Wednesday, December 16, 2009

வன்முறையின் அரசியல் - 2

புலிகள் ஏன் தோற்றுப்போனார்கள் என்கிற கேள்விக்கு
பீப்புள்ஸ் மார்ச் இதழ் ஆசிரியர் தோழர் கோவிந்தன்
குட்டி அளித்திருந்த பதிலின் மீதான விவாதம்
இனியொரு தளத்தில் தொட்டுச்சென்ற எல்லைகள்
மிக விரிவானது.யதார்த்தம் பற்றிய சரியான
பார்வைகள் இல்லாமல் மார்க்சிய ஆசான்களின்
புத்தகங்களில் இருந்து எடுக்கப்பட்ட கருத்துகளை
வேதம் போல ஓதிக் கொண்டிருந்த தோழர்களின்
நடைமுறை சலிப்பை அளித்ததால் அதில் நாம்
கலந்து கொள்வதையும் இடையீடு செய்வதையும்
தவிர்த்தோம்.எனினும் ஆர்வத்துக்குறிய கருத்து
பரிமாற்றங்கள் நிகழ்த்தப்பட்ட அந்த விவாதத்தை
அடிப்படையாகக் கொண்டு சில விமர்சனங்களை
எழுப்பக் கருதியதால் இந்த பதிவு.




வன்முறையின் அரசியல் முதல் பகுதியில் சுட்டிக்
காட்டியது போல,ஈழத்தின் இனப்படுகொலையில்
சர்வதேச நாடுகள் வகித்த பாத்திரத்தை ஈவு
இரக்கமின்றி விமர்சித்து அம்பலபடுத்துவதன்
மேல் காட்டப்படும் அலட்சியம் புலிகளின் சில
தவறுகள் மேல் மட்டும் காட்டப்படும் வன்மமாக
பரிணமித்திருக்கிறதை எங்கும் உணர முடிகிறது.
அந்தப் போக்கின் சூத்திரதாரிகளாக இருப்பவர்கள்
ஈழத்தின் விடுதலைப்போராட்டக் களத்தில்
இடதுசாரிகளாக முன்நின்று இன்றைக்கு புலம்
பெயர்ந்த தேசங்களில் வசித்து வருபவர்கள்.
வெருமனே தேசிய உணர்வு கொண்ட குழுவாக
மார்க்சிய அரசியலில் அக்கறை இல்லாதவர்கள்
ஆக தாங்கள் கருதிய புலிகள்,ஏகாதிபத்திய
எதிர்ப்பில் கடைபிடித்த சமரசமற்ற நேர்மையை
சகித்துக் கொள்ளாத மனநிலையும்,தங்களை
மட்டுமே மக்களின் விடுதலைக்கு ஒட்டுமொத்த
குத்தகைகாரர்களாக கருதும் சிந்தனைப்போக்கும்
மட்டுமே இவர்களின் எழுத்துக்களின் சாரமாக
இருந்து வருகிறது.




புலிகளின் மீது வைக்கப்படும் அந்த அரசியல் உள்ளடக்கம்
அற்ற விமர்சனங்களுக்கு நாம் ஆற்றும் எதிர்வினைகளை
புறக்கணிப்பதன் வாயிலாக தங்களை நிறுவிக்கொள்ள
முனையும் இவர்களின் நிலை நமக்கு நகைப்பையே
கொடுக்கிறது.சரி நாம் புறக்கணிக்கப்பட்ட புலிகளின்
மனிதத்துவம் பற்றிய முகத்தை முன்நிறுத்துவது
போலவே அதிகம் பேசப்படாத அவர்களின்
ஏகாதிபத்திய எதிர்ப்பை பதிவு செய்வதன் ஊடாக
ஈழப் போராட்டத்தை பற்றிய ஒரு கறாரான
ஆய்வை நிகழ்த்த முயலலாம்.



