Thursday, February 25, 2010

மீண்டும் பனிப்போருக்குள் உலகம்





இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்குமே சர்வதேச சூழலில்
ராணுவ மேலாதிக்கம் கொண்ட நாடுதான் அரசியல்,
பொருளாதாரரீதியான மேலாதிக்கத்திலும் ஆதிக்கம்
செலுத்த முடியும் என்பது நாம் அறிந்ததுதான்.அந்த
வகையில் இன்றைய நிலையில் ராணுவ பலத்தில் ரசியா
முதலிடத்தில் இருக்கிறது.அமெரிக்காவும்,சீனாவும் சம
வலிமை கொண்ட நாடுகளாக இருக்கின்றன.
இவைகளோடு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளும்
தகுதி கூட அற்றதாகத்தான் இந்தியா இருக்கிறது.




எதிரி நாடுகளின் அணு ஆயுத ஏவுகணைகளை
வானிலேயே தடுத்து அழிக்கும் தொழில்நுட்பம்
கொண்ட நாடுகளாகவும்,அணுஆயுதங்களின்
தாக்குதலில் இருந்தும் பாதுகாப்பு பெற்ற
நாடுகளாகவும்,ரசியா,சீனா,அமெரிக்கா
ஆகிய மூன்று நாடுகளே இருந்த நிலை மாறி
வானில் தங்கள் ஏவுகனைகளை தடுக்கும்
எதிரி நாட்டு ஏவுகணைகளிடம் சிக்காமல்
சென்று தாக்கும் டோபோல் ஆர் எஸ் எம் 12
என்கிற ஏவுகணையை ரசியா வெற்றிகரமாக
சோதித்து,தன் ராணுவத்தில் சேர்த்து மூன்று
ஆண்டுகளாகிவிட்டது.அதன் மூலம்
முதலிடத்துக்கு முன்னேறிவிட்டது ரசியா.



அமெரிக்காவிடமும்,சீனாவிடமும் அதுபோன்ற
தொழில்நுட்பம் இல்லாத நிலையிலும் ராணுவ
வலுவில் சமநிலையில் உள்ளன.சீனாவின்
எந்தப் பகுதியையும் தாக்கும் நிலையில்,
அமெரிக்காவும்,அமெரிக்காவின் எந்தப்
பகுதியையும் தாக்கும் நிலையில் சீனாவும்
உள்ளன.மேலும் விண்ணுக்குசெயற்கைக்
கோளை அனுப்பி பூமியில் இருந்து தாக்கி
அதனை அழிக்கும் சோதனையையும் சீனா
வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது.




முக்கி,முக்கி இப்போதுதான் இந்தியா 3500கிலோ
மீட்டர்கள் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளை
சோதித்து வெற்றி கண்டிருக்கிறது.இந்தியாவின்
எந்த மூலையையும் தாக்கக்கூடிய சீன அரசின்
ஏவுகணைகளின் முன் பாதுகாப்பு எதுமில்லாமல்
இந்தியா நின்று கொண்டிருக்கிறது.அமெரிக்கா
மற்றும் இஸ்ரேலுடனும் இந்திய அதிகாரவர்க்கம்
ஏவுகணைகள் தாக்குதலுக்கு எதிரான பாதுகாப்பு
ஒப்பந்தம் செய்திருக்கிறது என்பது உண்மைதான்
என்றாலும்,அந்த நாடுகள் இந்தியாவின் சார்பில்
தலையிடுவார்கள் என்று கருத முடியாது.
காலை வாரிவிடுவத்ற்கான வாய்ப்புகளே அதிகம்.
சீண்டிப்பார்த்தால் மென்னியைத் திருகி விடும்
சீனா என்பது இந்திய அதிகாரவர்க்கத்துக்கே
நன்கு தெரிந்த ஒன்றுதான்.



மேலும் இன்னொரு தகவலையும் பார்க்க வேண்டி
இருக்கிறது.இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு
முன்பாக,அமெரிக்காவின் விமானப்படையில்
இருந்து கழட்டிவிடப்பட்ட மூன்றாம் தலைமுறை
போர் விமானமான F 16 ரக விமானங்களை
கொள்முதல் செய்வதில் நாய்ச்சண்டையில்
ஈடுபட்டிருந்த இந்திய,பாகிஸ்தான் அரசுகள்.
சென்ற வருட இறுதியில் ஐந்தாம் தலைமுறை
அமெரிக்கப் போர்விமானங்களுக்கு இணையான
J 10 ரக போர்விமானங்களை சீன அரசு
பாகிஸ்தானுக்கு விற்றபின்,தன் விமானப்படை
பலத்தை இழந்த இந்திய அரசு அவசரமாக
ரசியாவிடம் மிக் 29 ரக விமானங்களை
கொள்முதல் செய்தபின்பே ஆசுவாச மூச்சு விட
முடிந்தது.நேரடி களங்களாக இல்லாமல்
அமெரிக்காவை,ஈரான் வாயிலாகவும்,
வடகொரியா வாயிலாகவும் கையாளுவது
போல இந்தியாவை,பாகிஸ்தான் வாயிலாக
கையாளுவதே சீனாவுக்கு போதுமானதாக
இருக்கும்.




மொத்தத்தில் சீனாவுக்கு எதிரியாக இருக்கும் தகுதி
இந்தியாவுக்கு இல்லை என்பதுதான் புரிந்துகொள்ள
வேண்டிய உண்மை.அதோடு இந்தியமுதலாளிகள்
தரகு முதலாளிகள்.அடிக்கிற கொள்ளையில்
உனக்கு 60 % எனக்கு 40 % என்பதுதான்
எப்பொழுதும் இவர்களின் குணமாக இருந்து
வந்திருக்கிறது.அந்த வகையில்தான்
இலங்கையை,ஈழத்தை சீன,இந்திய ஆளும்
வர்க்கங்கள் பங்கிட்டுக்கொண்டு கொள்ளை
அடித்துக்கொண்டு இருக்கின்றன.ஏற்கனவே
சொன்னது போல ரசிய சீன சார்புடனும்,
ஓரளவு தற்சார்பு நிலையிலுமே இந்திய
அதிகாரவர்க்கம் இயங்குகிறது என்பதுதான்
தற்போதைய நிலை.



ஏறக்குறைய இரண்டாம் கட்ட பனிப்போருக்கு உலகம்
முகம் கொடுக்கத்துவங்கி விட்டது.சம பலமற்ற
நிலையிலும்,எதிரியை புறக்கணித்துவிட்டு தனது
ஆதிக்க நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் பாணியில்,
போலந்தில் அணுஆயுத ஏவுகணைகளை நிறுத்தி
ரசியாவை,முற்றுகையில் வைக்கும் திட்டத்தை
மீண்டும் தொடரப்போவதாக அமெரிக்கா
அறிவித்திருக்கிறது.ஈரான் மீதான அமெரிக்க,
இஸ்ரேலிய விமானப்படைகளின் தாக்குதலை
செல்லாக்காசாக்கிவிடும் திறன் கொண்ட S 300
என்கிற அதிநவீன விமான எதிர்ப்பு ஏவுகணைகளை,
ஈரானுக்கு விற்பனை செய்யப்போவதாக அறிவித்து
பதிலடி கொடுத்திருக்கிறது ரசியா.மேலும் மேலும்
நெருக்கடியான காலகட்டங்களுக்கு முகம்
கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுக்கொண்டு
இருக்கிறோம் நாம்.


தொடர்புடைய பதிவுகள்

http://stalinguru.blogspot.com/2009/07/blog-post_1271.html
http://stalinguru.blogspot.com/2009/08/blog-post_17.html
http://stalinguru.blogspot.com/2009/11/blog-post_11.html
http://stalinguru.blogspot.com/2010/02/1_16.html
http://stalinguru.blogspot.com/2010/02/2.html

Tuesday, February 23, 2010

புரட்சிக்குள் ஒளியும் பார்ப்பன தேசிய பக்தர்கள்

இந்தியப் புரட்சி,மற்றும் மார்க்சிய லெனிய அரசியலின்
ஒட்டுமொத்த குத்தகைதாரர்களாக தங்களைக் காட்டிக்
கொள்ளும் ‘மக்கள் கலை இலக்கிய கழகத்தின்’
இணையப் புரட்சியாளர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக
எழுதிக்கொண்டு இருக்கிறோம்.அந்த வகையில் இது
அடுத்த பதிவு.ஈழத்துக்கு எதிராகவும்,பொதுவாகவே
தமிழர்களுக்கு எதிராகவும்,பார்ப்பன வன்மத்தைக்
கொட்டும் இவர்களை கடுமையாகவே விமர்சிக்க
வேண்டி இருக்கிறது.புரட்சியின் மீதும்,மக்களின்
மீதும் உண்மையான நேசம் கொண்ட மனிதர்கள்
இவர்களின் கீழும் திரண்டிருப்பதை நாம் அறிந்தே
இருக்கிறோம்.இந்த பதிவுகளை அடிப்படையாக
வைத்து கேள்விகளை எழுப்பும் நிலையில் கூட
தங்களின் கீழ் இருக்கும் மனிதர்களை இவர்கள்
வைத்திருக்கமாட்டார்கள் என்பதும்,ஏறக்குறைய
ரஜினி ரசிகர்மன்ற உறுப்பினர்களைப் போலவே
அவர்களை தலைமை வழிநடத்தும் என்பதும் கூட
நாம் அறிந்ததுதான்.எனினும் உண்மையான
மக்கள் நேசம் கொண்ட மனிதர்கள்,இவைகளை
பரிசீலித்து தங்களை மாற்றிக்கொண்டால் அதுவே
நமக்கு கிடைத்த வெற்றிதான்.



சில மாதங்களுக்கு முன்பாக விடுதலைச் சிறுத்தைகள்
தலைவர் திருமாவளவனை விமர்சித்து ஒரு கட்டுரை
இவர்களின் புதிய ஜனநாயகம் இதழில் வந்திருந்தது.
ஆர்வத்துடன் படித்தபோது அதில் ஒரு விசயம் மிகக்
கவனமாக தவிர்க்கப்பட்டிருந்தது.அப்போதைக்கே
அதை கவனித்தாலும் உடனடியாக எதிர்வினை எழுத
வேண்டாம் என்று கருதியதால் விட்டு விட்டோம்.
மீண்டும் சமீபத்தில் வினவு இணையத்தில் வந்த
முத்துக்குமார் தொடர்பான கட்டுரையில்தான் அந்த
விடயம் உள்ளடக்கப்பட்டிருந்தது.முத்துக்குமார்
மன்னித்து விடு ..சந்தர்ப்பவாதிகளிடம் நாங்கள்
தோற்றுப்போனோம் என்ற கட்டுரையை வாசித்த
போது ஓநாய் வடிக்கும் கண்ணீர்தான் நினைவில்
வந்தது.சரி விசயத்துக்கு வந்துவிடலாம்.துவக்க
காலங்களில் திருமா தலித் மக்களிடம் வளர்த்த
சுயமரியாதை,அரசியல் உணர்வை எல்லாம்,
தூய வர்க்க அரசியலின் பெயரால் நிராகரிப்பது
சரியல்ல என்ற எண்ணமே இருந்து வந்தது.
அதையும் தாண்டி திருமாவளவனை கைவிட
வேண்டும் என்கிற முடிவுக்கு வரத் தூண்டியது
முத்துக்குமாருக்கும்,ஈழ மக்களுக்கும் அவர்
இழைத்த துரோகத்தின் பிறகுதான்.



காலவரையறையின்றி,கல்லூரிகளை மூட உத்தரவிட்ட
தமிழகஅரசை எதிர்த்து,முத்துக்குமாரின் விருப்பப்படி
அவரது உடலை துருப்புச்சீட்டாக பயன்படுத்தி போராட
முடிவுசெய்து,சாலைமறியலில் ஈடுபட்ட மாணவர்கள்
மீது,திருமா தனது கட்சியினரை வன்னியரசோடு
அனுப்பி,தாக்குதல் நடத்தியதும்,உடலைக் கைப்பற்றி
அடக்கம்செய்ததுமான துரோகம் நிகழ்ந்தேறிய பின்பே
முத்துக்குமார் விரும்பிய எழுச்சி நிகழாமல் போனது.
முத்துக்குமாரின் உடலைக் கைப்பற்றும் முயற்சி
நடந்தபோது இந்த வீராதி வீரர்கள் எதைப் பிடுங்கிக்
கொண்டு இருந்தார்கள் என்பதுதான் நமது கேள்வி.
வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்துவிட்டு
இன்றைக்கு வந்து ஓநாய் கண்ணீர் வடிப்பவர்களை
என்ன செய்வது ? தெளிவாக புரிந்துகொண்டால்
முத்துக்குமார் விரும்பிய எழுச்சி நிகழாமல் போக
வேண்டும் என்று விரும்பியவர்களின் அணியில்,
ஆளும்வர்க்கத்தின் பக்கமே இவர்கள் நின்றார்கள்
என்பதை அறிய முடியும்.திருமாவின் துரோகத்தை
புதிய ஜனநாயகம் இதழில் எழுதாமல் விட்டுவிட்டு
இணையத்தில் மட்டும் எழுதும் உள் அரசியலும்
ஒன்றை தெளிவுபடுத்துகிறது.



