Thursday, November 19, 2009

பாசிசம்.தமிழ்தேசியம்.திராவிடம்.

பதிவின் தலைப்பில் குறித்திருப்பதைப் போலவேதான்
இன்றைக்கு தமிழ்தேசியம் என்கிற கருத்தியல் மற்றும்
கோரிக்கை பாசிசத்துக்கும்,திராவிடத்துக்கும்
இடையில் சிக்கிக் கொண்ட நிலையில் இருக்கிறது.
சமகால அரசியல் புரிதல்களோ,தத்துவார்த்த
வழிகாட்டுதல்களோ இல்லாதவர்கள் பாசிச
உள்ளடகத்துடன் தமிழ் தேசியக் கோரிக்கையை
கையில் எடுத்து செயல்பட துவங்கி இருக்கிறார்கள்.
மற்றோர் புறம் பெரியாரின் திராவிட அரசியலை
உயர்த்திப் பிடிக்கும் தோழர்களின் செயல்பாடுகள்,
இந்திய தேசிய விமர்சனம்,பார்ப்பன,பனியா இந்திய
அதிகார வர்க்கத்தை அம்பலப்படுத்தும் விதமாக
இருந்தாலும் அதை தேசிய இன விடுதலைக்
கோரிக்கையுடன் இணைக்கத் தவறுவதால் சரியான
வழிகாட்டிகளாக அவர்களாலும் மாற இயலாத
நிலையே இருக்கிறது.



இந்திய நிலப்பரப்பு முழுவதும் தாராளமய கொள்கைகள்
அமலாக்கப்பட்டதன் பின்னனியில் எழுந்த இந்துதுவ
பாசிசத்தின் கூறுகள் தமிழகத்தில் எழுந்த தேசிய இன
கோரிக்கையிலும் தனது அடையாளங்களை பதித்தை
நாம் கண்டு வந்திருக்கிறோம்.தங்களை மார்க்சிய
சார்பாளர்களாக சித்தரித்தகொண்டவர்களிடையேயும்
அந்தக் கூறுகள் காணப்பட்டதையும்,தமிழ்ச் சாதிகள்
என்றெல்லாம் பேச்சுகள் எழுந்ததையும்,நிலப்பிரபுதுவ
மன்னர் கால எச்சங்களை வீரம் என்று தூக்கிப்
பிடிக்கும் போக்குகளும் எழுந்து இன்றளவும் நீடித்து
கொண்டிருக்கின்றன என்பதையும் நாம் அறிவோம்.



காலப் போக்கில்,சரியான பார்வையைக் கொண்ட மார்க்சிய
வழிமுறையை,போராட்டப் பாதையை முன் வைக்கும்
ஏதேனும் ஒரு தமிழ் தேசிய அமைப்பு மக்கள் மத்தியில்
பரவலாக தனது செல்வாக்கைச் செலுத்த துவங்கும்போது
இந்தப் போக்குகள் களையப்பட்டு விடும் என்ற நம்பிக்கை
இருந்தது.இனியும் இருக்கிறது.



பெரியாரின் கொள்கைகளுக்கு வாரிசாக இருக்கிற பெரியார்
திராடவிட கழகத்தையும்,சீமானையும் மையப்படுத்தி
சில விசயங்களை நாம் பேச வேண்டி இருக்கிறது.
பெரியார் திராவிட கழகத்தாரிடம் நாம் எழுப்ப வேண்டிய
சில கேள்விகள் இருக்கின்றன.அவற்றில் அடிப்படையானது,
காலம் கடந்தாலும் பெரியார் தனது வாழ்வின் இறுதியில்
வந்து சேர்ந்த தமிழ் தேசிய இன விடுதலையின் ஊடாகவே
சாதிய ஒழிப்பை நிகழ்த்த முடியும் என்கிற பாதைக்கு
நீங்கள் வர இன்னும் எத்துனை ஆண்டுகள் எடுத்துக்கொள்ள
போகிறீர்கள்? தமிழ்நாடு தமிழருக்கே என்று தனது இறுதி
பேருரையில் பெரியார் பேசியதே வரலாறாக இருக்க
தமிழன், தமிழன்,என்று பேசுவது சரியல்ல என்று
பார்ப்பனர்களின் குரலாக பேசிக் கொண்டிருப்பது எவ்வாறு
சரியாக இருக்க முடியும்.



பெரியாரின் மரணம் என்கிற வரலாற்று சோகம் தமிழ் சமூக
வாழ்வில் நிகழ்ந்திராவிட்டால்,தமிழக விடுதலைக்காக
அவர் கட்டமைத்திருக்க கூடிய போராட்டங்களை அவரது
வாரிசுகள் என்ற முறையில் நீங்கள் செய்யப் போவது
எப்போது? பெரியாருக்கு பிறகான திராவிடர் கழக
அரசியல் என்பதையே,திராவிட கட்சிகளின் ஆட்சிகளுக்கு
வால் பிடிப்பதாக மாற்றிவிட்ட வீரமணியிடம் இருந்து
முறித்துக் கொண்டு வந்த நீங்கள் இன்னும் அதே திராவிட
கட்சிகள் சார்பு அரசியலையே தொடரப் போகிறீர்களா?



நம்மிடையே இருக்கும் சாதி மத வேறுபாடுகளை களைந்து
கொள்ள,தமிழர்கள் என்கிற அடையாளத்தை முன்நிறுத்த
கோரிய தோழன் முத்துக்குமார் வார்த்தைகள் உங்களுக்கும்
நினைவூட்ட வேண்டி வந்தது வருத்தம் அளிக்கிறது.
உண்மையில் பெரியார் வழியிலான போராட்ட முறை
தமிழ் தேசிய கோரிகையோடு இணக்கபட்டிருந்தால்
இன்றைக்கு தமிழ் தேசிய ஆற்றல்கள் மத்தியில் பரவ
துவங்கியிருக்கும் பாசிச சார்பான கருத்துகள் எழும்பியே
இருக்காது என்பதை உணர்கிறீர்களா?


சாதி ஒழிப்பையும்,சமூக நீதியையும்,தேசிய விடுதலைக்கு
முன் நிபன்தனையாக்கிய பெரியாரே,இந்திய தேசிய
கட்டமைப்பை புரிந்துகொண்டு தமிழ் தேச மீட்புப்
பாதைக்கு வந்து சேர்ந்துவிட்டபோதும்,சாதிய ஒழிப்பில்
தேசிய அடையாளம் வகிக்கும் முக்கியத்துவத்தை புரிந்து
கொண்ட பிறகும்,நீங்கள் ஏன் இன்னும் புரிந்துகொள்ள
மறுக்கிறீர்கள்?


பெரியாருக்கு பிறகான அண்ணாவின் திராவிட அரசியல்
என்பது,தமிழக முதலாளிகளின் டெல்லிக்கான
பிரதிநிதிகள் என்பதில் இருந்து மாறி இன்றைக்கு டெல்லி
முதலாளிகளாகவே மாறி விட்ட கருணாநிதி ஈழ
மக்களுக்கு இழைத்த துரோகத்தை பார்த்த பிறகும்,
மார்க்சியத்தின் முக்கியத்துவத்தை மறுக்கத்தான்
போகிறீர்களா? கருணாநிதியின் அரசியல் குள்ள
நரித்தனங்களை சாணக்கியத்தனம் என்று சுப்ரமணிய
சாமி சொல்கிறார்.சாணக்கியன் என்கிற பார்பனன்
தந்திரங்களை கையாண்ட,கையாண்டு கொண்டு
இருக்கிற கருணாநிதி மட்டும் எப்படி திராவிடனாக
இருக்க முடியும்,இனியும் பிறப்பை மட்டுமே அளவு
கோலாக வைத்து பார்ப்பனியத்தை தீர்மானிக்கும்
முறையை என்று மாற்றிக்கொள்ள போகிறீர்கள்?


திராவிடன் என்று எழுதி அடைப்புக் குறிக்குள் தமிழன்
என்றும் பெரியார் எழுதியை சுட்டிகாட்டும் நீங்கள்
இன்றைக்கு தமிழன் என்று எழுதி அடைப்புகுறிக்குள்
திராவிடன் என்று எழுதலாமே,என்ன பெரிய இழப்பு
அதில் உங்களுக்கு.