அதற்கு முன்பாகவே நாம் சுட்டிக்காட்டி வந்த சில
விசயங்களை நினைவுபடுத்திக் கொள்ளலாம்
மீண்டும்.சோவியத் யூனியனின் பொருளாதார
உதவி மறுப்புகளை எதிர்கொள்ள அமெரிக்க
ஏகாதிபத்தியத்தின் உதவியை மாவோ ஏற்றார்
என்பது அதில் குறிப்பிடத்தக்கது.தனித்து
பொருளாதார ரீதியாக சோசலிச கட்டுமானத்தை
நிகழ்த்துவது மிக கடினமான விசயம் என்கிற
யதார்த்தம் புரிந்தபோது புதிய பொருளாதார
கொள்கையின் வழியாக அந்நிய முதலீடுகளை
சோவியத் யூனியனுக்குள் அனுமதித்தார்
தோழர் லெனின்.2002 ஆம் ஆண்டு புலிகள்
போர்நிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திய
பிறகு மறுகட்டுமானத்துக்கு நிதியுதவி என்ற
பெயரில் நான்கு பில்லியன் அமெரிக்க
டாலர்களை ஜப்பான் அளிக்க முன்வந்தபோது
புலிகள் அதை நிராகரித்திருந்தனர்.
புரட்சியை பாதுகாக்கும் நோக்கத்தில் ஜெர்மன்
அரசுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் செய்து
கொள்ள முயன்ற லெனின் செய்துகொண்ட
சமரசங்களுக்கு வரலாறு சாட்சியாக இருக்கிறது.
எத்தகையை கடினமான நிபந்தனைகள்
ஜெர்மன் தரப்பால் முன்வைக்கப்பட்டாலும்
அதனை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டு
வருமாறு ட்ராட்ஸ்கியை பணித்திருந்தார்
லெனின்.அதன் படி சோவியத்தின் நிலம்
இழக்கப்பட்டு பின்னர் சோசலிச அரசு
வலிமை பெற்ற பிறகு அந்த நிலம்
மீட்டெடுக்கப்பட்டது.




ஒரு மிகச் சிறிய தேசிய இனத்துக்கு உள்ள
வரையறுக்கப்பட்ட பலத்தை சுட்டிக்காட்டி
பன்னாட்டு நிறுவனங்களை தங்களின் கீழ்
இருந்த பகுதிகளில் அனுமதிக்க எல்லா
நியாயங்களும் இருந்தபோதும் புலிகள்
தங்களைச் சார்ந்திருந்த மக்களின் நல்
வாழ்வை அடிப்படையாக கொண்டு
கடைசி மூச்சுவரை ஏகாதிபத்திய
எதிர்ப்பில் உறுதியாக இருந்தனர்
என்பதை யார் மறுக்க முடியும்.




அதே நேரம் லெனின்,மாவோ காலகட்டங்களில்
இருந்த நிலையில் இன்றைய முதலாளித்துவம்
இல்லை என்ற யதார்த்தத்தையும் மறந்து விட
இயலாது.அவர்கள் காலத்தின் முதலாளித்துவ
கட்டமைப்பு உற்பத்தி சார் தொழிழ்களை,தன்
நலத்தின் அடிப்படையிலாவது உருவாக்கும்
குணாம்சத்தைக் கொண்டிருந்தது.இன்றைய
முதலாளித்துவம் பெருமளவில் நிதிமூலதன
சூதாட்டம்,சேவைத்துறை,வேலைவாய்ப்பற்ற
வளர்ச்சி ஆகிய அம்சங்களையே பிரதான
கூறுகளாக கொண்டிருப்பதால் தேசிய
பொருளாதார கட்டமைப்புக்கு அந்நியமுதலீடு
உதவிகரமாக அமையாது என்கிற புரிதல்
புலிகளுக்கு இருந்ததையே நிகழ்வுகள் எடுத்து
காட்டுகின்றன.




இதை எழுதுகையில் சில விசயங்கள் நினைவுக்கு
வருகின்றன.வடக்கில் இருந்து முஸ்லிம்களை
புலிகள் வெளியேற்றியதை மட்டும் இன்றுவரை
பேசிக்கொண்டு இருக்கும் தமிழகத்தின் பின்
நவீனத்துவவாதிகளின் ஏகாதிபத்திய ஆதரவு
அரசியல்தான் அது.அ.மார்க்ஸை சுற்றி
இயங்கும் இவர்கள் ஒருபோதும் கிழக்குப்
பகுதியில் சிங்கள குடியேற்றங்களுக்காக
பறிக்கப்பட்ட முஸ்லிம் மக்களின் நிலங்கள்
பற்றி பேசியது இல்லை.மட்டுமல்லாமல்
1995 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தை சிங்கள
ராணுவம் மீள ஆக்கிரமித்த பிறகும் இன்று
வரை அந்த முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்
படாததற்கு காரணம் ஆக இருக்கிற சிங்கள
அரசை தவிர்த்துவிட்டு புலிகளின்
கணக்கிலேயே பத்தொன்பது ஆண்டுகளையும்
எழுதும் இவர்களுக்கு.உலகெங்கும்
இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை
வெறியாட்டம் நிகழ்த்தி வரும் அமெரிக்கா
தலைமையிலான மேற்கத்திய நாடுகளை
ஏன் உலக முதலாளித்துவத்தையே எதிர்
கொண்டு போராடி வீழ்ந்த புலிகளை பற்றிப்
பேசுவதற்க்கான தகுதி இருப்பதாக நாம்
கருதவில்லை.



