Wednesday, September 28, 2011

கவிதை

கையெதிரே
கிடக்கின்றன
கலைத்துப் போடப்பட்ட
சீட்டுகள்


எனதல்லாதவை
எல்லாம்


வன்மங்களின்
மாயை களத்தில்

அரிச்சுவடியும்
அறியாதவன்
ஆடுவதென்பது....


உபேக்சா
என்றான்
புத்தன்


உதவாக்கரை
என்கிறது
ஊர்

கவிதை

எட்டவே இருக்க
வேண்டுமெனக்கு
வெளிச்சங்கள்


எதில் தள்ளிவிடுவது
இந்த பகல்களை


வான்காவின்
பரிதிக்கெதிராய்
வரித்துகொள்கிறேன்


உலகின்
முதல்
போதையை

கவிதை

புளிப்பு மிட்டாய்கள்


ஆற்ற ஆற்ற வரும்
பால் நுரை


ஒரு அழுமூஞ்சி
பொம்மை


கொஞ்சம்
கோப்பி


ஒரு ரூபாய்
அல்வா


ஜங்கிள் புக்
மோக்ளிக்கு


சாக்காடுகள்
சமீபமாகின்றன

கவிதை

இன்னும் சில
கவிதைகள் எழுதலாம்



இருபத்தியோராம் நூற்றாண்டு
புரட்சிக்கு செயல்திட்டம்
வகுக்கலாம்



நிலையான புள்ளியொன்று
கிடைத்தால்
உலகை பிடித்தும்
ஆட்டலாம்



அடுத்தவேளை உணவு
மட்டுமல்ல
அந்நியமாதலும்
அவரின்
தயவுதான்

Monday, September 26, 2011

முரண் கவிதைகளில் இருந்து

விளையாட்டாய்
கிள்ளி வைத்த
சூனியக்காரி
ஓடிப்போனாள்
புனைவின்
அடவியில்



பேராவலில்
விரிந்த
விழிகளின்
மருட்சி


இமை களைந்து



சூன்ய புயலில்
பாலை
மணலெண்ணிக்
கொண்டிருப்பேன்

கவிதை

அருந்தக
அரவங்களின் சீறலில்
நடுக்குறும்
காலிக்குவளையில்
நிறையும் ஓர்
நீண்ட துயர்



வெண்
மஞ்சள் திட்டுக்கள்
மிதக்கும் நச்சுப்பொய்கையில்
படரும் எழுச்சியுற்ற
தீக்குறி



முடிவற்ற இரவில்
எறியப்பட்ட குவளை
சிந்தும்
வசந்தத்தின்
பனி நீர்

Saturday, September 24, 2011

கவிதை

விதிக்கப்பட்ட
அறைச்சுவர்களின்
அயர்வு
விழுங்கி
தீர்வதில்லை



தற்புணர்ச்சி
கடவின்
வெளிறிய
பிறழ்வுகள்



வியாபித்து நிற்கும்
விளங்காமையில்
கடைசி கல்லையும்
எறிந்த
பின்......

Monday, September 5, 2011

கவிதை

அழி ரப்பரால்
அழித்துக்கொண்டிருக்கிறார்கள்
உடலை
அனாவசிய சிறுமிகள்


கையிருப்பின்
செயற்கை கன்னித்திரைகளை
மறுத்து
நிற்கும்
நீலப்பறவை

கவிதை




இரவில்
முன்னால் விழும்
நிழலில் மட்டுமே
நிகழ்கிறது என்
முன்னேற்றம்


அதனாலென்ன


எங்களுக்கும் இதயமிருக்கிறது
என்பவர்களில் இல்லை
நான்

கவிதை




தவிர்க்க விரும்பிய
வழியில்
இலக்கை சந்திக்கலாம்


தவறான நிலையத்தில்
இறக்கிவிடப்பட்ட
பயணி

Saturday, September 3, 2011

கவிதை



என் இருத்தலுக்கான
சான்றிதழில்
கையொப்பமிட்டுத் தந்தது
காற்று

கழுதைகள் கால்களிடையே
கை நழுவி வீழ்ந்தது
அது



முன்பக்கம் சென்றால்
கடிக்கின்றன
பின்பக்கம் சென்றால்
உதைக்கின்றன


அதை அவைகளே
வைத்துக்கொள்ளட்டும்

அடுத்த நூற்றாண்டு
வரை

Friday, September 2, 2011

கவிதை




கனவில் வரும்
பிணம்
காசைக்
கொண்டுவரும்
என்றது ஆருடம்


என் கனவில்
என்
பிணம்

கவிதை


ஏன் எப்போதும்
திறந்திருக்கின்றன
எங்களுக்கான
வதைகூடங்கள்


ஏன் இன்னும்
எரிக்கப்படுகின்றது
எங்கள்
நிலமும்
உடலும்


எப்போதோ
நிறைந்துவிட்டது
எஜமானர்களின்
ஏழாவது ஜாடியிலும்
தங்கம்..

,கவிதை,

முன்நிலா பொழுதுகளில்
முயங்குதல் சப்தங்களில்
அதிரும் காற்றில்
சிலிர்க்கும்
உலர் நிலத்தின்
ஒற்றை நாணல்


ஒரு துளி நதியின்
பிரவாகம் பருக
திணறும்
பால்வெளி


சபிக்கப்பட்ட
சார்வாகனின்
பாதங்களில்
முடியும்
முடிவுறா
பாதைகள்...

Thursday, September 1, 2011

கவிதை


மழை நேர வாசிப்பின்
பக்கங்களில் எரியுமென்
யாக்கை


உதிரும்
சிகரெட் சாம்பலில்


தணிந்து தவழ்ந்து
தார்சாலை திவலைகளில்
தக்கை மீது தவிக்கும்


ஓர் துளி
நெருப்பு