Friday, January 22, 2010

தமிழ்த்தேசியத்தை நோக்கி - 2

தமிழகத்தில் தமிழ்தேசியம் என்கிற கோரிக்கையும்,தமிழக
விடுதலைக்கான போராட்டங்களும்,பெரியாரிய வழிகாட்டல்
மூலமாக மட்டுமே ஜனநாயகபூர்வமானதாகவும்,அறத்தின்
அடிப்படையில் அமைந்ததாகவும் நிகழ முடியும்.தமிழக
விடுதலைக்கோரிக்கையை,தமிழ்நாடு தமிழருக்கு என்கிற
முழக்கத்தின் வாயிலாக 1938 ஆம் ஆண்டிலேயே
எழுப்பியவர்,பெரியார்,பிறகு ஐம்பதுகளின் மத்தியிலும்
தனது வாழ்நாளின் இறுதி கட்டங்களுக்கு சில காலம்
முன்பாகவும் தனித்தமிழ்நாடு என்கிற கோரிக்கையை
பெரியார் எழுப்பி இருக்கிறார்.பெரியார் தேசிய
கோரிக்கையை அவ்வப்போது தற்காலிகமாக நிறுத்திக்
கொண்டதையும் நாம் கவனிக்க வேண்டும்.பெரியாரை
சரியாக புரிந்துகொண்டால்,தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தபட்ட
வகுப்புகளில் இருந்து கல்வி கற்ற,சிந்திக்கும்,போராட
வாழ்வியல் அடித்தளம் கொண்டவர்களை (மார்க்சிய
மொழியில் சொன்னால் குட்டிமுதலாளித்துவ பிரிவினரை)
உருவாக்கவே ஆளும் வர்க்கங்களுடன் உறவும்,முரணும்
கொண்டு செயல்பட்டு வந்தார் என்பதை நாம் உணர முடியும்.
பாட்டாளி வர்க்க ஆசான் மார்க்ஸே குட்டிமுதலாளித்துவ
வாழ்நிலையில் இருந்து வந்தவர்தானே.பார்ப்பனர்கள்
மட்டுமே அறிவுத்துறையில் இருந்த சமூக அமைப்பில்,
பெரியாரின் சமரசங்களை அந்த வரலாற்றுச்சூழலில்
வைத்து மட்டுமே சரியாக மதிப்பிட முடியும்.



சாதி ஒழிப்பு,பெண்ணிய விடுதலை,பகுத்தறிவு,பார்ப்பன,
பார்ப்பனிய எதிர்ப்பு என்று,பெரியாருக்கு இருக்கும்
பன்மைத்துவமான செயல்பாடுகளை முழுக்க இங்கே
விவாதிப்பது நமது நோக்கமல்ல.ஒரு சரியான தேசிய
விடுதலைக்கண்ணோட்டம் பெரியாருக்கு தொடர்சியாக
இருந்து வந்ததை சுட்டிக்காட்டுவதே நம் நோக்கம்.
எந்த ஒரு விடயத்தையும் யார் கைகளில் எடுக்கிறார்கள்,
அதன் நோக்கம் என்ன என்பதன் அடிப்படையிலேயே
பெரியார் ஆதரவையும்,எதிர்ப்பையும் நிகழ்த்தி வந்தார்.
மதம் தொடர்பான பிற்போக்குதனமான இலக்கியங்கள்,
பெண்ணடிமைத்தனத்தை போற்றும் கருத்துகளை மொழிப்
பாதுகாப்பு என்கிற பெயரில் தக்கவைக்க முயற்சி செய்த
போது எதிர்ப்பையும்,அதே நேரத்தில் ஒரு மனிதனுக்கு
தலையாய பற்றாக இருக்க வேண்டியது மொழிப்பற்று
என்று கூறி ஆதரவையும் தெரிவித்திருக்கிறார் பெரியார்.