இறுதியாக ஒன்று தோழர்களே ! கடந்த ஒரு வருடமாக
தனது சொந்த தேசிய இன அடையாளம் பற்றி
உணர்வே இல்லாத தமிழர்களிடம்,ஈழப் போராட்டம்
உருவாக்கிய தேசிய அடையாளம் பற்றிய பிரக்ஞையை
அழிந்து போக விட்டுவிடாதீர்கள்.


தமிழ் தேசியம் பேசுபவர்களிடம் காணப்படும் பாசிச,
இந்துதுவ சார்பான கருத்துக்களை முறியடிக்க
பெரியாரியம் என்னும் ஆயுதத்தையும்,சாதிய எதிர்பு
போராட்டதினால் நீங்கள் பெற்ற அனுவபத்தையும்
கொடுத்து தமிழ்தேசியத்தை வளப்படுத்துங்கள்.சமூக
இயக்கத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த உதவியாக
இருங்கள் என்பதையே தமிழ் சமூகம் இன்று
உங்களிடம் கோருகிறது.

அடுத்ததாக இன்றைய சமகால உலக அரசியல் சூழலில்
தேசிய இனவிடுதலைப் போராட்டங்கள்,இடதுசாரி
புரட்சிகர எழுச்சிகள் ஆகிவைகளில் ஆயுதமேந்திய
போராட்டங்களின் சாத்தியம்.ஆயுதபோராட்டங்கள்
வகிக்க வேண்டிய பாத்திரம்,வடிவங்கள் பற்றி
எல்லாம் எழுத வேண்டும் என்று கை அரித்தாலும்,
ஓட்டுபொறுக்கி அரசியலுக்குள் புதிதாக நுழைய
தீர்மானித்திருக்கும் சீமானை பற்றி பேசுவதாக
சொல்லிவிட்டதால் சீமானுக்கு போகலாம்.



மும்பையில் நின்று கொண்டு ராஜ்தாக்கரேவைப் பார்த்து
தமிழர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சீமான்
பேசியபோதே நமக்கு ஒரு கேள்வி எழும்பியது.வட
இந்தியர்களை தாக்கும் ராஜ்தாக்கரே மும்பையில் வாழும்
தமிழர்களை தாக்கும்படி சொன்னால் சீமானால் இப்படி
பேச முடியுமா?



போதாக்குறைக்கு தனது ஓட்டு பொறுக்கி அரசியலுக்கு
செல்லுக்கும் முடிவுக்கு ஏற்ப முத்துராமலிங்கதின்
சிலைக்கு மாலை போடுகிற வேலையையும் செய்து
விட்டார்.வழிகாட்டியான பெரியாருக்கு வைத்திருகிற
சிலைக்கு மாலை போட்ட கைகளால்,வழிபாட்டுக்கு
வைத்திருக்கும் தேவர் சிலைக்கு மாலை போடும்
சீமானின் பகுத்தறிவை என்னவென்று சொல்வது?



பரவலாக விமர்சனங்கள் எழுப்பபட்ட உடன் சீமான்
பின்னால் செல்ல ஆரம்பித்திருக்கும் ரசிகர்கள்
திருமாவளவன் விடுமுறை அறிவிக்க கோரிக்கை
வைக்கவில்லையா,கிருஸ்ணசாமி மாலை
அணிவிக்கவில்லயா என்றெல்லாம் கேட்க
துவங்கியிருக்கின்றனர்.திருமாவளவன்,கிருஸ்னசாமி
போலவே சீமானும் பிழைப்புவாதிதான் என்று
ஒப்புக்கொள்கிறீர்களா நண்பர்களே?



முத்துக்குமாரின் உடலை கருணாநிதியிடம் விலை பேசி
விற்ற திருமாவளவன் பாதையில்தான் சீமானும் செல்ல
போகிறார் அவ்வாறுதான் நடப்போம் என்று அறிவிக்க
போகிறீர்களா? இல்லை தெரியாமல்தான் கேட்கிறோம்
இன்றைக்கு ஓட்டுகாக தேவரின் சிலைக்கு மாலை
போடும் சீமான் ஒரு கற்பனைக்கு வைத்துக் கொள்வோம்
நாளை நாற்பது பாராளுமன்ற உறுபினர்களை பெற்றபின்
இன்னொரு கருணாநிதியாக மாற மாட்டார் என்பதும்.
ஈழ தமிழர்களுக்கும்,தமிழக தமிழர்களுக்கும் துரோகம்
இழைக்க மாட்டார் என்பதற்கும் என்ன உத்திரவாதம்
இருக்கிறது?




போதாக்குறைக்கு அவரது வட்டத்தில் ராஜபக்ஸே தனது
இனத்துக்கு நேர்மையாக இருந்தான்,ஹிட்லர் தனது
இனதுக்கு நேர்மையாக இருந்தான் என்றெல்லாம் பேச்சு
கிளம்ப ஆரம்பித்திருக்கிறது.இவர்கள் எல்லாம் தங்களை
ஈழ ஆதரவாளர்கள் என்று அடையாளபடுத்த துவங்கி
இருப்பது நம்மையும் ஈழ விடுதலை ஆதரவாளர் என்று
சொல்லிக் கொள்ளவதை தடைசெய்து விடுமோ என்று
பயப்பட வேண்டி இருக்கிறது.



அடிப்படையில் ஈழ விடுதலைக் கோரிக்கை என்பது தன்
அளவிலேயே,பெரும்பானமை சிங்கள உழைக்கும்
மக்களின் அரசியல்,சமூக விடுதலைக்கும் வழி
ஏற்படுத்தி தருவதாகத்தான் அமைந்திருந்தது.


நாட்டை ஏகாதிபத்தியங்களுக்கு அடகு வைத்தும்,சிங்கள
மக்களின் உழைப்பை சுரண்டியும் வந்த சிங்கள் ஆளும்
வர்க்கம்,சிங்கள் மக்கள் மத்தியில் தங்களுக்கு எழும்
எதிர்ப்பை சமாளிக்கவும் திசை திருப்பவுமே தமிழர்களுகு
எதிரான இனவெறியை கிளப்பி வந்தது.


அதற்கு பெரும்பானமை சிங்கள சமூகம் பலியான நிலையில்
தனது விடுதலையை பெறுவதன் மூலம்,சிங்கள் மக்கள்
தங்கள் எதிரிகளை அடையாளம் கண்டு எதிர்த்து போராட
உதவுவதாகவே தமிழீழ கோரிக்கை அன்றும் இன்றும்
இருக்கிறது.இருபது ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்கள
இளைஞர்களை பலியாகவும்,ஆயிரகனக்கான இளைஞர்கள்
ஊனமாகவும்,போர் செலவினங்கள் மூலம் சிங்கள
மக்களை கசக்கி பிழியவும் காரணமாக இருந்த ராஜபக்ஸே,
தமிழர்களுக்கு மட்டுமல்ல சிங்களர்களுக்கும் எதிரியே
என்கிற புரிதல் புலிகளுக்கு இருந்தது.உண்மையான
ஈழ ஆதரவாளர்களுக்கு இருக்கிறது.சீமானுக்கு?




கோவையில் வசிப்பவன் என்கிற முறையில் ஒரு
விசயத்தையும் பதிவு செய்ய வேண்டி இருக்கிறது.
இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் இருந்த
கட்சிகளுக்கு கோவை பகுதியில் அதிக அள்வு
செல்வாக்கு இல்லாதபோதும்,அவர்கள் அழைப்பு
விடுத்த வேலை நிறுத்ததின்போது மலையாளிகள்
வட இந்தியர்களின் வணிக நிறுவனங்கள் கூட
மூடப்பட்டே இருந்தன.அதை பயத்தினால்
நிகழ்ந்த ஒன்றாக கருத எந்த அடிப்படையும்
இல்லை.அது முத்துக்குமரன் என்கிற மகத்தான
மனிதன் தனது தியாகத்தினால் ஏற்படுத்தியது.