புலிகளின் ஏகாதிபத்திய சார்பு அரசியலாக சில
விசயங்களை காட்ட முயற்சிப்பவர்களின்
விமர்சனங்களையும் நாம் கவனத்தில் எடுத்துக்
கொள்ள வேண்டி இருக்கிறது.புலிகள் தங்கள்
நட்புச்சக்திகளாக மேற்கத்திய நாடுகளைக்
கருதினார்கள்.ஒடுக்கப்படும் பிற இனங்கள்
மற்றும் உழைக்கும் வர்க்கத்தில் இருந்து
நட்புச்சக்திகளைப் பெற முயலவில்லை
என்ற குற்றசாட்டுக்கு பதில் அளிக்க
வேண்டி இருக்கிறது.புலிகள் ஜனநாயக
புரட்சி நிறைவடைந்த மேற்கத்திய நாடுகளின்
மக்களை அவர்களின் மனித உரிமைகளுக்கு
மதிப்பு அளிக்கும் குணத்தை ஈழத்தின்
இறையான்மையை காக்க பயன்படுத்த
முயற்சித்தார்களே தவிர அந்த நாடுகளின்
ஆளும் வர்க்கங்ளோடு எந்த சமரசத்துக்கும்
போகவில்லை என்பது மறுக்க முடியாத
உண்மையாக இருக்கிறது.எரிகிற
வீட்டுக்குள் இருப்பவன் உதவி கேட்டு
கூக்குரல் இடவில்லை அதனால் அவன்
இனவாதி அழிந்து போகட்டும் என்று
விட்டுவிட்டோம் என்று கூறுவது மக்கள்
விடுதலை அரசியலான மார்க்சியத்தின்
சார்பானவர்களாக கருதும் நமக்கு அழகா
என்று யோசிக்க வேண்டிய தருணமிது.
சோவியத்துக்கு எதிராக போரிட செல்லும்
ராணுவத்தினரை கப்பலில் ஏற்ற மறுத்து
பிரெஞ்ச் மாலுமிகள் கலகம் செய்ததை
படித்த நாம் எல்லோரும் ஈழ விடுதலை
போராட்டத்துக்கு என்ன செய்துவிட்டோம்
என்று சுயவிமர்சனம் செய்ய முயன்றால்
மிஞ்சுவது வெறுமைதானே?



நூற்றாண்டு காலம் பிடிக்கும் ஒரு முயற்சியில்
இறங்குவதை தவிர்த்து.தமிழக மக்கள்,புலம்
பெயர்ந்த ஈழத் தமிழர்கள்,ஜனநாயக உணர்வு
உள்ள மேற்கத்திய நாடுகளின் மக்கள் வழியாக
ஈழத்தை வெல்லாம் என்கிற புலிகளின்
திட்டமே சாத்தியமானதும்,சரியானதுமாக
இருந்திருக்க முடியும் என்பதை நாம் அழுத்திக்
கூற வேண்டி இருக்கிறது இன்றைக்கு.
புலிகள் நம்பிய மூன்று தரப்புகளும் தங்களால்
இயன்ற அளவு போராடினார்கள் என்பது
உண்மைதான் என்றாலும்,அது போதுமான
அளவு இல்லை என்பதையும்,அந்த எழுச்சி
சரியான வழிகாட்டல் அற்ற நிலையில்
வீனடிக்கப்பட்டது என்பதையும் நாம் ஏற்றுக்
கொண்டாக வேண்டும்.




புலிகள் ராணுவ ரீதியாக வீழ்ந்திருக்கலாம்.
அரசியல் ரீதியாக பின்னடைந்திருக்கலாம்.
ஆனால், சக மனித உயிர்கள் மீதான
சுரண்டலுக்கும்,அநீதிகளுக்கும்,எதிராக
எழும் மனிதத்துவத்தின் மீதான
நம்பிக்கை கொண்ட மனிதர்கள் என்ற
வகையில் உயர்ந்தே நிற்கிறார்கள்.
தோழன் முத்துக்குமாரைப் போல.