மொத்தத்தில் நாகரிகத்தையும்,முன்னேற்றத்தை நோக்கிய
கலாச்சார,பண்பாட்டு,சமூக,அரசியல் நிகழ்வுகளை
துவக்கி வைத்தவராகவும்,நிகழ்த்தியவராகவும்,ஆதரித்த
வராகவும் பெரியார் இருக்கிறார்.அதே நேரம் அந்நிய
ஏகாதிபத்திய அரசுகள்,இந்திய பார்ப்பன,பனியா
அதிகார வர்க்கத்தின் நலனுக்காக உருவாக்கப்பட்ட
இந்திய கட்டமைப்பில் இருந்து வெளியேறுவதே
தமிழர்களுக்கு நிரந்த விடிவைத் தரும் என்கிற
முடிவுக்கு இயங்கியல் ரீதியாக வந்தும் சேர்கிறார்.
தனது இறுதிக்காலங்களில் தனிதமிழ்நாட்டு
கோரிக்கைகாக தீவிரமாக பெரியார் குரல் கொடுக்க
ஆரம்பித்ததை நாம் கவனத்தில் எடுக்க வேண்டும்.
தான் விரும்பியவாறு சுயசிந்தனை கொண்ட,பகுத்தறிவு,
சாதிய ஒழிப்பில்,பெண்விடுதலையில் நேர்மை என்று
முற்போக்கு எண்ணம் கொண்ட தளத்தை உருவாக்கி
கொண்டதன் பின்னனியிலேயே மீண்டும் பெரியார்
தேசியக் கோரிக்கைக்கு அழுத்தம் தர துவங்கினார்
என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.அரசின்,அதிகார
வர்க்கத்தின் இயல்பு பற்றி பெரியாருக்கு வர்க்க
கண்ணோட்டம் தொடர்சியாக இருந்து வந்து இருப்பது
அவரது எழுத்துக்களில் இருந்தே நம்மால் அறிய முடியும்.
பெரியார் இன்னும் சற்று காலம் உயிரோடு இருந்து
போராடியிருந்தால் ஈழத்துக்கு முன்பாகவே தமிழ்
நாடு விடுதலை அடைந்திருக்கலாம் ஒருவேளை.



சாதிய ஒழிப்புக்கும் தேசிய விடுதலைக்கும் உள்ள
தொடர்பை பெரியாரின் வார்த்தைகளிலேயே கீழே
பார்க்கலாம்.
நமது தமிழ்நாடு பிரிந்தே ஆக வேண்டும்.சாதி ஒழிப்பு
காரியத்துக்கு ஒரு திட்டம் என்கிற வகையில் நம்
நாட்டை நாமே ஆள வேண்டும்.நமக்கு எதற்காக
டெல்லி?பத்து ஆண்டுகளாக பார்த்தாகிவிட்டது,நாம்
இரண்டு பேர் கூப்பாடு போடுகிற நிலை
இல்லாவிட்டால் உயர்ந்த பதவிகள் அத்தணையும்
பார்ப்பானிடம்தான் இருக்கும் - 1956 குடந்தை
சொற்பொழிவில்.



மேலே உள்ள பெரியாரின் கருத்து தெளிவாக உள்ளது.
இந்திய,இந்துவ கட்டமைப்பில் இருந்து தமிழகம்
நீங்கும்போது சாதியத்தை எளிதாக ஒழிக்க முடியும்
என்பது ஒன்று.மற்றது அந்த நீண்டகால திட்டத்துக்கு
முன்பாக அதிகார வர்க்கத்தின் பதவிகளில் தமிழர்கள்
தங்களுக்கான பங்கை பெறுவதன் ஊடாக,
சாத்தியமான நலன்களை தாழ்த்தப்பட்ட,பிற்படுத்த
வகுப்புகளுக்கு பெறுவது.பார்பனர்கள் ஆதிக்கத்தில்
இருந்த சமூகத்தில் பெரியாரின் சமரசம் எதற்காக
என்று ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.
இன்னும் வரும்....

