள்
தடுமாறுவதாக அவர் கூறுவதைக் நம்மால்
முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது.



சமரசங்களற்ற தலைமைத்துவத்தை விடுதலைப்
போராட்டத்துக்கு அளித்துக் கொண்டிருந்த
விடுதலைப்புலிகளின்வழிகாட்டுதல் இல்லாத
நிலையிலும்,திறந்த வெளிச்சிறைசாலையாக
இருக்கும் யாழ்ப்பாணத்திலும்வவுனியாவிலும்
நடைபெற்ற நகரசபை,மாநகர சபைக்கான
தேர்தல்களை 75 சதவிகிதத்துக்கும்
அதிகமான மக்கள் புறக்கணித்திருந்தனர்
என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.



இது நமக்கு ஒரு விடயத்தை தெளிவுபடுத்துகிறது.
சிங்கள் பேரினவாதிகள் மற்றும் அவர்களின் தமிழ்
கூட்டாளிகளின் ஆதிக்கத்துக்கு வெளியேதான்
பெரும்பாலான தமிழர்கள் தங்கள் அரசியல்
சிந்தனையை வைத்திருக்கிறார்கள் என்பதுதான்
அது.மேலும் சிங்கள் பேரினவாத அரசால்
நடத்தப்படும் தேர்தல்களில் தமிழ் மக்கள்
முற்றாக நம்பிக்கை இழந்திருப்பதையும் நம்மால்
புரிந்து கொள்ள முடிகிறது.வேறு வார்த்தைகளில்
சொன்னால் சிங்கள பெரும்பான்மையினரின்
ஒட்டுக்களைப் பெறுவதற்கான ஆயுதமாக
தமிழர்களுக்கு எதிரான இனவெறியை பயன்
படுத்தி வந்த சிங்கள் ஆளும்வர்க்கங்கள்
எத்தகையை உலகநாடுகளின் நிர்பந்தங்கள்
வந்தாலும் தங்களுக்கான உரிமைகளை வழங்க
மாட்டார்கள் என்பதை தமிழ் மக்கள் தெளிவாக
புரிந்துகொண்டதன் விளைவாக இந்த
புறக்கணிப்பை பார்ப்பதில் தவறில்லை.



உலக நாடுகளின் அழுதங்களுக்கு பணிந்து தமிழர்களுக்கான
உரிமைகளை கொடுக்க முனைவது சிங்கள
அரசியல்வாதிகள் தங்கள் ஒட்டுவங்கியை சிங்கள் மக்களிடம்
இழப்பதில் கொண்டுபோய் விடும் என்கிற புரிதலும்
தமிழர்களுக்கு உள்ளதையே நம்மால் விளங்கி கொள்ள
முடிகிறது.மொத்தத்தில் ஒன்றுபட்ட இலங்கைக்குள்
தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்கிற சாத்தியமும்
அதன் மாறுபட்ட வடிவமான ஒட்டுமொத்த இலங்கைக்குள்
சமூக மாற்றத்துக்கான புரட்சி என்கிற விடயமும்
கற்பனாவாத கருத்துக்களாக மட்டுமே எஞ்சி நிற்கும்
நிலைதான் நீடிக்கிறது.ஈழ விடுதலைக் கோரிக்கை எழக்
காரணமாக இருந்த எந்த அடிப்படைக் காரணமும்
மாற்றப்படாத நிலையில் தமிழீழ விடுதலை என்ற
ஒற்றைத் தீர்வை நோக்கி மட்டுமே பயனிக்க வேண்டிய
சூழல் இருக்கிறது.விடுதலைக்கான மக்கள் ஆதரவு தளம்
அப்படியே பேணப்பட்டிருப்பதும்,விரிவடைந்து
கொண்டிருப்பதும்தான் யதார்த்தமாக இருக்கிறது.