இதழில் எழுதினால் இவர்களின் கீழ் இருக்கும் மக்கள்,
ஏன் வன்னியரசை எதிர்த்துப் போராடவில்லை என்று
கேள்வி எழுப்புவார்கள்.இவர்களின் வீரம் சந்தி
சிரித்து விடும்.இணையத்தில் எழுதினால் கேள்வி
எழுப்புபவர்களை இவர்களின் வழக்கமான திசை
திருப்பல்,முத்திரை குத்தல்,மன உளைச்சலுக்கு
உள்ளாக்கல் பாணி விவாத முறையில் ஏமாற்ற
முடியும் என்பதுதானே இவர்களின் திட்டம்.
இவர்கள்தான் இந்திய அரசை எதிர்த்து ஆயுதப்
புரட்சி செய்யப்போகிறவர்கள் என்றால் எதைக்
கொண்டு சிரிப்பது? இவர்கள் செய்யப்போகும்
இந்திய புரட்சியின் நிலைதான் இப்படி சந்தி
சிரிக்கிறது என்றால்,அரசு சாரா நிறுவனங்களின்
(N.G.O) தவப்புதல்வர்களான சில புலம்பெயர்
தமிழர்களைக் கொண்டும்,சில இலங்கை
மார்க்சியர்களைக் கொண்டும் இவர்கள்
செய்ய விரும்பும் இலங்கைப் புரட்சியின்
நிலையை நினைத்தால் மயக்கமே வருகிறது.



தேசிய இன உணர்வு இருந்தால் முல்லைத்தீவில் போர்
நடந்தபோது ஏன் யாழ்ப்பாணம் அமைதியாக இருந்தது
என்று ஒரு அடிமுட்டாள்தனமான கேள்வியை எழுப்பி
இருந்தார் சமீபத்தில் ஒரு விவாதத்தில் மக இக வை
சேர்ந்த ஒருவர்.அவர்களிடம் நாம் ஒரு கேள்வியை
கேட்க வேண்டி இருக்கிறது.முல்லைத்தீவில் போர்
நடந்தபோது உங்களின் தோழமைச்சக்திகளான,வர்க்க
அரசியலின் வாரிசுகளான இலங்கை மார்க்சியர்கள்,
புலிகள் கட்டுப்பாட்டில் இல்லாதிருந்த,கிழக்கு
பகுதியையும்,யாழ்ப்பாணத்தையும்,கொழும்பையும்
ஏன் அமைதியாகவே வைத்திருந்தனர் என்கிற
கேள்விக்கு பதில் என்ன? கருணாவை,டக்ளசை,
பேரினவாத சிங்கள அரசை எதிர்த்து,ஒரு
ஆர்பாட்டத்தைக் கூட நடத்த வக்கற்றவர்கள்,
சிங்களர்களோடு சேர்ந்து புரட்சி செய்ய போகிறார்கள்
என்றால் என்ன சொல்வது?



திருமாவைக் கண்டு மான் கராத்தே காட்டிய மக இக
வும், இலங்கை அரச பயங்கரவாதிகள் முன்னால்
செயலற்று நின்றவர்களும்,இந்திய புரட்சியையும்,
இலங்கை புரட்சியையும் நடத்துவோம் என்று
சொல்வதைக் கேட்டால்,முடியல முடியல என்று
வடிவேழுவின் இம்சை அரசன் வசனத்தைதான்
சொல்ல வேண்டி இருக்கிறது.மேலும் இங்கே
ஒரு விசயத்தையும் பதிவு செய்யத் தோன்றுகிறது.
1995 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தை இழந்து
வெளியேறிய புலிகள்,2002 ஆம் ஆண்டு போர்
நிறுத்த ஒப்பந்தத்துக்குப் பின் யாழ்ப்பாணத்துக்கு
வந்து கூட்டம் நடத்தியபோது 60.000 ஆயிரம்
மக்கள் புலிகளின் கூட்டத்துக்கு வந்திருந்தனர்.
இந்த நிகழ்வை வைத்தே சொல்லி விடலாம்.
தமிழர்கள் தங்களின் பாதுகாவலர்களாகவும்,
தங்களின் உரிமைகளுக்காக நேர்மையாக
போராடுபவர்களாகவும் புலிகளை மட்டுமே
ஏற்கிறார்கள் என்று.



சமீபத்தில் தோழர் விடுதலை இராசேந்திரன் இவர்களைப்
பற்றி எழுதிய கட்டுரையை படித்தபோதுதான் இவர்கள்
வழக்கமாகவே மான் கராத்தேகாரர்கள்தான் என்பது
புரிந்தது.மோடிக்கு எதிராக இவர்கள் நிகழ்த்திய
பாதுகாப்பான புரட்சி பற்றி படிக்கையில் புல்லரிப்பே
வந்துவிட்டது.ஒரு உண்மையும் கூட நினைவுக்கு
வந்தது.ஈழம் தொடர்பான போராட்டங்களில் மூன்று
பேரை சிறைக்கு அனுப்பிவிட்டு,ஆயிரக்கணக்கில்
எங்கள் தோழர்கள் சிறையில் இருக்கிறார்கள் என்று
கூசாமல் பொய் சொன்னவர்கள்தானே இவர்கள்.
ஈழத் துரோகிகளான திராவிட முன்னேற்ற கழகத்திடம்
இருந்து நன்கொடை பெற்றார்கள் என்று பெரியார்
திராவிடர் கழகத்தின் மேல் கடுமையான
விமர்சனம் வைத்திருந்தார்கள் சமீபத்தில்.



திமுக போலவே ஈழத் துரோகிகளான பாட்டாளி மக்கள்
கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளரையும்,
விடுதலைச் சிறுத்தைகளின் மாநிலப் பொதுச்
செயலாளரையும் தில்லைக்கோவில் தொடர்பான
கூட்டதில் மேடையேற்றியது மட்டும் புரட்சிகர
நடவடிக்கையோ?பெரியாரிய தோழர்களுக்கு எதிரான
பார்ப்பன வன்மம்தானே விமர்சனம் என்கிற பெயரில்
வந்து விழுந்திருக்கிறது.சூத்திரனுக்கு ஒரு நீதி,
பார்ப்பானுக்கு ஒரு நீதி என்கிற மனுதர்ம வாரிசுகள்
தங்களுக்கு ஒரு நீதியும்,மற்றவர்களுக்கு ஒரு
நீதியும் வைத்திருப்பார்கள் என்பது இயல்புதானே.
சோவியத் வீழ்ந்தால் அமெரிக்கச்சதி காரணம்,
புலிகள் வீழந்தால் மட்டும் அகக்காரணஙகள் என்பது
வரை இவர்களின் நீதி இப்படித்தான் இருக்கிறது.
திமுகவோடு சேர்ந்துதான் தமிழின ஓர்மையை
காப்பாற்ற முடியும் என்கிற பெரியார் திராவிடர்
கழகத்தின் கருத்தோடு நாம் உடன்பட முடியாது
என்பதையும் பதிவு செய்ய வேண்டி இருக்கிறது.



இவர்களின் எழுத்துகளை தொடர்ந்து வாசித்துக்கொண்டு
இருப்பவர்களால் ஒரு விசயத்தை எளிதாக உணர
முடியும்.தமிழகத்தில் படிப்படியாக அதிகரித்துக்
கொண்டிருக்கும் தேசிய இன அடையாளம் பற்றிய
விழிப்புணர்வால் பார்ப்பனர்களுக்கு ஏற்பட்டிருக்கும்
இயல்பான பதற்றத்தை அதிலும் காண முடியும்.
ராமதாஸ் போன்ற அப்பட்டமான ஓட்டுப்பொறுக்கி
அரசியல்வாதியை தமிழ்த்தேசியவாதியாக்கி,தலித்
மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக கவிதை
எழுதுகிறோம் என்ற பெயரில்,தமிழ் அடையாளத்தை
இழிவு செய்த பார்ப்பன குயுக்தி மூளையின்
திறமையை வியக்காமல் இருக்க முடியவில்லை.
இன்றைக்கு அதே ராமதாசின் கட்சியை சேர்ந்தவரை
மேடையில் ஏற்றுகையில் மட்டும் தலித்துகள் மீதான
அக்கறை காணாமல் போய் விடுகிறதே ஏன்?
மேலும் இவர்கள் என்றைக்காவது இந்திய அரசு,
இந்தியாவின் வடகிழக்கில் இருக்கும் தேசிய
இனங்கள் மீது நிகழ்த்தும் தாக்குதலை வைத்துக்
கொண்டு,இந்திய தேசியத்தின் மீதும்,இந்தியன்
என்கிற அடையாளத்தின் மீதும் சேறடிக்கிற
வேலை செய்திருக்கிறார்களா என்றால்,இல்லை
என்பதே பதிலாக இருக்கிறது.



அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.சுலபமாகச்
சொல்லி விடலாம்.இந்தியாவெங்கிலும் இருக்கிற
எல்லா தேசிய இன மக்களோடும் வசித்தாலும்,அந்த
மக்களில் இருந்து அந்நியப்பட்டவர்களாகவும்,அந்த
மக்களையே சாதி ஒடுக்குமுறையால் சுரண்டுபவர்
-களாகவும்,இந்தியா என்கிற கட்டமைப்பின் வழியாக
மட்டுமே தங்கள் மேலாதிக்கத்தை உறுதிபடுத்திக்
கொள்ள முடியும் என்கிற யதார்த்தத்திலும் இருக்கும்
பார்ப்பனர்கள் மணிரத்தினம் பட கதாநாயகன் போல
இந்தியப்பாசத்தில் பொங்குவது இயல்பான ஒன்றுதான்.
அந்த பார்ப்பன தேசிய பக்திக்கு எதிராக தேசிய இன
அடையாளம் பற்றிய விழிப்புணர்வு எங்கு எழுந்தாலும்
அதை சிறுமைப்படுத்துவதை,கம்யூனிஸ்ட் கட்சிகளில்
இருக்கும் பார்ப்பனர்கள் செய்துகொண்டுதான் உள்ளனர்.



இந்தியதேசியத்தாலும்,இந்திய அடையாளத்தாலும்,இந்திய
நிலப்பரப்பில் இருக்கும்,தேசிய இனங்கள் தங்கள்
அடையாளத்தை இழந்துகொண்டிருப்பதை எப்படி ஏற்க
முடியும் என்கிற கேள்விக்கு இன்னும் பதில் இல்லை
இந்த பார்ப்பன தேச புரட்சியாளர்களிடமிருந்து.விட்டால்
இந்திராகாந்தி சோசலிசம் என்கிற வார்த்தையை
அரசியல் சட்டதின் முகப்பில் சேர்த்துவிட்டார்.அதனால்
நாம் சோசலிச கட்டத்தில் இருந்து பொதுவுடைமை
கட்டத்துக்கு போய்க்கொண்டு இருக்கிறோம்.அதனால்
தேசிய இன மொழி,பண்பாட்டு அடையாள அழிப்பைப்
பற்றி கவலைப்படை தேவையில்லை என்று பதில்
சொன்னாலும் சொல்வார்கள்.மொத்தத்தில் இந்திய
தேசிய இனங்கள் தங்களின் தேசிய விடுதலைக்கான
போராட்டங்களை முன்னெடுப்பதும்,தங்கள் தேசிய
இன அடையாளங்கள் உறுதிபடுத்திக்கொள்வதுமே
இப்போதைக்கு தேவையாக இருக்கிறது.