சீமானுக்கு இவைகள் பற்றி எல்லாம் அக்கறை இருக்க
முடியாது என்றே தோன்றுகிறது.ஓட்டுகட்சி அரசியல்
நிகழ்த்தும் சீரழிவுக்குள் தன்னையும் நுழைத்துக்
கொள்ள தயாராகிவிட்ட நபரிடம் போய்,தமிழகதில்
வாழும் சக தேசிய இனத்தவர்களில் உள்ள உழைக்கும்
மக்களிடம் நட்பு சக்திகளை தேட சொல்வது,தமிழ்
தேசிய விடுதலையை தேடிக் கொடு.பெரியாரின்
அரசியல் வழியில் போராடு என்றெல்லாம்
சொல்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதில்
மட்டுமே முடியும்.



தனது நிலத்தில் விளைந்த கத்தரிக்காயில் நல்லதை எல்லாம்
பொறுக்கி சந்தைக்கு அனுப்பிவிட்டு,சொத்தை கத்திரிகாயில்
கெட்டுப்போகாத பகுதிகளை குழம்பு வைத்துச் சாப்பிட்ட ஒரு
விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஒரு இளைஞன்,
தனக்குள் இருக்கும் உழைக்கும் வர்க்க மனிதனை
மீட்டுகொள்ள முயற்சி செய்ய வேண்டும் என்பதே நமது
எதிர்பார்ப்பு.இந்திய பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பிருந்த
பெரியாரின் பேரனாக,பிரபாகரனின் தம்பியாகவே
சுயவிமர்சனம் செய்துகொண்டு திரும்பி
வருவீர்களா சீமான்?

Tuesday, November 17, 2009

அ.மார்க்ஸ் என்னும் திருஉரு

இலங்கை அரசின் முகவர் அ.மார்க்ஸ்,ஈழம் தொடர்பாக
தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு,பதில் அளிக்கும்
விதமாக அரசு,இறையாண்மை,ஆயுதப் போராட்டங்கள்,
என்றொரு நீண்ட கட்டுரையைத் தீட்டி சோபாசக்தியின்
இணையத்தில் வெளியிட்டு மங்களம் பாடிவிட்டு சென்று
நீண்ட நாட்களாகி விட்டது.அதற்கு ஒரு மறுப்போ அல்லது
விமர்சனமோ எழுதலாம் என்று பார்த்தால் அவர்
பேசியிருக்கிற தத்துவவியலாளர்கள்,காட்டியிருக்கிற
மேற்கோள்கள் அணைத்தையும் விளாவாரியாக உட்கார்ந்து
படித்து புரிந்துகொள்ளவே சில மாதங்கள் ஆகிவிடும் போல
இருக்கிறது.அது தற்போதைய நிலையில் சாத்தியமில்லை
என்பதால் ஏதோ நமது சிற்றறிவுக்கு உகந்த வகையில்
ஒரு சிறு மறுப்பையாவது எழுதிவிட வேண்டும் என்கிற
ஆவல் தூண்டியதால் இந்த பதிவு.


தமிழில் நீதி,தர்மம்,போன்ற சொற்களை எதிர்மறைகளாக்க
அவைகளின் முன்னால் அ என்கிற உயிரெழுத்தைச் சேர்ப்பது
வழக்கம்.தனது பெயரை சுருக்கி எழுதும் விதமாக அ.மார்க்ஸ்
என்று எழுதுகிறாரா முன்னாள் பேராசிரியர்,இல்லை தான்
பேராசான் என்று அடைமொழியோடு மட்டுமே ஒரு காலத்தில்
குறித்து வந்த மார்க்சிய ஆசானுக்கு தான் எதிர்பாளனாக
மாறிவிட்டேன் என்பதை சங்கேதமாக குறிக்க அ.மார்க்ஸ்
என்று எழுதுகிராறா என்கிற சந்தேகம் நமக்கு எழும்பி பல
காலமாகிவிட்டது.அதை உறுதிப்படுத்தும் விதமாகவே அவரது
அந்த நீண்ட கட்டுரை அமைந்திருக்கிறது.



துவக்கத்திலேயே அ.மார்க்ஸியத்தின் முத்திரையை நம்மால்
உடனடியாக கண்டுகொண்டு விட முடிகிறது.கடந்த முப்பது
ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத் தமிழினத்துக்கு எதிராக சிங்கள
பேரினவாத அரசுகள் நடத்தி வரும் திட்டமிட்ட இனப்
படுகொலையின் உச்சமாக நடந்த இன அழிப்பை,
ராஜபக்ஸேவின் விடுதலைப் புலிகளுக்கு எதிரான
வெறித்தாக்குதலாக மட்டுமே சித்தரிப்பதை அவரது
கவனகுறைவாகவே அல்லது நியாபக மறதியாகவோ
புரிந்துகொள்வது சாத்தியம்தானா?


இந்தியாவை தவிர்த்துவிட்டு ஐரோப்பிய நாடுகளின் வழியே
ஈழ அங்கீகாரத்தை பெறுவது என்கிற அரசியல் திசைவழிக்கு
புலிகள் நகர்ந்திருந்தது.தமிழகத்தில் உள்ள புலி
ஆதரவாளர்களினது மட்டுமல்ல,பெரும்பாலும் தமிழக
மக்களின் கோரிக்கை என்பதே இலங்கையில் புலிகளுக்கு
எதிரான போர் என்கிற பெயரில் நடத்தப்படும் இன அழிப்பு
நிறுத்தப்பட வேண்டும் என்பதாகவே அமைந்திருந்ததை
மறைத்துவிட்டு,இந்தியா தமிழ் ஈழத்தை அமைத்து தர
வேண்டும் என்று புலி ஆதரவாளர்கள் கோரியதாக சமீப
காலங்களில் பரவலாக முன்னிறுத்தப்படாத ஒரு
கோரிக்கையை தானாகவே முன்நிறுத்தி அதற்கு பதிலும்
சொல்லிக் கொள்கிறார் அ.மார்க்ஸ்.மற்றொரு நாட்டின்
இறையான்மையில் நாம் தலையிட முடியாது என்று
மத்திய அரசு கூறியதாகவும் அதன் மாநில அரசு
வழிமொழிந்ததாகவும் கூறும் அ.மார்க்ஸுக்கு கடந்த
ஒரு ஆண்டில் மட்டும் இலங்கையின் இறையான்மையை
தனது 12.000 கோடிக்கு மேற்பட்ட முதலீடுகள் மூலம்
இந்திய அரசு களவாடிக்கொண்டிருந்ததை
எப்படி மறந்து போகிறது.



இந்திய அரசு இலங்கையில் நடைபெற்ற சமீபத்திய
போரில் தலையிடாததற்கு காரணங்கள் பல என்று
வெகு சுலபமாக முடித்துக்கொள்ளும் அ.மார்க்ஸுக்கு
இந்திய அரசு புலிகளுக்கு எதிராக இலங்கை அரசுக்கு
ஆதரவாக தலையிட்டது ஏன் என்பதை ஆராய்வதில்
உள்ள சிக்கல் நம்மால் புரிந்துகொள்ள முடிந்ததுதான்.
இனி இறையான்மை பற்றிய அவரது கதையாடலை
கவனிக்கலாம்.



வாசிக்கத் துவங்கி இரண்டு பத்திகளுக்கு மேல் ஆகிவிட்டதே
இன்னும் சோவியத்கூட்டமைப்பு எதிரான கருத்து எங்கே
காணவில்லை என்று பார்த்தால்,சோவியத கூட்டமைப்பில்
இருந்த தேசிய இனங்களின்,அரசுகள் மட்டுமே
இறையான்மையற்ற தேசிய எல்லைகள் கொண்டநாடுகளாக
அமைந்திருந்தன என்று கூறி தனது முத்திரையை
பதித்திருந்தார்.காலாவதியாகிப்போன சோவியத் ஒன்றியத்தில்
அதிகாரமில்லாமல் வைக்கப்பட்டிருந்த நாடுகளின் மீதெல்லாம்
பதியும் அ.மார்க்ஸின் கருனைப்பார்வை,நவீன தேசங்களாக
மாறும் உரிமை மறுக்கப்பட்டு,அடிமை நிலையில்
வைக்கபட்டிருக்கும் இந்திய தேசிய இனங்களின் மீதெல்லாம்
என்று படுமோ? யாமறியோம் பராபரமே.