போராட்டம் தொடங்கியபோது கோட்டையிலும் பலாலியிலும்
ஆனையிறவிலும் நிலைகொண்டு இருந்த ராணுவத்தை
எங்கள் வீட்டு முற்றத்திலும் கோடியிலும் கொண்டு வந்து
நிறுத்திவிட்டு அவர்கள் போய் விட்டார்கள் என்று தனது
யாழ்ப்பாண ஊடக நண்பர் சொல்வதாக நிலாந்தன்
குறிப்பிடுவthuம்,ஆயுதப் போரட்டம் மக்களை எதிரிகளிடம்
கையளிப்பதில் போய் முடிந்திருப்பதாக கூறுவதும் அவரது
அரசியல்அறியாமையை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட
மட்டுமே உதவுகின்றன.அதி உயர் பாதுகாப்பு வளையங்கள்
என்று அறிவித்த தமிழீழ பகுதிகளில் பன்னாட்டு மற்றும்
இந்திய நிறுவனங்கள் தொழில் துவங்க சிங்கள அரசு
அனுமதியளித்துக் கொண்டிருப்பதை அறியாதவரா
நிலாந்தன்? சம்பூர் பகுதியில் இந்திய அரசின் அனல்மின்
திட்டத்துக்காக இலங்கை ராணுவம் ஆக்கிரமித்துக்
கொடுத்த பகுதிகளில் வாழ்ந்து கொண்டு இருந்த மக்களை
காக்கும் காவல் அரணாக விளங்கியது விடுதலைப்புலிகள்
என்பது மறந்து போய்விட்டதா அவருக்கு?



தங்கள் பேரினவாத திட்டத்தின் அடிப்படையில் தமிழர் பகுதிகளில்
சிங்கள குடியேற்றங்களை நிகழ்த்தும்போது அதனை தொடர்ந்து
ராணுவ முகாம்களையும் சிங்கள அரசு அமைத்து வந்திருப்பது
வரலாறு.பன்னாட்டு இலங்கை முதலாளிகளின் பொருளாதார
திட்டங்களுக்கும் சிங்களக் குடியேற்றங்களுக்கும்
பாதுகாப்பளிக்கும் விதமாக சிங்கள அரசு தனது ராணுவத்தை
தமிழர் பகுதிகளில் நிறுத்துவதை இத்துணை காலமும்
தடுத்துக்கொண்டு இருந்தது விடுதலைபுலிகளின் ஆயுதப்
போராட்டம் என்பதை மறைத்துவிட்டு பழியை புலிகள் மீது
சுமத்துவதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்.புலிகளின்
ஆயுதப் போராட்டம் நிகழ்ந்திராவிட்டால் இலங்கை ராணுவம்
தமிழர் வீடுகளிலும் கோடியிலும் வந்து நின்றிருக்காதா?
முப்பது ஆண்டுகால அரசியல் போராட்டம் தமிழர்
பகுதிகளில் தடுத்து நிறுத்திய சிங்கள குடியேற்றங்களின்
பட்டியலை வெளியிடுவாரா நிலாந்தன்?



பிரபாகரனை கடவுளாக்கி வழிபடுபவர்கள்,பிசாசாக்கி
புறக்கணிக்க கோருபவர்கள் என்கிற இரண்டு
தரப்பையும் தாண்டிய ஒரு மூன்றாவது போக்கை
நிலாந்தன் அடையாளம் காட்டி இருப்பதில் நாமும்
உடன்படுகிறோம்.அவர் காட்டியிருக்கும் மூன்று
போக்குகளில் உள்ள சில விசயங்களை நாமும்
ஆய்வுக்குட்படுத்தும் முன் வரலாற்றின் குப்பைத்
தொட்டி போன்ற வார்த்தைகளை பயன்படுத்தும்
அவரது போக்கை கண்டிக்க வேண்டி இருக்கிறது.
அந்நிய மண்ணின் வீரர்களைப் விமர்சனத்துக்கு
அப்பால் வைத்துப் போற்றுவது,தனது இனத்தை
சேர்ந்த்வர்கள் என்றால் மிக சுலபமாக குறைத்து
மதிப்பிடுவது என்பது ஏற்க்கத்தக்க நடைமுறையல்ல.



தன்னை தனது இனத்தை சேர்ந்தவர்களை தாழ்வானவர்களாக
கருதும் பார்ப்பன சிந்தனைப்போக்கில் தமிழ் இனம் ஆழமாக
சிக்கிக் கொண்டுவிட்டதோ என்று தோன்றுகிறது.அதே
நேரத்தில் பிரபாகரனை அரசியலற்ற விதத்தில் அவதார
புருசனாக அறிமுகப்படுத்திய தமிழகம் மற்றும் ஈழத்தைச்
சார்ந்த நபர்களின் அரசியல் இன்றைக்கு ஈழ ஆதரவுச்
சக்திகள் மத்தியில் நிலவும் சோர்வுக்கு காரணமாக
இருந்தது என்கிற நிலாந்தனின் கருத்திலும் உண்மைகள்
இல்லாமல் இல்லை.