தமிழ்த்தேசியத்தை நோக்கி - 1

2008 ஆம் ஆண்டின் மத்தியில் துவங்கி சென்ற வருடம்
முழுதும் நீடித்திருந்த அரசியல் எழுச்சி தமிழகத்தில்
ஏறக்குறைய தேக்கநிலையை அடைந்திருக்கிறது.ஈழத்
தமிழர்களுக்காக நிகழ்ந்த போராட்டங்கள் அவர்களுக்கு
பலன் அளிக்காமல் போனதின் வேதனை ஒருபுறம்
இருந்தாலும்,அந்த எழுச்சி தமிழக தமிழர்களுக்காவது
பயன்படக் கூடும் என்ற எதிர்பார்ப்பும்,கனவாகவே
போய் விட கூடிய சூழல் விரக்தியை நோக்கியே
நம்மை தள்ளுகிறது.தமிழகத்தின் முதுகெலும்பற்ற
இலக்கியவாதிகள்,தமிழ்ச் சான்றோர்கள் கூட்டம்
கருணாநிதியின் செம்மொழி மாநாட்டில் இடம்
பிடிக்க அலையும் அவலம் முகத்தில் அறைகிறது.
கோபத்துடன் ஒரு மூலையில் அமர்ந்து சிந்திக்க
ஆரம்பித்தால் மனிதம் மீதே நம்பிக்கை அற்றுப்
போகிறது.மனதின் வலிகளை பதிவெழுதி
இறக்கி வைத்து விடலாம்.வேறென்ன செய்து
விட்டேன் இதுநாள்வரை? அரசியலற்ற மனிதனாக
வாழ்ந்திருந்தால் குறைந்தபட்சம் இயலாமையின்,
சுவடுகளை இதயத்தில் சுமந்து அலையும் சிரமம்
இல்லாமல் போயிருக்க கூடும்தானே?


சமீப காலங்களில்,ஈழம் தொடர்பான கட்டுரைகளில்
எல்லாம் காந்தியின் தேசம் கொன்றதே என்கிற
ஆதங்கம் எழுப்பபட்டபோதெல்லாம்,காந்தியின்
தேசம் கொல்லவே செய்யும் என்கிற உண்மை
அழுத்தமாக பதிவு செய்யப்படாமல் போனதன்
விளைவைக் கண்டு சிரிக்கவே தோன்றியது.
பகத்சிங்கை கொன்றவர்களுக்கு துணைபோன
நபரின் அரசியல் வாரிசுகளிடம் நாம் வேறு
எதை எதிர்பார்க்க முடியும்? அமைதியாக
சிந்தித்துப்பார்த்தால் இந்தியாவின் புரட்சிகர
ஜனநாயக சக்திகளிடமிருந்து ஈழத்தமிழர்கள்
அடைந்ததென்ன? சில கட்டுரைகள்,சிங்கள
தேசத்தின் அதிபருக்கு மனித உரிமைகளை
மதிக்கக் கோரி ஒரு கடிதம்,மனித உரிமை
தளத்திலான சில இயக்கங்களின் பங்களிப்பு
மட்டும்தானே? வருத்தமோ,குறை கூறலோ
அல்ல இது,யதார்த்தம் இப்படியாகத்தான்
இருக்கிறது.


சமீப நாட்களில் இந்திய ஆங்கிலத் தொலைக்காட்சிகள்
திரும்பத் திரும்ப ஒரு காட்சியை ஒளிபரப்பிக்கொண்டு
இருந்தன.திருநெல்வேலி அருகே காவல்துறை
அதிகாரி தாக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டு
இருப்பதை இரண்டு தமிழக அரசின் அமைச்சர்கள்
வேடிக்கை பார்ப்பதை காட்டி அவர்களை கோழைகள்,
என்றும் மனிதநேயம் அற்றவர்கள் என்றும் காட்டமாக
விமர்சித்துக்கொண்டு இருந்தார்கள்.இதே திராவிட
முன்னேற்ற கழகத்தின் தலைவரும்,அமைச்சர்களும்
ஆயிரக்கணக்கில் ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதை
வேடிக்கை பார்த்துகொண்டு இருந்தபோது வராத
கோபம் இவர்களுக்கு இப்போது மட்டும் எங்கிருந்து
வந்தது.ஈழத்தில் படுகொலைக்கு உள்ளாகும்
தமிழர்களை காப்பாற்றக்கோரி தமிழகமே குரல்
கொடுத்தபோது கண்களையும் காதுகளையும் மூடிக்
கொண்ட இந்த ஊடக கோழைகள் மனிதநேயம்
பற்றி பாடம் எடுப்பதை எவ்வாறு புரிந்துகொள்வது?