இறையான்மை மறுக்கப்பட்டிருந்த கிழக்கு ஐரோப்பிய
நாடுகளின் உரிமைக்காக இன்று கூட குரல் கொடுக்கும்
அ.மார்க்ஸ் இலங்கையில் தனது இறையான்மைக்காக
போராடும் ஈழ தமிழ் தேசிய இனத்தின் ஜனநாயக
உரிமைகளுக்காகவும் குரல் கொடுப்பதுதானே நியாயமாக
இருக்க முடியும்?


அரசு என்பதை ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறை கருவியாக
மார்க்சியர்கள் காண்பர் என்று கூறிவிட்டு கம்பி நீட்டும் அ.
மார்க்ஸ்,ஒரு அரசின் இறையான்மையுடன் கூடிய அதிகாரம்
அதற்கு அளிக்கப்படும் சட்டப்பூர்வமான அங்கீகாரத்தின் மூலம்
உருவாகிறது என்றும் இந்த அதிகாரத்தின் பின்புலம்
எதுவாக இருந்த போதிலும் மக்களின் ஆதரவு இதில் ஒரு
முக்கிய பங்கு வகிக்கிறது என்கிறார்.இந்த மக்கள் ஆதரவை
இழக்கும்போது அது தன் அதிகாரத்தை தக்க வைக்க
வன்முறைய நாடுகிறது என்கிறார்.


இந்த கருதுகோளை சற்று அலச வேண்டியிருக்கிறது.அரசு
என்பதுசமூகத்தில் மேலாதிக்கம் செலுத்தும் வர்க்கத்தின்
கருவி,மற்றும் சுரண்டுவோர்,சுரண்டப்படுவோர் என்று
வர்க்கங்களாக பிளவுண்டு கிடக்கும் சமூகத்தில்
சுரண்டுவோரின் சார்பாக ஒடுக்குமுறை செலுத்தும்
நிறுவனம் என்கிற மார்க்ஸிய கருதுகோளை எந்த
ஆய்வுகளின் அடிப்படையில் தான் நிராகரித்தோம்
என்பதை வெளிப்படுத்தாத அ.மார்க்ஸ் கடைசில்,
தெரிந்தோ தெரியாமலோ மார்க்ஸின் வழியிலே
நிறக வேண்டி வந்துவிடுகிறது.



வாக்களிப்பதை தவிர வேறு எந்த விதத்திலும் மக்களின்
பங்களிப்பை கோராத முதலாளித்துவ அரசுகளை,
குடியரசுகள் என்று விளித்து அவைகளுக்கு மக்கள் ஆதரவு
ஏதோ ஒரு விதத்தில் இருந்து ஆக வேண்டி இருக்கிறது
என்கிறார்.அது என்ன ஆதரவு? உழைக்கும் மக்கள்
தங்கள் மீது நிகழ்த்தப்படும் சுரண்டல்களை சகித்துக்கொண்டு
கொடுக்கும் ஆதரவாக மட்டுமே அது இருக்கமுடியும்.
முதலாளித்துவ ஜனனாயக அரசுகளை புனிதப்படுத்தும்
தனது நோக்கத்துக்கு எதிராக சுரண்டலுக்கு எதிராக
மக்கள் எழுகையில்,அரசு வன்முறையை கையில்
எடுப்பதாகக் கூறி இறையான்மை கொண்ட அரசுகளின்
வர்க்க இயல்பை அம்பலப்படுத்த தானும்
துணைபோய்விடும் கவனக்குறைவை அ.மார்க்ஸ்
தவிர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் ))



தங்களுக்கு தாங்களே இறையான்மையை எழுதிக்கொண்ட,
வழங்கிகொண்டமுதலாளித்து அரசுகள் மக்களின் அடிப்படை
உரிமைகளைப் பறிப்பதை கண்கானிக்க,உலகளாவிய மனித
உரிமை பிரகடனம்,ஹேக் உடன்பாடு, பன்னாட்டு மனித
உரிமை ஆணையம்.பன்னாட்டு நீதிமன்றம் ஆகியவை
உருவாக்கபட்டதையும் அதில் ஐ.நா உறுப்பு நாடுகள்
கையெழுத்திடுவது நிபந்தனையாக்கபடவில்லை என்றும்.
கையெழுத்திட்டபோதிலும் அவற்றை மீறுவதை
அரசுகள் வழக்கமாக கொண்டுள்ளாதாகவும்
கூறுகிறார் அ.மார்க்ஸ்


இந்த மனித உரிமை பிரகடனங்களை உருவாக்கிய நாடுகள்,
மற்றும் உருவாக்கியவர்கள் பற்றி இங்கே விரிவாக
பேசிக் கொண்டிருப்பது தேவை இல்லை என்பதால்
ஓஷோ வின் அடிப்படை மனித உரிமைகள்
என்கிற புத்தகத்தை பரிசீலிக்க கேட்டுக்கொண்டு
நகர்ந்து விடலாம்.



அடுத்த இரண்டு மூன்று பத்திகளில் கொடுக்கப்பட்டிருக்கும்
அரசியல் உள்ளடக்கமற்ற தகவல்களின் பட்டியலைத்
தவிர்த்துவிட்டு,உலகமயம் ஏற்படுத்திய விளைவுகளாக
அ.மார்க்ஸ் குறிப்பிட்டிருக்கும் விசயங்களை
கவனத்தில் எடுத்துக் கொள்ளலாம்.


தங்கள் நாடுகளின் உழைக்கும் மக்கள் வர்க்கப்போராட்டத்துக்கு
அணிதிரள்வதை தடுக்கும் வகையில்,மூன்றால் உலக
நாடுகளில் வணிகசுரண்டல் மூலம் தாங்கள் பெற்ற
லாபத்தில் ஒரு பகுதியை தங்கள் நாடுகளின் கடைநிலை
மக்களுக்கு அளிக்கும் மேற்கத்திய நாடுகளின் தந்திரத்தை
ஜனனாயகத்தை மேம்படுத்தும் செயலாக
அடையாளம் காண்பது எவ்வாறு சாத்தியம் என்பது
அ.மார்க்ஸுக்கு மட்டுமே வெளிச்சம்.



மூன்றாம் உலக நாடுகளில் இருந்து மேற்கத்திய நாடுகளில்
குடியேறியுள்ளவர்களில் பெரும்பாலானோர் அந்த நாடுகளில்
கடைநிலை வேலைகளில் உழன்று கொண்டிருப்பதே
யதார்த்தமாக இருக்க,மேற்கத்திய நாடுகளில் குடியேறிய
அணைத்து மக்களையும் வசதியானவர்களாகவும்,தூரதேசிய
உணர்வுக்கு ஆட்பட்டவர்களாகி பாசிச இயக்கங்களுக்கு ஆதரவு
தெரிவிப்பவர்களாகவும் அ.மார்க்ஸுக்கு கூறுவது நமக்கு
விளங்கவில்லை.ஒரு வேளை இலங்கை,இந்திய,அரசு
பாசிசத்துக்கு மறைமுகமான கருத்தியல் நியாயங்களை
வழங்கிக்கொண்டிருக்கும் தனது மேற்கத்திய நண்பர்களைப்
போலவே அணைவரையும் கருத்திக்கொண்டிருக்கிறாரா
என்னவோ?



தங்கள் சுரண்டலுக்கு தடையாக இருக்கும் தேசிய இன
அடையாளங்களை ஏகாதிபத்திய நாடுகள் அழித்துக்
கொண்டிருப்பதை,பன்மைத்துவ தேசிய கட்டமைப்பாக
சித்தரித்து பாராட்டுகிற அ.மார்க்ஸ் எதற்காக தனக்கு
இடதுசாரி முகமூடியை மாட்டிக் கொள்ள வேண்டும்
என்பதும் நமக்கு புரியவில்லை.



கடைசிவரை ஏகாதிபத்தியங்களுடன் சமரசமின்றி
போரிட்டுக்கொண்டிருந்தபுலிகளை தங்கள் வலதுசாரிய
வாழ்வியல் சூழலையும் தாண்டி ஆதரித்து நின்ற
புலம்பெயர் தமிழர்களை,இந்துதுவ பாசிச இயக்கங்களின்
ஆதரவாளர்களோடு அ.மார்க்ஸ் ஒப்பிடுவது
அப்பட்டமான ஏகாதிபத்திய அடிவருடித்தனமே
அல்லாமல் வேறென்ன?