இந்திய மாவோயிஸ்டுகளோடு இணைந்து நிறக வேண்டிய
தேவை வந்தாலும்,மீண்டும் இந்திய கட்டமைப்பில்
இணைய வேண்டி வந்தாலும் கூட தங்களின் தேசிய
அடையாளம் பற்றிய முழு விழிப்புணர்வு கொண்ட
தேசிய இனங்களால் மட்டுமே தங்களை காத்துக்
கொள்ள முடியும்.சாதியையும் மதத்தையும்
வைத்துக்கொண்டு என்னதான் பொதுவுடைமையக்
கொண்டு வந்தாலும்,அதிலும் பார்ப்பனர்கள் மததையும்
சாதியையும் கொண்டு வந்து தங்கள் மேலாதிக்கத்தை
நிலை நிறுத்திகொண்டு விடுவார்கள் என்கிற
பெரியாரின் எச்சரிக்கையை நினைவுபடுத்திக்கொள்ள
வேண்டி இருக்கிறது.இந்தியதேசியத்துக்கும்,இந்திய
அடையாளத்துக்கும் பார்பனியத்துக்கும் உள்ள
உறவை இயங்கியல் ரீதியாக புரிந்துகொண்டு,இந்திய
அடையாள நிராகரிப்போடு தேசிய இனங்கள்
இயங்குவது மட்டுமே சரியான விசயமாக இருக்க
முடியும்.



இந்திய வரலாற்றில் நிலவிய எல்லா அரசு வடிவங்களிலும்
தங்களின் மேலாதிக்கத்தை நிறுவிக்கொள்வதில் பார்ப்பன
சமூகம் காட்டி வந்திருக்கும் அதீத திறமையை வரலாறு
முழுக்க கண்டு வந்திருக்கிறோம் நாம்.சோசலிசத்தின்
பெயரால் இந்தியாவிலும் ஒரு அதிகாரவர்க்க ஆட்சி
நிறுவப்பட்டால் அதிலும் தங்களின் மேலாதிக்கத்தை
நிறுவிக்கொள்வதில் பார்ப்பனர்களுக்கு சிரமங்கள் இருக்க
போவதில்லை.அதே நேரம் மிகைப்படுத்தப்பட்ட
பார்ப்பன எதிர்ப்பையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டி
இருக்கிறது.பிறப்பின் அடிப்படையை வைத்து பார்ப்பனர்
என்று அவதூறு செய்யப்படும் கிஷன்ஜீயிடமிருந்தே
இந்திய இடதுசாரிகளிடம் இலகுவாக காண முடியாத
சோவியத் யூனியன் பற்றிய நேர்மையான விமர்சனங்கள்
வருகின்றன என்பதை நாம் மறுக்க முடியாது.
சோவியத் யூனியனில் அதிகாரவர்க்க ஆட்சியை
அமைக்க துணைபோனதாக லெனினையும்,அதிகார
வர்க்க ஆட்சியை அமைத்ததாக ஸ்டாலினையும்,
அவர் விமர்சித்திருப்பது.தங்கள் பிரதேசங்களில்
உருவாக்கி இருக்கும் மக்கள் புரட்சிகர கமிட்டிகளில்
ஜனநாயகபூர்வமான தேர்தல்களை நடத்துவது,நாங்களும்
தவறு செய்கிறவர்கள்தான் எங்களையும் எதிர்த்துப்போராட
கற்றுக்கொள்ளுங்கள் என்று மக்களுக்கு பயிற்றுவிப்பதை
எல்லாம் நாம் ஆரோக்கியமான முன்னெடுப்புகளாக
கருத முடியும்.



இவர்களின் பார்ப்பன வன்மத்துக்கு உதாரணமாக மேலும்
சில விசயங்களைப் பார்த்துவிட்டு இந்தப் பதிவை
முடித்துக் கொள்ளலாம்.ஜெயராம் பற்றிய கட்டுரையில்
காகிதப்புலி சீமானின் தம்பிகள் போலிஸ் பாதுகாப்போடு
ஜெயராம் வீட்டைத் தாக்கியதாக எழுதி இருக்கிறார்கள்.
இந்தக் காகிதப்புலிகள் முத்துக்குமார் விசயத்தில்,
வன்னியரசிடம் மான் கராத்தே காட்டி ஓடியது ஒரு
புறம் இருக்கட்டும்.தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும்
அவ்வப்போது தமிழக போலிசை சந்திருந்தால் கூட
தமிழகப் போலிசைப் பற்றி இவர்களுக்குத் தெரிந்து
இருக்கும்.அரசிடம் அனுமதி பெற்று நடத்தும்
ஆர்ப்பாட்டங்களைத் தவிர வேறு எதுவும் செய்யாத
புரட்சியாளர்களாயிற்றே இவர்கள்.சேலம் ரயில்வேக்
கோட்டம்,முல்லைப்பெரியாறு,ஈழத்தமிழர்களுக்கான
போராட்டங்கள் எதிலாவது கலந்துகொண்டிருந்தால்
தமிழக போலிசின் இந்தியப்பாசம் புரிந்திருக்கும்.
சேலம் கோட்ட பிரச்சணையாகட்டும்,முல்லைப்
பெரியாறு பிரச்சனையாகட்டும் கேரள முதலமைச்சர்,
மத்திய அமைச்சர் யாருடைய கொடும்பாவிகளையும்,
ஏன் சிங்கள ராஜபக்ஸேவின் கொடும்பாவியைக்கூட
எரிக்க விட்டதில்லை தமிழக போலிஸ்.தள்ளுமுள்ளு
நடந்த பிறகே எரிக்க முடியும்.அதே நேரம் தமிழக
அமைச்சர்களின் கொடும்பாவிகள் கேராளாவில்
போலிஸ் பாதுகாப்புடன் எரிக்கப்படுவதை தொலைக்
காட்சிகளில் நன்றாகவே பார்க்க முடிந்தது.அரச
விசுவாசத்திலும்,இந்திய விசுவாசத்திலும் நாயினும்
கீழான தமிழகபோலிஸ் சீமானின் தம்பிகளுக்கு
பாதுகாப்பு கொடுத்தது என்று எழத புறநானூற்று
வீரம் தேவையில்லை பார்ப்பன சாணக்கியனின்
குயுக்தியே போதும் .



மலையாளிகள் தமிழனது உருவத்தையும் வடிவத்தையும்
கேலி செய்வதற்க்கும்,தமிழர்கள் மலையாளிகளின்
ஆளுமையையும் பண்பையும் கேலி செய்வதற்கும்
பாரிய வேறுபாட்டை கண்டு பிடித்திருக்கிறார்கள்
முன்னது நகைச்சுவையாம்,பின்னது காழ்ப்புணர்வாம்.
எது நகைச்சுவை? தமிழர்களை சுத்தமற்றவர்களாக,
பிச்சை எடுப்பவர்களாக சித்தரிப்பது நகைசுவையா?
உருவத்திலும் வடிவத்திலும் தமிழர்களுக்கும்,
மலையாளிகலுக்கும்,என்ன வேறுபாடு உள்ளது.
நிறம்தான் வேறுபடும்.நிறத்தை வைத்துதான்
தமிழர்களை இழிவு செய்கிறார்கள் என்பதுதானே
உண்மை.அதை சொல்வதில் இருந்து எது
இவர்களைத் தடுக்கிறது.நிறத்தின் அடிப்படையிலும்
சுத்தத்தின் அடிப்படையிலும்,தீண்டத்தகாத மனநிலை
கொண்டு தமிழர்களை இழிவு செய்வதை,மலையாள
சமூகம் பார்ப்பன அடிமைத்தனத்தில் இருந்து
விடுபடாதன் நீட்சியாகப் பார்ப்பதுதானே சரியாக
இருக்க முடியும்.அதை வெறுமனே நகைச்சுவை
என்று எழுதி தங்களின் பார்ப்பன விசுவாசத்தை
காட்டிக்கொண்டிருக்கிறார்கள் இந்தப்
புரட்ச்ச்ச்ச்யாளர்கள் என்பதுதான் உண்மை.
மேலும் தமிழர்களை கிண்டல் செய்வார்களாம்,
சித்தரிப்பார்களாம் என்று எதற்கெடுத்தாலும்
ளாம் போடுகிறார்கள்.ஏன் எதையும் அவர்கள்
செய்வதே இல்லையா? கிண்டல் செய்கிறார்கள்,
சித்தரிக்கிறார்கள் என்று கூட எழுத மறுக்கும்
இவர்கள்.அவற்றை வாதத்துக்காக உண்மையென்று
வைத்துக்கொண்டாலும் என்று எழுதி இருக்கிறார்கள்.
எந்த அளவுக்கு தமிழர்களை மடையர்களாக
பார்ப்பன குயுக்தி மூளை கருதுகிறது என்பதற்கு
இதுவே சாட்சியாகும்.ஜெயராம் பிரச்சனையில்
மிகச்சரியான நிலைப்பாடு ஏற்கனவே தமிழக
அரசியல் வழியாக சமூகத்தில் பரவலாககொண்டு
செல்லப்பட்டுவிட்டது என்பதால் இத்தோடு
நிறுத்திக்கொள்ளலாம்.



மற்றபடி தமிழ்த்தேசியர்களாக இவர்களே ஒரு
பட்டியலை வைத்துக்கொண்டு அவர்கள் ஏன்
அதைச் செய்யவில்லை இவர்கள் ஏன் இதை
செய்யவில்லை என்றெல்லாம் கேட்பதற்கு
நம்மிடம் ஒரே பதில்தான் இருக்கிறது.
மார்க்சியம் பேசுவதாலேயே மக இக வினர்
மார்க்சியர் ஆகிவிட முடியாது என்பது
எத்தகைய உண்மையோ,அத்தகைய
உண்மைதான் தமிழ்த்தேசியம் பேசுபவர்கள்
எல்லோரும் தமிழ்த்தேசியவாதிகள் ஆக
முடியாது என்பதும் பலமுறை இவர்களை
விமர்சித்தாகிவிட்டது,புரட்சிகர அரசியல்,
ஈழம்,இடஒதுக்கீடு,எல்லாவற்றிலும்
இவர்கள் அம்பலப்பட்டு போயிருக்கிறார்கள்
என்பதால் மீண்டும் அதிகம் கிளற
வேண்டியதில்லை.தேனொழுகும்
வார்த்தைகளில் இந்திய தேசிய
இனங்களின் பாட்டாளிவர்க்க
ஒருங்கிணைவு பேசினாலும்,அதன்
உள்ளடக்கமாக பார்ப்பன ஒருங்கினைவும்,
மேலாதிக்கமும் நிலை நிறுத்தப்படும்
என்பதாலேயே எழுத்தாளர் ஞாநி
போன்றவர்கள் இவர்களை பாராட்டுகிறார்கள்
என்பதே போதும் இவர்களின் அரசியல்

தொடர்புடைய பதிவு
http://stalinguru.blogspot.com/2009/07/blog-post_28.html

Tuesday, February 16, 2010

இடதுசாரி,தேசிய போராட்டங்களின் இன்றைய வடிவம் - 2




தேசிய இனங்கள் பற்றிய நேபாள தோழர்களின் செயல்பாடுகளை
முழுக்க அப்படியே இங்கே பின்பற்ற முடியாது என்பதே
உண்மை.நம்மைப் பொறுத்தவரை,காஸ்மீர்,தமிழகம்,
நாகாலாந்து,அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு தேசிய இனங்கள்,
தங்களின் தேசிய விடுதலைக்கான போராட்டங்களை
தீவிரப்படுத்துவதன் வழியாகவே இந்திய புரட்சிகர
அரசியலுக்கு உதவ முடியும்.சாத்தியமான சர்வதேச சூழல்கள்
அமைந்தால் தேசங்களாக தங்களை அமைத்துக்கொளவது,
அல்லது நேபாள தோழர்களின் பாணியில் இந்திய
மாவோயிஸ்டுகள்,ஒரு குறிப்பிட்ட கால ஆயுதப்
போராட்டத்துக்குப் பிறகு,தங்களை நிராகரிக்க முடியாத
அரசியல்சக்திகளாக இந்தியப்பெருநிலப்பரப்பில் உறுதி
படுத்திக்கொண்டு,பாராளுமன்றத்துக்கு செல்லும்போது
அவர்களோடு ஒத்துழைப்பது போன்ற செயல்பாடுகளே
உதவியாக அமையும்.மேலும் நேபாளம் போன்ற மிகச்சிறிய
பிராந்தியமாக இந்தியா இல்லை என்பதையும் நாம் மறுக்க
முடியாது.நூறு கோடி பேர் கொண்ட சந்தையை இழக்க
நேரும் என்றால் அதை எந்த விலை கொடுத்தேனும் தடுக்க
ஏகாதிபத்தியங்கள் முயலவே செய்யும்,அணு ஆயுதத்தாக்குதல்
உட்பட எதையும் எதிர்பார்க்கலாம்.போராடும் களங்களை
சிறியதாக்குவதன் வழியாக மட்டுமே நாம் அந்த அபாயத்தை
தவிர்க்க முடியும்.அதே நேரம் ஆயுதங்கள் விற்பனைக்கான
களமாக தேசிய விடுதலைப்போர்க்களங்களை
பாவிப்பதன் மூலம் தங்களின் இலாபத்தை தக்க வைக்க
ஏகாதிபத்திய அரசுகள் முயலும் என்பதையும் மறுக்க
முடியாது.அதற்கான வாய்ப்பை மறுக்கும் விதத்திலேயே
தேசியவிடுதலைப் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.