பார்பன,பனியா அதிகாரவர்க்கம்,அதன் எடுபிடி ஊடகங்கள்
இயல்பாகவே தமிழர்களுக்கு எதிரான பகையை
வெளியிடுவதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.அதே
வேளையில் புரட்சிகர,முற்போக்கு சக்திகளாக இந்திய
நிலப்பரப்பில் செயல்படுபவர்களும் பார்பபனியவாதிகளாக
இருக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க
இயலாமல் இருக்கிறது.ஈழத்தமிழர்கள் மீதான
ஒடுக்குமுறையின்பால் இந்திய பெருநிலப்பரப்பின் சகல
தரப்புகளிலும் நிலவிய,நிலவும் அலட்சியம் அந்த
எண்ணத்தையே உறுதி செய்கிறது.அங்கீகரிக்கப்படாத
ஒரு தேசமாக இந்தியாவில் தமிழகம் இருப்பதாகவே
இந்திய அதிகாரவர்க்கம் கருதுகிறதோ என்றே எண்ண
வேண்டி இருக்கிறது.


இயல்பான வளர்ச்சியை நோக்கி சென்றிருக்க வேண்டிய
இந்தியாவின் தேசிய இனங்கள்,இந்திய நாடு என்கிற
கட்டமைப்புக்குள் வலுக்கட்டாயமாக திணிக்கபட்டதன்
விளைவுகளை நாம் இன்று கண்கூடாக பார்க்கிறோம்.
சமீபத்திய உதாரணம் தெலங்கானா.ஏகாதிபத்திய,
பார்ப்பன,பனியா வர்க்கங்களின் நலன்களுக்காக
உருவாக்கப்பட்ட இந்திய நாடு என்கிற கட்டமைப்பு
மொழிவழி அமைந்த தேசங்களாக,இந்திய தேசிய
இனங்கள் உருவாவதை தடைசெய்யும் விதத்தில்
அமைந்திருப்பதாலேயே பிராந்திய உணர்வுகள்
தலை தூக்குகின்றன.தெலுங்கு பேசும் ஆந்திர
மக்கள் ஒரு சோசலிச தேசிய அரசின் கீழ் ஒன்று
திரட்டப்பட்டு,சுயசார்பு தேசிய பொருளாதாரம்
கட்டமைக்கப்பட்டிருந்தால் ஒரு தேசிய இனத்துக்கு
உள்ளேயே பிளவுகள் தோன்றி இருக்காது.ஆந்திர
தேசியம் உருவாதையும் தேசிய பொருளாதாரம்
உருவாவதையும் தடை செய்யும் கருவியாக இந்திய
அதிகாரவர்க்கத்தின் ஆட்சியும்,ஏகாதிபத்திய,
உள்ளக சுரண்டல்காரர்களின் சந்தை நலனுமே தடை
காரணிகளாக இருக்கின்றன.இந்திய தேசியத்தின்
பிடியில் இருந்து விடுபட்டு ஆந்திர உழைக்கும்
மக்கள் தங்கள் சொந்த தேசிய பொருளாதார
கட்டுமானத்துக்காக போராடுவதே,நீண்டகால
நோக்கில் சரியான இலக்காக அமைய முடியும்.
தெலங்கான வேறு ஒரு விடயத்தையும் நமக்கு
உணர்த்துகிறது.வரலாற்று வளர்ச்சியின் வேறு
வேறு கட்டங்களில் இருக்கும் இந்திய தேசிய
இனங்கள் தங்கள் அரசியல் சமூக விடுதலைக்காக
சொந்த பாதையை அமைத்துக்கொள்ள வேண்டும்
என்பதுதான் அது.அந்த வகையில் தமிழ்நாடு,
தமிழ்த்தேச விடுதலையை நோக்கியே
நகர வேண்டி இருக்கிறது.