சேவுக்கு மனிதன் மீது நம்பிக்கை இருந்து.
மனிதனை நாம் நம்பாவிட்டால் ஒருபோதும்
நாம் புரட்சியாளனாக ஆக முடியாது.
மனிதன் ஒரு திருத்த முடியாத மிருகம்
என்கிற முடிவோடு நாம் உடன்பட்டால்,
புல்லை தின்ன கொடுத்தோ அல்லது
கேரட்டை காட்டி ஏமாற்றியோ,
அல்லது தடியால் அடித்தோதான்
முன்னால் நகர செய்ய முடியும் என்று
திடமாக நம்பினால் அவர் யாராக
இருந்தாலும் கம்யூனிஸ்ட் ஆக முடியாது.
மேலே உள்ளது சே பற்றிய ஃபிடலின்
உரையில் உள்ள ஒரு பகுதி.




மனிதர்களை நம்பிய புலிகளின் பெயரைச் சொல்லி
திராவிடமும் புரியாமல்,தேசியமும் தெரியாமல்
தமிழ்ச்சாதிகள் என்று பேசிக்கொண்டு தங்களை
இடதுசாரிகளாக அடையாளம் காட்டுபவர்களும்,
சட்டமன்றத்தின் வழியாக தனிதமிழ்நாட்டை
மீட்டே தீருவேன் என்று பேசுபவர்களும்
கவனிப்பார்களா?

7 comments:

ஈழமுத்துக்குமரன் said...

நுணுக்கமான கருத்துக்களை, சுவாரசியமான நடையில் எழுதுகிறீர்கள். புலிகள் ஏகாதிபத்திய எதிர்ப்பில் காட்டிய உறுதியை நாம் இந்த சமயத்தில் உரத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது. அ.மார்க்ஸ் கோஷ்டிகளூம், இடதுசாரி முகம் கொண்ட இன்னும் பலரும் பல்வேறு முனைகளில் புலிகளை ஏகாதிபத்திய அடிவருடிகளாக சித்தரிக்கும் பணியை செய்துவரும் இது போன்ற சூழலில் இது போன்ற கட்டுரைகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. முஸ்லீம்களை புலிகள் விரட்டியடித்ததாக இந்த அ.மார்க்ஸ் கோஷ்டியும், ம.க.இ.கவினரும் இணையத்தில் பல இடங்களில் கண் சிவக்க பேசுகின்றனர். ஆனால் இப்பிரச்சணையில் இந்திய, சிங்கள உளவு நிறுவனங்கள் மேற்கொண்ட சதிகள் குறித்து புலிகள் கூறிய விசயங்களையெல்லாம் இந்த யோக்கிய சிகாமணிகள் பேசியதேயில்லை, இந்திய உளவு நிறுவனங்களின் சதியை கண்டிக்காமல் புலிகளை மட்டுமே குறை கூறும் இவர்களின் செயல்பாடு ஒன்றே இவர்களின் நேர்மையை உரசிப்பார்க்க போதுமானது. இருப்பினும் இவற்றையெல்லாம் பொதுதளத்தில் நாம் அம்பலப்படுத்த வேண்டும்.


தோழமையுடன்

ஈழமுத்துக்குமரன்

Bibiliobibuli said...

Stalinguru,

மிக சமீபகாலமாகத்தான் உங்கள் தளம் மற்றும் பதிவுகளின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. மகிழ்ச்சி. புலிகள் பற்றிய உங்கள் நியாயமான தர்க்கரீதியான விமர்சனங்கள் என்னைப்போன்றவர்களுக்கு சற்றே ஆறுதலாக இருக்கிறது. தொடருங்கள். நன்றி.

ஸ்டாலின் குரு said...