ஏகாதிபத்தியங்களின் சூறையாடலுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த
பிரதேசமாக இருந்த ஈழமும்,தமிழகத்தின் நிலைக்கு கொண்டு
வரப்பட்டுவிட்டது.ஏகாதிபத்தியங்கள் தங்கள் சூறையாடலை
ஈழ மண்ணில் நிகழ்த்த துவங்கி இருக்கின்றன.வளர்சித்
திட்டங்கள் என்கிற பெயரில் வாழ்வாதாரங்களை அழிப்பது,
சுற்றுச்சூழலை சீரழிப்பது என்கிற ஏகாதிபத்தியங்களின் எல்லா
நடவடிக்கைகளும் ஈழ மண்ணில் நடைபெறத் துவங்கி உள்ளன.
எந்த விட்டுக்கொடுப்புகளுமற்ற ஆயுதப்போராட்டத்தை நடத்திக்
கொண்டிருந்த விடுதலைப்புலிகளும் அகற்றப்பட்ட நிலையில்,
எந்த தடைகளும் இல்லாம் ஈழம் சூறையாடப்படும் நிலையே
இருக்கிறது.பொருளாதார ரீதியான சுரண்டலோடு,கலாச்சார
ஏகாதிபத்தியத்தின் கீழ் மக்களின் போராடும் உணர்வை
மழுங்கடிக்கும் நடைமுறைகள் எற்கனவே,புலிகள்
கட்டுப்பாட்டில் இல்லாமல் இருந்த பிரதேசங்களில்
ஆரம்பிக்கபட்டிருந்தன.அது இனி தமிழீழத்தின் சகல
பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.போராடும் தேசிய இனங்கள்
தங்களுக்கான வழிமுறையாக ஏற்க வேண்டிய பொதுவான
அம்சங்களை பரிசீலிக்க முயலலாம்.



வெகுசன வன்முறையோடு இணைக்கப்பட்ட இருபத்தியோராம்
நூற்றாண்டுக்கான கெரில்லா யுத்தமே,இனி வரும்
காலங்களில் தேசிய விடுதலைப்போர்களுக்கான வழிமுறை
என்றாக முடியும்.வேலை நிறுத்தங்கள்,குஜ்ஜார்கள்,
காஸ்மீரிகள்,பாலஸ்தீன மக்களின் இண்டிபதா பாணி
வெகுசன வன்முறையே முதன்மை வழியாக மாற வேண்டும்.
அதோடு ஏகாதிபத்திய நாடுகளின் நுகர்பொருட்களான
சந்தையை,அந்நிய பொருட்களின் புறக்கணிப்பின் வழியாக
நிகழ்த்துவது.நிலங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்காத
நிலையிலும்,அரசுக்குள்ளேயே அரசாக இயங்கி சிறிய
அளவிலான தற்சார்பு பொருளாதாரத்தை கட்டமைக்க
முயற்சிப்பது போன்றவைகள் பற்றி எல்லாம் நாம்
சிந்திக்கத் துவங்க வேண்டும்.



ஆயுதப்போராட்ட வடிவங்கள் பற்றி விரிவாக பேசுவது
தேவையற்ற ஒன்றாக இருந்தாலும்,ஆயுதப்
போராட்டங்களின் தேவை மறைந்து விட்டது என்று
கூற இயலாது.ஒன்றை மட்டும் உறுதியாகக்
கூறலாம்.தேசியஇன விடுதலைப்போராளிகளோ,
இடதுசாரிகளோ யாராக இருப்பினும்,மரபுவழி படை
கட்டுமானங்களை உருவாக்கி கொள்வதன் தேவை
மறைந்து விட்டது.நாம் அந்த வரலாற்றுக் கட்டத்தை
தாண்டியாகி விட்டது என்பதே நிதர்சனம்.ஆட்சியை
கைப்பற்றிய பிறகும்,தேசியவிடுதலையை அடைந்த
பிறகும் கூட மரபுவழி படைக்கட்டுமானங்களை
உருவாக்குவது அவசியமற்ற ஒன்றாகவே
தோன்றுகிறது.ஈராக்,ஆப்கானிஸ்தான் அனுபங்கள்
அதையே காட்டுகின்றன.



கெரில்லா போராட்டதின் மூலமாகவும்,வெகுசன வன்முறை
மூலமாகவும் தங்களை நிராகரிக்க இயலாத சக்தியாக,
வளர்த்துக்கொண்ட பின்,சில விட்டுக்கொடுப்புகளுடன்
தேசத்தை அடைவது.சரியாக சொல்வதென்றால் தேசப்
பொருளாதாரத்தின் 50 % சதவிகித்தை கைப்பற்றுவது.
50% சதவிகிதத்தை கைப்பற்றுவது என்பதை தங்கள்
மண்ணில் இருக்கும் ஏகாதிபத்திய நிறுவனங்களில் 50%
வெளியேற்றுவது என்று அர்த்தமாகும்.50% சதவிகிதத்தை
80 %சதவிகிதமாக மாற்றுவது,பிறகு முழுக்க
கைப்பற்றிக்கொள்வதை நோக்கி நகர வேண்டும்.கைகளில்
ஆயுதங்கள் இல்லாமல்,ஆட்சியதிகாரமும் இல்லாமல்
வெகுசன வன்முறை மூலமும்,அரசியல் போராட்டங்கள்
மூலமும் நேபாள,பொருளாதாரததின் 50 %
மாவோயிஸ்டுகள் கட்டுப்படுத்திக்கொண்டு இருப்பதை
பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.ஆட்சியதிகாரத்தை
அடைகையில் அதை 80 % சதவிகிதமாக மாற்றிக்
கொள்வது அவர்களுக்கு சிரமமாக இருக்கப்போவதில்லை.
ஆயுத ரீதியிலான தலையீடுகளை ஏகாதிபத்திய அரசுகள்
நிகழ்த்தினால்,மீண்டும் அதே பாணியில் வெகுசன
வன்முறையோடு இணைக்கப்பட்ட 21 ஆம்
நூற்றாண்டுக்கான கெரில்லா யுத்தம் என்கிற வகையில்
ஆக்கிரமிப்பு அரசுகளை எதிர்த்து போராட முடியும்.ஒரு
தேசிய அரசின் கீழ் தாங்கள் அடைந்த நன்மைகளை,
இழக்காமல் இருக்க மக்கள் உற்சாகமாக போராட
முன்வருவார்கள் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.



கியூபா,வெனிசுலா,போன்ற தென் அமெரிக்க அரசுகள் போன்று
சோசலிசம் சார்பான அரசுகளின் எண்ணிக்கைகளை அதிகரித்துக்
கொண்டே செல்வதன் மூலமே சர்வதேச அரங்கில் முற்போக்கு
அரசியலுக்கான தளத்தை நம்மால் உருவாக்க முடியும்.அணு
ஆயுதங்கள் கொண்ட ஒரு இடதுசாரி அரசு உருவாகும்வரை
இதுபோன்ற போராட்ட முறைகளே சாத்தியமாகும்.
முதலாளித்துவம் தனது முதுகில் தனக்கான சவப்பெட்டியை
சுமந்துகொண்டு திரிகிறது என்று இனியும் கூற முடியும்
என்று தோன்றவில்லை.அது மனித குலத்துக்கான சவப்
பெட்டியை சுமந்து கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது.
ஆலைகளில் திட்டமிடப்பட்ட உற்பத்தியையும்,சமூகத்தில்
அராஜக உற்பத்தியையும் நிகழ்த்திக்கொண்டுப்பதாக
கூறுவோம் முதலாளித்துவத்தைப் பற்றி கூற வருகையில்.
இன்றைய சூழலில் பார்த்தால்,தனது அதிநவீன தொழிழ்
நுட்பங்கள் வழியாக உற்பத்தியை நிகழ்த்தும்
முதலாளித்துவம்.தனது உற்பத்தி பொருட்களுக்கான
நுகர்வோராக இருப்பதற்கும்,உபரி மதிப்பை உற்பத்தி செய்து
கொடுப்பதற்கும்,தேவையான அளவு மனிதர்களை மட்டுமே
பூமியில் வாழ விடுவது என்கிற வகையில்,மனித
சமூகத்தின் எண்ணிக்கையையே ஒழுங்குபடுத்திக்கொண்டு
இருக்கிறதோ என்று எண்ணவே தோன்றுகிறது.நிலவில்
தண்ணீரையும்,செவ்வாயில் வசிப்பிடத்தையும் தேடி
முதலாளித்துவம் சென்று கொண்டிருக்கையில்,இன்றைய
யதார்த்த சூழலுக்கு ஏற்ப தத்துவங்களை வளர்க்காமல்
பன்முகப்பட்ட போராட்டங்களை மேற்கொள்ளாமல்.தத்துவ
சர்ச்சைகள் செய்து கொண்டிருக்க இது காலமல்ல என்பதை
புரட்சிகர சக்திகள் இனியேனும் உணர்ந்தால் நலம்.



தொடர்புடைய பதிவுகள்
http://stalinguru.blogspot.com/2009/12/3.html
http://stalinguru.blogspot.com/2009/12/4.html
http://stalinguru.blogspot.com/2009/11/blog-post_11.html

முடிந்தது.

இடதுசாரி,தேசிய போராட்டங்களின் இன்றைய வடிவம் - 1




இடதுசாரிகளாக இருந்தாலும் தேசிய விடுதலைப்போராட்ட
அமைப்புகளாக இருந்தாலும்,தினம்,மாற்றமடைந்து
கொண்டே இருக்கும் சர்வதேச சூழல்களை கணக்கில்
எடுத்துக்கொண்டே தங்களது நடவடிக்கைகளை
அமைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
இருந்தபோதிலும் பெரும்பாலான நேரங்களில் அது
போன்ற ஆய்வுகளை மேகொள்ளாமல் தான் புரட்சிகர
சக்திகள் இயங்கிகொண்டு இருக்கின்றன.தற்போதைய
சர்வதேச சூழலைக் குறித்து சற்று பரிசீலிக்க முயலலாம்.
முதலாவதாக இடதுசாரி எழுச்சிப்போராட்டங்களையோ,
தேசிய இன விடுதலைப்போராட்டங்களையோ ஆதரிக்க
எந்த சோசலிச முகாமும் இன்றைக்கு உலகில் இல்லை.
முழுக்க முதலாளித்துவ உலகத்தின் கீழ்தான் நாம் வாழ்ந்து
வருகிறோம் என்பதே நிராகரிக்க முடியாத உண்மையாக
இருந்து வருகிறது.இன்றைய சூழலில் அமெரிக்கா
தலைமையிலான ஒற்றைத்து துருவ அரசு என்கிற நிலை
மறையத் துவங்கிவிட்டது.அமெரிக்காவை விட ராணுவ
பலத்தில் ரஸ்யா மேலாதிக்கத்தை அடைந்திருக்கிறது.சீனா
அமெரிக்காவின் ராணுவ வலிமைக்கு இணையாக
வளர்ந்திருக்கிறது.


http://stalinguru.blogspot.com/2009/08/blog-post_17.html

http://stalinguru.blogspot.com/2009/07/blog-post_1271.html


இந்த இரண்டு தலைப்புகளின் கீழ் ஏற்கனவே விவாதித்த
விசயங்களைமீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திக்
கொள்ள வேண்டி இருக்கிறது.பலத்தை இழந்திருக்கிற
அமெரிக்க முகாமைச் சார்ந்து இருப்பதை தவிர்த்து,சீன,
ரஸ்ய சார்பின் மூலமே தனது இலாபவேட்டையை
அதிகரித்துக்கொள்வது என்கிற நிலையிலேயே இந்திய
முதலாளி வர்க்கமும்,அதற்கு இசைவாக இந்திய
வெளியுறவுக்கொள்கை அமைந்திருக்கிறது என்பதையும்
அந்த தலைப்புகளின் கீழ் பார்த்தோம்.சீனாவால்
இந்தியாவுக்கு பாதிப்பு என்று எவ்வளவு கூப்பாடு
போட்டாலும்,இந்திய அதிகாரவர்க்கம் அலட்சியமாக
கடந்து செல்வதற்கு சீனாவோடு,இந்தியாவால் தற்காப்பு
யுத்தத்தை நடத்துவது மட்டுமே சாத்தியம் என்கிற
உண்மையோடு,நாம் வேறு ஒன்றையும் பார்க்க வேண்டி
இருக்கிறது.தனது நலனுக்கு ஏற்ப சோவியத்தோடும்,
அமெரிக்காவோடும்,யாருடைய பலம் அதிகரிக்கிறதோ
அவர்கள் பக்கம் சாய்வதன் மூலம் தன் நிலையை உறுதி
படுத்திகொள்வது என்பதே இந்திய வெளியுறவுக்
கொள்கையாக இருந்து வந்திருக்கிறது.