இன்னும் வரும்....

புரட்சிகர முகமூடி + பார்ப்பன திமிர் = புதிய ஜனநாயகம்

தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும் அவ்வப்போது நானும் ரௌடி
நானும் ரௌடி என்று வடிவேலு பாணியில் நாங்களும்,நக்சல்
பாரிகள் என்று காட்டிக்கொண்டிருக்கும் மக்கள் கலை இலக்கிய
கழகத்தினரின் செயல்பாடுகளை அம்பலப்படுத்திக்கொண்டு
வந்திருக்கிறோம்.அந்த வகையில் தமிழகத்தின் ஒரே புரட்சிகர
இதழான ‘புதிய ஜனநாயகத்தின்’ ஜனவரி இதழில் இருந்து
சில விசயங்களை விமர்சனத்துக்கு எடுத்துக்கொள்ளலாம்.
கருணாநிதி பாணியில் கேள்வி பதில் அறிக்கை போல,
இதழின் கட்டுரைகளில் இருக்கும் பத்திகளின் மேல் நம்
கருத்துக்களை பதிவு செய்யலாம்.

முதலில் எடுத்துக்கொள்கிற கட்டுரை,நேபாளம்: கிளர்ந்தெழும்
மக்கள் திரள் போராட்டங்கள்,கந்தலாகி வரும் இந்திய அரசின்
சதிகள் என்கிற கட்டுரையில் உள்ள முரண்பாட்டின் மீது
கவனம் செலுத்தலாம்.ஈழ விடுதலைப்போரை அழிக்க
இந்தியா எவ்வாறு செயல்பட்டதோ அப்படியே நேபாள
புரட்சியை அழித்தொழிக்க கிளம்பியுள்ளதாகவும்,இந்திய
ஆதரவுடன் நேபாள ராணுவம் மாவோயிஸ்ட் அழிப்பு போரை
தொடுக்கும் அபாயம் நிலவுகிறது.அத்தகைய போர்த்தாக்குதல்
நிகழ்ந்தால் அதை எதிர்கொண்டு முறியடிக்கவும்,அந்நிய
தலையீடுகள் இன்றி நேபாள மாவோயிஸ்ட்டுகள் மக்கள்
கூட்டுக் குடியரசை கட்டியமைக்க தயாராகி வருகிறார்கள்
என்று எழுதுகிறார்கள்.

முதல் விசயம் மீண்டும் ஆயுதப்போரில் தாங்கள் இறங்க
முடிவு செய்திருப்பதாக நேபாள மாவோயிஸ்ட்டுகள் எந்த
அறிவிப்பையும் வெளியிடவில்லை.இந்திய அமெரிக்க
தலையீட்டையும் விரிவாதிக்கத்தையும் எதிர்த்து போர்
செய்யக் கூடிய அளவுக்கு தங்களிடம் பலம் இருப்பதாக
மாவோயிஸ்ட்டுகள் கருதியிருந்தால் மக்கள் திரள்
நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து பொம்மை
அரசின் செயல்பாடுகளை முடக்குவதை நோக்கி நகர்ந்து
இருக்க மாட்டார்கள்.நேபாளத்தின் தேசிய பொருளாதார
கட்டுமானத்தை முழுக்க கைப்பற்ற விரும்பும் அந்நிய
சக்திகளுக்கு எதிராக,அவர்களின் உள்கட்டுமானங்கள்,
உற்பத்திசார் தொழிழ்களை தவிர்த்த முதலீடுகளை
தடுத்து நிறுத்துவதற்காக மக்கள் திரள் போராட்டங்கள்
மாவோயிஸ்டுகள் முன்னெடுத்திருக்கிறார்களே தவிர,
மரபுரீதியான புரட்சியை நோக்கி முன்னேறுகிறார்கள்
என்று கருத எந்த நியாயமும் இல்லை.மேலும்
உலகெங்கிலும் உள்ள புரட்சிகர ஜனநாயகசக்திகளை
மட்டுமே நேபாள மாவோயிஸ்ட்டுகள் நம்புவதாகவும்
கதை அளந்திருக்கிறார்கள்.விடுதலைப்புலிகள்
போல இந்திய ஓட்டுகட்சிகளிடம் உறவுகொண்டு
காரியங்களை சாதித்துக்கொள்ள மாவோயிஸ்டுகள்
விரும்பவில்லையாம்.