அடுத்த பத்திகளில் இருந்து அ.மார்க்ஸ் கூற வரும்
விசயங்களை பின்வருமாறு தொகுத்துக் கொள்ளலாம்.



உலக நாடுகள் முதலீடு செய்வதற்கும்,வணிக சுரண்டலை
நிகழ்த்துவதற்க்கும் உரிய வகையில் அமைதியான சூழலை
உருவாக்கி கொடுக்கவும்,தோற்றுப் போன நாடாக தான்
ஆகி விடாமல் இருக்கவும் இலங்கை அரசு மேற்கொண்ட
நடவடிக்கைகளை கூறிச் செல்லும் அ.மார்க்ஸ்
அவைகளை ஏன் வெரும் தகவல்கள் என்கிற
அளவிலேயே நிறுத்திக்கொள்ள வேண்டும்? அவரின்
நுன்னரசியல் ஆய்வு தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில்
மட்டும்தான் கவனமெடுத்துக் கொள்ளும் போல.

வலுவான நாடுகளுக்கிடையே சிக்குன்ட சிறிய நாடுகள்
சர்வதேச சூழலைச் சரியாக கணக்கிலெடுத்துக்கொண்டு
காய்நகர்த்துவதன் மூலம் இறையான்மையை
காத்துக்கொள்ள முடியும் என்பதற்கு இலங்கையை ஓர்
எடுத்துகாட்டு என்று கூறும் அ.மார்க்ஸ் எந்த
இறையான்மை என்பதை கவனமாக தவிர்த்துக்
கொண்டது ஏனோ?


சர்வதேச பயஙகரவாதத்துக்கு எதிரான போர் என்பதை தனது
தமிழின அழிப்பு நடவடிக்கைக்கு ஆதரவாக இலங்கை அரசு
பயன்படுத்திகொண்டதையும்,தங்கள் அரசியல் பொருளாதார
நலன்களின் அடிப்படையில் உலகின் பெரும்பாலான நாடுகள்
இலங்கை அரசை ஆதரித்து நின்றதற்கு காரணமாக லக்‌ஷ்மன்
கதிர்காமர் கொலையை காட்டும் அ.மார்க்ஸின்
அதிமேதாவித்தனத்தை கண்டு புல் அரிப்பே
வந்துவிடுகிறது நமக்கு.


லக்‌ஷ்மன் கதிர்காமரை புலிகள் கொல்லாமல் இருந்திருந்தால்
மேற்கத்திய நாடுகள் புலிகளை தடை செய்திருக்காது என்று
சொல்லாமல் விட்டதையிட்டு மகிழ்ச்சி அடையலாம்.


போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு,உள்ளக
சுயநிர்ணய உரிமை கோரிக்கையூடாகவும்,இடைக்கால
தன்னாட்சிகான வரைவை அளித்ததன் மூலம் தமிழ்
மக்களின் அரசியல் பிரச்சனைகளுக்கு நேர்மையான
தீர்வை எட்டும் முயற்சியில் புலிகள் ஈடுபட்ட
காலத்திலேயே மேற்கத்திய நாடுகள் புலிகளை தடை
செய்தன என்பதைக் கூட அறியாத தற்குறிகள் என்று
தமிழர்களை கருதும் அ.மார்க்ஸுன் துணிவை
மெச்சத்தான் வேண்டும்.


தங்கள் ராணுவ.பொருளாதார,பிராந்திய நலன்களுக்காக
சர்வதேச பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற
விசயத்தை தனது இனப்படுகொலை திட்டத்துக்கு சாதகமாக
இலங்கை அரசு பயன்படுத்தியதை அனுமதித்தும்,உதவிகள்
அளித்தும்,வழிநடத்திய மேற்கத்திய நாடுகளின் உண்மை
முகத்தை மறைத்து புலிகளை பலிகடாவாக்கும்
வேலையை மிக திறமையாகவே
செய்து முடிக்கிறார் அ.மார்க்ஸ்.

புதிய சூழல்கள் வெறுமனே இறையாண்மையுள்ள அரசுகளைப்
பலவீனப்படுத்திவிட்டது என்றோ,வெறுமனே வன்முறைக்
கருவி என்கிற வகையில் அரசுகள் மேலும் பலம்
அடைந்துவிட்டது என்று மட்டுமோ நாம் எளிமைப்படுத்திப்
புரிந்துகொள்ளக் கூடாது வெகு அக்கறையாக கூறும்
அ.மார்க்ஸ் அவர்களே


இனப்படுகொலை உள்ளிட்ட எத்தகைய அநீதிகளையும்
நிகழ்த்துவதன் மூலம் உலகமயமாக்கலுக்கு
துணைபோகும் முதலாளித்துவ அரசுகளை வேறு
எவ்வாறு புரிந்துகொள்வது?


குடிமக்களின் அடிப்படை உரிமைகளை உயிர்வாழும்
உரிமை உட்பட அணைத்தையும் பறித்துக்கொள்கிற
நெருக்கடி நிலை அறிவிக்கும் அரசுகளின் உரிமையை,
இறையாண்மையாக காணும்.அரச பயங்கரவாதத்தை
பாசிசத்தை வெளிப்படையாக ஆதரிக்கும் ஒரு
ஏகாதிபத்திய அடிவருடி புலிகளை பாஸிஸ்டுகள்
என்று விமர்சிப்பதை காலத்தின் கொடுமை என்று
தள்ளி விட்டு நகர்ந்து விடுவது சாத்தியமதானா?

இங்கே நிச்சயமாக இவர்கள் முன்வைக்கும் கற்ப்பித
தலித்திய அடையாள போராட்டங்களையும்,அதன்
விளைவுகளையும் கூட நாம் மீள் பரிசீலனைக்கு
உட்படுத்த வேண்டியிருக்கிறது.


இந்திய இடதுசாரி இயக்கங்கள் தலித்திய அடையாளத்துக்கு
முக்கியத்துவம் கொடுப்பதிலும்,சாதி ஒழிப்பு
நடவடிக்கைகளில் போதிய அக்கறை இன்றி இருந்ததையோ
நாம் மறுப்பதற்கில்லை,அதன் விளைவாக ஒடுக்கப்பட்ட
தலித்துகள் தங்களுக்கான அடையாளத்தின் கீழ்
அணிதிரண்டதையும் அமைப்புகளாகி இருக்கின்ற சமூக
சட்டகத்துக்குள்ளேயே தங்களுக்கான
சில உரிமைகளை போராடி அடைந்ததையும் நாம் அறிவோம்.



அ.மார்க்ஸே தனது தலித்தியம் பற்றிய கட்டுரை
ஒன்றில் ஆனந்த் டெல்டும்ப்டேயின் ஏகாதிபத்திய
எதிர்ப்பும் சாதி ஒழிப்பும் என்கிற நூலைக் குறிப்பிட்டு
விட்டு,ஏகாதிபத்திய சுரண்டல் தலித் மக்களை
மிக மோசமாக சுரண்டி வருவதை ஒப்புகொண்டுள்ளார்.
அது மட்டுமல்லாமல் வெருமே ஏகாதிபத்திய
எதிர்ப்பு என்று இருந்து விடாமல் தகவல்
தொழில்நுட்பத்துறை போன்ற ஏகாதிபத்தியம்
கொடுக்கும் வாய்ப்புகளையும் தலித்துகள்
பயன்படுத்திகொள்ள வேண்டும் என்று
கூறியிருந்தார்.அதிலும் நமக்கு மாற்றுக்
கருத்துக்கள் இல்லை.