2009 ஆம் ஆண்டுக்குகான மாவீரர் உரை வெளியாகி
அதில் காணப்பட்ட அரசியல் புலிகள் தலைமையின்
இருப்பை நமக்கு உறுதிப்படுத்தினாலும் நிலாந்தன்
முன்வைத்திருக்கிற கருது கோள்களை ஆய்வுக்கு
உட்படுத்த முயலலாம்.பிரபாகரன் ஒரு செயல் வீரர்
என்றும் அவர்தொடர்ந்து செயல்படுவதன் மூலமே
தன்னை நிறுவிக் கொள்ள முனைந்தவர் என்கிற கூற்று
ஓரளவு ஏற்க்கத்தக்கதே.ஆனால் யதார்த்த நிலைமை
என்ன ?புலிகளின் அரசியல் ராணுவ கட்டமைப்புகளில்
அந்நிய மற்றும் இலங்கை அரசைச் சார்ந்த சக்திகள்
போருக்கு முன்பிருந்தே ஆதிக்கம் செலுத்தினர்
என்பதும்,அரசியல் ரீதியாகவும்,ராணுவ ரீதியாகவும்
தவறான வழிகாட்டுதல்களை ஒரு குறிப்பிட்ட காலம்
வரை அவர்கள் நடாத்தினர் என்பதும் உணரக்
கூடியதாக இருக்கிறது.



இந்த நிலையில் அமைப்பை மறுகட்டமைப்பு செய்வதற்கும்
சர்வதேச மட்டத்தில் ஈழ ஆதரவை பெருக்குவதற்கும்,
நிலாந்தனே கூறுவது போல ஜனவசியமிக்க,
தீர்க்கதரிசனமிக்க,தவறுகளை களைய முனையும்
தலைமைக்கு உறங்கு நிலைதான் அவசியமாக
இருக்கும் இல்லையா?



அடுத்ததாக தான் தப்பிச் செல்லும் முன் தனது வயதான
பெற்றோர்களையும் தப்ப வைத்திருப்பார் என்கிற
நிலாந்தனின் கூற்றும் ஏற்க இயலாததாக இருக்கிறது.
ஈழத்தின் மக்கள் போராட்டத்தில் தனக்கென எந்த தனிச்
சலுகைகளையும் கோராத மனிதராகத்தான் பிரபாகரன்
இருந்திருக்கிறார்.தனது பிள்ளைகளையும் போருக்கு
அனுப்பிய மனிதன் தனது பெற்றோர்களைத் தப்ப வைக்க
எண்ணி இருப்பார் என்று கருத சிரமமாக இருக்கிறது.
பிரபாகரனோடு ஈழத்தமிழ் அரசியல் தேங்கி நின்று விட
வேண்டும் என்று பிரபாகரனின் இறப்பை ஏற்றுகொள்ளாத
விசுவாசிகள் விரும்புவதாக நிலாந்தன் கூறுவதும்
ஏற்கதக்கதல்ல.போராட்டம் தொடங்கியதற்கான
காரணங்கள் களையப்படும்வரை போராட்டம் தொடரும்
என்பதும்.தங்கள் இருத்தலுக்கான போராட்டத்தை ஈழத்
தமிழர்கள் நிகழ்த்தியே தீர வேண்டும் என்பதும்
யதார்த்தம்.அது பிரபாகன் இருப்பு மற்றும் இறப்பை
மட்டுமே சார்ந்தது என்பதாக நாம் கருதவில்லை.



மேலும் புலிகளிடமிருந்து பிரிந்து சென்ற ராகவனின்
கூற்றை நிலாந்தன் உதாரணமாக காட்டுவது
வேடிக்கையாக இருக்கிறது.ஒரு மரபு ரீதியான
அரசாங்கம் ஒரு பொய்யை இவ்வளவு நாள்
தொடர்சியாக கூற முடியாதாம்.ஈழத்தமிழர்களுக்கு
எதிரான இந்த இறுதி யுத்தத்தில் எந்த
போர்க்குற்றங்களையும் இழைக்கவில்லை என்று
கூடத்தான் மரபு ரீதியான அரசாங்கம் இன்று வரை
சொல்லிகொண்டிருக்கிறது.அது உண்மையாகி
விடுமா? இந்திய மரபு ரீதியான அரசு விடுதலைப்
புலிகளுக்கு எதிரான போரை தனது போராகவே
நடாத்திக்கொண்டே நாங்கள் இலங்கைக்கு எந்த
ஆயுதங்களும் தரவே இல்லை என்றுதான்
சொல்லிக் கொண்டிருந்தது என்பதால்
அது உண்மையாகிவிடுமா?