புலிகள் ஏகாதிபத்திய எதிர்ப்பில்
காட்டிய உறுதியை நாம் இந்த சமயத்தில் உரத்துச்
சொல்ல வேண்டியிருக்கிறது. அ.மார்க்ஸ்
கோஷ்டிகளூம், இடதுசாரி முகம் கொண்ட
இன்னும் பலரும் பல்வேறு முனைகளில்
புலிகளை ஏகாதிபத்திய அடிவருடிகளாக
சித்தரிக்கும் பணியை செய்துவரும் இது
போன்ற சூழலில் இது போன்ற கட்டுரைகள்
மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.
முஸ்லீம்களை புலிகள் விரட்டியடித்ததாக
இந்த அ.மார்க்ஸ் கோஷ்டியும், ம.க.
இ.கவினரும் இணையத்தில் பல இடங்களில்
கண் சிவக்க பேசுகின்றனர். ஆனால்
இப்பிரச்சணையில் இந்திய, சிங்கள உளவு
நிறுவனங்கள் மேற்கொண்ட சதிகள் குறித்து
புலிகள் கூறிய விசயங்களையெல்லாம் இந்த
யோக்கிய சிகாமணிகள் பேசியதேயில்லை,
இந்திய உளவு நிறுவனங்களின் சதியை
கண்டிக்காமல் புலிகளை மட்டுமே குறை
கூறும் இவர்களின் செயல்பாடு ஒன்றே
இவர்களின் நேர்மையை உரசிப்பார்க்க
போதுமானது. இருப்பினும்
இவற்றையெல்லாம் பொதுதளத்தில்
நாம் அம்பலப்படுத்த வேண்டும்.//

நேர்மையற்ற எதிர்மறை விமர்சனங்களால்
நிரம்பிக் கிடக்கும் இணயத்தில்
புலிகளை சரியாக முன் நிறுத்துவதையும்
எதிர்களை அம்பலபடுத்துவதையும்
நிச்சயம் தொட்ர்வோம் தோழா

ஸ்டாலின் குரு said...

நுணுக்கமான கருத்துக்களை, சுவாரசியமான
நடையில் எழுதுகிறீர்கள்//

என் எழுத்து நடையை பாராட்டிய முதல்
நபர் நீங்களாகத்தான் இருக்க முடியும்
தோழர்.ஒவ்வொரு முறை பதிவை
நிறைவு செய்யும்போது எந்த
மக்களுக்காக பேசுகிறோமோ அந்த
மக்களின் மொழியில் எழுத
இயலவில்லையே என்கிற
வருத்ததுடனே முடிக்கிறேன்

ஸ்டாலின் குரு said...

மிக சமீபகாலமாகத்தான் உங்கள் தளம் மற்றும்
பதிவுகளின் அறிமுகம் எனக்கு கிடைத்தது.//

அது என் துரதிர்ஸடம் என்றே கருதுகிறேன்
பின்னூட்ட அரசியல் எனக்கு தெரியாததால்
முன்னமே எழுதிய ஈழ்ம் தொடர்பான
பதிவுகள் பரவலாக வாசிக்கபடாமல்
போய்விட்டது.



மகிழ்ச்சி. புலிகள் பற்றிய உங்கள் நியாயமான
தர்க்கரீதியான விமர்சனங்கள் என்னைப்
போன்றவர்களுக்கு சற்றே ஆறுதலாக
இருக்கிறது. தொடருங்கள். நன்றி.//

நிச்சயமாக தொடர்வேன்

உங்கள் பதிவுகளையும் தொடர்ந்து
படித்துக்கொண்டிருக்கிறேன் நன்றி

ஈழமுத்துக்குமரன் said...

//என் எழுத்து நடையை பாராட்டிய முதல்
நபர் நீங்களாகத்தான் இருக்க முடியும்
தோழர்.ஒவ்வொரு முறை பதிவை
நிறைவு செய்யும்போது எந்த
மக்களுக்காக பேசுகிறோமோ அந்த
மக்களின் மொழியில் எழுத
இயலவில்லையே என்கிற
வருத்ததுடனே முடிக்கிறேன்//

நீங்கள் வலைப்பூவில் எழுத தொடங்குவதற்கு முன்பே ஆர்குட்டில் விவாதித்த காலத்திலிருந்தே உங்களுடைய எழுத்தை கவனிப்பவன் என்கிற முறையில், உங்களுடைய எழுத்து மெருகேறியிருப்பதை என்னால் அவதானிக்கமுடிகிறது தோழர். உங்களுடைய கண்ணோட்டங்களிலும், ஆளுமையிலும் பாரிய மாற்றங்களை என்னால் காண முடிகிறது.

தோழமையுடன்
ஈழமுத்துக்குமரன்

ஸ்டாலின் குரு said...

பாராட்டுகளுக்கு நன்றிகள் தோழா


ஆனாலும் இன்னும் அதிகம் வாசிக்க
வேண்டிய தேவையை உணர்கிறேன்.
கருத்துகளை எளிமையாக சொல்வது
இன்னும் சாத்தியமாகவில்லைதான்.

Post a Comment