ஆனால் அந்த அடையாள அரசியலை உயர்த்திப்
பிடித்து ஓட்டு அரசியலுக்கு சென்ற கட்சிகளின்
பிழைப்புவாத தலைமைத்துவங்கள்,மற்றும் அந்த
தலைமைத்துவங்களை சார்ந்து உருவான ஒரு
சிறியகூட்டம் இவைகளைத் தாண்டி,சாதிய
ஒடுக்குமுறையாலும் அரசின் ஏகாதிபத்திய
ஆதரவு பொருளாதார கொள்கைகளாலும்,சீரழிந்து
கொண்டிருக்கும் பெரும்பாலான தலித்துகளின்
அவலங்கள் பற்றி இவர்கள் பேசியதே இல்லை
என்பது ஒன்றைத் தெளிவுபடுத்துகிறது.
அவலங்களுக்கு உள்ளாகி இருக்கும் தலித்துகளின்
அடையாள ஒன்றினைவைப் பற்றி இவர்கள்
கூக்குரலிடுவது தலித்துகள் மத்தியில் இருக்கும்
பிழைப்புவாத சக்திகள் நலன்களை அடிப்படையாக
கொண்டே என்பதும்,உழைக்கும் தலித்துகளின்
முதுகில் குத்துவதே இவர்களின் உண்மையான
நோக்கம் என்பதும் உறுதிபடுத்தபடுகிறது.



இருக்கிற சுரண்டல் அமைப்புக்குள்ளேயே தீர்வுகளைத்
தேடச் சொல்லும் அரசு சாரா நிறுவனங்களின்
ஏகாதிபத்திய அடிவருடி அரசியலோடு அ.மார்க்ஸியம்
ஒத்துப்போவது ஒன்றும் வியப்பானதல்ல.சாதிய
ஒடுக்குமுறைகளாலும் பிற்போக்குதனங்களாலும்
சிதைந்து கிடந்த இந்திய,தமிழ் சமூகங்களில்
தலித்துகளின் வாழ்நிலையில் ஆங்கிலேய
காலனி ஆதிக்கம் விளைவித்த சிறிய மாற்றங்களை,
இன்றைக்கு அடியோடு தலித்துகளின் வாழ்நிலையை
சிதைக்க முனையும் நவகாலனித்துவ சுரண்டலும்
கொடுக்கும் என்று தலித்துகளை நம்பவைத்து,வர்க்கப்
போராட்டத்தின் கிழ் அவர்கள் அணி திரள்வதை
தடுப்பதை நோக்கமாக கொண்ட சக்திகளை நாம்
அடையாளம் கண்டு அம்பலப்படுத்த வேண்டியுள்ளது.


இவர்களின் இந்துதுவ எதிர்ப்பு என்பதும் எவ்வாறு சாரமற்றுப்
போகிறது என்பதையும் நாம் சற்று கவனிக்க
வேண்டியிருக்கிறது.தொன்னூருகளுக்கு பிறகு இந்தியாவில்
தாராளமய பொருளாதாரகொள்கைகள் அறிமுகபடுதப்பட்டதன்
பின்னனியில் வைத்தே இந்துதுவ பாஸிச இயகங்களின்
எழுச்சியை காண வேண்டியிருக்கிறது.



நாட்டில் ஏகாதிபத்தியம் மேற்கொள்ளும் சுரண்டலால்
பாதிப்படையும் மக்களின் கோபத்தை மதரீதியிலான
மோதல்களுக்கு திருப்பி விடுவதன் மூலம்
ஏகாதிபத்தியங்கள் தங்கள் சுரண்டலை
தொல்லையின்றி நிகழ்த்த உதவி செய்வதாகத்தான்
இந்துதுவ பாசிச இயக்கங்களின் எழுச்சி நிகழ்ந்தது.
அத்தகைய போக்கு தங்களுக்கும் உதவியாக
அமையும் என்பதால் பார்ப்பன,பனியா இந்துதுவ
ஆளும் வர்க்கங்கள் கண்டுகொள்ளாமல்
அனுமதித்துக்கொண்டிருக்கின்றன இன்று வரை.



மொத்தத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பில் இருந்து இந்துத்துவ
எதிர்ப்பையும்,பார்ப்பன பனியா இந்திய அரச எதிர்ப்பில்
இருந்து தலித்தியதையும் பிரித்து பார்ப்பது அடிப்படையில்
சாத்தியமற்றது என்று ஆகி விட்ட நிலையில்
தலித்துகளை அரச பயங்கரவாததோடும்,பாசிசத்தோடும்
சமரசபடுத்த முயல்வதும் தலித்துகளின் மத்தியில்
பிழைப்புவாதிகளை ஊக்குவிப்பதுமே
அ.மார்க்ஸியத்தின் சாரமாக இருக்கிறது.


சே குவேராவை கட்டவிழ்த்த அ.மார்க்ஸை நாம்
கட்டவிழ்த்தால் கீழ்க்கண்ட முடிவுக்குத்தான்
வர முடிகிறது.


முதலாளித்துவமா சோசலிசமா என்றால் முதலாளித்துவம்
ஏகாதிபத்தியமா தேசியமா என்றால் ஏகாதிபத்தியம்
இஸ்லாமியர்கள் மீதான வன்கொடுமைகள் எதிர்ப்பா
இஸ்லாமிய அடிப்படைவாதத்துடன் சமரசமா என்றால்
இஸ்லாமிய அடிப்படைவாதத்துடன் சமரசம் என்று
பதிலளிக்கும் ஒரு அப்பட்டமான ஏகாதிபத்திய
அடிவருடிதான் அ.மார்க்ஸ் என்பதை
புரிந்து கொள்ள முடிகிறது.




பின் குறிப்பு
இன்றைய இளைஞர்கள் எதையும் ஆழ்ந்து படிப்பதில்லை
என்றும்,விசயங்களை உள்வாங்கிக் கொள்வதில்லை
என்றெல்லாம் வருத்தபட்டிருந்தார் அ.மார்க்ஸ்
சத்தீஸ்கரில் பூணூல் போட்ட மாவோயிஸ்டுகளை
பார்த்தாக எழுதினாலும் நம்ப தயாராக இருக்கிற
தனது ரசிகர்ளை மட்டுமே தமிழ்க இளைஞர்களாக
கருத வேண்டாமென்று அவரை கேட்டுகொள்வோம்.

Wednesday, November 11, 2009

அணு ஆயுத உலகில் புரட்சிகர போராட்டங்கள்




மீண்டும் மீண்டும் புலிகளுக்கு எதிரான அரசியல் விமர்சனங்கள்
என்கிற பெயரில் அரசியல் உள்ளடக்கமற்ற,ஆய்வுக்
கண்ணோட்டம் அற்ற கருத்துக்கள் முன் வைக்கப்பட்டுக்
கொண்டே இருக்கின்றன. உலகின் தலை சிறந்த
புரட்சியாளர்களான ம.க.இ.க வினர்அந்த வகையில் தோழர்
சிவசேகரத்தின் நேர்காணலை கடந்த இரு மாதங்களாக
புதிய ஜனநாயகம் இதழில் வெளியிட்டிருந்தனர்.
இவர்களுக்கு பதில் அளித்துக்கொண்டே இருப்பது நமது
சக்தியை வீணடிக்கும் செயல் என்றாலும் வேறு
வழியில்லாமல் எதிர்வினைகள்
ஆற்ற வேண்டிய நிலைக்கு வந்து விட்டோம்.



அந்த நேர்காணலை மிக விரிவாக ஆய்வுக்குட்படுத்த வேண்டிய
அவசியம் நமக்கு இல்லை.ஒரு அடிப்படைத் தவறை மட்டுமே
சுட்டிக்காட்டி நிறுத்திக் கொள்ளலாம்.நேர்காணலின் இறுதியில்
புலிகளின் பொருளாதார அமைப்பை பற்றி கூற வருகையில்,
இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்துக்கு பிறகு ஒரு வகையான
சுயாதீன பொருளாதாரத்தை புலிகள் கட்டமைத்ததாகவும் 2002
அமைதிப் பேச்சுவார்த்தைக்கு பிறகு அதைக் கைவிட்டுவிட்டு
நுகர்வு பொருளாதாரத்துக்கு மாறிக்கொண்டதாகவும் கூறிவிட்டு
யாழ்ப்பாணத்தில் கொக்கோ கோலா நிறுவனங்கள் செயல்பட
அணுமதி கொடுத்ததாக சொல்கிறார்.