சமீப காலத்தில் ஆயுதபோராட்டம் சாத்தியமில்லை
என்பதில் நிலாந்தனோடு நம்மால் உடன்பட
முடிகிறது.இன்றைக்கு வெகுவாக மாறியிருக்கிற
உலக ஒழுங்கில் தேசிய விடுதலைப் போர்களில்
ஆயுதபோராட்டத்துக்கான சாத்தியம்,வடிவங்கள்
பற்றி ஒருவிரிவான மீளாய்வு செய்யப்பட வேண்டும்
எனபது காலத்தின் அவசியமாக இருக்கிறது.



நடந்து முடிந்த போரில் ஒரு சிறிய இனதிற்கு இருக்கக்
கூடிய புறவயமான பௌதீக வரையறைகளை மீறிச்
சாதிக்கப்பட்ட அனைத்துச் சாதனைகளுக்கும்
அதிகமதிகம் அகவயப்பட்ட விளக்கங்களையே
கொடுக்க முடியும் என்கிற வார்த்தைகளை படிக்கையில்
மனதில் பரவும் வலியையும் தாண்டி,இலங்கை
அரசுக்கு தாங்கள் அளிக்கிற அத்துணை உதவிகளையும்
தாண்டி முப்பது ஆண்டுகாலமாக ஒரு சமரசமற்ற
போராட்டத்தை முன்னெடுத்த அமைப்பை ஆதரித்து
நின்ற மக்களை உலக ஆதிக்க சக்திகள் தண்டிக்க
விரும்பின என்றே புரிந்துகொள்ள முடிகிறது.
உலகத்தின் மனச்சாட்சியை உலுக்கி விட்டு தங்கள்
உயிர்களை அர்ப்பணித்து நம்மை மேலும் மேலும்
மனிதநிலையை நோக்கிச் செல்லத் தூண்டியிருக்கும்
அந்த உயிர்களுக்கு நாம் என்ன செய்யப்
போகிறோம்?




முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட வன்னிச்சனங்களை
வரவேற்க்கும் அப்பாவித்தமிழர்கள் பற்றியும்,
பார்வையாளர் பாத்திரம் மட்டுமே வகிக்கத்தயாராக
இருக்கும் அவர்களின் நிலை பற்றியும் நிலாந்தன்
கூறுவது நம்மில் பல கேள்விகளை எழுப்புகிறது.60
இலட்சம் யூதர்கள் ஹிட்லரின் வதை முகாம்களுக்கு
கொண்டு செல்லப்பட்டு கொடும் வதைகளுக்கு பிறகு
கொல்லப்பட்ட வரலாறு மனதில் வந்து செல்கிறது.அதில்
போராடி மடியும் முடிவை எடுத்தவர்கள் எத்தனை பேர்?
ஒதுங்கி ஒதுங்கி சாத்தியமான எல்லைவரை பொறுத்துக்
கொண்டு இருப்பது என்கிற சிந்தனையைவிட்டுச் தமிழ்ச்
சமூகம் வெளியேறுவது எப்போது என்கிற கேள்விக்கு
நம்பிக்கை அளிக்கும் பதில்கள் கிடைப்பதில்லை.



மேலும் தேசியக் கோரிக்கையும் புலிகளும் தங்கள் சாதிய
ஒழிப்பு போராட்டத்தையும்,வர்க்கப் போராட்டத்தையும்
இடையூறு செய்துவிட்டதாக இலங்கையிலும்,புலத்திலும்
இருந்து ஒப்பாரி வைத்த கூட்டங்கள் சிங்கள ராணுவ
கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சாதி ஒழிப்பு
போராட்டத்தையும் வர்க்கப் போராட்டத்தையும்
நிகழ்த்துவதையும் மக்களை அணிதிரட்டுவதையும் யார்
தடுத்தது?எந்த விதமான முற்போக்கு பாத்திரத்தையும்
வகிக்க கையாலாகாத இவர்கள் புலிகளை விமர்சித்துக்
கொண்டு மட்டுமேதான் பிழைப்பு நடத்தினரே தவிர
வேறு எதைச் சாதிதார்கள்.?ஆக்கப்பூர்வமான
பாத்திரத்தை வகிக்க தகுதியற்ற அல்லது தலைமை
ஏற்க துணிவற்ற இவர்களை மக்கள் புறக்கணித்ததும்
போராட்டத்தலைமை புலிகளின் கைகளுக்கு இயல்பாகவே
போய்சேர்வதுதானே நடந்தது.