அந்த வகையில்,பொருளாதார ரீதியாகவும்,ராணுவ
ரீதியாகவும் பலம் அடைந்திருக்கும் ரஸ்ய,சீன
சார்புநிலையையே அது எடுத்திருக்கிறது.ஒற்றை
முகவரா,இரு தரப்பு முகவரா அல்லது பல்முனை
முகவரா என்று அடையாளம் காணமுடியாத்போதும்
ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம் ‘இந்து’
ராம் இந்தியமுதலாளிவர்க்கத்தின் நலனுக்காக
அயராது உழைக்கும் நபர்.அவரே சீனாவுக்கு
மேலாதிக்க நோக்கம் இல்லை என்று சொல்வதன்
அர்த்தத்தை நாம் சரியாக புரிந்துகொள்ள வேண்டும்.
சீனாவுக்கு மேலாதிக்க நோக்கம் இல்லை என்கிற
அவரது கருத்துக்கு வழிமொழிதல் எழும் இடம் நமக்கு
ஆச்சரியளிக்கவில்லை.தங்கள் புதிய ஜனநாயகம்
பத்திரிக்கையில் அப்பட்டமாக சீனாவுக்கு மேலாதிக்க
நோக்கம் இல்லை என்று எழுதி‘ இந்து’ ராமினை
வழிமொழிந்திருக்கிறார்கள் மக இக வினர்.
அடுத்த வழிமொழிதல் கிளம்பும் இடமும் கூட
ஆச்சரியத்தை தரவில்லை.அது அ.மார்க்ஸிடமிருந்து
வந்திருக்கிறது.இவர்கள் அணைவரும் இணையும்
புள்ளி எது என்பதை ஊகத்துத்துக்கே விட்டு
விடலாம் இப்போதைக்கு.



ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த
பின் க்யூபா,வெனிசுலா மற்றும் சில இடதுசாரி சார்பான
இலத்தீன்அமெரிக்க நாடுகளுக்கு எதிராக நாம் பரவலாக
கடுமையானவிமர்சனங்களை எழுப்பி வந்திருக்கிறோம்.
மாவோவின் சீனா நிக்சனின் கரங்களைப் பற்றி குழுக்கியதை
எல்லாம் நம்மால் மறந்திருக்க இயலாது.சர்வதேசியம்
என்கிற வார்த்தையை அதன்உண்மையான அர்த்தத்தில்
இன்று வரை உலகம் காணாமல்தான் இருந்து வருகிறது.
சில விதிவிலக்குகளைத் தவிர.சோவியத் யூனியனின்
சிதைவுக்குப் பிறகு கடந்த இருபது ஆண்டுகளாக,
அமெரிக்காவின் பொருளாதாரத் தடையால் தினறிக்
கொண்டிருக்கும் க்யூபாவும்,எந்நேரமும் அமெரிக்கத்
தாக்குதலுக்கு உள்ளாகும் சாத்தியம் இருக்கும் இலத்தீன்
அமெரிக்க நாடுகளும், சீன,ரஸ்யச்சார்பு நிலையை
எடுத்திருப்பதன் மூலம் தங்களுக்கான பாதுகாப்பை
உறுதிப்படுத்திக்கொண்டிருக்கின்றன என்பதையும்,
அமைதியான முறையில் வளர்ச்சியை நோக்கி
முன்னேறுவது.மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவது
போன்ற வழி முறைகளையே இலக்காக கொண்டுள்ளன
என்பதை காணக் கூடியதாக இருக்கிறது.

அவைகள் ஈழத்ததமிழர்கள் விசயத்தில் இழைத்த குற்றத்தை
மறுக்க முடியாதபோதிலும்,அதற்கான பின்னனியை பார்க்க
வேண்டும்.ரஸ்யாவைப் பொறுத்துவரை இன்றளவும் ஒரு
விதமான கலப்புப்பொருளாதாரம்தான் நிலவி வருகிறது.
முன்னால் கே.ஜி.பி.யின் சேர்மனும்,இரண்டு முறை
அதிபரும்,தற்போதைய பிரதமருமான விளாடிமிர்
புதினுக்கும்,தற்போதைய அதிபர் மெத்வதேவுக்குமான
முரண்பாடு எதன் அடிப்படையில் நிகழ்ந்து கொண்டு
இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.முழுக்க
தாராளமயமாக்குவது,தனியார்மயமாக்குவது,உலகமய
பொருளாதாரத்தோடு ரஸ்ய பொருளாதாரத்தை இணைப்பது
அதிபரின் நோக்கமாக இருக்கிறது.பிரதமர் புதின் தேசிய
பொருளாதாரத்தை அரசு கட்டுப்பாட்டில் வைத்திருக்க
முயற்சி செய்துகொண்டு இருக்கிறார்.மேலும் இன்றளவும்,
எரிவாயு,எண்ணெய்,மின்சாரம்,அணுசக்தி போன்ற
பெரும்பாலான துறைகள் ரசியாவில் அரசு கட்டுப்பாட்டில்
தான் இருக்கிறது.சீனாவிலும் அதுவே நிலை.தேசியப்
பொருளாதாரம் அரசுக் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது.
மேலும் ஆயிரக்கணக்கில் சீனாவில் அரசுக்கெதிரான
விவசாயிகளின் எழுச்சிகள் நிகழ்ந்துகொண்டிருப்பது,
கட்சியிலும்,அரசிலும் இருக்கும் மாபியாக்களுக்கு
எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளை எல்லாம்
நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மாற்றங்களை நோக்கிய சாத்தியக்கூறுகளை உடைய
நாடுகளாகவும்,பொருளாதாரத்தில் அரசு கட்டுப்பாடு
நிலவும் நாடுகள் ஆகவும் சீனாவையும்,ரஸ்யா
-வையும் புரிந்துகொண்டு இருப்பதாலேயே
இலத்தீன் அமெரிக்க நாடுகள் அவைகளைச் சார்ந்து
நிற்கின்றன.மேலும் முழு அளவிலான ஏகாதிபத்திய
அரசுகளாக அவைகள் வளர்வதற்கும்,தங்களின்
இறையான்மையை பலியாக கோருவதற்கும் சற்று
காலம் ஆகும் என்றோ அல்லதுஅப்படி ஒரு நிலை
ஏற்பட்டாலும்,பேசித்தீர்க்ககூடிய வாய்ப்புகள்,குறைந்த
பட்ச இழப்புகளோடு தங்கள் பொருளாதாரத்தையும்,
மக்களையும் பாதுகாத்துக்கொள்ள முடியும்
என்பதாலேயே இலத்தீன் அமெரிக்க நாடுகள் ரஸ்ய,
சீன சார்புநிலையைமேற்கொண்டு இருக்கின்றன.
மேலும் தேசியப் பொருளாதாரத்தின் கட்டுப்பாட்டை
தங்கள் கையில் வைத்துக்கொண்டு,தங்களின்
வளர்சிக்கு உதவும் விதத்தில் அந்நிய முதலீகளை
கையாளுவதில்இலத்தீன் அமெரிக்க நாடுகள்
திறமையோடு செயல்படுகின்றன என்பதே
உண்மையாக இருக்கிறது.தனது மேலாதிக்க
நடவடிக்கைகளை சீனா ஆசிய பிராந்தியத்திலும்,
ரஸ்யா, முன்னாள் சோவியத் பகுதிகளிலுமே
நிகழ்த்திக்கொண்டு இருக்கின்றன என்பதும்,உலக
ஆதிக்கத்துக்கான வேட்டையில் அவைகள்
இறங்க இன்னும் சற்றும் காலம் ஆகும் என்பதும்
அவதானிக்க கூடியதாக இருக்கிறது.அதே நேரம்
இந்த சர்வதேச சூழல் எந்த நேரத்திலும் மாறகூடிய
ஒன்றுதான் என்பதை மறந்துவிட்டு புரட்சிகர
சக்திகள் இயங்க முடியாது.



என்ன செய்வது என்கிற கேள்விக்கு பதில் தேட வேண்டிய
நிலைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறோம்.ஒரு முறையான
பின்வாங்கல் என்றும்,இன்றைய சர்வதேச சூழலுக்கு
ஏற்றதான முறை என்றும் நாம் நேபாள
மாவோயிஸ்டுகளின் வழிமுறைகளை முழுக்க ஏற்பது
சாத்தியம்தானா ? நிராகரிக்க முடியாத அரசியல்
சக்திகளாக தங்களை நேபாள அரசியல் அரங்கில் நிறுவிக்
கொண்டிருக்கிற விதத்திலும்,ஏகாதிபத்தியங்களின்
சூறையாடலுக்கு தடைகற்களாக அரசியல் போராட்ட
வழிமுறைகளை பயன்படுத்துகிற விதத்திலும்,
நேபாள தோழர்களின் வழிமுறைகள் சரியானவைகள்தான்.
அதே நேரம் ஏற்கனவே நிலவிய அந்நிய,உள்ளக
சுரண்டல்களுக்கு எதிராக காத்திரமான நடவடிக்கைகளை
எடுக்கும் நிலையில் நேபாள தோழர்கள் இல்லை
என்பதையும் அவதானிக்க கூடியதாக உள்ளது.
ஆட்சியதிகாரத்தை தேர்தலின் வழியாக மாவோயிஸ்டுகள்
கைப்பற்றுவதையும்,தேசியப் பொருளாதாரத்தை
கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு இறையான்மையை
காப்பதையும் தடுக்க,இந்திய அமெரிக்க,சீன ஆளும்
வர்க்கங்கள் நிகழ்த்தும் அத்துமீறல்களை நேபாள்
தோழர்கள் முறியடித்துக்கொண்டுருப்பதே நிகழ்காலமாக
இருக்கிறது.அந்நிய சதிகளை முறியடித்து வெற்றிகரமாக
ஆட்சி அதிகாரத்தை,தேர்தல் வழியாக கைப்பற்றி,
இலத்தீன் அமெரிக்க மாதிரி அரசை மாவோயிஸ்டுகள்
உருவாக்குவார்களா என்பதற்கான விடை
வருங்காலத்திடமே உண்டு.

தொடர்புடைய பதிவுகள்
http://stalinguru.blogspot.com/2009/12/3.html
http://stalinguru.blogspot.com/2009/12/4.html
http://stalinguru.blogspot.com/2009/11/blog-post_11.html

இன்னும் வரும்....