1995 ஆம் ஆண்டிலிருந்தே சிங்கள ராணுவத்தின் முழுக்
கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணத்தில் 2002 ஆம்
ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தை பயன்படுத்தி புலிகள்
கொக்கோ கோலா நிறுவனத்தை செயல்பட அனுமதித்தார்கள்
என்று கூறுவதை கேட்கையில் எதைக் கொண்டு சிரிப்பது
என்று தெரியவில்லை.உலகத்துக்கே தெரியாத புலிகளின்
யாழ்ப்பாண மீட்பை தெரிந்த ஒற்றை மனிதராக சிவசேகரம்
இருப்பதை இந்த நூற்றாண்டின் அதிசயமாக கருதுவதில்
தவறுகள் இருப்பதாக தெரியவில்லை.



அடுத்ததாக ஏகாதிபத்தியங்களை விமர்சிக்காமல் தவிர்ப்பது,
ஏகாதிபத்தியங்களை பகைப்பது நல்லதல்ல என்ற
கண்ணோட்டமே புலிகளிடம் நிலவியதாக கூறும் அவரது
கூற்றும் யதார்த்த உலகம் பற்றிய எந்த புரிதலும் அவரிடம்
இல்லை என்பதையே சுட்டிக்காட்டுகிறது.ஒப்புக்கொள்கிற
நேர்மையும் துணிச்சலும் இருந்தால் 1949 ஆம் ஆண்டில்
சோவியத் யூனியன் நடத்திய வெற்றிகரமான அணு ஆயுத
சோதனைதான் சீன புரட்சியை பாதுகாக்கும் காரணியாக
விளங்கியது என்பதை உணரலாம்.சோவியத் அணு
ஆயுதங்கள் என்கிற பாதுகாப்பு இருந்திருக்காவிட்டால்
சீன புரட்சியை அன்றைக்கே புதைகுழிக்கு அனுப்பியிருக்கும்
அமெரிக்கா என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.



ஏகாதிபத்தியங்களின் குவிமையமாக,அவைகளுக்கிடையான
மோதலின் களமாக விளங்கிய இலங்கைத்தீவில் ஒரு
ஒடுக்கப்பட்டதேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தை
முன்னெடுக்கும்அமைப்பு என்பது சாய்வு நாற்காலி மார்க்சியர்களின் ஏகாதிபத்தியஎதிர்ப்பு பஜனைகளை உருப்போடும் மடமாக இருக்க
இயலாது என்பதுதான் யதார்த்தம்.களத்தில் ராணுவ ரீதியாக ஏகாதிபத்தியங்களை எதிர்கொண்டு போராடுவது போதாது என்று
ஏகாதிபத்திய எதிர்ப்பு கோசங்களையும் புலிகள் முழங்கிக்
கொண்டிருந்திருக்க வேண்டும் என்று கோருவது எந்தவகை
புத்திசாலித்தனம் என்று தெரியவில்லை.உலகின் மூன்றில்
இரண்டு பகுதிகளில் செங்கொடி பறந்து கொண்டிருப்பதைப்
போலவும்,புரட்சிகர மக்கள் எழுச்சி உலகமெங்கிலும் நிகழ்ந்துகொண்டிருப்பதாகவும் கனவு கண்டு கொண்டு
இருப்பவர்களால் மட்டுமே இது போன்று பேசிக்
கொண்டிருக்க முடியும்.முப்பது இலட்சம் ஈழ மக்களையும்
உலக புரட்சியின் பெயரால் பலியாடுகளாக கோருவது மட்டுமே
இவர்களின் அரசியல் உள்ளடக்கமாக இருக்கிறது.



மேலும் இலங்கைப் புரட்சி என்று பேசிக்கொண்டிருக்கும்
இவர்கள் ஒருகேள்விக்கு பதில் அளிக்க வேண்டும்.
தங்களுக்கான சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை
வலியுறுத்தி இலங்கை தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில்
ஈடுபட போவதாக அறிவித்திருக்கின்றன.கடந்த மூன்று
வருடங்களாக சிங்கள அரசு நடத்திய இனப்படுகொலைப் போர்
சிங்கள பெரும்பான்மை உழைக்கும் மக்களை கசக்கி பிழிந்த
போதெல்லாம இது போன்ற அறிவுப்புகளோ போராட்ட
முன்னெடுப்புகளோ ஏன் நிகழவில்லை என்பதற்கான
உங்களின் பதில் என்ன?



சிங்கள பேரினவாதத்தால் வெறியேற்றப்பட்டிருந்த மக்களை
சரியான வழியில்திரட்டி,சிங்கள மக்களையும் தமிழர்களையும்
காக்க கையாலாகாதசிங்கள,தமிழ் இடதுசாரிகள்தான்
அன்றைக்கும் இன்றைக்கும் இலங்கை புரட்சி என்கிற
கற்பனையை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்
என்பதுதான் உறுதிபடுத்தப்படுகிறது.


புலிகளின் வீழ்ச்சி என்பது ஆயுத போராட்டங்கள் மூலம்
அரசு அதிகாரத்தை கைப்பற்றுவது.தேசிய விடுதலையை
அடைவது என்கிற மார்க்சிய கருத்தாக்கம்
காலாவதியாகிவிட்டது என்பதையும் உணர்த்துகிறது.
சமூக ஏகாதிபத்தியமாகமாறிய பிறகும் கூட மூன்றாம்
உலக நாடுகளில் நிகழ்ந்த மக்கள் போராட்டங்கள்
தேசிய விடுதலைக் கோரிக்கைகளுக்கு சோவியத்
கூட்டமைப்பு ஒரு விதத்தில்உதவிக்கொண்டிருந்தது
என்பதையும்,சோவியத் உடனான சித்தாந்த
போராட்டமே சீனா அணு ஆயுத பாதுகாப்பு பெற்ற நாடாக
தன்னை மாற்றிக்கொள்ள தூண்டியதுஎன்பதையும் நாம்
மறந்து விடலாகாது.என்பதுகளின் இறுதியில் சீனாவில்
மீளக் கொண்டுவரப்பட்ட முதலாளித்துவமும்,சோவியத்
யூனியனின் சிதைவும்,அமெரிக்க தலைமையிலான
ஒற்றைத் துருவ அரசாக உலக ஒழுங்கை மாற்றி
அமைத்தது வரலாறு.



தேசிய விடுதலைப் போராட்டங்களை ஆதரிக்கவோ,
இடதுசாரிகள் ஆட்சிக்கு வருவதை ஆதரித்து நிற்கவோ
அணு ஆயுத வல்லமை கொண்ட ஒரு மூன்றாவது
மையம் இன்றைக்கு உலகத்தில் இல்லை என்பது ஒரு
யதார்த்த உண்மையாகும்.சீனா முழுக்க முதலாளித்துவ
பாதைக்கு திரும்பி உலக ஆதிக்கத்துக்கான போட்டியில்
அமெரிக்காவுடன் மோதிக் கொண்டிருக்கிறது.ரஸ்ய
முதலாளித்துவ அரசும் தனது பங்கைக் கோரி தனது
அசுரக் கரங்களை விரித்திருக்கிறது.தனது ராணுவ
மேலான்மை மூலம் உலக மேலாதிக்க சக்தியாக ரஸ்யா
மாறிக்கொண்டிருப்பதை ஒரு நிகழ்வின் மூலம் இங்கே
சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.



இத்துணை காலமும் தனது விருப்பம் போல அரேபிய
நாடுகள் மீதுதாக்குதல் நிகழ்த்திகொண்டிருந்தது
இஸ்ரேலிய ஆளும் வர்க்கம்.காசாவில் ஆயிரம் பேரைக்
கொன்றுவிட்டோம்,ஐ.நா சபையில் யாரும் விசாரனை
கோரினால் அதை உனது வீட்டோ அதிகாரம் மூலம்
ரத்து செய் என்று அமெரிக்காவுக்கு சொல்லி
கொண்டிருந்தவர்கள்தான் அவர்கள்.ஆனால் இன்றைக்கு
என்ன நேர்ந்திருக்கிறது? ஈராணின் அணு உலைகளைத்
தேவைப்பட்டால் தாக்கும் தங்கள் திட்டங்களை,ரஸ்யாவின்
எஸ் - 300 என்கிற அதிநவீன விமான எதிர்ப்பு
ஏவுகணைகள் தவிடுபொடியாக்கி விடும் என்பதால் அதை
ஈராணுக்கு விற்பணை செய்ய வேண்டாம்
என்று முக்காடு போட்டுக்கொண்டு கிரெம்ளினின்
கதவுகளை தட்டிக்கொண்டிருக்கிறார் இஸ்ரேல் பிரதமர்.