பிரபாகரன் பற்றிய நிலாந்தனின் கருத்துகளோடும் பெருமளவில்
நம்மால் உடன்படமுடிகிறது.ஆனால் கொலனித்துவ கால
பிரிட்டிஷ் உயர் அதிகாரிகளால் பெரிதும்பாராட்டப்பட்ட
தமிழ்ச் சிப்பாய்களிடம் காணப்பட்ட விசுவாசம்,உத்தரவை
சிரமேற்கொண்டு நிறைவேற்றும் கீழ்ப்படிவு போன்ற
தமிழ்ச் சிப்பாய்த்தனம் அல்லது தமிழ் இராணுவத்தனம்
எனப்படுவது பிரபாகரனை எதிர்ப்பேதுமின்றி ஏற்றுக்கொண்டு
விட்டது என்கிற அவரது வார்த்தைகள் மிக கொச்சைத்தனமான
அரசியலையே முன் வைக்கின்றன.ஈழத்தின் தமிழ் ஆதிக்க
வர்க்கங்கள் இலங்கை ஆளும் வர்க்கத்துடன் சமரசத்துக்கு
உட்பட்டோ,அல்லது புலம் பெயர்ந்தோ தங்கள் வாழ்வை
நிலைநிறுத்திக்கொண்ட பிறகு,இயல்பாகவே ஈழத்தின்
உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் தலைமையாக
பிரபாகரனை தேர்ந்து எடுத்தனர் என்பதுதான் சரியான
பார்வையாக இருக்க முடியும்.ஈழ விடுதலை தங்கள் வாழ்வில்
வசந்தத்தை கொண்டு வரும் என்பதும் அதனை விடுதலைப்
புலிகளால் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கையில் அமைந்த
புலிகள் மக்கள் உறவை கொச்சைத்தனமாக புரிந்துகொள்வது
சரியல்ல.சர்வதே நாடுகளின்சுரண்டலுக்கு திறந்து விடப்பட்ட
ஈழ மண்ணில் இருந்து தங்களை ஆதரித்து நின்ற ஈழ
மக்களுக்கு எதையும் கொடுக்க இயலாது என்கிற
நிர்பந்தத்தின் அடிப்படையை தவிர்த்துவிட்டு பிரபாகரனையும்
விடுதலைப்புலிகளையும் விமர்சனபடுத்துவது,அதை தமிழ்சமூக
உளவியலோடு பொருத்திக் காட்டுவது எல்லாம் எந்த அளவுக்கு
உதவியாக இருக்கும் என்பது நமக்கு புரியவில்லை.


நிலாந்தன் கட்டுரையில் முன் வைத்திருக்கும் மற்ற
கருத்துகளில் நமக்குபெரிய முரண்பாடுகள் இல்லை.
வழிபாட்டுத்தனமான அல்லது எதிர்மறை
விமர்சனங்களால் நிரம்பிக் கிடக்கும் ஈழம் பற்றிய
கட்டுரைகளில் போதுமானஅளவு நேர்மையுடன் முன்
வைக்கப்படும் இதுபோன்ற விமர்சனங்களே சமூக
இயக்கத்தை முன்நகர்த்த உதவும் என்றாலும் நாம்
முரண்படும் இடங்களையும் சுட்டிக்காட்டுவது கடமை
என்கிற முறையிலும்,சிலமாற்றுப் பார்வைகளையும்
முன்வைப்பது ஆரோக்கியமான அரசியலுக்கு
உதவும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவை
நிறைவு செய்யலாம்.