உலகெங்கிலும் உள்ள ஜனநாயக புரட்சிகர சக்திகளோடு
தொடர்பில் இருந்தாலும் அவைகளின் பலம் பற்றிய
மிகச் சரியான மதிப்பீட்டை கொண்டு இருப்பதாலேயே
நேபாள மாவோயிஸ்ட்டுகள் மீண்டும் ஆயுதங்களை
கைகளில் எடுக்காமல் இருக்கிறார்கள்.தவிர பாரதிய
ஜனதா கட்சித்தலைவர்களை நேபாள் மாவோயிஸ
கட்சித்தலைவர்கள் சந்தித்ததைப் பற்றி கமுக்கமா
மறைத்து எழுதும் இவர்கள் புலிகளுக்கு எதிராக
வனமத்தை கக்குவது ஏனோ? நொடிக்கொருதரம்
போலிக்கம்யூனிஸ்டுகள் என்று இவர்கள் விளிக்கும்
சி.பி.ஐ. சி.பி.எம் கட்சிகளோடு கூடத்தான்
நேபாள மாவோயிஸ்டுகள் உறவுகொண்டு
இருக்கிறார்கள் என்பதை,சத்தமில்லாமல் கடந்து
செல்லும் இவர்களின் புரட்சிகர நேர்மை புல்லரிக்க
வைக்கிறது.நேபாள் தோழர்களின் முதுகுக்கு
பின்னால் ஒளிந்துகொண்டு,புரட்சிகர வேடம்
போடும் இவர்கள் மீண்டும் ஆயுதங்களை
எடுக்கும்படி தோழர்களுக்கு அறிவுரை சொல்லலாமே?
அதிகபட்சம் ஆறுமாதங்களுக்குள் அழிக்கப்பட்டுப்
விடுவார்கள்.சாதகமான நிலை இல்லாத நிலையில்
இங்கிருந்து,மரபுரீதியிலான போராட்டத்துக்கும்,
ஆயுதங்களை மீண்டும் கையில் எடுப்பதற்கும் நேபாள
தோழர்களை தூண்டுவதன் மூலம் அவர்களை அழிவை
நோக்கி தள்ள முயற்சிக்கிறார்கள் என்றே கருத
வேண்டி இருக்கிறது.

ஈழவிடுதலைப்போரின்,விடுதலைப்புலிகளின் பின்னடைவுக்கு
பிறகு மூன்று வெளியீடுகளைக் கொண்டு வந்தார்கள்
இவர்கள்,தெரிந்தே சொல்லப்பட்ட பொய்கள்,தர்க்க
முரண்கள்,வன்மம் எல்லாம் நிறைந்து கிடந்த அந்த
குப்பைகளில் ஒரு புத்தகத்தில் சொல்லப்பட்டு இருந்த
விசயத்தை படித்தபோது எதைக்கொண்டு சிரிப்பது
என்ற குழப்பமே வந்துவிட்டது.ஈழவிடுதலைப்போராளிகள்
தமிழகத்தில் செயல்பட துவங்கியபோது,அமைப்புகளோடு
இவர்கள் பேசி இந்திய விரிவாதிக்க நோக்கங்களை புரிய
வைக்க முயன்றார்களாம்,அதை போராளி இயக்கங்கள்
ஏற்காமல் போய்விட்டார்கள்,ஏனென்றால் நாங்கள் அந்த
நேரத்தில் பலம் இல்லாமல் இருந்தோம்,வளர்ச்சி
அடையாமல் இருந்தோம்,இப்போது வளர்ச்சி அடைந்து
விட்டோம் என்று போகிற போக்கில் சொல்லியிருந்தார்கள்.