வழுவிழந்திருக்கும் அமெரிக்கா,எழுச்சிகொண்டிருக்கும்
ரஸ்யா,சீனா ஆகியவைகளுக்கிடையிலான முரண்பாடுகளே
இனி உலக ஒழுங்கைத் தீர்மாணிக்கும் விசயங்களாக
அமையப்போகின்றன.



சரி,இனிமேல் உழைக்கும் வர்க்கம் ஆட்சியதிகாரத்தைக்
கைப்பற்றுவதோ,தேசிய விடுதலைப் போராட்டங்களில்
ஈடுபட விரும்பும் தேசிய இனங்கள் விடுதலை அடைவதோ
சாத்தியமில்லை என்று கைகளை கட்டிக்கொண்டு
உட்கார்ந்து விட வேண்டியதுதானா? நிச்சயமாக இல்லை
நேபாளம் வழிகாட்டியாக அமைந்திருக்கிறது.புரட்சி பற்றிய
பாரம்பரிய கண்ணோட்டங்களை கைவிட்டுவிட்டு சரியான
வழிமுறையைத் தேர்ந்தெடுத்திருக்கும் நேபாள
மாவோயிஸ்டுகளின் வழிமுறைகளே நமக்கு வழிகாட்டியாக
அமைய முடியும்.


இறுதி வெற்றிக்கான தருணத்தில் பின்வாங்கக் கோருகிற
டராட்ஸ்கியவாதத்தின் தன்மையாகவோ,
சீர்திருத்தவாதமாகவோ நேபாள மாவோயிஸ்டுகளின்
செயல்பாடுகளை புரிந்து கொள்வது இயங்கியல்
பார்வையை மறுப்பதாகும்.நேபாள மாவோயிஸ்டுகளை
சீர்திருத்தவாதிகள் என்று விமர்சிக்கும் இந்திய
மாவோயிஸ்டுகளின் விமர்சனத்தை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.அத்தகைய விமர்சனம் புறநிலை
யதார்த்தம் பற்றிய பார்வைஇந்திய மாவோயிஸ்ட்டுகளுக்கு
இல்லை என்பதையே நமக்கு உணத்துகிறது.


1917 இல் லெனின் எதிர்கொண்ட,1940 களில் ஸ்டாலின்
எதிர்கொண்ட1980 களின் இறுதி வரை இடதுசாரிகளும்,
தேசிய விடுதலைப்போராட்ட குழுக்களும் எதிர்கொண்ட
முதலாளித்துவ இராணுவங்களை இன்று புரட்சிகர சக்திகள்
எதிர்கொண்டிருக்கவில்லை.ஆளில்லா உளவு விமானங்கள்
வானிலிருந்து பூமியை கண்காணிக்கும் செயற்கைக்கோள்கள்.
தினம் தினம்மேம்பாடுகள் அடைந்துகொண்டிருக்கும் அதி
நவீன ஆயுதங்களை வைத்திருக்கும்அரசுகளுக்கு எதிரான
கொரில்லா போராட்டமென்பது,அரசுகளை ஆட்சியில்
இருந்து அகற்றும் நிலை வரை முன்னேறுவது என்பதன்
சாத்தியங்கள் வெகு குறைவே.


துவக்கத்திலிருந்தே பாராளுமன்ற பாதையில் பயணித்து
இன்றைக்கு முதலாளித்து ஜனநாயகத்தை தாங்கிப்
பிடிக்கும் தூண்களாக,சரியானவார்த்தைகளில்
சொன்னால் அரசு சார்பற்ற நிறுவனங்களாக மாறிப்
போய்விட்ட சி.பி.எம். சி.பி.ஐ கட்சிகளை மட்டுமே
வைத்து இந்திய மாவோயிஸ்டுகள் நிரந்தர பாராளுமன்ற
புறக்கணிப்பு என்கிறமுடிவை எடுப்பதும்.ஆயுத
போராட்டத்தின் வழியே அரசை தூக்கி எறிந்து விட
முடியும் என்று கருதுவதும் பிழையாகவே அமையும்.


நேபாளத்தின் 80 சதவிகித நிலப்பரப்பில் தங்கள் அரசியல்
மேலான்மையைஉறுதிபடுத்திக்கொண்ட பிறகே நேபாள
மாவோயிஸ்டுகள் பாராளுமன்றநடவடிக்கைகளுக்கு
சென்றார்கள்.அத்தகைய நிலையை மேற்கொள்வதே
இந்திய மாவோயிஸ்டுகளும் இந்திய துணைக்கண்டத்தில்
புரட்சிகரஅரசியலை நிர்ணயிக்கும் பாத்திரத்தை
வகிக்க உதவும்.


இந்தியா போன்ற ஒரு பரந்து விருந்த நிலப்பரப்பில்
புரட்சி என்பதுஒற்றை பரிமாணத்தில் நிகழ்வது
சாத்தியமில்லை என்கிற புரிதல்இந்திய
மாவோயிஸ்டுகளுக்கு இருப்பதையே,மணிப்பூர்
நாகலாந்துபோன்ற வடகிழக்கு மாநிலங்களில்
செயல்படும் தேசிய விடுதலைக் குழுக்களோடு
அவர்கள் பேண விரும்பும் உறவு காட்டுகிறது.
தமிழகத்தில் எழுச்சி பெற்றிருக்கும் தேசிய இன
தன்னுனர்வும்,பரவலாக கவனத்தை பெற
துவங்கியிருக்கும் தமிழ்தேசிய கோரிகையையும்
கூட அவர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ள
வேண்டி இருக்கும்.



சுருக்கமாக சொன்னால் சாத்தியமான வடிவங்களில்
ஆயுதப் போராட்டத்தைதொடர்ந்து தங்கள் தள
பிரதேசங்களை காத்துக் கொள்வது அல்லது நிழழ்
தளபிரதேசங்களாக மாற்றுவது.அரசியல் போராட்ட
வடிவங்களுக்கு முக்கியத்துவம்கொடுக்க ஆரம்பிப்பது,
முற்று முழுதான விடுதலை கோரும் தேசிய இன
போராட்ட குழுக்களோடு உறவுகளைப் பேணுவது.அந்த
குழுக்களால் அந்த தேசிய இனங்களில் முன்னெடுக்க்படும்
மக்கள் திரள் போராட்டங்கள் ஆதரித்து நிற்பது என்று
சாத்தியமான வழிகளில் எல்லாம் இந்திய பெரு நிலப்பரபில்
தங்கள் அரசியல் மேலாதிக்கத்தை நிறுவிக்கொள்வதே
இப்போதைய நிலையில் இந்திய மாவோயிஸ்டுகள்
முன் உள்ள கடைமையாகும்.



ஏகாதிபத்தியங்களின் அணு ஆயுத மிரட்டல்களையோ
நேரடி ராணுவ நடவடிகைகளையோ தவிர்த்து இந்திய
புரட்சிகர அரசியலில் தங்கள்இடத்தை தக்க வைக்க,
பாராளுமன்றத்துக்குள் நுழைய நேர்கையில்
பெரும்பான்மை மக்களின் ஆதரவை தங்களுக்கு
இருக்குமாறு செய்யஇதுபோன்ற செயல்பாடுகளே
மாவோயிஸ்டுகளுக்கு உதவியாக அமையும்.



அணு ஆயுதங்கள் கொண்ட,தேசிய இன விடுதலை
போராட்டங்களையும் இடதுசாரி புரட்சிகளையும்
ஆதரிக்க ஒரு நாடோ அல்லது நாடுகளின்
கூட்டமைப்போ உருவாகும்வரை,உலக புரட்சிகர
போராட்டத்தில் நேபாளத்தின் வழிமுறைகளே
பொருத்தமானதாகவும்,பெரும்பான்மை மக்களின்
ஆதரவுடன் பாராளுமன்றத்தை கைப்பற்றிய பிறகு
அமையும்சோசலிச சார்பான அரசுகள்
(லத்தீன் அமெரிக்க நாடுகள்)வடிவிலேயே
புரட்சிகள் நிகழ முடியும் என்பதையே அரசியல்
சூழல் உணர்துகிறது.