Wednesday, December 2, 2009

இரயாகரன் என்னும் அறீவுஜீவி

மக இக வினரின்,இலங்கைக்கான மார்க்ஸ் இரயாகரன்
இனியொரு தளத்தின் மூலமாக அம்பலப்படுத்தபட்டுக்
கொண்டிருப்பது நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
சர்வதேச அரசியல் சூழல்கள் பற்றிய எந்த புரிதலும்
இன்றி,சொந்த வன்மத்துடன் ஈழ விடுதலைப்
போராட்டத்துக்கும்,புலிகளுக்கும் எதிராக இணைய
தளத்தில் புரட்சி செய்து கொண்டிருந்தவரின் பின்னனி
பற்றி தோழர் அசோக் யோகனின் கட்டுரையை வாசித்த
போது இரயாகரன் பற்றி நாம் உருவாக்கி கொண்டிருந்த
மதிப்பீடு உறுதிப்படுத்தப்பட்டது.

ஈழ விடுதலைப்போராட்டத்துக்கு ஆதரவான எந்த ஒரு
ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளையும் கொண்டிராத,
குறைந்தபட்சம்,விமர்சனங்களில் கூட நேர்மையை
கொண்டிராத,இவரது இணையத் தள கட்டுரைகளை
மாற்றுக் கருத்துக்களை அறியும் ஆவலில் படித்து
வந்தது மிகப்பெரிய தவறு என்பதும் இப்பொழுது
புரிகிறது.ஈழ விடுதலை போராட்டத்தின் வரலாறு
பற்றிய முழுமையான தகவல்கள் தமிழகத்தைச்
சேர்ந்தவன் என்கிற முறையில் கைவசம் இல்லாத
நிலையிலும் இரயாகரனின் சிறுபிள்ளைத்தனமான
கருத்துக்களுக்கும் அவரின் மக இக சீடர்களின் ஈழம்
தொடர்பான கட்டுரைகளுக்கும் நாம் அவ்வப்போது
எதிர்வினையாற்றி வந்திருப்பது சரியானது என்று
உணர்கையில் மகிழ்சி அடைய முடிகிறது.

யமுனா ராஜேந்திரனின் புலிகள் பற்றிய கட்டுரையின்
எதிர்வினையாகவும்,மற்றும் புலிகளுக்கும் ஈழப்
போராட்டத்துக்கும் ஆதரவாக எழுதுபவர்களுக்கு
மறுப்பு என்கிற பெயரில் இவர் எழுதிக் குவித்த அபத்த
களஞ்சியமான கட்டுரைகளில் இழையோடியிருந்த
தர்க்கப் பிழைகள்,தனது நேர்மையை சந்தேகிக்கும்
உரிமையை உலகில் எந்த மனிதனுக்கும் அளிப்பதை
சகித்துக்கொள்ள இயலாத இவர்,புலிகளிடம் பணம்
பெற்றுக்கொண்டு எழுதுகிறார்கள் என்று அவதூறுகளை
பொழிந்திருந்தது ஆகிய விசயங்களே இவரின்
அரசியல் நேர்மையை நமக்கு வெளிச்சம் போட்டுக்
காட்டி விட்டன என்றாலும்,இன்றைக்கு இவர்
அம்பலப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலிம் நம்மளவில்
ஒரு எதிர்வினை அவசியம் என்று தோன்றுகிறது.

தமிழகத்தின் அரசியல் புலனாய்வு இதழ்கள் பெருமளவில்
இவரது இணையத்தில் கிடைத்த விடயங்களை தங்கள்
வியாபாரத்துக்கு பயன்படுத்திக் கொண்டது நமக்கு
சந்தேகங்களை எழுப்பினாலும் அதை ஒருபுறம் ஒதுக்கி
வைத்துவிட்டு புலிகளின் தோல்விக்கான காரணமும்
அரசியல் யதார்தமும் என்கிற இவரது கட்டுரையையே
பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளலாம்.

இனப் படுகொலை என்பதற்கு உலகப் புகழ்பெற்ற சட்ட
வல்லுனரான ரபேல் லெம்கின் என்பவர் கொடுத்த
வரையறையை அதற்கு முன் பார்த்து விடலாம்.

பொதுவாகச் சொல்லப்போனால் இனப்படுகொலை என்பது
உடனடியாகவே ஒரு இனத்தை அழித்து விடுவது என்று
அர்த்தமல்ல.அப்படிக் கொள்வதாயின் அந்த இனத்தைச்
சார்ந்த அணைத்து உறுப்பினர்களுமே கூட்டாக கொலை
செய்யப்பட வேண்டும்.இனக் கொலை என்பது தேசிய
இனக் குழுமங்களின் வாழ்விற்கும் வளத்திற்கும்
அடிப்படையாக விளங்கும் ஆதாரத் தூண்களை அழிக்கும்
நோக்கத்தைக் கொண்ட ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு
அழிவுத் திட்டத்தையே குறிக்கும்.இந்த அழிவுத்
திட்டமானது அந்த இனக் குழுமங்களைப் படிப்படியாக
அழிக்கும் நோக்கமுடையது.