தமிழகத்தைத் தாண்டி ஒரு கிளை கூட கட்ட இயலாத இவர்கள்,
வேலை நிறுத்த அறிவிப்பு வெளியிட்டால் ஏதோ இந்தியாவின்
முப்பது மாநிலங்களும் முடங்கிப்போகும்,என்கிற அளவுக்கு
பில்டப் கொடுப்பதற்கு மட்டும் குறைச்சல் இல்லை.இந்த அதி
உன்னத புரட்சியாளர்களை நம்பாமல் போனதால்தான் புலிகள்
வீழந்துவிட்டார்களாம்.ஷ் அப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே
என்று வடிவேலு பாணியில்தான் வசனம் பேச தோன்றுகிறது.
இந்தியாவிலோ,தமிழகத்திலோ ஆளும்தரப்புக்கு எதிராக
புரட்சி செய்யும்படியோ,போராடும்படியோ மக்களுக்கு
அறிவுரை சொல்வது,போராட்டத்தை ஏற்றுமதி செய்வது
எல்லாம் புலிகளின் வேலையாக இருக்க முடியாது என்கிற
அடிப்படை யதார்த்தம் கூட புரியாதவர்களிடம் பேசி என்ன
பலன்? ஒருவேளை மீண்டும் நேபாள மாவோயிஸ்டுகள்
ஆயுதபுரட்சியில்,இறங்கினால் இந்த உன்னத புரட்சியாளர்கள்
இந்தியாவில் இருந்து நேபாள அரசுக்கு செய்யப்படும் ஆயுத
உதவிகளை,தமிழகத்தில் முப்பது பேருடன் மாபெரும்
ஆர்பாட்டம் செய்து,இலங்கை அரசுக்கு செய்யப்பட்ட ராணுவ
உதவிகளை தடுத்தி நிறுத்தியதைப் போலவே தடுத்து
நிறுத்துவார்களா என்பதை சற்று பொறுத்திருந்துதான்
பார்க்க வேண்டும்.:)