Friday, February 12, 2010

தமிழ்த்தேசியத்தை நோக்கி - 5

தனது நாட்டு மக்களுக்கு எதிராகவே விமானப்படையை பயன்படுத்திய
நாடு இலங்கை என்ற பேச்சைக் கேட்க நேர்ந்தபோதெல்லாம்,அதிலும்
இலங்கைக்கு முன்னோடி இந்தியாவே என்பது நினைவில் வந்தது.
நாகாலாந்து தேசிய விடுதலைப்போராளிகளின் முற்றுகையில் சிக்கிய
இந்திய ராணுவத்தினரை,ஈவு இரக்கமற்ற விமானப்படைத் தாக்குதல்
மூலமே இந்திய அரசு மீட்டது என்பதை எப்படி மறப்பது?.ஈழத் தமிழ்
மக்கள் மீதான அரச பயங்கரவாதக் கொடுமைகள் பற்றிய நினைவு
வரும்போதெல்லாம்,இந்தியாவின் வடகிழக்கு பிரதேசங்களில்,இந்திய
அரச பயஙகவாதத்தால் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் நினைவே
எழுகிறது.ஈழத்தமிழர்கள் அனுபவித்த கொடுமைகளுக்கு எந்த
விதத்திலும் சளைக்காத அரசபயங்கரவாத கொடுமைகளை எதிர்
கொள்ளும் அந்த மக்களைப் பற்றி தமிழகத்தில் நிலவும் மௌனம்
அருவருப்பையே தருகிறது.கடந்த ஐம்பது ஆண்டு காலமாக
இந்திய ராணுவத்தின் ஆட்சியில் இருக்கும் அந்த மக்களுக்காகவும்
நாம் பேசத் துவங்கியாக வேண்டும்.ஒப்பீட்டளவில் தமிழகத்தின்
அரசியல் விழிப்புணர்வு கொண்ட பிரிவினரிடம்,காஸ்மீர் மக்களின்
அவலங்கள் கொண்டு செல்லப்பட்ட அளவுக்கு கூட,மணிப்பூர்,
நாகாலாந்து,அஸ்ஸாம்,உள்ளிட்ட வடகிழக்கு தேசிய இனங்களின்
மக்கள் அனுபவித்துக்கொண்டிருக்கும் அரசபயங்கரவாத
கொடுமைகள் பற்றிய செய்திகள் இன்று வரை கொண்டு
செல்லப்படவில்லை என்பதே மறுக்க முடியாத
உண்மையாக இருக்கிறது.

தமிழகத்தின் தேசியவிடுதலைக்கான போராட்டத்தில் இயல்பான
நட்புகரங்களாக நாம் அந்த மக்களையே கருத முடியும்.தடா,
பொடா,என்று மத்திய இந்திய பகுதிகளில் நடைமுறையில்
இருந்த கொடூரமான சட்டங்கள் எல்லாம் கூட,மனித உரிமை
இயக்கங்கள்,ஜனநாயக சக்திகளின் போராட்டங்கள் மூலம்
ஒழிக்கப்பட்ட நிலையில்,இன்றைக்கும் ஒழிக்கப்படாத கருப்புச்
சட்டமாக வடகிழக்கு மாநிலங்களில், ஆயுதபடைகளுக்கான
சிறப்பு அதிகாரங்கள் சட்டம் நீடித்துக்கொண்டிப்பது எத்துணை
அவலமானது? இந்திய ராணுவம் எங்களை கற்பழிக்கிறது
என்று நிர்வாணமாக பெண்கள் போராடும் அளவுக்கு,அரச
பயங்கரவாதத்தின் கொடுமைக்குள் சிக்கி இருக்கும்
மக்களுக்காக பேசாவிட்டால் நாமெல்லாம் என்ன மனிதர்கள்?
தமிழகத்தின் தமிழ்த்தேசியசக்திகள் ஒடுக்கப்படும் அந்த
மக்களினங்களிடம் நட்புச்சக்திகளை தேடிக்கொள்வதும்,
இணைந்து போராட முன்வருவதும் மட்டுமே,நாம் சரியான
தேசியவாதிகளாக இருக்கிறோம் என்பதன் அடையாளமாகும்.
இந்திய அதிகாரவர்க்கத்தால் கட்டமைக்கப்பட்ட போலி
பார்ப்பன தேசபக்தியை கேள்விக்குள்ளாக்கவும்,நிராகரிக்கவும்,
அரச பயங்கரவாதத்தால் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின்
மீதான வன்கொடுமைகளே நமக்கு ஆயுதமாக மாற வேண்டும்.

நாகாலாந்து தேசியவிடுதலைப்போராட்டம் பற்றிய செய்திகளில் ஒரு
விசயத்தை குறிப்பிட்டாக வேண்டி இருக்கிறது.அங்கு வாழும் சுமார்
இருபத்து ஐந்துக்கும் மேற்பட்ட இனக்குழு வாழ்நிலையில் இருந்த
சமூகங்கள் தங்களுக்குள் ஒரு பொதுமொழியை உருவாக்கிகொண்டு
தேசிய விடுதலைக்காக இணைந்தனர் என்கிற செய்தியை நாம்
கவனத்தில் கொள்ள வேண்டும்.இனக்குழு நிலையில் இருந்த
மக்கள் தங்களுக்கான தேசிய அடையாளத்தை உருவாக்கிக்கொண்டு
இணைவதே சாத்தியமாக இருக்கும்போது,வளமான தேசியப்போராட்ட
மரபை கொண்டிருக்கும் தமிழகத்தில் தேசிய இணைவு சாத்தியம்
அற்றது என்றோ,தாழ்த்தப்பட்டவர்களின் விடுதலைக்கு,தேசிய
விடுதலைப்போராட்டம் வழியாக தீர்வு காண்பது இயலாதது என்றோ
கருத முடியாது.பெரியார் வளர்தெடுத்த சாதியொழிப்பு மரபு,
அம்பேத்கரிய சிந்தனைகளை வீச்சாக கொண்டு சென்ற தலித்திய
இயக்கங்களின் செயல்பாடுகளால்,விழிப்படைந்திருக்கும் சாதி
எதிர்ப்புணர்வை,சாதியொழிப்பு போராட்டங்கள் வழியாக,தேசிய
விடுதலைப்போராட்டத்தோடு இணைப்பதன் வாயிலாக வளர்க்க
முயற்சிப்பதே தமிழ்த்தேசியவாதிகளின் முதல் கடமையாக
அமைய வேண்டும்.இயல்பாகவே இந்தியாவில் உள்ள மற்ற
மாநிலங்களை விட குட்டிமுதலாளித்துவ பிரிவினர் அதிகம்
வாழும் பகுதியாக இருப்பதால்,தேசியக்கோரிக்கையின்
வர்க்கத்தலைமையை மாற்ற முயலும் சக்திகளுக்கு எதிரான
தொடர்ந்த போராட்டங்களும் தேவையாக இருக்கும்.இந்தியப்
பெருநிலப்பரப்பில் செயல்படும் மாவோயிஸ்டுகள் போன்ற
உண்மையான புரட்சிகர சக்திகளின் ஒத்துழைப்பையும் தமிழ்த்
தேசிய சக்திகள் பெற்றுக்கொள்ள முயல வேண்டும்.

தமிழகத்தின் புறச்சூழல் எப்படி இருக்கிறது என்று மதிப்பிட வேண்டி
இருக்கிறது.பரவலாக தேசியச்சிந்தனைகள்,தேசிய இனம்
பற்றிய தன்னுணர்வு தமிழகத்தில் அதிகரிக்கவே செய்திருக்கிறது.
இருந்தபோதிலும்,மார்க்சிய வழிகாட்டல் அற்ற,பெரியாரிய
அம்சங்களால் வளப்படுத்தப்பட்ட ஒன்றாக தேசியம் இல்லை
என்றே கூற வேண்டி இருக்கிறது.தமிழகத்தின் தமிழ்த்தேசிய
அரசியலை ஆக்கிரமித்துக்கொண்டிருப்பவர்களில் ஒரு பிரிவினர்
தேர்தல் அரசியலுக்காக தமிழ்தேசியத்தை ஒரு கருவியாக பயன்
படுத்த முயல்வது அறியக் கூடியதாக இருக்கிறது.இந்தத்
தரப்பினர் முற்றாக நிராகரிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில்
எந்த சந்தேகமும் இல்லை.இவர்களின் குரலுக்கு செவி
கொடுத்தால் இன்னும் ஐம்பது ஆண்டுகளை தமிழர்கள் இழக்க
வேண்டி வரலாம்.மறு தரப்பினர் தங்களை மார்க்சியவாதிகள்
என்று கூறிக்கொண்டாலும் அவர்களிலும் பெரும்பாலானோர்
தமிழ்ச்சாதி கோட்ப்பாட்டாளர்களாக இருக்கும் அவலமும்
மறுக்க இயலாததாக இருக்கிறது.

ரேசன் கடையில் பொருள் வாங்க நின்று கொண்டிருந்தபோது பார்த்த
விசயம் ஒன்று நினைவுக்கு வருகிறது.வரிசையில் பக்கத்தில்
நின்றிருந்த நபர்,ஒரு முஸ்லிம் வரிசையில் நிற்க வந்தபோது
முகத்தைச் சுழித்துக்கொண்டு விலகி நின்றார்.ஒரு தரமான
வாழ்க்கைக்கு வழியற்ற நிலையில் ரேசன் கடையில் நிற்கும்போது
கூட மத அடையாளத்தின் பெயரால்,சக மனிதனை வெறுக்கும்
அவரது மனநிலைக்கு காரணம் என்ன என்று யோசித்தபோது
இந்துத்துவ தீவிரவாதிகள் சமூகத்தின் பொதுவெளியை எப்படி
நஞ்சாக்கி வைத்திருக்கிறார்கள் என்பதே புரிந்தது.வேலை
இல்லாமல்,விலைவாசி உயர்வை சமாளிக்க இயலாமல்,
படுத்தி எடுக்கும் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கும் மனிதனை
அழைத்து வைத்து இந்துத்துவ பயஙகரவாதிகள் என்ன
சொல்வார்கள்,உன் அத்தனை பிரச்சணைகளுக்கு காரணம்
இஸ்லாமியர்கள்,கிறிஸ்தவர்கள் என்றுதானே.அப்படிச்
சொல்கையிலேயே உண்மையான சுரண்டல்காரர்களான
ஏகாதிபத்தியங்கள்,இந்திய,தமிழக முதலாளிகள்,ஆதிக்க
சாதி வெறியர்கள் அணைவரையும் தப்ப வைத்துவிடுவார்கள்
என்பது நாம் அறிந்ததுதான்.தமிழ்த்தேசியக் கோரிக்கையை
கையில் எடுத்திருக்கும் தமிழ்சாதிக்கோட்பாட்டாளர்களின்
அரசியலும் அப்பட்டமாக ஆர்.எஸ்.எஸ் காரர்களின்
பாணியில் செல்வது இங்கேதான்.இவர்களில் பாதிப்பேர் தங்கள்
முகங்களில் மார்க்சிய முகமூடியையும் மாட்டிக்கொண்டிருக்கும்
வெட்கக்கேடும் நிகழ்ந்தேருகிறது.

நம்மைப் பொறுத்தவரை நூற்றாண்டுகளாக தமிழகத்தில் வாழ்ந்துவரும்
மக்களை,கன்னடசாதிகள்,தெலுங்குசாதிகள் என்று தனித்து நிறுத்த
முயலும் முயற்சிகளை அடியோடு நிராகரிப்பது என்பதே சரியான
ஒன்றாக இருக்க முடியும்.அதே நேரம் குடியேற்ற பிரதேசம் என்று
கருதத்தக்க அளவுக்கு சமீப நாட்களில் தமிழ்நாட்டில் அதிகரித்து
இருக்கும் பிற மாநிலத்தவரின் குடியேற்றங்களை எதிர்த்தே ஆக
வேண்டும்.ஏகாதிபத்திய சுரண்டலோடு நதிநீர் பிரச்சனைகளால்
விவசாயம் பாதிக்கப்பட்டதாலும்,தீண்டாமை கொடுமைகளை
சகிக்க இயலாமலும்,தமிழகத்தின் நகர்புறங்களில் உதிரிப்பாட்டாளி
-களாக இருக்கும் தமிழர்களின் வேலைவாய்ப்பு,பிற மாநில
மக்களால் பறிக்கப்படுவது ஏற்க முடியாத ஒன்றாகவே கருதப்பட
முடியும்.மக இக வினர் போன்ற உன்னத புரட்சியாளர்கள் பீகார்,
உத்திரபிரதேசம் போன்ற வட இந்திய பகுதிகளுக்குச் சென்று,
வேலை தேடி பிற மாநிலங்களுக்கு அந்த பகுதி மக்கள் செல்லக்
காரணமான ஆளும்வர்க்கத்தையும்,தீண்டாமையையும் எதிர்த்து
தங்கள் புரட்சிப் பணியை ஆற்ற வேண்டும் என்பதே நமது ஆசை.
கி.பி.2500 க்குள் அங்கெல்லாம் சென்று தங்கள் புரட்சிப்
பணியை ஆரம்பிக்க அவர்களை வாழ்த்துவோம்.