தேசிய இனங்களின் மொழி,பண்பாடு,தேசிய உணர்வு,
மத சமூக அரசியல் நிறுவனங்கள்,பொருளாதார
வாழ்வை படிப்படியாகச் சிதைப்பது மட்டுமின்றி அந்த
இனத்தைச் சேர்ந்த தனி மனிதர்களின் சுதந்திரம்
நலம் கௌரவம் தனிபட்ட பாதுகாப்பு உயிர்வாழ்வு
ஆகியவற்றை அழிப்பதுமே இந்த பலமுகம் கொண்ட
அழிவுத் திட்டத்தின் நோக்கம்.இனக்கொலையானது
ஒரு இனத்தின் தேசிய வாழ்வை சிதைப்பதையே
இலக்காக கொண்டது.தனி நபர்களுக்கு எதிராக
எடுக்கப்படும் நடவடிக்கை அந்த தனி நபருக்காக
அல்ல.மாறாக அவர் அந்த இனத்தைச் சேர்ந்த
தனி மனித உறுப்பினர் என்பதற்காகவே.

இலங்கை சுதந்திரம் பெற்றதில் இருந்தே மேலே இனப்
படுகொலை என்பதற்கான வரையறையில் அடங்கிய
விசயங்கள் படிப்படியாக சிங்கள் பேரினவாதிகளால்
திட்டமிட்டு செயல்படுத்தப்பட துவங்கின என்பதை
எவரும் மறுக்க முடியாது.தொடர்சியாக கலவரங்கள்
என்கிற பெயரில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட
இன அழிப்பு படுகொலைகள்,நில ஆக்கிரமிப்பு,கல்வி
உரிமைப் பறிப்பு என்று சிங்கள பேரினவாதம் ஈழத்
தமிழர்களுக்கு இழைத்த எண்ணற்ற கொடுமைகளின்
விளைவாகவே ஈழ விடுதலைக் கோரிக்கை எழுந்தது
என்பது வரலாறு.இந்த நிதர்சனமான உண்மையை
மறைத்து தரப்படுத்துதல் முறை மூலம் யாழ்ப்பாண
மேட்டுக்குடி வர்க்கம் இழந்த நாற்பது பொறியியல்
கல்லூரிகளுக்கான இடங்களும்,நாற்பது மருத்துவ
கல்லூரிகளுக்குமான இடங்களும் மட்டுமே தமிழீழ
கோரிக்கை எழ காரணமாக இருந்தது என்கிற அதி
மேதாவித்தனமான காரணத்தை உற்பத்தி செய்து
வெளியிட்டவர்தான் இந்த இரயாகரன்.

உங்கள் கூற்றுப்படியே பார்த்தாலும் அந்த கல்லூரி
இடங்களை இழந்தவர்கள் யாழ்ப்பாண மேட்டுக்குடி
வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்றால்,அவர்களுக்கு
நிச்சயமாக தமிழகத்துக்கோ அல்லது மேற்கத்திய
நாடுகளுக்கோ தங்கள் பிள்ளைகளை அனுப்பி கல்வி
பெற வைக்கும் வசதி இருந்திருக்குமே என்ற சிறு
குழந்தைக்கு கூட தோன்றும் கேள்வியை எழுப்ப
வக்கற்றவர்கள்தான் இவரின் மக இக சீடர்கள்.இந்த
மொன்னத்தைனமான அரசியல்தான் ஈழத்தின்
இனக்கொலையில் சர்வதேச நாடுகள் வகித்த
பாத்திரத்தை குறைத்து புலிகளின் தலையில்
பழியை சுமத்துவது வரை இவர்களை கொண்டு
வந்து விட்டிருக்கிறது.