எது பயங்கரவாதம் என்கிற தலைப்பில் 1986 ஆம் ஆண்டு
புதிய ஜனநாயகம் இதழில் வந்த கட்டுரையை மறுபடி
வெளியிட்டு இருக்கிறார்கள்.அந்த கட்டுரை பேசும்
அரசியலோடு நமக்குள்ள எல்லா முரண்பாடுகளையும்
பேச இது நேரமில்லை.அந்த நீண்ட கட்டுரையின் நடுவே
போகிற போக்கில் சொல்லப்பட்டு இருக்கிற விசயம்தான்
மிக முக்கியமாது.ரசிய சமூக ஏகாதிபத்தியம்
ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்துக்கொண்டு விடுதலை
இயக்கங்களுக்கெதிரான அரச பயங்கரவாத ராணுவத்
தாக்குதலை தொடுக்கிறது என்று எழுதப்பட்டு இருக்கிறது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் இருந்து நேரடியாக ஆயுத
உதவிகளைப் பெற்றும்,அமெரிக்காவின் வழிகாட்டுதலின்
படியே போரிட்டும் வந்த ஆப்கன் முஜாகிதீன்களை
விடுதலைப்போராளிகள் என்று விளிக்க முடிகிற இந்த
புரட்சிக்காரர்களுக்கு புலிகள் பாஸிஸ்டுகளாகவும்,
ஏகாதிபத்திய சார்பாளர்களாகவும் தெரிகிற கொடுமையை
என்னவென்று சொல்வது? மார்க்சிய புத்தகங்களில்
எழுதப்பட்டுள்ள விசயங்களை,கால் புள்ளி,அரைப்
புள்ளி கூட மாற்றாமல் விடுதலைப்புலிகள் கடைபிடிக்க
வேண்டும் என்று கோருகிற இந்த புரட்சியாளர்களுக்கு,
மார்க்சிய வழிகாட்டல் எதுவும் இல்லாமல்,பிற்போக்கு
இஸ்லாமிய ஆட்சி முறைக்காக போராடுபவர்கள்
விடுதலை இயக்கங்களாக தெரிவதன் மர்மம் என்ன?
ஈழத்தின் இறையான்மையை விலைபேசாமலும்,எந்த
சமரசத்துக்கும் உடன்படாமலும்,தங்கள் மீதான
இனபடுகொலையை தடுத்து நிறுத்த அமெரிக்க,மற்றும்
ஐரோப்பிய நாடுகளில் வாழும் புலம் பெயர்ந்த ஈழத்
தமிழர்கள்,மற்றும் அந்தந்த நாட்டு மக்களின்,தமிழக
தமிழர்களின்,போராட்டங்களை புலிகள் நம்பியதையே
ஏகாதிபத்தியசார்பு என்று ஒப்பாரி வைத்தவர்களின்
முகத்திரை வழக்கம்போலவே கிழிந்துவிட்டது.

இஸ்லாமியர்களின் ஓட்டுகளை பெறுவதற்காக சி.பி.எம்.
போன்ற கட்சிகள் பாலஸ்தீன மக்களுக்காக குரல்
கொடுப்பது நாம் அறிந்ததுதான்.ஒட்டு அரசியலுக்கு
வராத இவர்களுக்கு அப்பட்டமாக அமெரிக்கசார்பு
நிலையில் இருந்து போராடிய,ஆப்கன் இயக்கங்களை,
சரியான எந்த இலக்குமின்றி இன்றைக்கும் போராடிக்
கொண்டு இருக்கிற ஈராக்,ஆப்கானிஸ்தான் இயக்கங்களை
விடுதலை இயக்கங்களாக உயர்த்தி பிடிக்க வேண்டியதன்
பின்னனி விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய
விசயமாகவே தெரிகிறது.சரியான புரட்சிகர அரசியலின்
கீழோ,தமிழ்த்தேசிய விடுதலைக்கோரிக்கையின் கீழோ
முஸ்லிம்கள் இணைவதை தடுக்கும் முயற்சியாகவே
இவர்களின் செயல்பாடுகளை உணர முடிகிறது.
சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளை,அதிகாரவர்க்க
ஆதரவு நிலைப்பாடுகளை புரட்சிகர முகமூடியின் கீழ்
மறைத்துக்கொள்ளும் இவர்கள்,தலித்தியத்தையும்,
அடையாள அரசியலையும் போகிற போக்கில்
ஏகாதிபத்தியத்தின் கள்ளக்குழந்தை என்று(தலித் முரசின்
வர்க்காஸ்ரமம் என்கிற கட்டுரையில்) எழுதுவதை
பார்ப்பன திமிராக பார்க்க முடியுமே தவிர,புரட்சிகர
நிலைப்பாடாக கருத முடியாது.அதே நேரம் தலித்
முரசின் வலிந்து திணிக்கப்பட்ட கருத்தையும் நாம்
கண்டிக்க வேண்டும்.முற்போக்கு அரசியலிலும்,
மக்கள் நலனிலும் விருப்பம் கொண்டவர்கள் இந்த
இணைய புரட்சியாளர்களிடம் இருந்து தங்களை
விடுவித்துக்கொள்வதன் மூலம் மட்டுமே சரியான
அரசியலை கைக்கொள்ள முடியும்.