தமிழகத்தில் கிளர்ந்திருக்கும் தேசிய உணர்வை தேர்தல் அரசியலுக்கு
செலுத்தி வீனடிக்க முயற்சிப்பவர்கள்,தாழ்த்தப்பட்டவர்கள் மீது
நிகழும் தீண்டாமை,சாதிய ஒடுக்குமுறைகளை அலட்சியம் செய்து
தேசியம் பேசுபவர்கள்,மார்க்சிய முகமூடி அணிந்துகொண்டே
தமிழ்ச்சாதி கோட்பாட்டாளர்களாகவும்,திராவிட எதிர்பாளர்களாகவும்
இருப்பவர்கள் என்று தமிழ்த்தேசியத்தை பலரும் கைகளில் எடுத்து
பயன்படுத்திக்கொண்டிருக்கும் சூழலே இன்றைக்கு நிலவுகிறது.
தவறான முன்னுதாரனங்களாக சுட்டிக்காட்ட உதவுவதன்,மூலம்
சரியான தேசியத்தை கட்டமைப்பதற்கு உதவுகிறவர்கள் என்கிற
வகையில் இவர்களுக்கு நாம் நன்றி செலுத்தலாம்.புறநிலை
உலகத்தின் யதார்த்தங்களை அறியாத கனவுலகவாசிகளாகவும்,
இன்றளவும் அதிகார நிறுவனங்களாக கட்சிகளை வைத்திப்பவர்
-களாகவும் இருக்கும் மார்க்சியர்களிடமிருந்து தேசிய
விடுதலைக்கான குரல்கள் வந்து கொண்டிருப்பதும் நாம் அறிந்த
ஒன்றுதான்.தமிழகமெங்கும் பல்வேறு அமைப்புகளிலும்,
அமைப்புகளில் அங்கம் வகிக்காமலும்,சிதறிக் கிடக்கும் இளைய
தலைமுறை தங்களை,அமைப்பற்ற அமைப்பு என்கிற வடிவத்தில்
ஒருங்கிணைத்துக்கொள்வதே இன்றைய தேவையாக இருக்கிறது.
மார்க்சிய வழிகாட்டலின் கீழ் நிகழ்த்தப்பட வேண்டிய தமிழ்த்தேச
விடுதலைக்கான கருத்தியல் தளத்தை உருவாக்குவது.பெரியார்
அம்பேத்கரின் பன்முகப்பட்ட சிந்தனைகளையும்,போராட்ட
மரபுகளையும் அதனோடு இணைப்பது.சரியான வர்க்க உணர்வு
கொண்ட,சாதியொழிப்பில்,பெண்விடுதலையில்,ஏகாதிபத்திய
எதிர்ப்பில் நேர்மை கொண்ட மனிதர்களாக தங்களை வளர்த்துக்
கொள்வது.சாத்தியமான ஊடகங்கள் வழியாக,தமிழ்த்தேசிய
விடுதலைக்கான கருத்தியல் பரப்பலை மேற்கொள்வது போன்ற
விசயங்கள் வழியாக மட்டுமே நம்மால் ஒரு சரியான தேசிய
விடுதலைப்போராட்ட அமைப்பை உருவாக்க முடியும்

தமிழ்த்தேசியத்தை நோக்கி - 4




நிகழ்காலத்தில் தமிழகத்தின் அரசியல் மற்றும் சமூகச் சூழலைப் பற்றி
விரிவாக பரிசீலிக்க வேண்டிய தேவை எழுந்திருக்கிறது.வழக்கம்
போலவே தேசிய விடுதலைப்போராட்டத்தின் முக்கியத்துவத்தையும்,
அதை ஏகாதிபத்திய எதிர்ப்புக்கடமையோடு இணைப்பதையும்,பற்றி
பெரியாரிய தோழர்கள் மத்தியில் அலட்சியமே நிலவி வருகிறது.
மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியற்றதாக பூமியை மாற்றிக்கொண்டு
இருக்கிற ஏகாதிபத்தியச் சுரண்டலை பாதுகாப்பதற்காக,மனிதர்களாக
வாழ்வதன் கௌரவத்தை களவாடிக்கொண்டிருக்கும் நிலையை
அடைந்திருக்கும் தமிழக ஆட்சியாளர்கள் செயல்படுத்தும்
திட்டங்களுக்கு இன்றைக்கும் வரவேற்பளிக்கும் நிலைதான்
பெரியாரியம் பேசும் தோழர்கள் மத்தியில் இருக்கிறது.
ஏகாதிபத்திய கட்டத்துக்கு ஏற்ப பெரியாரியலை வளர்த்தெடுக்கும்
எந்த செயல்பாடுகளும் முன்னெடுக்கப்படுவதில்லை.மார்க்சிய
வழிகாட்டலின் கீழ் நிகழ்த்தப்பட வேண்டிய தேசிய விடுதலைப்
போராட்டத்தோடு பெரியாரிய அம்சங்களை இணைப்பதன் மூலம்
அதனை ஜனநாயக உள்ளடக்கம் கொண்டதாக மாற்றுவது,
இந்துத்துவ சார்பு நிலையில் இருந்தும்,இனவாத நிலையில்
இருந்தும் தேசிய விடுதலைக்கோரிக்கையை எழுப்புபவர்களை
அம்பலப்படுத்துவது,தலித் விடுதலையை அலட்சியப்படுத்தும்
தேசியத்தின் கூறுகளை இனம் கண்டு அகற்ற பெரியாரியத்தை
பயன்படுத்துவது,போன்ற எந்த முன்னெடுப்புகளும் இன்றுவரை
மேற்கொள்ளப்படாததே யதார்த்தமாக இருக்கிறது.மறுபுறத்தில்
அடையாள அரசியலின் பெயரால் ஏகாதிபத்தியங்களுக்கு சேவை
செய்வோர் பெரியாரின் கருத்துக்களை தங்களின் ஏகாதிபத்திய
ஆதரவு அரசியலுக்கு பயன்படுத்திகொள்வதை தடுக்க இயலாத
நிலையே இருக்கிறது.தனது காலகட்டத்துக்கும்,அன்றைய
சூழலுக்கும் ஏற்ப பெரியார் கடைபிடித்த ஆளும் வர்க்கத்துடனான
சமரசங்களை இன்றைக்கும் அப்படியே பின்பற்றுவது என்பது
அபத்தமாகத்தான் இருக்க முடியும்.



ஏகாதிபத்தியங்களின் சூறையாடலுக்கும்,சுரண்டலுக்கும் தடைகளேதும்
இல்லாமல் திறந்து விடப்பட்ட பிரதேசமாகத்தான் தமிழகம் இருந்து
கொண்டு இருக்கிறது.ஈழத்தைப் போன்றோ,இந்தியாவின் வடகிழக்கு
மாநிலங்களைப்போலோ,காஷ்மீரைப்போலவே ஏகாதிபத்தியங்களின்
சூறையாடலுக்கு ஒப்பீட்டளவில் நிலவிய தடைகள் கூட இங்கு
இல்லை.சில நாட்களுக்கு முன் தமிழக துணை முதலமைச்சர் ஒரு
தகவலைச் சொன்னார்.கடந்து மூன்று ஆண்டுகளில் தமிழகத்துக்கு
47.000 ஆயிரம் கோடி அந்நிய முதலீடுகள் வந்திருப்பதாகவும்,
அதன் மூலம் இரண்டு இலட்சத்து இருபத்து இரண்டாயிரம் பேருக்கு
வேலை கிடைத்திருக்கிறது என்றார்.நாற்பத்தேழாயிரம் கோடி
முதலீட்டில் வெறும் இரண்டு இலட்சத்து இருபத்திரெண்டாயிரம்
பேருக்கு வேலை கிடைத்திருக்கிறது என்பது என்ன வகை வளர்ச்சி?
அந்த 47.000 ஆயிரம் கோடியும் அடுத்த முன்று ஆண்டுகளில்
வரிச்சலுகைளாக,உழைப்புச்சுரண்டலாக,அந்த அந்நிய
முதலீட்டாளர்களுக்கே திரும்பவும் போய் விடும் என்பதொன்றும்
சிதம்பர ரகசியமல்ல.மூன்று இலட்சம் பேருக்கு அரசு வேலைகள்
அளிக்கப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசின் தகவல் சொல்கிறது.
சுருக்கமாகச் சொன்னால் ஏகாதிபத்தியங்களுக்கும்,இந்திய,தமிழக
முதலாளிகளுக்கும் தமிழகத்தை சூறையாட அனுமதிப்பதற்கு
தமிழக மக்களுக்கு இலஞ்சம் கொடுத்துக்கொண்டு இருப்பதாகவே
இன்றைய சூழல் இருக்கிறது.இந்த வேலை வாய்ப்புகளோடு சேர்ந்து
நுகர்வு மற்றும் ஆடம்பர பொருட்களுக்கான சந்தை உருவாக்கமும்
நிகழ்ந்துகொண்டிருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.ஒரே கல்லில்
இரண்டு மாங்காய் அடிக்கிறது ஆளும் வர்க்கம் என்றே கருத
வேண்டி இருக்கிறது.



மேலும் இந்திய அரசின் தணிக்கைத்துறையின் தகவலின்படி மத்திய
அரசு வருமானத்தில் மாநில அரசுகளின் பங்கு 54 சதவிகிதமாக
இருக்கும் நிலையிலும்,மத்திய அரசுகளிடம் இருந்து மாநில அரசுகள்
பெரும் நிதி 34 சதவிகிதமாகவே இருக்கிறது.இது நடைபெறுகிற
சுரண்டலின் இன்னுமொரு நடைமுறை வடிவமாக இருக்கிறது.ஒரு
ஒப்பீட்டின் வழியாக தமிழர்கள் இழந்துகொண்டிருக்கும் வளங்களின்
மதிப்பை கணக்கிடலாம்.டாடா அமைக்க இருக்கும் டைட்டானியம்
ஆலை வழியாக கிடைக்க கூடிய வருமானம் நான்கரை இலட்சம்
கோடிகள் என்று மதிப்பிடப்பட்டு இருக்கிறது.தமிழகத்தின் உலகவங்கிக்
கடன் 78.000 ஆயிரம் கோடிகள் இருக்கிறது என்று முதலமைச்சர்
கூறுகிறார்.தமிழகத்தின் ஒரு இடத்தில் கிடைக்கும் கனிமத்தை
விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் லாபத்தில் ஆறில் ஒரு
பகுதியைக் கொண்டே உலகவங்கி கடனை அடைத்துவிட்டு,
தற்சார்பு பொருளாதாரத்தை கட்டமைக்கும் நிலை இருக்கையில்
இந்திய முதலாளிகளுக்கும்,ஏகாதிபத்தியங்களுக்கும்,தமிழ்நாட்டை
சூறையாட அனுமதிப்பதற்கு இலஞ்சமாக தமிழக அரசு கொடுக்கும்
வேலை வாய்ப்புகளை வரவேற்பது என்ன வகை புத்திசாலித்தனம்?




நரிமணத்தின் பெட்ரோல்,சேலம் இரும்பு,நெய்வேலி நிலக்கரி
மின்சாரம் என்று தமிழகத்தில் இருந்து அந்நிய,இந்திய,
தமிழக சுரண்டல்காரர்களின் நலன்களுக்காக சூறையாடப்படும்
வளங்களை பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது.அரசு
நிறுவனங்களுக்காக தங்கள் நிலங்களைக் கொடுத்த
மக்களின் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகளே முறையாக
நடைபெற்றது இல்லை என்னும்போது,சிறப்பு பொருளாதார
மண்டலங்களுக்காக தங்கள் நிலங்களை பறிகொடுக்கும்
மக்களின் நிலையைப் பற்றி அதிகம் கூறத் தேவையில்லை.
தமிழகத்தின் வளங்களை,சுற்றுச்சூழலை,சீரழிப்பதோடு,
மாநகராட்சிகள் என்று தமிழகத்தின் பெருநகரங்களை
அறிவிப்பதன் மூலமும்,நகரங்களை அழகுபடுத்துவதன்
பெயராலும்,சாதி ஒடுக்குமுறையின் பிடியில் இருந்து
ஒப்பீட்டளவில் தப்பிக்க நகர்புறங்களைச் சார்ந்து இருந்த
ஒடுக்கப்பட்ட மக்களை மீண்டும்,தீண்டாமையின் பிடிக்குள்
தள்ளும் வேலையும் தமிழகம் முழுக்க நடந்துகொண்டு
இருக்கிறது.ஏகாதிபத்திய,உள்ளக சுரண்டல்களை
பாதுகாப்பது,சுரண்டல்களுக்கு எதிரான போராட்டங்களை
தடுக்கவும்,தணிக்கவும் சில திட்டங்களை செயல்படுத்துவதன்
மூலம் ஆட்சியதிகாரத்தை தக்க வைப்பது என்கிற
நடைமுறைகளை இனியும் தொடர முடியாத நிலை
ஆட்சியாளர்களுக்கு ஏற்படவே செய்யும் என்பதற்கான எல்லா
அடையாளங்களையும் காணக் கூடியதாகவே இருக்கிறது.