திட்டமிட்ட இனக்கொலையின் கூறுகளை அடையாளம்
காணவும் எதிர்த்து போராடவும் தவறிய சிங்கள தமிழ்
இடதுசாரிகளின் அலட்சியப் போக்கு,தமிழர்களுக்கான
உரிமைகளை அரசியல் போராட்டங்கள் மற்றும்
பாராளுமன்ற பங்கேற்ப்பின் வழியாக பெற இயலாத
தமிழர் கட்சிகளின் நிலை போன்ற விசயங்களே
இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தின் மூலம் தேசிய
விடுதலைபோராட்டத்தை முன்னெடுக்கத் தூண்டிய
காரணியாக அமைந்தது.முப்பது ஆண்டுகால ஆயுத
போராட்டம்,அதில் விடுதலைப்புலிகள் வகித்த
சமரசமற்ற பாத்திரம் மூலமே சிங்கள பேரினவாதிகளின்
இனப்படுகொலைத் திட்டம் தடுத்து நிறுத்தப்பட்டு ஈழத்
தாயகத்தில் இன்றைக்கும் தமிழர்கள் வாழ்ந்து கொண்டு
இருக்க முடிகிறது எனபது பாரிஸிலும் தமிழகத்திலும்
இருந்து கொண்டு இணையத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பை
நிகழ்த்திகொண்டு இருக்கும் இரயாகரனுக்கும் மக இக
வினருக்கும் புரியும் என்று எதிர்பார்ப்பது நம் தவறுதான்.
சரி இனி இரயாகரனின் கட்டுரைக்குள் போகலாம்.

தங்களின் தோல்வி பற்றி சுய விமர்சனம் இல்லாமல்
தமிழ் மக்களை மந்தைகளாக தொடர்ந்து பேண
புலிகள் விரும்புவதாக கூறும் இரயாகரன்,ஈழத்துக்கு
சென்று நல்ல மேய்ப்பனாக தமிழ் மக்களுக்கு வழி
காட்டுவதை யார் தடுத்தது?

தேசியம் என்பது எங்கும் எப்பொழுதும் முதலாளித்துவ
கோரிக்கையே தவிர பாட்டாளி வர்க்க கோரிக்கை
அல்ல என்று புத்தகமே வெளியிட்டவர்,ஏகாதிபத்திய
அமைப்புக்கேற்ற உலகமயமாதல் என்னும் சமூக
அமைப்பில் தேசியம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின்
அரசியலாகும் என்று பல்டி அடித்திருக்கிறார் இன்று.
எந்த போதி மரத்தின் கீழ் ஞானம் பெற்றாரோ?

சிங்களர்கள் மட்டும் உண்மையான பௌத்தர்களாக
இருந்திருந்தால் நான் ஆயுதத்தை எடுத்திருக்க
வேண்டிய தேவையே எழுந்திருக்காது என்று கூறிய
பிரபாகரனும்,களத்தில் கிடைத்த சிங்கள ராணுவ
வீரர்களின் உடல்களை ராணுவ மரியாதையோடு
அடக்கம் செய்த புலிகளும் இரயாகரன் போன்ற
நபர்களுக்கு சிங்கள இனத்துக்கு எதிராக போர்
நடத்தியததாக தெரிவதில் ஆச்சரியமொன்றும்
இல்லைதான்.

புலிகளின் தலைமை அழிவு,புலிப் பாசிசம் என்று
எல்லாம் அவர் வழக்கமாக அடிக்கும் ஜல்லியை
ஒதுக்கி வைத்துவிட்டு ஒரே வரியில் சொல்லி
விடலாம் ஒரு சரியான தேசிய விடுதலைப்
போராட்டத்தை புலிகள் முன்னெடுத்ததாலேயே
அவர்கள் அழிக்கப்பட்டனர்.இவர் சொல்வது
போல ஏகாதிபத்திய சார்பாளர்களாக சமரசத்துக்கு
உடன்படுபவர்களாக இருந்து,ஒடுக்கப்பட்டவர்களின்
பக்கம் புலிகள் நிற்கவில்லை என்றால் சர்வதேச
நாடுகள் என்னும் பெயரில் அறியப்படும்
முதலாளித்துவ நாடுகளுக்கு புலிகளை அழிக்க
வேண்டிய தேவை எழுந்திருக்கவே போவதில்லை
என்று இந்த மாமேதையின் மூளைக்கு தெரியாமல்
போனதில் வியப்பென்ன?

மக்களின் பெயரால் மார்க்ஸியத்தின் பெயரால் மனித
விரோத அரசியலை முன்னெடுக்கும் சக்திகளை
அடையாளம் காண்பதும்,எதிர்த்துப் போராடுவதும்
இன்று மக்களை நேசிப்பவர்கள் முன் உள்ள
கடமையாகும்.