பெரும்பணக்காரர்கள் தவிர்த்த,உயர்நடுத்தர வர்க்கம்,நடுத்தர
வர்க்கத்தின் இருப்பு பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகாத
போதும்,ஏழை மற்றும இரண்டாம் நிலை நடுத்தரவர்க்கம்,
விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் கீழே சென்று கொண்டிஇ
ருப்பதுவே யதார்த்தமாக இருக்கிறது.ரேசன் கடைகளை
நம்பியே வாழும் நிலைக்கு தமிழகத்தின் பெருவாரியான
உழைக்கும் மக்கள் சென்று கொண்டிருப்பதைக் காணக்
கூடியதாக இருக்கிறது.தமிழகவளங்களைச் சூறையாட,
சுற்றுச்சூழலை சீரழிக்க,உழைப்புச்சக்தியை மலிவு விலைக்கு
உறிஞ்ச,அணு உலைகளை அதிகரித்து மக்களின்
பாதுகாப்பை அபாயதுக்குள்ளாக்க எங்களை அனுமதியுங்கள்,
இருக்க இடமும்,உண்ண உணவும் தருகிறோம் என்பதே
ஆளும் வர்க்கத்தின் பேரமாக இருக்கிறது.சிறைகளில்
பராமரிக்கப்படும் கைதிகளின் நிலையில்,தமிழக உழைக்கும்
மக்களை வைக்க விரும்பும் அரசுக்கு எதிராக,பெரியாரின்
சுயமரியாதை மரபை உயர்த்திப் பிடிப்பதே
இன்றைக்கு அவசியமாக இருக்கிறது.

தமிழ்த்தேசியத்தை நோக்கி - 3

இந்து மத ஒழிப்பில்லாமல் சாதி ஒழிப்பு சாத்தியமில்லை என்ற முடிவுக்கு
இயல்பாக வந்து சேர்ந்ததைப்போலவே,இந்து மத ஒழிப்புக்கு இந்திய
தேசிய ஒழிப்பும் அத்தியாவசியமானது என்று புரிந்துகொண்டதன்
வெளிப்பாடாகவே பெரியாரின் தமிழ்த்தேசியகோரிக்கையை பார்க்க
முடியும்.பெரியாரைப் பொறுத்தவரை அடையாள அரசியலை முன்
நிறுத்தி அரசுகளிடம் இருந்து சாத்தியமான நலன்களைப் பெறுவது
என்பதை மட்டும் இறுதி இலட்சியமாக என்றைக்கும் முன்நிறுத்தியது
இல்லை.அதே நேரம் அரசுகளிடம் இருந்து பார்பனரல்லாத சமூகங்கள்
பெறவேண்டிய சாத்தியமான,அத்தியாவசியமான உரிமைகளைப்
பெறுவதற்க்கான போரட்டங்களின் தேவையை குறைத்து
மதிப்பிட்டவருமில்லை.வர்க்கப்போராட்டத்தின் பெயரால்,
பார்பனரல்லாத சமூகங்கள் பெறக் கூடிய உரிமைகளைக் கூட,
கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைமைகளில் இருந்த பார்ப்பனர்கள்
வர்க்கப்போராட்டத்தின் பெயரால் தடுப்பதாக கருதியதன் பின்னனியில்
பெரியார் கூறிய கருத்துக்களை,கம்யூனிஸ இலட்சியங்களுக்கு
எதிரான அவரது கருத்துக்களாக பொதுமைப்படுத்தி புரிந்துகொள்வது
சாத்தியமற்ற ஒன்றாகும்.

பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு,சாதியொழிப்பு நோக்கங்களுக்காக மொழிவாரி
மாநிலங்கள் பிரிவினைக்கு பின்பாகவும் திராவிட அடையாளத்தை
பெரியார் முன்நிறுத்தியிருந்தாலும்,தமிழர்களின் நலன்களுக்கு எதிராக
இந்திய அதிகாரவர்க்கம் எடுக்க முனையும் எந்த நடவடிக்கையையும்
எதிர்த்து முதலில் எழும் குரல் பெரியாருடையதாகத்தான் இருந்தது.
சாதியொழிப்பு,பெண் விடுதலை,சமூக விடுதலைச்செயல்பாடுகளை,
தேசியவிடுதலைக் கோரிகையோடு இணைத்து வைத்ததன் மூலமாக,
தேசிய இன வரலாற்று வளர்ச்சிப்போக்கின் அடுத்தகட்டத்துக்கு
தமிழகம் முன்னேற வழிகாட்டி விட்டுச் சென்றார் பெரியார்.மீண்டும்
பெரியார் தேசியவிடுதலைக்கோரிக்கையை எழுப்ப,அவரிடமிருந்து
பிரிந்து சென்றவர்கள் தமிழகத்தின் பார்ப்பனர்களுடன் செய்துகொண்ட
சமரசங்களும் ஒரு காரணமாக இருந்திருக்க கூடும்.தமிழகத்தில்
பார்ப்பனியத்துடன் அண்ணாவின் சமரசம் என்பது அதன்
அடுத்தகட்டமாக,பார்ப்பன,பனியா,நலனுக்கான இந்திய அதிகார
வர்க்கத்தோடும் சமரசத்தில் முடிந்ததை தன் வாழ்நாளிலேயே
கண்டவர்தான் பெரியார்.மீண்டும் தேசிய விடுதலைக் கோரிக்கையை
கையிலெடுத்து தீவிரமாக பெரியார் குரல்கொடுக்க ஆரம்பித்ததன்
பின்னனி இதுவாகவே இருக்கக் கூடும்.பெரியாரின் மறைவோடு
தமிழ்ச்சமூகம் தேக்கத்தை அடைந்தது என்கிற யதார்த்தத்திலிருந்தே
நாம் மீண்டும் பேசத் துவங்கவேண்டி இருக்கிறது.

பெரியாருக்குப் பிறகான திராவிட இயக்கத்தின் தலைமை என்பது
சாதியொழிப்பு,மற்றும் தேசிய விடுதலைக்கான போராட்டங்களில்
பெரியாரின் தொடர்ச்சியை முற்றாக இழந்து,பகுத்தறிவு,இட
ஒதுக்கீடு,அரசுகளிடம் இருந்து உரிமைகளைப் பெறுவது
என்பதோடு தனது எல்லையை சுருக்கிகொண்டதே வரலாறாக
இருக்கிறது.தமிழ்த்தேசிய உணர்வு என்பது ஏறக்குறைய
தமிழகத்தின் பொதுவெளியில் கைவிடப்பட்ட நிலையை
அடைந்தது என்றே கூறிவிடலாம்.ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள
உழைப்பைச் சுரண்டிக்கொண்டு உழைத்தவனுக்கு,ஐம்பது ரூபாய்
கொடுக்கும் முதலாளியின் பாத்திரத்தை ஆட்சியதிகாரத்தின்
தலைமையில் இருந்துகொண்டு வகிக்க ஆரம்பித்தார் அண்ணா.
சாதி ஒடுக்குமுறை,முதலாளித்துவச் சுரண்டல் இரண்டின்
தாக்கங்களும் மிகக் கடுமையாக தமிழகத்தின் உழைக்கும்
மக்கள் மீது பாதிப்பைச் செலுத்துவதை தடுக்கும் அரைகுறைத்
திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தங்களது
ஆட்சியதிகாரத்தை தக்க வைத்துக்கொள்வது என்பதே
அன்றிலிருந்து இன்றுவரை திராவிட கட்சிகளின் வரலாறாக
இருந்து வருகிறது.அந்தப்போக்கிலும் ஜெயலலிதாவின்
ஆட்சிக்காலங்கள் விதிவிலக்கானவையே.

பெரியாரால் உருவாக்கப்பட்டிருந்த ஒரு சரியான தேசிய விடுதலை
போராட்டக்களத்தை அபகரித்து கொண்டவர்கள் அல்லது திசை
திருப்பியவர்களாகவே திராவிட கட்சிகளை கருத முடியும்.
திராவிடர் கழகத்திலும் பெரியாரின் கொள்கைகளை தங்களின்
வாழ்வில் நேர்மையாக பின்பற்றிக்கொண்டு இருந்த தோழர்களை
மட்டுமே நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.பெரியாருக்குப்
பிறகான திராவிட இயக்கத்தின் தலைமையும் கூட போதுமான
அளவு சாதியொழிப்புக்கான செயல்பாடுகளை
முன்னெடுத்திருக்கவில்லை என்பதே யதார்த்தமாக இருந்தது.

அதன் காரணமாக தலித்துகள் தங்களுக்கான அடையாள அரசியலின்
கீழ் தங்களை அணிதிரட்டிக்கொள்ள வேண்டிய தேவை எழுந்தது
என்பதையும்,தொன்னூறுகளுக்கு பிறகான தலித்திய அரசியல்
வளர்த்தெடுத்த சுயமரியாதை,மற்றும் அரசியல் அணிதிரட்டல்
வேலைகள் ஆரோக்கியமான ஒன்றாகவே துவக்கத்தில் இருந்து
வந்தன என்பதும் நாம் அறிந்ததுதான்.வழக்கம்போலவே
சமரசங்களுக்கு சென்று,தங்களின் கீழ் திரண்டிருக்கும்
மக்களின் நலன்களுக்கு விரோதமாக தங்களை நிறுத்திக்கொண்டு
அந்த மக்களையே சுரண்டுவது என்கிற அமைப்புகளின் பொதுவான
இயங்கியலுக்குள்,தலித்திய இயக்கங்கள் செல்லத் துவங்கி
இருக்கின்றன என்பதே நிகழ்காலமாக இருக்கிறது.தலித்திய
அடையாளத்துடன் தேசிய இன அடையாளம் பற்றிய
தன்னுனர்வையும் தமிழகத்தில் இயங்கும் தலித்திய இயக்கங்கள்
சிறிதளவு வளர்த்திருக்கின்றன என்பது,வர்க்க அடிப்படையிலான
தேசிய விடுதலைக்காக முயற்சி செய்பவர்களைப் பொறுத்தவரை
ஒரு வரவேற்கத்த அம்சம்தான்.

தமிழகத்தின் பொதுவெளியில் இருந்து கைவிடப்பட்ட தேசிய உணர்வு,
தமிழ் அடையாளம் பற்றிய விழிப்புணர்வை,தமிழகத்துக்கு மீட்டு
கொடுத்தது என்பதுகளுக்குப் பிறகான ஈழ ஆதரவு போராட்டம்தான்.
பொதுவெளியில் அகற்றபட முடியாத ஒன்றாக வளர்ந்திருந்த இந்திய
உணர்வை அகற்றுவது சாத்தியமே என்கிற நம்பிக்கையை
வளர்ப்பதாகவே சமீப காலங்களில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக
நிகழ்ந்த போராட்டங்கள் அமைந்திருக்கின்றன.பெரியாரின்
கொள்கைக்கும்,சாதியொழிப்பு போராட்ட மரபுக்கும் தொடர்ச்சியாக
திராவிடர் கழகத்தில் இருந்து வெளியேறிய தோழர்களால்
ஆரம்பிக்கப்பட்ட பெரியார் திராவிடர் கழகம் தமிழகத்தின்
பொதுவெளியில் செயல்பட துவங்கி இருப்பதும்,பெரியாரின்
வழியில் போராட்டங்களை முன்னெடுக்க ஆரம்பித்ததிருப்பது
ஆறுதலிக்ககூடியாதவே இருக்கிறது.